ஆன்மீகம்-வேதமும் சாட்சிகளும்


கிறிஸ்தவ வேதமும் யெகோவாவின் சாட்சிகளும்
யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி முதலில் விளக்கமாகப் பார்ப்போம். இவர்கள் பொதுவாக வாட்ச் டவர் வேத, துண்டுப்பிரசுர நிறுவனம் (Watch Tower Bible and Tract Society) என்ற பெயரில் உலவுகிறார்கள். சார்ள்ஸ் டேஸ் ரசல் (Charles Taze Russell) என்ற மனிதனின் போதனைகளையே இக்கூட்டம் சத்தியமாகப் பின்பற்றுகிறது. 1852 இல் பிறந்த ரசல் 1870 இல் தனது பதினெட்டாம் வயதில் ஒரு கூட்டத்தின் போதகராக அமைந்து சயனின் வாட்ச் டவர் (Zion’s Watch Tower) என்ற பத்திரிகையை ஆரம்பித்து அப்பத்திரிகை மூலம் தனது போதனைகளைப் பரப்பினார். இப்பத்திரிகையில் வேதத்திற்கு தன்னுடைய சொந்தக் கருத்துக்களை அளித்து வந்தார் ரசல். 1916 இல் இறந்த ரசலின் வாழ்க்கை ஒழுங்காக அமைந்திருக்கவில்லை. அவரது மனைவி, ரசல் ஆணவம் பிடித்த மனிதன் என்றும் எந்தவொரு பெண்ணோடும் வாழ்க்கை நடத்தத் தகுதியில்லாதவரென்றும் குற்றம் சாட்டி அவரை விவாகரத்து செய்தார். தன்னுடைய சபையில் நோயுற்றிருந்தவர்கள் தங்கள் சொத்துக்களை தனக்குக் கொடுத்து விடவேண்டுமென்று ரசல் சொன்னார். மற்றவர்களின் பணவிஷயத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக ரசல் நீதி மன்றம் முன்பும் கொண்டுவரப்பட்டார். ரசல் இறந்த பின் ஜோசப் பிராங்ளின் ரதர்பர்ட் (Joseph Franklin Rutherford) இந்நிறுவனத்தின் தலைவராக வந்தார். அவரது இறப்பிற்குப்பின் நேதன் ஹோமர் நோர் (Nathan Homer Knorr) என்பவர் இதன் பிரசிடன்ட் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரதர்பர்டின் காலத்திலேயே இந்நிறுவனத்திற்குயெகோவாவின் சாட்சிகள்என்ற பெயர் கொடுக்கப்பட்டது. நோரின் காலத்தில் 1961 இல் வேதத்தின்புதிய உலக மொழி பெயர்ப்புவெளியிடப்பட்டது. இன்று யெகோவாவின் சாட்சிகள் வாட்ச் டவர் பத்திரிகை மூலம் தனது போதனைகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றது.
இவர்கள் போதிப்பதென்ன?
யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களை நாம் கிறிஸ்தவ வேதத்துடன் இனி ஒப்பிட்டுப் பார்ப்போம்.

1. காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான கடவுள் கண்ணால் காண முடிந்தவைகளையும், கண்ணால் காண முடியாதவற்றையும் உருவாக்கினார் என்று போதிக்கும் இக்கூட்டம் வேதம் போதிக்கும் திரித்துவப் போதனையை முற்றாக நிராகரிக்கிறது. திரித்துவப் போதனை கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனை.

2. கிறிஸ்து கடவுளால் ஆரம்பத்தில் படைக்கப்பட்டவர். இயேசு கிறிஸ்து நித்தியத்திலிருந்து கடவுளின் குமாரன் அல்ல என்று இக்கூட்டம் விசுவாசிக்கின்றது. கிறிஸ்து வார்த்தையாகப் படைக்கப்பட்டு கடவுளின் சிருஷ்டியில் பங்கு கொண்டிருந்தார் என்றும், அவரே மைக்கல் என்ற தலைமைத் தேவதூதனாகவும் இருந்தார் என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். கிறிஸ்து தேவ குமாரனேயொழிய கடவுள் இல்லை. கிறிஸ்து மனிதனாக உலகில் தோன்றியபோது அவரில் எந்தத் தெய்வீகத் தன்மையும் இருக்கவில்லை என்றும் ஆனால் முழு மனிதனாக மட்டும் இருந்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்து மனிதனின் பாவ நிவாரணத்திற்காக கொடூரமான மரணத்தை சந்தித்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

இதிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுக்கும் வேதம் போதிக்கும் கர்த்தருக்கும் எத்தனை வேறுபாடு இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்து, கடவுள் என்பதை மறுக்கும் எவரும் வேதத்தை நம்புவதில்லை. கிறிஸ்து கடவுளால் படைக்கப்படவில்லை. அவர் ஆதியாகமம் முதல் அதிகாரம் கூறுவதுபோல் திரித்துவத் தேவனாய் பிதா, ஆவியோடு இருந்து படைக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார். கிறிஸ்து நித்தியத்திலிருந்து தேவகுமாரனாக இருக்கிறார் (Christ was eternally the Son of God) என்று வேதம் தெளிவாகப் போதிக்கின்றது. கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தபோது முழு மனிதனாக இருந்ததோடு தனது தெய்வீகத் தன்மையில் எதையும் இழக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகளின் கூற்றுப்படி கிறிஸ்து கடவுளல்ல.

3. பரிசுத்த ஆவியானவர் கடவுள் பயன்படுத்தும் வெறும் வல்லமையே தவிர அவர் கடவுளல்ல. அவர் ஒரு நபருமல்ல என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. தனது ஊழியர்கள் தன்னுடைய சித்தத்தைச் செய்ய வைப்பதற்காக யெகோவா பயன்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வல்லமையே பரிசுத்த ஆவி என்று இவர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த ஆவி இவர்களைப் பொறுத்தவரையில் தெய்வீகத் தன்மை பொருந்தியவரோ அல்லது திரித்துவத்தின் ஓர் அங்கத்தவரோ இல்லை.

இது வேதத்திற்கு முரணான போதனை. பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தின் மூன்றாம் அங்கத்தவராக, ஓர் நபராக இருக்கிறார் என்றும் அவர் கடவுள் என்றும் வேதம் போதிக்கின்றது.

4.மனிதனுக்கு அழிவற்ற நித்திய ஆத்துமா (Immortal soul) இல்லை. ஆகவே அவன் இறந்தபின் காற்றோடு கலந்து இல்லாமல் போகிறான் என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. ஆனால் மனிதன் அழிவற்ற நித்திய ஆத்துமாவைக் கொண்டுள்ளான் என்று வேதம் போதிக்கின்றது.

5. நித்திய நரகம் என்று ஒன்றில்லை என்றும், நித்திய தண்டனை (Eternal Punishment) என்பதும் இல்லை என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். இறந்தபின் மனிதன் நித்திய தண்டனை அடையாமல் ஒன்றுமே இல்லாமல் போகிறான் என்பது இவர்களுடைய போதனை. வேதமோ இதற்கு மாறாக பாவியான மனிதன் இறந்தபின் நித்திய தண்டனையை நரகத்தில் நித்தியத்திற்கும் அனுபவிக்கிறான் என்று தெளிவாகப் போதிக்கின்றது.
6. கிறிஸ்துவின் மரணத்தின்போது அவரது சரீரம் அழிக்கப்பட்டதால் அது மீண்டும் உயிர்த்தெழ முடியாதென்றும், கிறிஸ்து ஆவியாக மட்டுமே உயிர்த்தெழுந்தார் என்றும் இக்கூட்டம் போதிக்கின்றது. இதுவும் கிறிஸ்துவின் உயிர்தெழுதல் பற்றிய வேத போதனைகளுக்கு முரணானது.
7. மனிதனுடைய நற்கிரியைகளின் மூலமே இரட்சிப்பு என்று இக்கூட்டம் நம்புகிறது. யெகோவாவிற்கு விசுவாசமாக இருந்து கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் யெகோவாவின் இராஜ்யத்தை அடைவார்கள் என்று இவர்கள் போதிக்கிறார்கள். மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு என்பதெல்லாம் இவர்களுடைய அகராதியில் கிடையாது.

        கிறிஸ்தவ வேதத்திற்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்பதை மேலே நாம் பார்த்த யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.. இதன் போதனைகள் வேதத்திற்கு முரணானது மட்டுமல்லாது இக்கூட்டத்தாரின் வழிமுறைகளும் மனித சுதந்திரத்திற்கு முரணானது. தமது கூட்டத்தைச் சேர்ந்தவர்களை அடிமைப்படுத்தும் வழிமுறைகளையும் இவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.

தமது கூட்டத்தில் சேரும் தனி மனிதர்களும், குடும்பங்களும் அநேக விதிகளைக் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்திக் குடும்பங்களில் இருக்கும் சமாதானத்தைக் குலைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலும் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். இக்கூட்டத்தில் சேர்ந்து இதன் அடிமைத்தனத்திற்கு தம்மைப் பலி கொடுத்தவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது. இதில் சேர்ந்து தமது வாழ்வைப் பலி கொடுத்தவர்கள் அநேகர்.

தமது கூட்டத்துடன் சேர்ந்து விடுபவர்களுக்கு வேத போதனை என்ற பெயரில் மனதைக் குழப்பும் வேதத்திற்கு முரணான போதனைகளைக் கொடுத்து தமது கூட்டத்திலிருந்து போக முடியாத ஒரு மனநிலையை இவர்கள் உருவாக்கிவிடுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடன் இணைந்தவர்களால் சுயமாக சிந்திக்க முடியாமல் போய்விடுகிறது. அவர்கள் தமது இயக்கத்திற்கு மாறாக எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது, அதன் போதனைக்கு எதிராக சிந்திக்கக் கூடாது, செயல்படக்கூடாது என்ற மனநிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதற்கான Brain washing பணியை இக்கூட்டம் நடத்துகின்றது.
இவர்களைத் தவிர்ப்பதெப்படி?
வேத ஞானமில்லாதவர்கள் யெகோவாவின் சாட்சிகள் வீட்டிற்கு வரும்போது அவர்களை வெளியிலேயே வைத்து திருப்பி அனுப்பிவிடுவது நல்லது. அவர்களோடு பேச்சுக் கொடுத்து அவர்கள் போதனைக்கு இரையாகாமல் இருக்க இது உதவும். இவர்கள் நம் வீட்டிற்கு வரும்போது நேரடியாக விஷயத்திற்கு வராமல் உலக நடப்புகளைப் பற்றிப் பேசி நமது அபிப்பிராயத்தை அறிய முற்படுவது போல் நடித்து தமது போதனைகளை நம்மில் திணிக்கப் பார்ப்பார்கள். ஆகவே இவர்களுடன் பேசுவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.
------- நன்றி,கிறிஸ்தவ வேதம்

0 comments:

Post a Comment