இன்று காலை சுதந்திரதின விழா கொண்டாட்டம்

 ஜெயலலிதா தேசிய கொடி ஏற்றுகிறார்; அப்துல்கலாம் பெயரில் விருது வழங்குகிறார்
சென்னை,

இந்தியாவின் சுதந்திரதின விழா இன்று (சனிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

கோட்டையில் சுதந்திர தின விழா

டெல்லி செங்கோட்டையில் இன்று காலை நடைபெறும் சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.

மாநில தலைநகரங்களில் நடைபெறும் சுதந்திர தின விழாக்களில் அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் தேசிய கொடி ஏற்றுகிறார்கள்.

தமிழக அரசின் சார்பில் சென்னை கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

போர் நினைவுச் சின்னம்

இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தனது போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து காலை 8.20 மணிக்கு காரில் புறப்படுகிறார்.

கோட்டைக்கு வரும் வழியில் போர் நினைவுச்சின்னத்திற்கு செல்கிறார். அங்கு, போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்துகொண்டு, மலர் வளையம் வைத்து, போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

அதிகாரிகள் அறிமுகம்

பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிள் புடைசூழ முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை புனித ஜார்ஜ் கோட்டைக்கு காவல்துறையினர் அழைத்து வருவார்கள். அவரை தலைமைச் செயலாளர் கு.ஞான தேசிகன், வரவேற்பார்.

அங்கிருக்கும் தலைமை ராணுவப்படை தலைவர், கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைதள அதிகாரி, கடலோர காவல் படை கிழக்கு மண்டல ஐ.ஜி, தமிழக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோரை முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மரபுப்படி தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் அறிமுகம் செய்து வைப்பார்.

அணிவகுப்புமரியாதை

அதன்பிறகு, அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலாளர் அழைத்துச் செல்வார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏற்றுக் கொள்வார்.

அதைத் தொடர்ந்து அவர் திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிடுவார். அவருடன் ஜீப்பில் அணிவகுப்பு தலைவர் செல்வார்.

ஜெயலலிதாகொடி ஏற்றுகிறார்

பின்னர் கோட்டை கொத்தளத்திற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா செல்வார். அங்கு 8.50 மணிக்கு மூவர்ண தேசிய கொடியை அவர் ஏற்றி, சல்யூட் அடித்து வணக்கம் செலுத்துவார்.

அப்போது போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை வாத்தியத்தில் இசைப்பார்கள். அதன்பிறகு, ஜெயலலிதா சுதந்திர தின உரை நிகழ்த்துவார். சுமார் 10 நிமிடங்கள் அவரது உரை நீடிக்கும் என்று தெரிகிறது. அவர், தனது உரையின் போது சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

அப்துல் கலாம் விருது

அதைத்தொடர்ந்து, விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, சிறந்த சேவை புரிந்தோருக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்- அமைச்சர் ஜெயலலிதா வழங்குகிறார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் சுதந்திர தின விழாவில், மறைந்த ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்பட உள்ளது. விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவர்கள் நலனுக்காக பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்த விருது பெறுபவருக்கு 8 கிராம் தங்கப்பதக்கம், ரூ.5 லட்சம் ரொக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழங்குவார்.

பின்னர், விருது பெற்றவர்களுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குழு புகைப்படம் எடுத்துக்கொள்வார். அதன்பிறகு, கோட்டை கொத்தளத்தில் குழந்தைகளுக்கு ஜெயலலிதா இனிப்புகளை வழங்குவார்.

பலத்த பாதுகாப்பு

விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

சுதந்திர தின விழாவை யொட்டி சென்னை கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோட்டை கொத்தளத்தில் ஏ.சி. மற்றும் நவீன மேடை உள்பட புதிய வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. 

0 comments:

Post a Comment