கவி:சொர்க்கம் போக ஆசை பட்டேன்!



"சொர்க்கம் போக ஆசை பட்டேன்,

சொர்ண சுந்தரியை சற்று மறந்தேன்,

பார்ப்பனன் இடம் மண்டி இட்டேன்,

வேர்த்து ஒழுக பிரதட்டை செய்தேன்!

 

சொர்க்கம் நரகம் மரணத்தின்பின் வாழ்வு,

தீர்ப்பு அளிக்கும் உயிர்த்தெழு வாழ்வு,

குர்ஆன்  கூறும் கூலிவழங்கும் வாழ்வு,

தர்மம் தரும்  பாவபுண்ணிய வாழ்வு!

 

ஊர் பெரியாரை கும்பிட்டு கேட்டேன்,

தர்மம் தானம் செய் என்றான்,

ஏர் பிடித்தவனை கேலியாய் கேட்டேன்,

தர்மமும், தானமும் மிஞ்சியது என்றான்!

 

   தூர்ந்த கேணியை திருத்தி கட்டினேன்,

தேர் திருப்பணிக்கு  அள்ளி கொடுத்தேன்,

தர்ம சாலை கட்டி திறந்தேன்,

ஊர் பலகையில் பெயரும் போட்டேன்!

 

மார் தட்டி சத்தம் போட்டேன்,

கார் அனுப்பி கூட்டம் சேர்த்தேன்,

மோர் ஊற்றி விழா நடத்தினேன்,

சீர் திருத்த அறிக்கை விட்டேன்!

 

கார் காலம் கோடை ஆக,

தேர்தல் ஒன்று நாட்டை சூழ,

சேர்த்த காசு விளம்பரமாய்   மாற,

ஊர் தலைவன் பதவி எனக்கு!

 

வர்ணம் பல நாட்டில் மாற,

கர்ணம் அடித்து கட்சி தாவி,

தர்ம கட்டளைக்கு மந்திரி ஆகி,

வேர்வை சிந்தா பணக்காரன் இப்ப! 

 

ஆர்த்தி எடுத்து எனக்கு வரவேற்பு,

மூர்த்தி வழிபாட்டிலும் எனக்கு தனியிடம்,

ஊர்த்தி பவனியில் எனக்கு முதலிடம்,

கீர்த்தி பெருமை எனக்கு தண்ணீர்!

 

சொர்க்கம் போக இப்பவும் ஆசை,

தூர்ந்த கனவை  தூசு தட்டுகிறேன்,  

பார்த்து ரசித்து கருடபுராணம் படிக்கிறேன்,

நேர்த்திக் கடனாய் பால்குடம் காவுகிறேன்!  

 

 

ஊர்வசி திலோத்தமை ஆட்டம் காண,

பார்வதி துணைவனுடன் சொந்தம் கொள்ள,

சொர்க்க லோகத்திற்கு தலைவன் ஆக,

அர்த்த ராத்திரியிலும் பஜனை செய்கிறேன்!

 

  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]     







1 comments:

  1. சூரிய உதயத்தைத் தேடி மனிதன் மேற்கு நோக்கி பலவழியாலும் ஓடிப்பார்க்கிறான்.

    ReplyDelete