பௌத்தம் . புத்த பகவான் .

பிறப்பு :கபிலவஸ்துவுக்கும் தேவதஹ் என்ற ஊருக்கும் இடையில் நேபாளத்தின் மலையடிவாரத்தில் நெளதன்வா என்ற ஸ்டேஷனிலிருந்து மேற்கே 8 கல் தொலைவில் ருக்மிந்தேயி இருக்கிறது . ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன் அங்கெல்லாம் ஒரு காடாய் இருந்தது .அந்தக் காட்டுப்பிரதேசம் லும்பினி எனப்படும் . கிறிஸ்து பிறப்பதற்கு 563 ஆண்டுகளுக்கு முன் கபிலவஸ்துவின் மகாராணியான மகா மாயாதேவி தன் பிறந்த அகமான தேவதஹூக்குப் போய் கொண்டிருக்கையில் இந்த லும்பினி காட்டில் வழியிலேயே அவர்களுக்கு கௌதமன் பிறந்து விட்டான் . பிறந்த பிள்ளைக்கு சித்தார்த்தன் என்று பெயரிடப்பட்டது . பிள்ளை பிறந்த 7 -ம் நாள் தாய் இறந்து போனாள் ; சித்தார்த்தரின் அத்தையான கௌதமி அவரைப் பாதுகாத்து வளர்த்தாள் .

பிள்ளைப்பிராயம் :பள்ளிக்குப் போகும் வயது வந்ததும் சித்தார்த்தர் விசுவாமித்திரர் என்ற ஆசிரியரிடம் வேதம் , உபநிடதம் முதலியவைகளைக் கற்றதோடு , தக்க பிறரிடம் அரசியலையும் போர்க்கலையையும் பயின்றார் . மற்போரிலும் , குதிரையேற்றம் , வில் - வாள் வித்தைகளிலும் தேர் செலுத்துவதிலும் இணையற்று விளங்கினார் .

திருமணம் :சித்தார்த்தர் வமிசம் சாக்கிய வமிசம் எனப்படும் . அவருக்கு 16 வயது ஆனபோது தண்டபாணி சாக்கியர் என்ற தம் இனத்தார் ஒருவரின் பெண்ணான யசோதரையுடன் அவருக்கு திருமணம் நடந்தது .
இடையில் , அவரது வாழ்வில் நடந்த சில சம்பவங்களினால் அரசிளங்குமரனுக்கு மனம் மிகவும் சங்கடப்பட்டது . அதாவது , தம் மாளிகையை ஒட்டிய பாதை ஓரத்தில் ஒரு முதியவனைக் கண்டது , ஒரு நோயாளியைக் கண்டது , போகும் வழியில் ஒரு சவத்தைக் கண்டது , ஒரு துறவியைக் கண்டது போன்றவையே அவை .இதனைத் தொடர்ந்து அவருக்கு பிள்ளை பிறந்தது . அரசன் காதுகளுக்கு இச்செய்தி எட்டியதும் அவர் தன் பேரப் பிள்ளைக்கு ராகுல் என்று பெயர் இட்டார் . இதன் காரணமாகவும் அவர் தம் தந்தையிடம் , வீட்டைவிட்டு வெளியேற அனுமதி வேண்டினார் .


அனுமதி கோரியது :அரச குமாரருக்கு மகவு பிறந்திருப்பதை முன்னிட்டு அரண்மனையெங்கும் விழா கொண்டாட்ப்பட்டுக் கொண்டிருக்கையில் சித்தார்த்தர் தம் தந்தையை அணுகி , " அப்பா , உலகில் எங்கும் துன்பமாகவே இருக்கிறது . ஒருவரை முதுமை வதைக்க , இன்னொருவர் நோயிடம் சிக்கி அல்லலுருகிறார் . சிலரையோ எமன் வந்து தூக்கிப் போய்விடுகிறான் . இவைகள் அனைத்திலிருந்தும் விடுபடக் கருதி நான் துறவு பூணப் போகிறேன் " என்றார் .

' மஹாபி நிஷ்க்ரமணம் ' - ( பெருந்துறவு ) :ஒரு நாள் இரவு மஞ்சத்திலிருந்து எழுந்து வாயிலுக்கு வந்தார் . சித்தார்த்தர் யசோதரை அறைக்கு விரைந்தார் . கிளம்பி போகுமின் குழந்தையின் வதனத்தைப் பார்க்க வேண்டும் என்பது அவர் எண்ணம் . யசோதரையின் பக்கத்தில் ராகுலன் கண் அயர்ந்து கொண்டிருந்தான் . அவனை எழுப்பினால் யசோதரையும் விழித்துக் கொள்வாள் , பிறகு தன்னை வெளியே செல்ல விடமாட்டாள் என்று எண்ணியவராய் முன்வைத்த அடியை பின்னால் வாங்கித் திரும்பியவர் அப்படியே வெளியேறி விட்டார் . வெளியே வந்து அங்கே சித்தமாய் இருந்த குதிரை மீது அமர்ந்து இரவோடு இரவாக 30 காத தூரம் போய் கோரக்பூருக்கு அருகில் ஓடும் அனோமா என்ற ஆற்றின் கரையைச் சேர்ந்தார் . அங்கே அவர் தமது ஆடம்பர ஆடை அணிகளையெல்லாம் களைந்தபின் சாதாரண துணியை அணிந்து கொண்டு , உடைவாளினால் தம் சிங்கார முடியையும் நீக்கிவிட்டுத் துறவு பூண்டார் . அப்போது சித்தார்தருக்கு வயது 26 .

தவம் இயற்றுதல் :அழகிய ஆருயிர் மனைவியை விட்டு , பிறந்து 7 நாளே ஆன சிறு பாலகனையும் , இளவரசனுக்கு உரிய அரச மாளிகையின் இன்பங்களையும் துறந்து சித்தார்த்தர் தவம் இயற்றக் கிளம்பி விட்டார் . 6,7 ஆண்டுகள் கடுந்தவம் இயற்றினார் .

ஞானோதயம் :
ஒரு நாள் இரவு ஒரு அரச மரத்தடியில் தியானத்தில் அமர்ந்திருக்கையில் அவருக்கு ஞானோதயம் ஆயிற்று . மக்கள் துயரங்களுக்கு மருந்து அவருக்குத் தெரியவந்து விட்டது . அதுமுதல் அவர் ' புத்தர் ' ( அறிவு விளக்கம் பெற்றவர் ) எனப்படலானார் . எந்த அரச மரத்தடியில் அவர் ஞானம் பெற்றாரோ அது ' போதி மரம் ' எனப்பட்டது ; அந்த மரம் இருந்த இடம் புத்த கயை ஆகிவிட்டது . இது நடந்தது கிறிஸ்து பிறப்பதற்கு 528 ஆண்டுகள் முன்பு ஆகும் . இப்போது அவரது பிராயம் 35 . புத்த பகவான் ஒரு மாத காலம் அந்த போதி மரத்தின் அடியிலேயே தியானத்தில் இருந்தார் ; அதன் பிறகு தாம் கண்ட உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லக் கிளம்பிவிட்டார் .

அதே ஆண்டு ஆனி மாதம் நிறைமதி நன்நாளன்று பகவான் காசியை அடுத்த மிருகதாபம் சேர்ந்தார் . அது இப்போது சாரநாத் எனப்படுகிறது .

தர்ம பிரசாரம் :தமக்கு 80 வயது ஆகும் வரையில் புத்த பகவான் தமது தருமத்தை எல்லோருக்கும் புரியும் மக்கள் மொழியில் எடுத்து ஓதினார் . அப்போது வழங்கிய மொழி சமஸ்கிருதத்தின் திரிபான பாலி ஆகையால் , புத்த பகவானின் போதனைகளெல்லாம் அம்மொழியிலேயே அமைந்தன .

சங்கம் அமைத்தது :அவரது தந்தையான சுத்தோதனரும் , மகன் இராகுலனும் பௌத்த சமய தீக்ஷை பெற்றார்கள் . அதன்பின்னர் வெளிநாடுகள் பலவற்றில் தம் தருமத்தைப் பரப்பவென பிஷூக்களை பல இடங்களுக்கு அனுப்பினார் .

நிர்வாணம் :ஒரு வைகாசி பூர்ணிமை அன்று பிறந்தது போலவே , இன்னொரு வைகாசி பூர்ணிமை அன்று நிர்வாணம் எய்தி மறைந்தார் . இது நிகழ்ந்தது கி. மு. 483 - இல் ஆகும் .

0 comments:

Post a Comment