மனித மூளையின் நினைவகம் கண்டுபிடிப்பு!



மனித மூளையை பற்றி வெளிவராத பல தகவல்கள் அறிவியல் உலகில் உள்ளன.
இதுவரை மனித மூளையில் நினைவுகள் எவ்வாறு பதிவாகின்றன என்ற கேள்விதான் மருத்துவ உலகின் மில்லியன் டாலர் கேள்வியாக இதுவரை இருந்தது.
நியூரான்களின் உதவியோடு நினைவுகளை சேமித்து வைத்து கொள்கிறது மூளை. இதில் சிக்கலான நரம்பு முனைகளின் வலை பின்னலை நேரடியாக கண்டறிய முடியாமல் மருத்துவ உலகம் திணறி வந்தது.
தற்போது அதற்கு விடை கிடைக்கும் வகையில்,அமெரிக்க விஞ்ஞானி டான் அர்னால்டு தலைமையில் விஞ்ஞானிகள் குழு செய்த ஆய்வில் மூளையில் நினைவுகள் எவ்வாறு பதிவாகின்றன என்பதை 3டி படமாக எடுத்து காட்டி சாதனை படைத்துள்ளனர்.
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஜாக் ஜிஸ்டாக் மற்றும் டாக்டர் ராபர்ட் ஆகியோர் கண்டறிந்த எம்ஆர்என்ஏ டிஸ்ப்ளே என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்க விஞ்ஞானிகள் குழு இந்த 3டி படத்தை வெளியிட்டுள்ளது. 
நாம் பொதுவாக எதையாவது புதிதாக கற்கும் போதோ, பார்க்கும் போதோ நினைவுகள் மூளையில் பதிவாகும் போது அல்லது சேமிக்கப்பட்ட நினைவுகளை மீண்டும் நாம் நினைவு கூரும்போது மூளையில் உடல்ரீதியாக மாற்றங்கள் ஏற்படும்.
இதை கணக்கில் கொண்டு இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.
நினைவுகள் மூளைக்குள் சென்று பதிவாகும் போது, மூளைக்குள் அனுப்பப்படும் ஒருவித ரசாயனம் ஒளிர தொடங்குகிறது. அவ்வாறு ஒளிர்வதை கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் மூலம் 3டி படமாக எடுக்க முடியும் என்று விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
தற்போதைய இந்த கண்டுபிடிப்பு மூளை மற்றும் நரம்பியல் தொடர்பான மருத்துவ துறையில் ஒரு உச்சக்கட்ட சாதனை என்றே கருதப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மூளையில் நினைவுகள் எவ்வாறு பதிவாகின்றன, எங்கு சேமிக்கப்படுகின்றன என்பதை ஆய்வு செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்....

கணிணி உலகம்


உலகின் அதிவேக சூப்பர் கணனி அறிமுகம்
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
 மத்திய சீனாவின் சாங்ஷா நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைகழக விஞ்ஞானிகள் இந்த சூப்பர் கணனியை உருவாக்கியுள்ளனர்.
டியானி 2(Tianhe 2) என பெயரிடப்பட்டுள்ள இந்த கணனியின் வேகம் நொடிக்கு 33.86 பெடாஃப்லாப்(Petaflap) ஆகும்.
அதாவது நொடிக்கு 33,860 லட்சம் கோடி கணக்குகளைச் செய்து முடிக்கும் ஆற்றல் படைத்தது.

வேகமாக வளரும் குழந்தைகள் அறிவாளிகளா?


-ஆய்வில் தகவல்

பிறந்த ஒரு மாதத்துக்குள் வேகமாக வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் அறிவாளியாக இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பப்பிள் ஹெல்த் பல்கலைக்கழகத்தின் ஆராயச்சியாளர்கள் செய்த ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை பிறந்த ஒரு மாத காலத்துக்குள், அக்குழந்தை வேகமாக வளர்வது அதாவது, எடை அதிகரிப்பு மற்றும் தலையின் அளவு அதிகரிப்பது போன்றவை, எதிர்காலத்தில் அக்குழந்தை அறிவாளியாக இருக்கும் என்பதற்கு அறிகுறியாகும் என்கிறது அந்த ஆய்வு.

சிந்தனைஒளி

. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
* சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
* அறிவாளி தன் தவறை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அதனை எப்போதுமே செய்ய மாட்டான்.
* ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்க வேண்டும். மற்றவர்கள் அவனை நிமிர்த்தும்படி இருக்கக் கூடாது.

* மரியாதைக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது.

ஒளிர்வு-(31) வைகாசி -2013

உண்மைகள்உரைக்கப்படும்தளம்தீபம்,மூடநம்பிக்கைகளின்முடிவிடம்  

விஜயகாந்த் மகனுக்கு ஜோடியாகிறார்....

விஜயகாந்த் தன்னுடைய இளைய மகன் சண்முக பாண்டியனை தமிழ திரையுலகிற்கு அறிமுகப்படுத்த தக்க தருணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்திருந்தார். இதற்காக மகனை தயார்படுத்திய அவர் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார். இந்நிலையில் விஜயகாந்த், ஹரியை அழைத்து தன்னுடைய மகனுக்கு கதை ஒன்றை தயார் செய்யும்படி கூறியிருக்கிறார். அதன்படி  தற்போது நடந்து வரும் மாணவர்கள் போராட்டத்தை மையமாக வைத்து ஒரு கதையை தயார் செய்து விஜயகாந்திடம் சொல்லிருக்கிறார். இந்த கதை பிடித்துவிடவே உடனே ஓகே சொல்லியிருக்கிறார் விஜயகாந்த்.

ஹரி தற்போது சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் முடிந்ததும் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தின் வேலைகளில் தீவிரமாக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக ‘கடல்’ படத்தில் அறிமுகமான பழைய நடிகை ராதாவின் இளைய மகள் துளசி ஒப்பந்தமாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருவரையும் இணைத்து போட்டோ ஷூட்டையும் ரகசியமாக முடித்துவிட்டார்கள்.
மே மாதத்திலிருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. சுமார் ரூ.15 கோடி பட்ஜெட் படம் தயாராகிறது.

சொல்லத் தயங்கிய ‘சினேகாவின் காதலர்கள்’

13-sneha-600சினேகாவின் காதலர்கள் என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகிறது. பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் இயக்கும் இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்களே நடிக்கின்றனர். இந்தப் படம் குறித்து இயக்குநர் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: “தமிழ் சினிமாவை இதுவரை கவ்விக் கொண்டிருந்த ‘மசாலா சூதுகள்’ விடைபெறும் ‘நேரம்’ வந்து விட்டது. பஞ்ச் டயலாக், பறந்துபறந்து அடிக்கும் ஃபைட்டு, குத்துப்பாட்டு போன்ற வெத்துவேட்டுக்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, ‘புதுசா எதாவது சொல்லுங்க பாஸ்’ – என்று கேட்கும் தமிழ் சினிமா ரசிகனின் வேட்கைக்கு தீனியாக வருகிறது சினேகாவின் காதலர்கள்.

முற்றிலும் புதுமுகங்களுடன், இதுவரை தமிழ்சினிமா சொல்லத்தயங்கிய சங்கதியை செல்லுலாய்ட் சபைக்கு கொண்டு வரும் படமாக, தயாராகிறது சிநேகாவின் காதலர்கள். நட்பு – காதல் – காமம் இவற்றினூடாக பயணப்படும் ஒரு இளம் பெண்ணின் ரகஸிய உலகை அவளே சிநேகத்துடன் பகிர்ந்து கொள்ளும் படம் இது.

ஆண்கள் கோலோச்சும் உலகத்தில், உறவுகளுக்குள் தன்னைத் தொலைத்து விடாமல் ‘தன் சுயத்தை’க் கண்டறிய / காத்துக்கொள்ளப் போராடும் 21ஆம் நூற்றாண்டுப் பெண் சிநேகா. தமிழ்ச் சமூகத்தின் காதல் பற்றிய பழைய கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி ‘காதல்’ என்பதற்கான புதிய அர்த்தங்களை எழுதிப்பார்க்கிறாள் அவள். ஆண் – பெண் உறவுகளை பெண்களின் பார்வையில் பேச முற்படுகிறது ‘சிநேகாவின் காதலர்கள்’. கவுரவ வேடத்தில் சினேகா… மற்றபடி நடிகை சிநேகாவுக்கும் இந்தக் கதையில் இடம்பெறும் சிநேகாவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் இல்லை. அதை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில் அவரே ஒரு குட்டி கவுரவ வேடத்தில் நடிக்கவும் கூடும். துணிச்சலான சிநேகா, அவரது வாழ்வில் கடந்து செல்லும் 4 இளைஞர்களின் பாத்திரம் மற்றும் முக்கிய பாத்திரங்களுக்கான தேர்வு துரிதமாக நடைபெற்று வருகிறது.

இசைக்கு முக்கியத்துவம் உள்ள, இசையில் புதிய ஒரு அனுபவத்தைக் கொடுக்கவல்ல, எட்டுப்பாடல்கள் இடம்பெறும் இப்படத்துக்கு அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் இரா.ப்ரபாகர் இசையமைக்கிறார். பாடல்கள் நெல்லைபாரதி. தயாரிப்பு நிர்வாகம் அருள். மக்கள் தொடர்பு நிகில்முருகன்.
‘சிநேகாவின் காதலர்கள்’ திரை தரிசனம் அநேகமாக டிசம்பராக இருக்கக்கூடும்!”

பறக்கும் உணவுகள்!

தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. 
 குறிப்பாக மனிதர்களின் வேலைகளை இலகுபடுத்தியுள்ளது. இதற்கு சிறந்த உதாரணமாக லண்டனில் உள்ள உணவகமொன்றில் பறந்து பறந்து உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் உபகரணத்தைக் குறிப்பிடலாம். லண்டனில் உள்ள யோ!சுசி உணவகமே ஹெலிகொப்டர் போன்ற உபகரணத்தை வாடிக்கையாளர்களுக்கு உணவினைப் பரிமாறும் பொருட்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
 இதற்கு ஐ டிரே எனப் பெயரிட்டுள்ளது குறித்த உணவகம். குறித்த உபகரணமானது மணிக்கு 25 மைல் வேகத்தில் பறந்துசெல்லக் கூடியது. இது பாரம் குறைந்த காபன் பைபர் பிரேம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. உணவக ஊழியர்கள் இதன் மூலம் மேசைக்கு உணவினை அனுப்புகின்றனர். அவர்கள் உணவைப் பெற்றதும் ஐ டிரே அவ்விடத்திலிருந்து திரும்பி விடுகின்றது. இதனை ஊழியர்கள் பேட்டின் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

தற்போது குறித்த உணவகம் தனது இரண்டு கிளைகளில் மட்டுமே இதனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் அதனை தனது 64 கிளைகளிலும் அறிமுகப்படுத்தவுள்ளது. குறித்த நிறுவனமானது இதற்கு முன்னரும் பல புரட்சிகர அறிமுகங்களை தனது உணவகங்களில் மேற்கொண்டுள்ளது. உணவினை தானாக சென்று வழங்கக் கூடிய 'கொன்வேயர் பெல்ட்' மற்றும் பேசும் ரொபோ ட்ரோலிஸ் என என்பன அவையாகும்.
 இதனால் ஊழியர்களின் நேரம் மீதமாவதுடன், துரிதமாக உணவும் பரிமாறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

video: கனடா தமிழ் பொண்ணே...


வான் மற்றும் தொலைதூரப் பயணக் கால் வீக்கம்

வெளிநாடுகளிலிருந்து தாய் நாட்டிற்கு வருபவர்கள் பலரை இப்பொழுதெல்லாம் மருத்துவ ஆலோசனை மனையில் அடிக்கடி சந்திக்க நேர்கிறது. இவர்களில் சிலராவது கால் வீக்கத்துடன் வருவார்கள்.

10- 12 மணிநேர தொடர்ச்சியான வான் பயணத்தின் காரணமாகவே இவை பெரும்பாலும் ஏற்படுகிறது. வந்த கையோடு 10 மணித்தியால யாழ் பிரயாணம் சிலருக்கு இதை மோசாக்கி கால்களைப் பொத்தையாக்கி விடுகிறது.

இங்கிருப்பவர்கள் உலக உலா வருவதும் அதிகமாகிவிட்டது. இவர்களுக்கும் இதே பிரச்சனைதான்.
பெரும்பாலும் இது ஆபத்தான பிரச்சனை அல்ல. இருந்தபோதும் ஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thrombosis)ஏற்படக் கூடிய வீக்கம் சற்று ஆபத்தானது. அது பற்றி இங்கு அதிகம் பேசப் போவதில்லை. சாதாரண பிரயாண கால்வீக்கங்கள் பற்றிப் பார்க்கலாம்.
காரணங்கள் என்ன?
முக்கிய காரணம் செயற்படாது ஒரேயிடத்தில் உட்கார்ந்து இருப்பதுதான். கால்களை கீழே தொங்கிட்டபடி நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும்போது இரத்த நாளங்கள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. காலின் கீழ்ப்பகுதிக்கு இறங்கிய இரத்தம், தசைகள் அசையாது இருப்பதால் மேலெழுவது குறைந்து தேங்கிவிடுகின்றன.

அத்துடன் உட்கார்ந்திருக்கும்போது கால்; தசைகள் இருக்கையில் அழுத்தப் படுவதால் உள்ளேயுள்ள நாளங்களில் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் தேங்கியுள்ள இரத்தத்தில் உள்ள நீரானது இரத்தக் குழாய்களை விட்டு கசிந்து வெளியே பரவுகின்றன.
தவிர்ப்பது எப்படி?
இறுக்கமான ஆடைகளை அணிவதைத் தவிருங்கள். நீண்ட தூரப் பிரயாணங்களின் போது தொளப்பான ஆடைகனை அணிவது நல்லது. அவை கால்களை இறுகப் பிடித்து இரத்த ஓட்டத்தைத் தடுக்காதிருக்கும்.
சிலைபோல ஓரேயிடத்தில் உட்கார்ந்திருக்க வேண்டாம். இடையிடையே எழுந்து நடவுங்கள். விமானத்தின் உள்ளறையானது நடைப் பயிற்சிக்கான இடமல்ல என்பது உண்மைதான். இருந்தபோதும் ஓரிரு முறை முன்னும் பின்னும் நடந்து கால்களைச் சற்று இயக்குவதற்கு அந்த இடமே போதுமானதுதானே. இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
உட்கார்ந்திருக்கும் போதும் சின்னச் சின்ன பயிற்சிகளை உங்கள் கால்களுக்குக் கொடுக்கலாமே. முழங்கால், பாதங்கள், விரல்கள் ஆகியவற்றை மடித்து நீட்டுவது மட்டுமே நடக்க முடியாத நேரங்களில் போதுமான பயிற்சியாக இருக்கும்.
காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருப்பதும், காலுக்குள் காலைக் கொளுவியிருப்பதும் கூடாது. இவை இரத்தக் குழாய்களை அழுத்தி இரத்த ஓட்டத்தைக் குறைக்கும்.
உருளைக் கிழங்குபோல போட்டது போட்டபடி ஆசனத்தில் அசையாது உட்கார்ந்திருந்து இருக்க வேண்டாம். உட்கார்ந்திருக்கும்போNது இடுப்பை நாரியை சற்று வளைத்து நிமிர்த்தி அசைவு கொடுங்கள்.
பிரயாணப் பொதிகளை அதற்கான இடங்களில் போட்டுவிடுங்கள். சீற்றில் வைக்க வேண்டாம். ஆவை சீற்றில் இருந்தால் உங்கள் உடலை ஆட்டி அசைத்து இயங்கப் பண்ணுவதற்கான இடம்போதாது. இதனால் உறுப்புகளில் அழுத்தம் ஏற்பட்டு இரத்த ஓட்டம் பாதிப்படையும்.
காலுறைகள் அழுத்திப் பிடிக்கும்படியாக இறுக்கமாகயிருத்தல் கூடாது. அவை கணுக்காலுக்கு மேலுள்ள பகுதியை இறுகப் பிடித்து இரத்த ஓட்டத்தைக் குறைத்துவிடும். இதனால் வீங்கச் செய்துவிடும்.
காலணிகளும் லேஸ் வைத்துக் கட்டுவதாக அல்லாது சுலபமாகக் கழற்றக் கூடியiவாயாக இருப்பது அவசியம். தேவையானபோது அனற்றிவிட்டு பயிற்சிகள் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
முடியுமானால் காலுறையையும் கழற்றி வைத்துவிட்டு சற்று மசாஸ் பண்ணலாமே. மசாஸ் பண்ணுவது இரத்த ஓட்டத்தைத் தூண்டிக் கால்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
போதிய நீர் அருந்துங்கள். பிரயாணத்திற்கு முதல் நாளிலிருந்தே கூடியளவு நீர் அருந்துவதால் நீரிழப்பு நிலையைத் தவிர்க்கலாம். ‘சீ வேண்டாம். தண்ணி கூடுதலாகக் குடித்தால் அடிக்கடி பாத்ரூம் போக வேணும். பிரயாணத்தின் போது கரைச்சல்’ எனச் சிலர் முணுமுணுப்பது காதில் விழுகிறது. உண்மையில் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கு அதுவும் ஒரு காரணம். சிறு கழிப்பதற்காகவேனும் எழுந்து நடப்பதால் கால்களுக்கு பயிற்சி கிட்டுகிறதே.
போதிய நீர் அருந்தாவிடில் குருதியின் நீர்த்தன்மை குறைந்து தடிப்படையும். இதுவும் குருதிச் சுற்றோட்டத்தைப் பாதிக்கும்.
அதே நேரம் மது அருந்துவது நல்லதல்ல. மது மயக்கத்தைக் கொண்டு வரும். எழுந்து நடக்கவிடாது தூக்கத்தில் ஆழ்த்திவிடலாம். இதனால் உங்கள் நடமாட்டம் குறைந்துவிடும்.
பிரயாணத்திற்கு ஓரிரு நாட்கள் முதலே அதிக உப்பு உட்கொள்தைத் தவிருங்கள். குறைந்தளவு உப்பையே உபயோகியுங்கள். ஏனெனில் அதிக உப்பானது உடலில் நீரைத் தேங்கச் செய்யும். அதனால் கால்கள் வீங்கும்.
இவை தவிர
ஆகாய விமானத்தின் உட்புறத்தே காற்றின் அழுத்தம் குறைவாக இருப்பதும்,
அது வரட்சியான காற்றாக இருப்பதும்
குருதிச் சுற்றோட்டத்தைக் குறைத்து கால் வீக்கத்தைக் கொண்டுவரலாம் என்தும் உண்மையே.
அவதானிக்க வேண்டியவை
பொதுவாக பிராயணத்தின் பின்னான கால் வீக்கம் அத்துணை ஆபத்தானது அல்ல. ஒரிரு நாட்களில் குறைந்து விடும்.

ஆயினும்

கடுமையான கால் வீக்கம்
அதுவும் நீங்கள் வழமையான வாழ்க்கை முறைக்கும் திரும்பிய பின்னரும் தொடர்ந்திருந்தால்
அதிலும் முக்கியமாக ஒரு கால் மட்டும் வீங்கியிருப்பதுடன் வலியும் சேர்ந்திருந்தால்
அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக அக்கறை எடுக்க வேண்டும்.

ஏனெனில் அது ஆழ்நாள குருதியுறைவினால் (Deep Vein thrombosis) ஏற்பட்டதாக இருக்கக் கூடும். இது ஆபத்தானது உறைந்த குருதிக் கட்டி இரத்தக் குழாய்களில் அசைந்து சென்று நுரையீரலுக்கான இரத்தக் குழாயை அடைத்தால் சடுதியான உயிராபத்து ஏற்படலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)

இப்படியும் நடந்தது

வினாயகனால் வந்த..

காராட்டிர மாநிலம் புனேயில் பிளேக் நோய் கடுமையாக பரவிய காலகட்டம். எலிகள் செத்து விழுந்து அதிலிருந்து கிருமிகள் பரவி பிளேக் நோயைக் கொடுத்துவிடும்.
பிளேக் நோய்க்குக் காரணமான எலிகளைக் கொல்லும் இயக்கத்தை வெள்ளைக்கார அரசு தீவிரப்படுத்தியது - மனிதாபிமானத்தோடு, மக்களை நோயிலிருந்து காப்பாற்றவேண்டிய கடமையைத்தான் பிரிட்டீஷ் அரசு செய்தது.
திலகர் பெருமான், திலகர் பெருமான் என்று அழைக்கப்படுபவர்  - அந்த லோகமான்ய பால கங்காதரர் என்ற, கொழுத்த மீசைக்காரத் திலகர் பெருமான் என்ன வேலை செய்தார் தெரியுமா?
நமது பகவானாகிய விநாயகனின் வாகனம் எலி. அதன்மீது மிலேச்சர்களான - கிறிஸ்துவ வெள்ளைக்காரர்கள் கை வைத்துவிட்டனர் - வேட்டையாடி ஒழிக்கக் கிளம்பிவிட்டனர்! போச்சு! போச்சு!! நமது மதம் போச்சு - கலாச்சாரம் போச்சு என்று மதவெறியைக் கிளப்பி விட்டார்.
இதன் விளைவு என்ன தெரியுமா?
புனே நகரில் எலி ஒழிப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த இரு வெள்ளைக்கார அதிகாரிகள் கொல்லப்பட்டனர். இந்தக் கொலைக்குக் காரணமாக தூண்டி விட்டவர் என்ற முறையில் திலகருக்குப் பதினெட்டு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

கவியரசர் கண்ணதாசன் சொன்ன உண்மை

டற்கரையில் மாபெரும் பாராட்டுக் கூட்டம். வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வரிசையாக அமர்ந்திருக்கிறார்கள். நடுவிலே அண்ணாத்துரை, அவர் பக்கத்திலே கருணாநிதி. கவுன்சிலர்கள் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். பலர் பாராட்டிப் பேசுகிறார்கள். தேர்தலில் கடுமையாக உழைத்த அவனும் மற்றவர்களும் அனாதைகள் போல் ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறார்கள்.
கருணாநிதி பேசுகிறார் அந்த வெற்றிக்குத் தானே கஷ்டப்பட்டவர் போல் பேசுகிறார் இவ்வளவு பேர் ஜெயிப்பார்கள் என்று ஏற்கெனவே தனக்குத் தெரிந்ததாகவே பேசுகிறார். 

அடுத்தாற்போல் அண்ணாதுரை சென்னை மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார் காங்கிரஸை வீழ்த்திவிட்ட பெருமையைப் பேசுகிறார். வெற்றிக்காக உழைத்தவர்கள் பட்டியலைச் சொல்கிறார். அதில் தன் பெயரும் வரும் என்று கண்ணதாசன் காத்துக் கொண்டிருக்கிறான். அந்தோ, அப்படி ஒருவன் உலகத்தில் இருப்பதாகவோ, அவன் தேர்தலில் உழைத்ததாகவோ அவர் சிந்திக்கக்கூடவில்லை; அது மட்டுமா அவர் செய்தார்? வருணனைகளோடு ஒரு விஷயத்தை ஆரம்பித்தார்.

"நான் என் மனைவிக்கு நகை வாங்கக்கூட கடைக்குச் சென்றதில்லை  எனக்கென்றுகூட நகைக்கடை ஏறியதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் ஊரெங்கும் அலைந்து கடையெங்கும் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி; அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித் தந்த என் தம்பி கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்" கூட்டத்தில் பெருத்த கையலி.. 'கருணாநிதி வாழ்க' என்ற முழுக்கம்.  கண்ணதாசன் கூனிக் குறுகினான். பயன் கருதாத உழைப்பு. அரசியலில் எப்படி அலட்சியமாக ஒதுக்கப்படும் என்பதை அப்போதுதான் அவன் கண்டான்.
அண்ணாதுரை அவன் இதயத்திலிருந்து சரியத் தொடங்கினார். அவரை வரம்பு மீறி புகழ்ந்து கொண்டிருந்த அவன் உள்ளத்தில் அன்றுதான் அவரைப் பற்றிய கசப்பான எண்ணம் உதயமாயிற்று. ஒரு களங்கமற்ற பக்தனை அன்று அவர் இழக்கத் தொடங்கினார். அவன் இதயம் நெருப்பாகவே எரிந்தது. கூட்டம் முடிந்து அவர் கடற்கரை மரக்கலத்தின் மீது போய் அமர்ந்தார்.

கண்ணதாசன் நேரே அவரிடம் போனான் "என்ன அண்ணா  இப்படி சதி செய்துவிட்டீர்கள்?" என்று நேருக்கு நேரே கேட்டான்.
"அட நீயும் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு அடுத்தக் கூட்டத்தில் போட்டு விடுகிறேன்" என்றார் அண்ணா.
"அப்படித்தான் கருணாநிதியும் வாங்கிக் கொடுத்தாரா?" என்றுகண்ணதாசன் கேட்டான்.
----கண்ணதாசனின் குறிப்பேட்டிலிருந்து.





அத்தியடி



எந்த ஊரு போனாலும்.. 
பழமை வாய்ந்த அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் கோவிலும்  அதனுடன் அமைந்த வாசிக்க சாலையும்  நம்ம அத்தியடிக்கு, யாழ் நகரில் உள்ள சிறு இடத்திற்கு , முக்கிய அடையாளம் .ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட[எவ்வகையான] கவலையும் தணியும். இதை நான் பெருமையாகவே சொல்வேன்.விடுதலை நாட்களில் ,ஓய்வு நேரங்களில் கூடும் இடம் அவை இரண்டும் தான்.வாசிகசாலை ஊர் புதினம் அறிய .கோவில் முற்றம் நண்பர்களை சந்தித்து அளவளாவ ,பின் ஒன்று சேர்ந்து விளையாட..  சித்திரைப் புதுவருட  தினத்தில் யாழ் அத்தியடி பிள்ளையார் கோயில் வருடாந்த தேர் உற்சவம் நடைபெறும்.கைவிசேசத்துடன் கொண்டாட்டமும் கலை கட்டும் ."கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஔவையாரின் முது மொழி. "ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். எமக்கோ  பெரியவர்கள் ஆனபின்பும் ,இன்று வெளிநாடுகளில் உள்ள மதுக் கடை அல்லது பொது விடுதி [pub ]கள்  நண்பர்களை சந்திக்க உதவுவது போல   தொடர்ந்து இருந்தது.

எம்மை  பார்த்து  கொண்டு  யாழ் ரயில் நிலையம் ,எமது ஒரு பக்க எல்லையில் அமைந்துள்ளது . "நாம் "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும்  யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே  யாழ் தேவி ரெயில் ஏறுவோம்  எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்" என்று "கவிஞர் சதீஸ்" எழுதிய  பாடல் வரிகளை இது  நினைவூட்டும்.ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் நெஞ்சில் பின்னிப் பிணைந்த யாழ்தேவியின்    சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்காத நாட்களே இல்லை .

"ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும் தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே" என "நாவலர் சற்குருமணிமாலை" போற்றும் ,தமிழும் சைவமும் தந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் வீடு ,இன்றைய நாவலர் மண்டபம் ,எமது வீட்டிற்கு  பின்னால் உடனடியாக உள்ளது .நாம் சிறுவராக இருந்த  போது அங்கும் நாம் விளையாடுவது உண்டு .அங்கு  எஞ்சியிருந்த  நாவலர் வீட்டின் சுவர் கீழே தரப்பட்டுள்ளது.

Ethir Nagalingam Ethirveerasingam1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும் மூன்று ஆசியப் போட்டிகளிலும்  இலங்கைக்காக விளையாடிய நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Dr Nagalingam Ethirveerasingam) அத்தியடியில் வசித்தவர் மட்டும் அல்ல ,நான் படித்த  அதே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவனும் கூட.நாவலர் கூட அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில்-இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்-பாடசாலை மாணவராகவும் ஆசிரியர் ஆகவும் இருந்தவரே!
பொதுவாக யாழ்ப்பாண நகர் ,யாழ் கோட்டை ,சந்தை பகுதியையும் வைத்திய சாலை , பேருந்து ,புகையிரத, நிலையத்தையும்  முதன்மை வீதிகளையும் உள்ளடக்கியுள்ளது .வட அமெரிக்கரின் பேச்சுப்பாங்கில் இதை  "downtown."எனவும் கூறலாம்.இதன் எல்லையில் தான் அத்தியடி உள்ளது .யாழ் நகர் மக்கள் பொதுவாக தாம் யாழ்ப்பாணம் என்றே கூறுவார்கள் .கொஞ்சம் யாழில் எங்கே என்று கேட்கும் போதுதான் அத்தியடி, ஆணைப்பந்தியடி ..இப்படி வட்டாரம்,இடக்குறிப்பையும்  சேர்த்து கூறுவார்கள் .இது ஒரு நல்ல பண்பாடு.மேலும் யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்களை ஆங்ககாங்கே காணாலாம்.

பனை மரம்  புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும் ,நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது .அது வளைவதை விட ,வளையாமல் உடைவதையே விரும்புவதுஇன்னல் , துன்பம் வரும் போது ,யாழ்ப்பான மக்கள் ,பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து ,தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம் , துணிச்சலுடன்  தளர்வுறாத,விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக்குணம்/ பண்பை  வளர்த்துள்ளார்கள் .இது பொதுவாக பெருமை படக்கூடிய ஒரு விசேஷ குணமாகும் .

"யாழ்பாணம் போனேனடி பொன்னம்மா யாழ்பாணம் போனேனடி"என்ற அறு[60]வது எழு[70]பதில் எல்லாராலும் முணுமுணுக்கப்பட்ட அந்த பாடல் வரிகளும் எனக்கு இப்ப ஞாபகம் வருகிறது.அப்ப நான் பாடசாலை ,பல்கலைக்கழக மாணவன் .யாழ்பாணம் பொதுவாக சுவர்க்கம் என்று சொல்லும் அளவிற்கு நேசமான,நட்புணர்வுள்ள மக்களையும் உயர் பண்பாட்டையும் ஆரோக்கியமான காலநிலையையும் ,கண்ணைக் கவருகிற சுற்றுப்புறத்தையும் கொண்டது'  

18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட  "யாழ்ப்பாண வைபவமாலை" எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன்[யாழ்+பாணன்] ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த  மணற்றிடல் எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்டதென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப் பிரதேசத் துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்று கூறுகிறது .போர்த்துகேயர் வருகைக்கு பின் காலப்போக்கில் மெல்ல மெல்ல  திரிபு அடைந்து யாழ்ப்பாணம்[Yarlpaanam]U+2192.svgயாப்பாணம்U+2192.svgஜப்பாணம்U+2192.svgஜப்பணம் U+2192.svgஜவ்வணம்[Jaffanam]U+2192.svgஜவ்ண[Jaffna ] இப்படி பிரித்தானியர் காலத்தில் முற்றுப் பெற்றிருக்கலாம்? என அறிகிறேன்.      

யாழ்ப்பாணம் எங்கும் சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றனவெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது இந்த சொர்க்கத்தில் நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்!மலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் "நிழல் படம்"[நிழல்வடிவம்] வழியாக பார்ப்பதில் என்ன  பேரின்பம்!!அதன் பின்  மங்கும் அந்தியொளியில்  பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில் காணும் இன்பமோ- சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!!! 

"சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா?"
----[ஆக்கம்:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]