ஒளிர்வு-(36)- ஐப்பசி,2013


உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.



செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]



திருநிறைச்செல்வன் - திருநிறைசெல்வன்

   திருநிறைச்செல்வன் என்று வல்லினம் மிகுத்தல் தவறாகும். திருநிறைசெல்வன் என்பது வினைத்தொகையாகும், வினைத்தொகையில் வல்லினம் மிகா. எனவே திருநிறைசெல்வன் என்று எழுதுக. இது போல் திருவளர்செல்வன், திருவளர்செல்வி ஆகிய இடங்களில் வல்லினம் மிகாமல் எழுதுக.

புள்ளாங்குழல் - புல்லாங்குழல்

   புள்ளாங்குழல்  என்று எழுதுவது தவறாகும். புல் என்பதற்கு மூங்கில் எனப் பொருட்படும். எனவே மூங்கில் குழாயில் உருவாக்கப்படும் இசைக்கருவிக்குப் புல்லாங்குழல் என்று பெயர். (புள் என்றால் பறவை என்று பொருள்).

சக்கரை - சருக்கரை


   சக்கரை என்று சிலர் எழுதுகின்றனர். சருக்கரை, (அ) சர்க்கரை என்று எழுதுவதே சரியாகும். மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் முதற்பாகத்தில் 86 ஆம் பாடலில்  'சுவை மிக்க சருக்கரை பாண்டவர்'  என்று வருவதைக் காண்க. வடலூர் வள்ளலார் அளித்த திருவருட்பாவில், அருள் விளக்க மாலையில் 'சர்க்கரையுங் கற்கண்டின் பொடியு மிகக்கலந்தே' என்று வருவதைக் காண்க.

சிறிதரன் - சிரீதரன்

   சிறிதரன் என்று எழுதுவது தவறாகும். வடமொழிச் சொல்லாகிய ஸ்ரீதரன் என்பது, தமிழில் சிரீதரன் என்று எழுத வேண்டும். பெரியாழ்வார் திருமொழியில் 58 ஆம் பாடலில் 'குழகன் சிரீதரன் கூவ' என்றும், 147 ஆம் பாடலில் 'செய்தன சொல்லிச் சிரித்தங் கிருக்கில் சிரீதரா' என்றும் வருவனவற்றை காண்க.

கலை கழகம் - கலைக் கழகம்

   கலை கழகம் என்றால் கலைகின்ற கழகம் எனப் பொருட்படும். கலைக்கழகம் என்று வல்லினம் மிகுத்தால் கலையை வளர்க்கின்ற கழகம் எனப் பொருட்படும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.

பெறும் புலவர் - பெரும் புலவர்

   பெறும் புலவர் என்றால் பரிசைப் பெறுகின்ற புலவர் எனப் பொருட்படும். பெரும் புலவர் என்றால் புலமையுள் பெரிய புலவர் எனப் பொருட்படும். எனவே செயலறிந்து எழுதுக.

தந்த பலகை - தந்தப் பலகை

   தந்த பலகை என்றால் அவன் எனக்குத் தந்த மரப்பலகை எனப் பொருட்படும். தந்தப் பலகை என்று வல்லினம் மிகுத்தால் யானையின் தந்தத்தால் ஆன பலகை எனப் பொருட்படும். எனவே இடமறிந்து எழுதுக. 

செடி கொடி - செடிக் கொடி

    செடி கொடி என்றால் செடியும் கொடியும் எனப் பொருட்படும். செடிக் கொடி என்று வல்லினம் மிகுத்தால் செடியின் மேல் ஏறியுள்ள கொடி எனப் பொருட்படும். எனவே கருத்துணர்ந்து எழுதுக.

நடுக்கல் - நடுகல்

   குறிலிணை மொழிகளில் வரும் முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும். சான்று: திருக்குறள், முழப்பக்கம், விழுப்புண், பொதுப்பணி, புதுப்பாட்டு, அணுக்குண்டு ஆகிய சொற்களைப்போல் நடு என்ற சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.. சான்று: நடுத்தெரு, நடுப்பக்கம். ஆனால் நடுகல் என்ற சொல் வினைத்தொகையாகும். வினைத்தொகையில் வல்லினம் மிகா. புறநானூறு 306 ஆம் பாடலில் ''நடுகல் கைதொழுது பரவும்'' என்று வருவதைக் காண்க.

காவேரி - காவிரி

   காவிரி என்ற சொல்லிவிருந்து காவேரி என்ற போலிச் சொல் உருவாகியுள்ளது. காவிரி என்னும் சொல்லுக்குச் சோலைகளை உருவாக்குவது வள்ர்ப்பது என்னும் பொருள் உண்டு. ( கா - சோலை) காவிரிப் பூம்பட்டினம், காவிரிப்புதல்வர், காவிரி நாடன் என எழுதுவதே சிப்பாகும்.
          நன்றி:கவிஞர் கி.பாரதிதாசன் 
  (அடுத்த வாரம் தொடரும்)

சினிமா இரசிகர்களுக்குரிய பயனுள்ள செய்திகள்.

ஜில்லாவோடு இடிக்காமல் வீரம் படத்தை ஹிட்டாக்க 'பலே' திட்டம்

வீரம் படத்தை ஹிட்டாக்க படக்குழு புதிய திட்டம் தீட்டியுள்ளது.

அஜீத்தின் ஆரம்பம் படம் தீபாவளி அன்று ரிலீஸாகாமல் 2 நாட்களுக்கு முன்னதாக வெளியிடப்பட்டது. படமும் தமிழகம் தவிர அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் வசூலில் ஒரு கை பார்த்துள்ளது. இதனால் ஆரம்பம் படக்குழுவினர் குஷியாகியுள்ளனர்.

ஜில்லாவோடு இடிக்காமல் வீரம் படத்தை ஹிட்டாக்க 'பலே' திட்டம்

இந்நிலையில் பொங்கலுக்கு அஜீத்தின் வீரம் படம் வருகிறது. இந்த படத்தை ஹிட்டாக்க படக்குழுவினர் தீயாக வேலை செய்கிறார்கள். படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்யாமல் 5 நாட்கள் முன்னதாகவே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். அப்படி செய்தால் நல்ல வசூல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.

மேலும் விஜய்யின் ஜில்லாவும் பொங்கலுக்கு வருவதால் வசூலில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த திட்டமாம்.  
-------------------------------------------------
300 திரையரங்குகளில் 'இரண்டாம் உலகம்' ரிலீஸ்

  300 திரையரங்குகளில் 'இரண்டாம் உலகம்' ரிலீஸ்
சென்னை, நவ.12 (டி.என்.எஸ்) தீபாவளி படங்களுக்குப் பிறகு ரசிகர்களும், திரையுலகினரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் படங்களில் முக்கியமான படமாக 'இரண்டாம் உலகம்' உள்ளது. காரணம், இப்படம் ஒரு பேண்டசி படம் என்பதாலும், இப்படத்திற்கான பட்ஜெட் பெரியது என்பதாலும் தான்.

ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். பிவிபி நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 22ஆம் தேதி 300 திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும் அதே நாளில் தெலுங்கிலும் இப்படம் வெளியாகிறது. 
....................................................................
இவன் வேற மாதிரி டிசம்பர் 13ஆம் தேதி ரிலீஸ்

நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, 'கும்கி' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது எங்கேயும் எப்போதும் இயக்குநர் சரவணன் இயக்கத்தில், 'இவன் வேற மாதிரி' படத்தில் விக்ரம் பிரபு நடித்து வருகிறார்.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யு.டி.வி மோசன் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ஹீரோயினாக டெல்லி மாடல் அழகி சுரபி நடித்துள்ளார். இவர்களுடன் கணேஷ் வெங்கட்ராம், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதையடுத்து, இப்படத்தை வருகிற டிசம்பர் 13ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 
...................................................................
சரத்குமார் - பிரியாமணி நடிக்கும் 'அஞ்சாத சண்டி'
ஓமிக்ஸ் கிரியேசன்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு 'அஞ்சாத சண்டி' என்று பெயரிட்டுள்ளனர்.

இந்தப்படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரியாமணி நடிக்கிறார். மற்றும் ஆசிஷ்வித்யார்த்தி , கிருஷ்ணம்ராஜு, ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லண்டனைச் சேர்ந்த ஸ்கேர்லெட் வில்சன் என்ற பெண் ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார்.

பிரியாமணி இந்த படத்தில் முதன் முறையாக ஆக்ஷன் அவதாரம் எடுக்கிறார். அவருக்கு எல்லா விதமான சண்டை கற்றுத் தந்து ஒரு ஆணாதிக்க நபரான ஆசிஷ்வித்யார்த்தியை பழிவாங்க அனுப்பும் பயிற்சியாளராக சரத்குமார் நடிக்கிறார்.

சண்டை காட்சிகளுக்காகவே பலகோடி ரூபாய்கள் செலவழிக்கப்பட்டு மிக பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு கவர்ச்சி பாடலில் ஸ்கேர்லெட் வில்சன் என்னும் லண்டன் அழகியை வைத்து படமாக்கியுள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரியாமணி தமிழில் நடிப்பதால் சண்டை காட்சிகளுக்காக மிகுந்த பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
....................................................................
படங்களில் ‘பெண்களை கேலி செய்து படம் எடுப்பதா?’’ நடிகை தேவயானி ஆவேச பேச்சு
இப்போது வரும் படங்களில் ‘டாஸ்மாக்’ காட்சிகள் நிறைய இடம் பெறுகின்றன. பெண்களை கேலி–கிண்டல் செய்து படம் எடுக்கிறார்கள். இது தேவையா? என்று நடிகை தேவயானி ஆவேசமாக பேசினார்.

சினிமா படவிழா

‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தில் நடித்த பாலாஜி மற்றும் ஜெய் குகேனி ஆகியோர் இணைந்து நடித்த மெய்யழகி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.டிரெய்லரை பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி வெளியிட, டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார்.

தேவயானி பேச்சு

விழாவில் நடிகை தேவயானி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:–‘‘இந்த மாதிரி தரமான கதையம்சம் கொண்ட படங்கள் அபூர்வமாகவே வருகின்றன. மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. இப்போது வரும் பெரும்பாலான படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை கேலி–கிண்டல் செய்கிறார்கள். மச்சி, மச்சான் என்று வசனக்காட்சிகள் வருகின்றன.பெரும்பாலான படங்களில் குடிகாரர்களின் ‘டாஸ்மாக்’ காட்சிகள் இடம் பெறுகின்றன. பெரிய படம் சின்ன படம் என்று வேறுபாடு பார்க்கக்கூடாது. தரமான கதையம்சம் கொண்ட படங்களே பெரிய படங்கள்’’.இவ்வாறு தேவயானி பேசினார்.

சோனா

அடுத்து பேச வந்த நடிகை சோனா, ‘‘சமீபகாலமாக சில படங்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறுகின்றன. ‘டாஸ்மாக்’ காட்சிகள் இல்லாத படங்களே இல்லை’’ என்று கூறினார்.டைரக்டர் விக்ரமன் பேசும்போது, ‘‘சிறு பட தயாரிப்பாளர்களை காப்பாற்றுவதற்காக புதிய சங்கம் ஒன்றை அமைக்க முயற்சித்தேன்’’ என்று கூறினார்.விழாவில் டைரக்டர்கள் பேரரசு, பத்ரி, பி.டி.செல்வகுமார், கோகுல், நடிகர்கள் மதன்பாப், பாலாஜி, இசை அமைப்பாளர் அபிஷேக் ஆகியோரும் பேசினார்கள்.பட அதிபர் ரிஷ்வான் ஜி வரவேற்று பேசினார். டைரக்டர் ஆர்.டி.ஜெயவேல் நன்றி கூறினார்.
....................................................................

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'ஆரம்பம்'

 அஜீத் குமாரின் ஆரம்பம் படத்தின் வசூல் ரூ.100 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

அஜீத், ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படம் ரிலீஸான முதல் வாரத்திலேயே ரூ.50 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் படம் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

ரூ.100 கோடி வசூலை நெருங்கும் 'ஆரம்பம்'

ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ஆரம்பம் உலகம் முழுவதும் ரூ.91.63 கோடி வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படம் விரைவில் ரூ.100 கோடியை வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ஆரம்பம் படம் தெலுங்கில் வரும் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தெலுங்கு டப்பிங் உரிமை ரூ.6 கோடிக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
.................................................................
அடுத்த மாதம் இறுதிக்குள் 20 புது படங்கள் ரிலீஸ்
அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் 20 புதுப்படங்கள் ரிலீசுக்கு வருகின்றன. இந்த வருடம் இதுவரையிலும் சுமார் 150 படங்கள் திரைக்கு வந்துள்ளன. வருடம் முடிய இன்னும் 45 நாட்கள் மீதி உள்ளது. இந்த நாட்களில் மேலும் 20 படங்கள் வருகிறது. நாளை (14–ந் தேதி) ‘பீட்சா 2 வில்லா’, ‘ஆப்பிள் பெண்ணே’, ‘ராவண தேசம்’ படங்கள் ரிலீசாகின்றன. இவற்றில் ‘பீட்சா 2 வில்லா’ படம் விஜய் சேதுபதி நடித்து ஹிட்டான ‘பீட்சா’ படத்தின் 2–ம் பாகமாக தயாராகிறது. 

‘ராவணதேசம்’ படம் ஈழ தமிழர்களின் கஷ்டங்களை மையமாக வைத்து தயாராகியுள்ளது. வருகிற 22–ந் தேதி ‘இரண்டாம் உலகம்’, ‘மெய்யழகி’, ‘அப்பாவுக்கு கல்யாணம்’ படங்கள் வெளியாகின்றன. ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். செல்வராகவன் இயக்கியுள்ளார். மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. 

வருகிற 29–ந் தேதி ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘நவீன சரஸ்வதி சபதம்’, ‘மாயை’, ‘விழா’ ஆகிய படங்கள் திரைக்கு வருகின்றன. ‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை சேரன் இயக்கியுள்ளார். சர்வானந்த், நித்யாமேனன் ஜோடியாக நடிக்கின்றனர். ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் ஜெய் நாயகனாக நடித்துள்ளார். 

அடுத்த மாதம் (டிசம்பர்) 6–ந் தேதி ‘கல்யாண சமையல் சாதம்’, ‘ஜன்னல் ஓரம்’, ‘வேல்முருகன் போல்வெல்ஸ்’, ‘குற்றாலம்’ படங்கள் ரிலீசாகின்றன. ‘கல்யாண சமையல் சாதம்’ படத்தில் பிரசன்னா நாயகனாக நடித்துள்ளார். ‘ஜன்னல் ஓரம்’ படத்தில் விமல் நாயகனாக வருகிறார். கரு பழனியப்பன் இயக்கியுள்ளார். ‘வேல்முருகன் போர்வெல்ஸ் படத்தில் கஞ்சா கருப்பு, மகேஷ் நாயகர்களாக நடிக்கின்றனர். 

கஞ்சாகருப்பே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். எம்.பி.கோபி இயக்குகிறார். டிசம்பர் 13–ந் தேதி விக்ரம் பிரபு நடிக்கும் ‘இவன் வேற மாதிரி’, விஜய் சேதுபதியின் ‘ரம்மி’ மற்றும் ‘கோப்பெருந்தேவி’ படங்கள் ரிலீசாகின்றன. டிசம்பர் 20–ந் தேதி ஜீவா, திரிஷா ஜோடியாக நடிக்கும் ‘என்றென்றும் புன்னகை’ மற்றும் ‘சுற்றுலா’ படங்கள் வெளியாகின்றன.
 .........................................................................

வந்திடுமா நீரிழிவு (diabetes) ?

யார் யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது?

 உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மூன்றரை கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கும் டயபடீஸ் வர சந்தர்ப்பம் உள்ளது. அவர்கள் அதற்கான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. தவிர 30 வயதினருக்கு மேல் உள்ளவர்களும், முக்கியமாக தனக்கு முந்தைய தலைமுறையினருக்கு (உதாரணம் தந்தை, தாத்தா) டயபடீஸ் இருந்திருந்தால் அவர்கள் கண்டிப்பாக டயாபடீஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

டயபடீஸ் இருக்கிறது என்று நமக்கு ஏதாவது அறிகுறிகள் மூலம் தெரியுமா?

ஆமாம்... திடீரென்று எடைகுறையும். சிறுநீர் அதிகம் வெளியாகும். பசி அதிகரிக்கும். சோர்வு, தோள்பட்டை வலி, பிறப்புறுப்புகளில் அரிப்பு, கண்பார்வை மங்கும். புண்ணோ, கட்டியோ வந்தால் சீக்கிரம் ஆறாது... ஆனால், 30 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இப்படி அறிகுறிகள் தென்படும். மீதமுள்ள 70 சதவிகிதத்தினருக்கு அறிகுறிகளே தெரியாது. தங்களுக்கு டயபடீஸ் இருப்பதை உணராமலேயே, அதை அறியாமல்தான் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். வேறு ஏதாவது ஒரு மருத்துவ சிகிச்சைக்கு வரும்போதுதான் பலருக்கும், டயபடீஸ் உள்ளதே கண்டுபிடிக்கப்படுகிறது.

டயபடீஸ் மற்றும் இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் வரும் என்று சிலர் அஞ்சுகிறார்களே?

இந்த மருந்துகள் எல்லாம் உயிர் காக்கும் மருந்துகள். டயபடீஸால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ் நாட்கள் முழுவதும் மாத்திரை உட்கொள்வதன் மூலம்தான் பாதுகாப்பாக இருக்க முடியும். பக்க விளைவுகள் ஏற்படும் என்று மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் சர்க்கரை வியாதியும், இரத்த அழுத்தமும் கட்டுப்பாடு மீறி சில விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும்!

‘லோ சுகர்’ என்கிறார்களே.. அது வந்தால் என்னாகும்?

இந்த நிலை சற்று ஆபத்தானது.. ஆழ் மயக்கம் என்கிற விபரீத நிலைக்கு நம்மைத் தள்ளிவிடும்! லோ சுகர் எனில் முதலில் பசி, படபடப்பு, நடுக்கம், பதட்டம், தலைவலி, பார்வை மங்குதல், அதிக வியர்வை, எரிச்சல், குழப்பம், தூங்கி வழிதல், மயக்கம் ஏற்படும் அதுவே ஆழ் மயக்கத்துக்குள் கொண்டு சென்றுவிடும். காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் தாக்கினால் நம் உடலின் சர்க்கரையின் அளவு சட்டெனக் குறையும். இதைத் தவிர்க்க அந்த நேரத்தில் உடனடியாக இனிப்பு, அல்லது பழச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி இருந்தால் லோ சுகர் வராமல் தடுக்க ஒரு சில நாட்களுக்கு டயபடீஸ் மாத்திரையின் அளவை குறைத்துக் கொண்டு மருத்துவரின் ஆலோசனையை உடனே பெறவேண்டும்.

டயபடீஸ் உள்ளவர்கள் எந்த மாதிரியான உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்?

நடப்பது, சைக்கிளிங், ஜாக்கிங், நீந்துதல் போன்ற உடற்பயிற்சிகள் செய்யலாம். வெறுமனே ஆசைக்காக செய்து விட்டுவிடாமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதே நல்லது. உடற்பயிற்சியினால் ரத்தத்தில் சர்க்கரையளவு குறையும். கொழுப்புச் சத்தும் குறையும்!

 இதயத்தை பாதுகாக்கும் ஹெச்.டி.எல். எனப்படும் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாகும்!

 டி.ஜி.எல். என்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

டயாபடீஸ் உள்ளவர்கள் தொடர்ந்து ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் சாப்பிடுவதால் உடல்பருமன், இரத்த அழுத்த நோயால் பாதிக்கிறார்கள். ஃபாஸ்ட்புட் அதிகம் சாப்பிடும், அதிக உடல் உழைப்பற்ற சாஃப்ட்வேர் துறையில் உள்ளவர்களே இந்நோயால் அதிகம் பாதிப்படைகிறார்கள். உடற்பயிற்சியின் மூலம் அவர்களின் மன அழுத்தத்தை நன்றாகவே குறைக்க முடியும். டயபடீஸால் இந்தியாவில் ஒரு வருடத்தில் மட்டும் 15 சதவீதம் பேர் பாதிப்படைகின்றனர். டயபடீஸ் உள்ளவர்கள் நல்ல பாத அணிகள் போட்டு நடக்க வேண்டும். காரணம் கால்கள்தான் சிக்கிரமே பாதிக்கப்படும். டயபடீஸைக் கட்டுப்படுத்தாவிட்டால் அதனால் ஏற்படும் பின் விளைவுகளுக்கும் சிகிச்சை முறைகளுக்கும் அதிக செலவுகள் ஏற்படும். அப்படியே ஆனாலும்கூட பூரண நிவாரணம் கிடைக்காது. எனவே மருத்துவரின் ஆலோசனையையும், மருந்துகளையும் சரியான நேரத்திற்கு எடுத்துக் கொண்டால், சர்க்கரை நோயைக் கண்டு பயப்படவேண்டாம்!

டயபடீஸ் முற்றிய நிலைக்குப் போகாமல் எப்படித் தடுப்பது?

ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி டயபடீஸ§க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டாலே இது முற்றாது. ஆனால், இப்படி மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்காமல் மருந்துகளையும் சரியாக எடுக்காமல் இருந்தால் டயபடீஸ் முற்றிவிடும்! டயபடீஸை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் கண், சிறுநீரகம், இதயம், நரம்புகள் போன்ற உறுப்புகள் கண்டிப்பாக பாதிக்கப்படும். நோயின் பாதிப்பு அதிகமாகி சில நேரம் கோமா நிலைக்குத் தள்ளப்படுவதும் உண்டு!

குழந்தை பிரசவிக்கும்போது ஒரு பெண்ணுக்கு டயபடீஸ் இல்லை என்றாலும் பிறக்கும் குழந்தைக்கு டயபடீஸ் இருக்கிறதே எப்படி? இதைக் குணப்படுத்த முடியுமா?

வைரஸ் இன்ஃபெக்ஷன் மற்றும் நம் உடலில் இருக்கும் பீட்டா செல் இன்சுலின் சுரப்பு அதிகமாக சுரப்பதுதான் இதற்குக் காரணம். இதை மாத்திரையினால் குணப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ முடியாது. இன்சுலின் ஊசியால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஆனால் குணப்படுத்த முடியாது. தாய், கர்ப்ப காலத்தில் சர்க்கரையின் அளவை சரியாக வைத்திருந்தால் குழந்தைகளுக்கு இந்நோய் வராமல் தடுத்துவிடலாம். கட்டுப்பாட்டில் உள்ள சர்க்கரை வியாதியினால் எந்த ஒரு பின் விளைவுகளும் வருவதில்லை. நீங்கள் உங்கள் உடம்பில் சர்க்கரையின் அளவை எப்படி வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே மிக முக்கியமான ஒன்று. உங்கள் கட்டுப்பாடு உங்கள் கைகளில்தான் இருக்கிறது.

சாப்பிட வேண்டிய உணவு

கொய்யா, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, சிலதுண்டு பப்பாளி, தக்காளி, காலிபிளவர், முட்டைக்கோஸ், இஞ்சி, குடை மிளகாய், புடலங்காய், சுரக்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முளைகட்டிய பயிர், காராமணி, பச்சைப்பயிறு போன்றவை உட்கொள்ளலாம்.

பின்குறிப்பு: சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள் மேற்கண்ட ஏதேனும் ஒரு பழத்தை நாளன்று எடுத்துக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவை

வாழைப்பழம், செர்ரி, சீதாப்பழம், அன்னாசி, பலாப்பழம், உருளைக்கிழங்கு, பரங்கிக்காய், காரகருணை, சேனைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், மற்றும் கார்போ ஹைட்ரேட் உணவுவகைகள் எல்லாம் தவிர்க்க வேண்டியவை. மீதமுள்ள மற்ற பழவகைகளையும் தவிர்க்கவும்.
பொரித்துச் சாப்பிட வேண்டாம் 

13 jokes...today













செந்தமிழ் படிப்போம். [பகுதி - 2]

வந்திருக்கும் வாசகர்களுக்கு வணக்கம்.சென்றவாரம் முதலாவது பகுதி பயனுள்ளதாக அமைந்திருக்கும். தொடர்ந்து வாசியுங்கள்.
கடை அருகாமையில் இருக்கிறது - கடை அருகில் இருக்கிறது

            கடை அருகாமையில் இருக்கிறது என்ற அடி தவறாகும். கடை அருகில் இருக்கிறது என்ற அடியே சரியாகும்.

பொம்மை செய்ய முயற்சித்தான் - பொம்மை செய்ய முயன்றான்

            பொம்மை செய்ய முயற்சித்தான் என்று எழுதுவது தவறாகும். முயற்சித்தல் என்ற சொல்லே இல்லை. எனவே பொம்மை செய்ய முயன்றான், பொம்மை செய்ய முயற்சி செய்தான், பொம்மை செய்ய முயலுதல் என்று எழுதுதல் சரியாகும்.

அலமேல் மங்கை - அலர்மேல் மங்கை

            அலர்மேல் மங்கை என்று வருவதே சரியாகும். (அலர் : பூ ) பூவின் மேல் அமர்ந்திருக்கின்ற மங்கை

நாட்கள் - நாள்கள்

   கால்கள் என்ற சொல்லைக் காற்கள் என்று எழுதுவதில்லை. எனவே நாட்கள், நூற்கள், தொழிற்கள,; ஆகிய சொற்களை நாள்கள், நூல்கள், தொழில்கள்; எனறே எழுதுக.

எந்தன் - என்றன்

            எந்தன் என்று எழுதுவது தவறாகும். என்  தன்  என்றன் என்று புணரும். (என் - ஒருமை, தன் - ஒருமை,) எம்  தம்  எந்தம் என்று புணரும். (எம் - பன்மை, தம் - பன்மை,) எந்தன் என்பதில் (எம் - பன்மை, தன் - ஒருமை, இது தவறான புணர்ச்சியாகும்

சாற்றுக்கவி - சாற்றுகவி

            சாற்றுக்கவி என்று 'க்' மிகுத்து எழுதுதல் தவறாகும். வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும். ஆனால் சாற்றுகவி என்பது வினைத் தொகையாகும், வினைத் தொகையில் வல்லினம் மிகா, வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் நிலைமொழியாக இருந்து வினைத்தொகையாக வந்தால் வல்லினம் மிகாமல் எழுதுதல் மரபாகும். பாரதியார் எழுதிய விநாயகர் நான்மணி மாலையில் முதலடியில் 'பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்'  என மிகாமல் இருப்பதைக் காண்க.

கொக்குப் பறந்தது - கொக்கு பறந்தது

            கொக்கு என்ற சொல் வன்றொடர்க் குற்றியலுகரமாகும்.  வன்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும்.  வன்றொடர்க் குற்றியலுகரச் சொல் நிலைமொழியாக இருந்து எழுவாய்த் தொடராக வந்தால் வல்லினம் மிகா. கொக்கு பறந்தது என்பது எழுவாய்த் தொடராகும். ஏனவே கொக்குப் பறந்தது என எழுதுதல் தவறாகும்.

பாப் படைத்தான் - பா படைத்தான்

            ஓரெழுத்து ஒரு மொழியின் பின் வல்லினம் மிகும். (தீச்சுடர், நாப்பழக்கம்,) ''பா'' ஓரெழுத்து ஒரு மொழிதான், ஆனால் பா படைத்தான் என்பது இரண்டாம் வேற்றுமைத் தொகையாகும், இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகா. ஓரெழுத்து ஒரு மொழியாக இருந்து, இரண்டாம் வேற்றுமைத் தொகையாக வரின், வல்லினம் மிகா. எனவே பாபடைத்தான் என்பதே சரியாகும்.


வறுமைகளை ஒழிப்போம் - வறுமையை ஒழிப்போம்

            வறுமைகளை ஒழிப்போம் என்பது தவறாகும். வறுமையை ஒழிப்போம் என்று எழுதுக. (வறுமை என்பதற்குப் பன்மை கிடையாது, (புல், நீர் தாகம், ஆகியவற்றிற்கும் பன்மை கிடையாது) ஆடுகள் புற்களை மேய்ந்தன என்பது தவறாகும், ஆடுகள் புல்லை மேய்ந்தன என்பதே சரியாகும். பல ஆறுகளின் நீர்களைக் குடித்தேன் என்பது தவறாகும், பல ஆறுகளின் நீரைக் குடித்தேன் என்பது சரியாகும். நண்பர்களின் தாகங்களை நீக்கினேன என்பது தவறாகும,; நண்பர்களின் தாகத்தை நீக்கினேன் என்பதே சரியாகும்.

மனதை - மனத்தை

            மனதை என்று எழுதுவது தவறாகும். மனம்  ஐ  மனத்தை என்றே வரும். பணம்  ஐ  பணத்தை என்றே வரும். பணதை என்று வாரா.. தனம், வனம், சினம், கனம், இனம், குணம், பிணம்,  ஆகிய சொற்களுடன் ஐ சேர்ந்தால் தனத்தை, வனத்தை, சினத்தை, கனத்தை, இனத்தை, குணத்தை, பிணத்தை என்றே எழுதுதல் வேண்டும். தனதை, வனதை, இனதை, குணதை,,, என எழுதமாட்டோம். எனவே மனத்தை என்று எழுதுக
                                                             (அடுத்த வாரம் தொடரும்)
நன்றி:கவிஞர் கி.பாரதிதாசன் 

அதிசயம்...அறிந்து கொள்ளுங்கள்!!


  •   ரோலர் கோஸ்டர்சில் பயணம் செய்பவர்களுக்கு மூளையில் ரத்த    அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  •       நீல நிற கண்களை உடையவர்களுக்கு இருட்டில் மற்றவர்களைவிட பார்வைத்திறன் அதிகம்.
  •       சிறிதளவு மதுவை தேளின் மீது விட்டால் போதும் அது மது மய்க்கமடைந்து இறந்து விடும்.
  •       வெங்காயம் உரிக்கும் போது  சூயிங்கம் மென்றால் கண்ணில் கண்ணீர் வராது.
  •       உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில்
    பயன்படுத்தப்படுகிறது.அதேப்போல் மின்சாரமும் 33 சதவீதம் அமெரிக்கர்கள் பயன்படுத்துகின்றனர்.
  •     ஒருமணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்டால் காதில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது.
  •       வலது கைப்பழக்கம் உள்ளவர்கள், இடது கைப்பழ்க்கம் உள்ளவர்களை விட சராசரியாக் 9 வருடங்கள் அதிகம் உயிர்வாழ்வர்.
  •       ஒரு முறை புன்னகை புரிவதன் மூலம் குறைந்தபட்சம் 30 தசைநார்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.
  •       நமது மூக்கு உடலில் “ஏர் கண்டீசன்” போன்று செயல்படுகிறது, இது உடலுக்குள் குளிர்க்காற்றை வெப்பப்படுத்தி அனுப்புகிறது. வெப்பகாற்றை குளிரூட்டி அனுப்புகிறது. காற்றில் உள்ள மாசுக்களைத் தடுத்து தூயக்காற்றை உள்ளே அனுப்பும் வடிகட்டியாக செயல்படுகிறது.
  •       நமது மூளை சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரை விட, மிகவும் சக்தி வாய்ந்தது. மூளை 100 பில்லியன் நரம்பு செல்களால் உருவானதாகும்.
  •  நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் செயல்களை பார்க்கும் போது, நமது விழித்திரையானது சாதாரண நிலையை விட 45 சதவீத அளவில் விரிந்து விடுகிறது.
  •       தேன் எளிதில் ஜீரணமாவதற்கு காரணம், அது ஏற்கனவே தேனிக்களால் ஜீரணமாக்கப்பட்டிருப்பதுதான்.
  •       டைட்டானிக் கப்பல் தயாரிக்க வெறும் 7 மில்லியன் டாலர் மட்டும்தான், ஆனால் படம் எடுக்க 200 மில்லியன் டாலர் செலவானது.
  •       மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத ஒரே ஒரு பகுதி கண்ணின்
    கருவிழி மட்டுமே.
  •    உலக அளவில் மனிதனின் இறப்பிற்கு அதிகளவில் காரணமாக இருப்பது கொசுக்கள்தான்.

*************

தீபம் வாசகர்கள் அனைவருக்கும்......


செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 1]

நாம் பேசும்,எழுதும் தமிழில் அன்றாடம் எத்தனை தவறுகளை விடுகிறோம்.அவற்றினை அறிந்துகொள்ள இத்தொடர் பெரிதும் உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம்.

கிருட்டிணன் - கிருட்டினன்

            மேலுள்ள சொற்களில் எது பிழையானது? எது சரியானது? 'க்ருஷ்ண' என்ற ஆரியச் சொல்லைத் தமிழில் ''கிருட்டினன்'' என்று எழுதுவதே மரபு. வடவெழுத்தோடு எழுதுவோர் கிருஷ்ணன் என்று முச்சுழி போடுவர். ''கர்ணன்'' என்பது தமிழிற் கன்னன் என்றே வரும். முத்துக்கிருட்டினன், கோபாலகிருட்டின பாரதி என்ற வழக்குகளைக் காண்க. கருநாகத்தைக் குறிக்கும் ''க்ருஷ்ணசர்ப்பம்'' தமிழில் கிருட்டினசர்ப்பம் என்றும், ''க்ருஷ்ணவேணி' என்பது கிருட்டினவேணி என எழுதப்படும் (கன்னன் - கர்ணன் ) ( கண்ணன் - திருமால்)

கற்புரம் - கற்பூரம் - கருப்பூரம்

            கற்புரம் என்று எழுதுவது தவறாகும்.  ''கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ'' என்று ஆண்டாள் திருமாலைப் போற்றிப் பாடுகிறாள். ''கற்பூரம் நாறும் கலைசையே'' கலைசைச் சிலேடை வெண்பாவில் இத்தொடர் உள்ளது. கருப்பூரம் என்றும் கற்பூரம் என்றும் எழுதுவது சரியே. ஆனால் கருப்பூரம் என்று எழுதுவதே நன்று.

சுவற்றில் எழுதாதே - சுவரில் எழுதாதே

            சுவரில் எழுதாதே என்று எழுதுவதே சரியான தொடர்  (சுவர் - இல் - சுவரில்) சுவற்றில் என்று எழுதினால் வறண்டுபோன இடத்தில் என்பது பொருளாகும்.

ஒரு ஆடு - ஓர் ஆடு

            ஒன்று என்பது ஒரு எனத்திரிந்த நிலையில், வருமொழியில் உயிரெழுத்துக்களும் யகர ஆகாரமும் முதலாகிய சொற்கள் வந்தால், ஒரு என்பதில் ஒகரம் ஓகாரமாகும். ''ரு'' என்பதன் கண் உள்ள உகரம் கெட ஒரு என்பது ஓர் என்று ஆகும்
           
            'அதனிலை உயிர்க்கும் யாவரு காலை
            முதனிலை ஒகரம் ஓ ஆகும்மே
            ரகரத்து உகரம் துவரக் கெடுமே'
                                    (தொல் . எ . 479)

எனவே ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்றாற்போல்வனவே வழா நிலையாம் .

பன்னிரு ஆழ்வார்கள் - ஆழ்வார்கள் பன்னிருவர்

            பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்றாற்போல வருவன யாவும் வழூஉத் தொடர்களாம். உயர்திணைப் பெயர்களுக்குப் பின்னே எண் பெயர்கள் வர வேண்டும். ஆழ்வார்கள் பன்னிருவர், நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்றாற்போல வருவன வழா நிலையாம்.

ஓர் அரசன் - அரசன் ஒருவன்

            ஒரு என்ற சொல்  உயிரெழுத்துக்களுக்கு முன்னும், யகர ஆகாரம் முன்னும், ஓர் என்று ஆகுமெனக் கண்டோம், இக்கருத்தின்படி ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்றாற் போல்வனவே வழா நிலையாம். ஆனால் உயர்திணைப் பெயர்களுக்கு முன்னே எண் பெயர் வாராது. ஓர் அரசன் என்று எழுதுவது வழுஉத் தொடராகும், அரசன் ஒருவன் எனறு எழுதுவதே வழா நிலையாம்.

பல அரசர் -பலர் அரசர் - அரசர் பலர்

            பல அரசர், சில அரசர் என்றாற்போல வருவனவற்றை பலர் அரசர், சிலர் அரசர் என்பனவற்றின் திரிபாகக் கொள்பர் உரையாசிரியர்கள். எனவே இவற்றையும் அரசர் பலர் , அரசர் சிலர் என்று எழுதுவதே முறையாகும்.
        நன்றி:கவிஞர் கி.பாரதிதாசன்                                                                                           (தொடரும்)

அறிவியல்:-நம்பிக்கைகளும் உண்மைகளும்

முருங்கை, புளியமரங்கள் பேய்கள் வாழுமிடம்..

நம் உடல் நலம் தான் அங்கு வாழ்கிறது. முருங்கை இலை, பூ, காய் அனைத்தும் உணவாகிறது. புளியும் தான்.  இந்த இரு மரங்களுமே பறவைகளுக்குப் பிரியமான வாழ்விடங்களாகும்.

மகுடி ஒலி  கேட்டால் பாம்பு படமெடுத்தாடும்..

பாம்புக்கு காது கேட்காது. பாம்பாட்டியின் மகுடி அசைவிற்கு தகுந்தவாறு தலையை திருப்பிக் கொள்ளும்.

பாம்புகள் நடனமாடிக் கொண்டே இணை சேரும்..

அது நடனம் அல்ல இரண்டு ஆண் பாம்புகளின் சண்டை.  பெண்ணுடன் இணைசேரும் உரிமைக்கான ஆடவர்களின் சண்டை அது.

நாகப்பாம்பும், சாரைப் பாம்பும் இணை சேரும்..

சேராது இரண்டும் வெவ்வேறு வகையைச் சேர்ந்தவை.  நாகம் நாகத்துடனும் சாரை சாரையுடனும் தான் இணை சேரும்.

பாம்பு பழிவாங்கும்..

அந்த அளவுக்கு நினைவாற்றல் கிடையாது அதற்கு.  அடிபடும் போது சுரக்கும் ஒருவகை வேதிப்பொருளை  நுகர்ந்தவாறே இன்னொரு பாம்பு வருவதைப் பழிவாங்க வருவதாக நினைக்கின்றனர்.  மேலும் பாம்புகளில் நிரந்தர இணை என்பதே கிடையாது.

வயது முதிர்ந்த பாம்பு மாணிக்கத்தைத் தலையில் வைத்திருக்கும்..

மாணிக்கம் என்பது மண்ணில் புதைந்து கிடக்கும் அரியவகைக் கல் ஆகும். இதை மெருகேற்றி விலைமதிப்பை ஏற்படுத்துகிறார்கள். குட்டியோ, முதிர்ந்ததோ மாணிக்கம் தரும் பாம்புகள் இல்லை.

பச்சைப் பாம்பு கண்ணைக் கொத்தும்..

தற்காத்துக் கொள்ளப் பாம்புகள் கொத்தும். அப்போது கண், மூக்கு, காது, கால், கை, எனத் தேடிக்கொண்டிருக்காது.

இருதலை, ஐந்துதலை, பத்துதலைப் பாம்புகள் உண்டு..

மரபணுக் கோளாரு காரணமாக மனிதர்கள், ஆடு, கோழிகளைப் போல் அரிதாகச் சில இருதலைகள் கொண்ட பாம்புகள் பிறக்க வாய்ப்பு உள்ளது.  ஆனால் இருதலை, பல தலை கொண்ட பாம்பு வகைகள் இல்லை.

ஆமை புகுந்த வீடு உருப்படாது..

கல்லாமை, இல்லாமை, இயலாமை போன்றவைதான் ஒரு வீட்டிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது.

விசப் பாம்பு எய்ட்ஸ் மற்றும் புற்றுநோயைக் குணப்படுத்தும்..
ஆதாரம் இல்லை.

நரி முகத்தில் விழிப்பது நல்லது. நரிக்கொம்பு அதிர்ஷ்டம் தரக்கூடியது.

கிராமங்களில் சாதாரணமாக தென்பட்ட நரிகளை தற்போது காண முடிவதில்லை.  அதன் முகத்தில் விழிப்பது யாருக்கு நன்மை என்று சொல்ல முடியாது.  மேலும் நாய் இனத்தை சேர்ந்ததால் நரிக்கும் கொம்பு கிடையாது.

நரி ஊளையிடுவது கெட்ட சகுணம்..

தனது இருப்பை அறிவிப்பதற்கான தொடர்பு மொழியே ஊழையிடுதல் ஆகும். இது மனிதர்களுக்கு  எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது.

பூனை குறுக்கே போனால் காரியம் கெட்டுவிடும்...

உணவு தேட இனச்சேர்க்கைக்கு எனத் தனது எல்லைக்குள் நடந்து கொண்டேயிருப்பது பூனை.  மனிதர்களின் நல்ல காரியங்கள், சடங்குகள் பற்றி அதற்குத் தெரியாது.

யானை முடி செல்வத்தை தரக்கூடியது..

கழுதை, குங்கு, பன்றி போன்ற விலங்குகளின் முடியில் என்ன இருக்கிறதோ அதுதான் யானை முடியிலும் இருக்கிறது.  யானையின் வாலிலுள்ள முடியை அதிர்ஷ்டம் தரும் என்று அகற்றி விடுவதால், அதனை துன்புறுத்தும் கொசு, ஈக்களை விரட்டத் தூரிகை போன்ற வால் இல்லாமல் சிரமப் படுகிறது என்பதே கவலைக்குரியதாகும்.

தொழிநுட்ப செய்திகள்

சாரதி இல்லாமல் ஓடும் கார்கள் விரைவில்!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சாரதி இன்றி வீதியில் தானாகவே ஓடும் கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அவற்றின் முதற்கட்ட சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
அதை தொடர்ந்து அக்கார்களை பக்கிங்காம் ஷிரில் உள்ள மில்டன் கியன்ஸ் தெருக்களில் ஓட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கார் ஓடுவதற்கு வசதியாக அகலமான நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்காக மின்சாரம் மூலம் இயங்கும் 100 கார்கள் தயார் நிலையில் உள்ளன.
இக்கார்கள் எதிர்வரும் 2015ம் ஆண்டின் தொடக்கத்தில் ஓட தொடங்கும் இவற்றில் 2 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதனுடன் தேவையான பொருட்களையும் எடுத்து செல்ல முடியும்.
இக் காரின் கண்டுபிடிப்பு சம்பந்தமான செய்தி ஏற்கனவே தீபத்தில் வெளிவந்தது அனைவரும் அறிந்ததே.
இது மணிக்கு சுமார் 19 கி.மீட்டர் வேகத்தில் இயங்கும். அதற்கான கட்டணம் 2 பவுண்ட் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

7 கிரகங்களுடன் புதிய சூரிய குடும்பம் கண்டுபிடிப்பு..!

ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் எச்.டி. 10180 என்ற நட்சத்திரம் குறித்து கடந்த 6 ஆண்டுகளாக சிலியில் உள்ள லாசில்லா என்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 3.6 மீட்டர் டெலஸ்கோப் உதவியுடன் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எச்.டி. 10180 நட்சத்திரத்தை சுற்றி ஒரு புதிய சூரிய குடும்பத்தை கண்டுபிடித்தனர்.
அதில் 7 கிரகங்கள் உள்ளன. அவற்றில் 5 கிரகங்கள் மிக தெளிவாக தெரிகின்றன. அதில் ஒன்று சனி கிரகம் போன்ற தோற்றத்தில் உள்ளது. இவை தவிர மிக சிறிய அளவில் வெளி கிரகங்களும் உள்ளன.
இந்த புதிய சூரிய குடும்பம் பூமியில் இருந்து 127 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இது தற்போதுள்ள சூரிய குடும்பம் போன்றே உள்ளது. அது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருவதாக விஞ்ஞானி கிறிஸ்டோபே லோவிஸ் தெரிவித்துள்ளார்.




எந்த ஊர் போனாலும்....…நம்மஊர்{குப்பிளான்} போலாகுமா!!!

குப்பிளான் (Kuppilan) அல்லது குப்புழான் (Kuppuzhanஇலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில்வலிகாமம் தெற்குப் பிரதேச சபைப் பிரிவிலும் யாழ்ப்பாண நகரில் இருந்து மேற்கே ஏறத்தாழ 9 கிலோமீற்றர்
தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். வடக்கே குரும்பசிட்டி, கிழக்கே புன்னாலைக்கட்டுவன், மேற்கே ஊரெழு, மற்றும் புன்னாலைக்கட்டுவனின் ஒரு பகுதி, மேற்கே ஏழாலை ஆகிய கிராமங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இதன் கிழக்கேபலாலி வீதியும் மேற்கே காங்கேசன்துறை வீதியும் அமைந்துள்ளன.

நீர்வளம், நிலவளம், கல்விவளம், தொழில் வளங்களோடு யாழ்ப்பாணத்துத் தொன்மை பேசும் பாரம்பரியம் மிக்க சகல வளங்களையும் மொத்தமாகத் தன்னகத்தே செழுமையான  கிராமம். எமது முன்னோர்களின் காலத்தில் எங்களின் கிராமத்தில் சஞ்சீவிகளில் ஒன்றான குப்பிழாய் என்ற புல் வகையினம்  அடர்த்தியாக வளர்ந்து காணப்பட்டமையால்  குப்பிழாய் என்ற சொல் காலப்போக்கில் மருவி குப்பிளான் என்று வந்ததாக வரலாறு ஒன்று உள்ளது. ஒழுங்கமைக்கப்பட்ட சமூக நிறுவனங்களையும், விவசாய நிலங்களையும் கொண்ட இயற்கையோடு இயைந்த ஆரோக்கியமான வாழ்வையும், நேசமும் பாசமும் மிகுந்த உறவுகளையும் களங்கமில்லாத மனிதர்களையும், நாட்டுக்காகவே தங்களை நேர்ந்து கொண்டு விட்ட கல்வியலாளர்களையும், சமயப்பெரியார்களையும், அறிவியலாளர்களையும்,  தன்னகத்தே கொண்ட அழகான ஊர் எங்களுடையது.   
எங்களின் மக்களை ஒன்றிணைக்கும் சமூக நிறுவனங்களில் முதலாவதாக ஆலயங்கள் விளங்குகின்றன. எங்களது கிராம நிர்வாக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானவைகளாக கற்கரை கற்பக விநாயகர் பெருங்கோவில், சொக்கவளவு சோதி விநாயகர் பெருங்கோவில், கன்னிமார் கௌரி அம்பாள் பெருங்கோவில் ஆகியவை விளங்குகின்றன. இக்கோயில்களில் இடைவிடாது ஒலிக்கும் மணியோசையில் காற்றே சங்கீதமயமாகிவிடுகின்றது. இவ் ஆலயங்கள் தான் எங்களது சமூகத்தை அறநெறியின் பால் சமூகப் பற்றுள்ளவர்களாகவும், சமயப்பற்றுள்ளவர்களாகவும், தேசப்பற்றுள்ளவர்களாகவும் வழி நடாத்திச் செல்கின்றன. இவ் ஆலயங்களில் மகோற்சவப் பெருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும் போது உள்ளுரில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும், ஏன் வெளிநாடுகளில் இருந்தும் கூட எம்மவர்கள் இங்கு வந்து உற்சவங்களில் கலந்து கொண்டு தங்கள் குல தெய்வங்களை வழிபடுவார்கள். எம்மக்களின் ஒன்று பட்ட சமூக சங்கமமாக இத்திருவிழாக்கள் தான் திகழ்கின்றன.

அடுத்து சமூக நிறுவனங்கள் என்று பார்க்கும் போது குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயம் விளங்குகின்றது. இதற்கென ஒரு நீண்ட தனி வரலாறும் கல்விப் பாரம்பரியமும் இருக்கின்றது. மிகச்சிறந்த ஆசிரியர்கள், தொழில் வல்லுனர்கள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள் உருவாவதற்கான அடித்தளம் இங்கே தான் போடப்பட்டது. இன்றும் சிறப்பான கல்வியை எமது மாணவர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

அடுத்ததாக விக்னேஸ்வரா சனசமூக நிலையமும், விளையாட்டுக் கழகமும்
 முக்கியமானவை. விக்னேஸ்வரா சனசமூக நிலையம் யுத்தத்தின் பின் மறுசீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இயங்குகின்றது. இங்கு யாழ் மாவட்டத்தின் முன்னணி பத்திரிகைகளும் பெரியவர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயனுள்ள நூல்களைத் தன்னகத்தே கொண்ட நூல்நிலையமும் இயங்கி வருகின்றது. வலிகாமம் பகுதியிலேயே சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமை விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகத்தையே  சாரும். இதுவும் தற்போது சிறப்பாக செயற்பட்டு  வருகின்றது. அடுத்து குறிஞ்சிக்குமரன் சனசமூக நிலையமும் விளையாட்டுக் கழகமுமாகும். இதுவும் இடப்பெயர்வுக்குப் பின் எமது இளைஞர்களின் கூட்டு முயற்சியினால் மீளச் சீரமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது. அடுத்து சமாதி கோவிலடியிலுள்ள  லெனின் சனசமூக நிலையம் இதுவும் வைரவநாதன் அவர்களின் பெரு
முயற்சியினால்  மிகச் சிறப்பாகவே செயற்பட்டு வந்தது. போர்ச் சூழலின் காரணமாக தற்போது அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாததால் இயங்குவதில்லை. அடுத்து கொலனி பகுதியிலுள்ள  வளர்மதி சனசமூக நிலையம் இதுவும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.


பௌர்ணமி நாட்களில் எம்கிராமத்தின் அழகே தனி அழகு. சமயப் பெருவிழாக்கள் குறிப்பாக  கார்த்திகை விளக்கீடு காலங்களில் இன்னும் அழகாக ஜொலிக்கும். எங்களின் விவசாய நிலங்களில் அனேகமாக நெல்லைத் தவிர அனைத்துப் பயிர்களும் சிறப்பாக வளரும். பெரும்பாலும் விவசாயப் பெருமக்களைக் கொண்ட கிராம ஆகையால்  புகையிலை, வெங்காயம், மிளகாய், போஞ்சி, குரக்கன் ஆகிய பயிர்வகைகளைப் பயிரிட்டு இதன் மூலம்
இவர்களது வாழ்வாதாரம் வளம் பெறுகிறது. எம்மக்களின் வீடுகளில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளில் ஏதேனும் ஒன்றாவது எப்பவுமே இருக்கும். அதிலும் வரிக்கை இனப்பலாப்பழமும், கறுத்தக்கொழும்பான் மாம்பழமும் தனி ருசி. வாழைப்பழம் குலைகுலையாக வீடுகளில் எப்பவுமே இருக்கும். பனங்கிளங்கு, பனங்காய்ப் பணியாரம், ஒடியல் என்று பனை மூலம் கிடைக்கும் பலநூறு நன்மைகளும் கால்நடைகள் முக்கியமாக ஆடு,மாடு இவை மூலம் கிடைக்கும் பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளும், இறைச்சியும் எங்கள் மக்களின் பிரதான ஊட்டச்சத்து
மூலங்களாக விளங்குகின்றன. வீடுகளில் நாம் ஆசையுடன் வளர்க்கும்  பூக்கும் செடி கொடிகளும் மன நிறைவைத்தரும். ஒழுங்காக கத்தியால்களில் கட்டப்பட்ட கிடுகு வேலிகளையும் நேர்த்தியாகப் போடப்பட்ட சாலைகளையும் பருவ மழையிலும் பாறையாய் நிற்கின்ற வேப்ப மரங்களையும் எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கும் மக்களையும்  கொண்டது எம் கிராமம்.
எம்மக்களின் உண்மையான உழைப்பு, நேர்மை, உடைந்து அழுதுவிடும் மென்மை உடனே போராடும் ஆண்மை, வாழ்வில் உண்மை, வறுமையிலும் செம்மை இவையெல்லாம் சிறிய வயதிலிருந்தே அவர்களை வணங்க வைத்தன. விஞ்ஞானத்தின் நாகரிக வசதிகள் எதையும் பெரிதாகப் பயன்படுத்திக் கொள்ளாத எம்மக்கள் இயல்பிலேயே எளிமையானவர்கள். கூர்ந்த மதியும் சுபாவத்திலேயே மெய்ப்பொருளைக் காணத் துடிப்பவர்களாகவும் விளங்குகின்றனர். தமது தோள்களையும் சொந்தச் சேமிப்பையும் நம்பித்தான் அவர்கள் சீவித்தார்கள். நிலத்தின் வளத்தை விடவும் தமது அயரா உழைப்பின் பலத்தையே அவர்கள் அதிகமதிகம் நம்பினார்கள். இது அவர்களை பிறரில் தங்கியிராத தனது சொந்தச் சேமிப்பிலேயே தங்கியிருக்கின்ற தன்னம்பிக்கை அதிகமுடைய ஒரு தந்திரசாலியாக்கியது. இப்படி வீரம், விவேகம்,விச்சுழி, தந்திரம், சுயநலம், கட்டுப்பெட்டித்தனம், புதுமை நாட்டம் , விடுப்பார்வம், விண்ணானம் இவையெல்லாம் கலந்த ஒரு மனிதனாக்கியது.

நூறு நூற்றாண்டாய் அவர்கள் தேடிய தேட்டமனைத்தையும் ஒரே நாளில் கை விட்டு இடம்பெயர்ந்து போகுமொருவனாய் மாறினார்கள். யுத்தம் அவர்களைச் செதுக்கியது. சுயநலமியாய் சேமிப்பில் வெறியனாய் இருந்தவர்களை வீரனாக்கியது. எம் மக்களை பண்பு மாற்றம் பெற வைத்தன. கந்தபுராணக் கலாச்சாரத்திலிருந்து அவர்களைக் கட்டாயமாக இடம்பெயர வைத்தன. ஒவ்வொரு இடப்பெயர்வும் அவர்களுக்கு மனப்பெயர்வாய் மாறியது. இடம் பெயர்த்து நடப்பட்டத்தில் அவன் வாழ்க்கை வாடிக்கொண்டே வளர்ந்தது. பூமியில் வேறெந்த ஜனங்களிற்கும் நடந்திராத தொடர்ச்சியான சோதனைகள் இழப்புக்கள் என்பதன் பேறாய் உருவாகியவர்கள். கோடை வெயிலைக் குடித்தும் புகையிலைச் செடிகளின் மீது அரும்பிய அதிகாலைப் பனித்துளிகளை உண்டும் வளர்ந்தவர்கள் ஆதலால் அவர்கள் வலியனாயும் சுழியனாயும் அயராத கடும் உழைப்பாளியாயும் உருவானார்கள்.
இரண்டு எதிர்த் துருவங்களுக்கும் போய் வரக்கூடிய எம்மக்களில் பெரும்பாலானோர் தற்போது புலத்திலேயே எம் கிராமத்தின் நினைவுகளுடனேயே வாழ்ந்து வருகிறார்கள். 
நன்றி- kuppilan.net,kuppilanweb.com

சினிமா


ராஜாராணி - விமர்சனம்
என் தலைமுறையில் சூப்பர் டூப்பர் ஹிட்டான 'மெளன ராகம்' படத்தை கொஞ்சம் டிங்கரிங் வேலை செய்து புது திரைக்கதையுடன்.. புத்தம் புதுப் பொலிவுடன்.. தற்போதைய ஹாட்டான ஜோடிகளை நடிக்க வைத்து தனது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் மெகா இயக்குநர் ஷங்கரின் சீடரான அட்லி..!
rajarani-sep15ஆர்யா-நயன்தாரா இருவருமே காதலில் தோல்வியடைந்தவர்கள். பெற்றவர்களின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள்.. விருப்பமில்லாமலேயே ஒதுங்கியே வாழ்கிறார்கள்.. வாழ்க்கை அவர்களை எப்படி தம்பதிகளாக இணைக்கிறது என்பதுதான் கதை..!

முதற்பாதியில் நயன்தாரா-ஜெய் காதல் காட்சிகள் நிச்சயம் இப்போதைய ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.. ஜெய்யின் இந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுக்காக இயக்குநருக்கு ஒரு ஷொட்டு..! செல்போன் கம்பெனியின் கஸ்டமர் கேர் ஸ்டாப்பாக இருக்கும் ஜெய்.. நயன்தாராவிடம் மாட்டிக் கொண்டு அழுகைவரையிலும் போகும் அந்த முதல் காட்சியே அருமை.. மிக இயல்பாக  உண்மையாகவே நடித்திருக்கிறார் ஜெய்..!

தொடர்ந்து ஜெய்யை மடக்க நயன்தாராவும் அவரது தோழிகளும் செய்யும் போன் கால் தொல்லைகளும்.. அதைத் தொடர்ந்த காட்சிகளும் செம கலகலப்பு..! உச்சக்கட்டமாக கால்சென்டர் சிஓஓ மனோபாலாவுக்கு போனை டிரான்ஸ்பர் செய்ய அவருக்கு வரும் போன் காலும்.. அந்த கோரிக்கையும்.. அதற்கு மனோபாலாவின் ரியாக்சனும்.. செம செம..

இப்படியொரு அப்பா யாருக்குக் கிடைப்பார்..? சத்யராஜின் பாசமிகு நடிப்பு.. அப்பாவுக்கும், மகளுக்குமான நட்பு அவர்களையே நேசிக்க வைக்கிறது.. சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மகளை அழைத்துவரும் சத்யராஜின் பேச்சும், அந்தக் காட்சிகளும் வெகு யதார்த்தமானவை.. இப்படியொரு ஓப்பன் மைண்ட் கோடீஸ்வர அப்பா மகளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைப்பதும், அதன் பின்னான காட்சிகளிலும் சத்யராஜ் தனியே தெரிகிறார்.. லொள்ளுவையெல்லாம் விட்டுவிட்டு இப்படியும் தொடர்ந்து நடிக்கலாமே..?

முதற்பாதியில் இந்தக் கதையெனில் பிற்பாதியில் நஸ்ரியாவின் கதை.. ஏற்கெனவே பல படங்களில் பார்த்ததுதான்  என்றாலும் நஸ்ரியாவின் துள்ளலான நடிப்பால் பார்க்கப் பார்க்கப் பிடிக்கிறது..! ஆர்யாவின் இளிப்பும், பிரதர் என்று அழைத்து மொக்கை போடும் நஸ்ரியாவின் சமாளிப்பும் கலகலப்பு..!

'பூவே பூச்சுடா'வில் நதியாவை பார்த்ததுபோல இருக்கிறது இந்த நஸ்ரியாவை பார்க்கும்போது..! பாடல் காட்சிகளிலும் சில குளோஸப் காட்சிகளிலும் மனதை அள்ளுகிறது அவரது அழகு.. இந்தப் பொண்ணை கோடம்பாக்கம் நிறையவே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்..! தனது காதலைச் சொல்லாமலேயே மறைத்துவிட்டு கடைசியில் ஒத்துக் கொள்ளும் பெண்ணை இதோடு எத்தனையாவது தடவையா பார்த்திருக்கோம்னு எண்ணிப் பார்த்தாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனா இந்தப் படத்துல சொல்றது நஸ்ரியான்றதால முதல்முறை என்றே பொய் சொல்லிவிடலாம்..

சோகமான முடிவை வலிந்து திணிக்கவில்லையென்றாலும்.. இரண்டுவித சோகத்தை தாங்கியவர்கள்.. அப்படியே இருக்கணுமா என்ன என்று கேட்டு கல்யாணம் செய்து வைக்கிறார்கள்.. பின்பு..? ஏன் எதற்கு என்ற கேள்வியுடனேயே முதல் அரைமணி நேரம் கதை நகர்கிறது.. இந்த அளவுக்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும் இவர்களே ஹஸ்பெண்ட் அண்ட் வொய்ப் பதவியையே கார்ப்பரேஷன் கவுன்சிலர் போஸ்ட் மாதிரி யூஸ் பண்ணிக்கிட்டு கண்டும் காணாததும்போல இருப்பதெல்லாம் ரொம்பவே லாஜிக் மீறல்.. சினிமா சென்டிமெண்ட்டுக்காக நயனுக்கு உள்ள அந்த வியாதியும்.. அதனால் பரிதாபப்பட்டு ஆர்யா செய்யும் வேலைகளும் அக்மார்க் 1985 காலத்து தமிழ்ச் சினிமா டைப்..!

இவ்வளவு பெரிய கோடீஸ்வரரின் பொண்ணு ஏன் டூவீலரில் போகணும்.. எதுக்கு சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கணும்..? ஒரு சாதாரண எஸ்..யின் மகனை காதலிப்பதாகச் சொல்வதும், அதனை அவருடைய அப்பா கேள்வியே கேட்காமல் ஏற்றுக் கொண்டு வீடு தேடிச் சென்று இது பற்றி பேசுவதுமாக ரன் பாஸ்ட்டில் கதை நகர்கிளது.. அப்போ கேக்கணும்னு தோணலை.. ஆனா இப்போ தோணுது..!

இடையில் காமெடி உதவிக்கு சந்தானம்.. அதேபோன்ற நீள, நீளமான டயலாக்குகள்தான்.. அவருடைய போர்ஷனில் அவருடைய சித்தப்பாவை வைத்துக் கொண்டும், ஒரு சாதாரண செக்கை வைத்துக் கொண்டும் செய்திருக்கும் கலாட்டாக்களை மட்டுமே ரசிக்க முடிகிறது.. சந்தானத்தின் வாய்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருவதை இந்தப் படத்திலும் பார்க்க முடிகிறது..!

நயன்ஸ் இழந்த அழகை மீண்டும் பெற்றுவிட்டார் என்றே நினைக்கிறேன். ஐயா படத்தில் தோன்றிய அதே நயன்ஸ் இப்போதுதான் இந்தப் படத்தில்தான் கிடைத்திருக்கிறார்.. அக்காவுக்கு அழுகவும் வரும்போலிருக்கு.. செமத்தியான அழுகை.. நடிக்கவும் வைத்திருக்கிறார்கள்..! அநேகமா நயன்தாரா நடித்ததிலேயே அவர் அதிகமான டயலாக்குகள் பேசியிருப்பது இந்தப் படத்தில்தான் என்று நினைக்கிறேன்..!

.. .. என்றால் இன்றைய இளைஞர்கள் டாஸ்மாக் கடைக்குத்தான் போகிறார்கள் என்பதை இந்தப் படமும் காட்டுகிறது..! இந்தப் பழக்கம் எங்க போய் முடியப் போவுதுன்னு தெரியலை.. ஆனா ரொம்ப ஓவராவே போயிட்டிருக்கு.. வீட்டுல பொண்ணுகளே அப்பனுக்கும், புருஷனுக்கும் பீர் வாங்கிக் கொடுத்து குடிக்கச் சொல்வது போலவும்.. இதெல்லாம் இந்தக் காலத்துல சகஜமப்பா என்பதும் இயக்குநரின் முடிவாக இருக்கலாம். ஆனால் இது வரும்காலத்திய சினிமா ரசிகர்களின் மனதில் ஒரு தவறை சரி என்று சொல்லவும் வைக்கும்.. செய்யவும் வைக்கும்..!

இசை ஜி.வி.பிரகாஷ்குமாராம்.. நஸ்ரியா, ஆர்யா பாடும் பாடல் மட்டுமே ஓகே... மற்றவைகளை திரும்பவும் கேட்டாலும் எந்த படம்ன்னு யோசிக்கணும்.. அந்த அளவுக்குத்தான் இருக்கு..! ஆர்யாவின் சோக்க் கதையைக் கேட்டவுடன் எப்படியும் மனசு மாறி ஒண்ணு சேரத்தான் போறாங்க என்பது ரசிகர்களுக்கே தெரிந்த்துதான்.. பின்பு எதுக்கு மேலும் 15 நிமிடங்களுக்கு கதையை வளர்த்திருக்கணும்..?
கிளைமாக்ஸில் ஜெய் திரும்பி வருவதை கட் செய்திருந்தால்கூட நன்றாகத்தான் இருக்கும்.. அந்தக் கிளைமாக்ஸே இல்லாமல் இருவருமாகவே யோசித்து இணைவது போல திரைக்கதை அமைத்திருக்கலாம்.. இட்ஸ் ஓகே.. இருந்தவரையிலும்.. எடுத்தவரையிலும் ஒரு புதிய இயக்குநராக.. புதிய வெற்றி இயக்குநராக தனது பெயரை முதல் படத்திலேயே பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் அட்லி.. அவருக்கு எனது வாழ்த்துகளும், நன்றிகளும்..!