வாயுத் தொல்லை வராமல் இருக்க!

இன்றைய நவீன காலத்தில் உணவு என்பது எதோ உயிர்வாழ என்று நினைத்து அவசர கதியில் தயாரித்த உணவுகளை சாப்பிட்டு அவசர அவசரமாக
சென்றுகொண்டிருக்கின்றனர். இதனால் வயிற்றில் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு, அதனால் அபானவாயு சீற்றமாகி குடலில் புண்களை ஏற்படுத்திவிடும். இவர்கள் துவர்ப்பு சுவை கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.

வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம். ஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களினால் வாயுத் தொந்தரவு உருவாகும். வாயுத்தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு. முடிந்தால் அப்படிய 4 பல் பூண்டை தோலுரித்து சாப்பிடலாம். அல்லது அடுப்பில் வைத்து சிவக்கும் அளவுக்கு சுட்டு, பின்னர் அதன் தோலை உரித்து பாலுடன் சேர்த்து உண்ணலாம்.

 வாயுத்தொல்லை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட்ட உடனேயே அதில் இருந்து
விடுபட்டதை உணரமுடியும். வேண்டுமானால் பூண்டு காரம் போக, மோர்
அருந்தலாம். பொதுவாக உணவுக்குப் பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப்பூண்டை அன்றாடம் சேர்த்துக் கொள்வது சிறந்தது. பெண்கள் குழந்தை பெற்ற பின் அதிகளவு சோர்வு இருக்கும் என்பதால், வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்கள் பூண்டு குழம்பை சாதத்துடன் கொடுப்பார்கள். தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பூண்டு மிகவும் சிறந்ததாகும்.
எனவே பூண்டை அன்றாடம் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.

விளாம்பழ  மரத்தின் இலையை காயவைத்து இடித்து.5 கிராம் தூளை சுடு
தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் உடனடியாக வாயுத் தொல்லை நீங்கும்.

மோருடன் சீரகம் இஞ்சி சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

உடலுக்கு குளிர்ச்சியும், சருமத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றலும்
சீரகத்திற்கு உண்டு. சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல
மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால்,
வயிற்றுப் பொருமல் போய்விடும். சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும். இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.

மணத்தக்காளி கீரைiயும், வெங்காயத்தையும் , தக்காளியையும் பொடீயாக நசுக்கி மிளகு தூளும் உப்பும் சேர்த்து கொதிக்க வைத்து சாறாக குடித்தால்
வாய்ப்புண், குடல் புண், வாயுத் தொல்லை முழுமையாக நீங்கி விடும்.

இதற்கு மிக முக்கியம் குறிப்பிட்ட நேரத்தில் உண்பது. எந்தப் பொருட்கள்
சாப்பிட்டால் வாயு ஏற்படும் என்று உங்களுக்கே ஓரளவு தெரிந்திருக்கும்.
அந்தப் பொருட்களை தயவு தாட்சண்யமின்றி விட்டு விட்டுங்கள். சிலருக்கு
பால் பால்சார்ந்த பொருட்கள் கூட வாயுத் தொல்லையைக் கொடுக்கும். மொச்சை வகைகள், முட்டை கோஸ், காலி ப்ளவர், உருளைக் கிழங்கு, வாழைக்காய், பருப்பு வகைகள் வாயுத் தொல்லையை உண்டாக்கும்.

சமைக்கும் போது, இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும். அதிகக் கொழுப்பு, அதிக நார்சத்துப் பொருட்கள் செரிமானம் ஆக நீண்ட நேரம் ஆகிறது. அவற்றைக் குறைத்துக் கொள்ளுங்கள். நார்சத்து உணவு செரிமானத்திற்கு உதவினாலும், குடலில் நீண்ட நேரம் தங்குவதால் வாயுவை உண்டுபண்ணுகிறது. ஒரே நேரத்தில் நிறைய சாப்பிடாமல், சமமான இடைவெளியில் குறைந்த அளவு சாப்பிடுங்கள். நீண்ட நேரப் பட்டினி வேண்டாம். சாப்பிடும்போது ஆத்திரம் அவசரம் கூடாது. உணவை நிதானமாக மென்று  தின்னுங்கள்.  இதனால் செரிமானம் நன்றாக ஆவதுடன், வாயு தோன்றுவதும் தடுக்கப்படுகிறது.

புதிதாக சமைக்கப்பட்ட உணவை உண்ணவும். காபி, தேநீர், ஆல்கஹால் முதலியவற்றை அதிகம் குடிக்காமல் ஒரு அளவில் நிறுத்திக் கொள்ளலாம். அதிகப்படியான வேலை, டென்ஷன், மனதில் தோன்றும் பய உணர்வு இவை போன்றவையும் செரிமானத்தை பாதிக்கும். புகைப் பழக்கம், குடிப்பது இவையும் வயிற்றுக்குப் பகைவர்கள்.

அதிகக் காரம், மசாலா, எண்ணையில் பொறித்த உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். இரவு நேரம் கழித்து உண்பது வேண்டாம்.
அசிடிட்டிக்கென்று எடுத்துக் கொள்ளும் மருந்துகளை அடிக்கடி
சாப்பிடவேண்டாம். முதலில் குணம் ஏற்படுவதுபோல தோன்றினாலும் நாளடைவில் வயிற்றைக் கெடுத்துவிடும். அதேபோலே வலி நிவாரணிகளும் வயிற்றுக்கு  நல்லதல்ல.

தினசரி உடற்பயிற்சி செய்வதும் அவசியம். சாப்பிட்டவுடன் சிறிது நடக்கலாம்.
சிலசமயம் இதய நோய்க்குண்டான அறிகுறிகள், வாயுத்தொல்லைக்கு உண்டான அறிகுறிகள் போலவே இருக்கும். எந்த ஒரு உடல் பாதிப்பானாலும் மருத்துவர் உதவியை நாடுவது நல்லது. வாயுத் தொல்லைதானே என்று நினைத்து அலட்சியப் படுத்தவேண்டாம். ஆரம்ப நிலையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டால் பல நோய்களை முற்றவிடாமல் நம்மை நாமே பாது காத்துக் கொள்ளலாம்.

நாம் போடும் உணவைத் தின்று நமக்கு வேண்டிய சக்தியைக் கொடுக்கும் நம்
வயிற்றை நாமே கெடுத்துக் கொள்ளலாமா? நிதானமாக சாப்பிட்டு, ஆரோக்கியமாக வாழலாம்.

0 comments:

Post a Comment