மனோ கணேசன் துணிவுடன் பணியாற்றுவதைப் பாராட்டவேண்டும்



தற்போது மைத்திரி பால சிறிசேனாவின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் மனோகணேசன் தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல புலமை உள்ளவராகத் திகழ்கின்றார். அத்துடன் அரசியல் அனுபவம் கொண்ட ஒரு மலையகத்தின் தொழிற்சங்கத் தலைவரின் மகனாக இருப்பதால அவருக்கு போர்க் குணம் மிகவும் அதிகம். இதனால் அவர் துணிச்சலாக .கருத்துக்களைக் கூறிவருகின்றார்.
திரு.மனோகணேசன் அண்மையில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் நேரடியாக வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களோடு உரையாடினார். அத்துடன் அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது,யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு நேயர் கேட்ட கேள்விக்கும் அவர் பதிலளித்தார். மேற்படி நேயர் கேட்ட கேள்வியானது, தென்னிலங்கையிலிருந்து தாதிமாரும் சாரதிகளும் யாழ்ப்பாணத்தில் அரச பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றார்கள். இதை நீங்கள் பாராளுமன்றத்தில் தட்டிக் கேட்கமுடியாதா? என்று இருந்தது.
அதற்கு பதிலளித்து அமைச்சர் மனோ கணேசன், நானும் அது தொடர்பாக பேசுவேன். முன்னரும் பலதடவைகள் பேசிக்கொண்டே இருக்கின்றேன் என்று கூறியபின்னர் அந்த நேயரை நோக்கி “தயவுசெய்துநீங்கள் தெரிவு செய்து அனுப்பிய உங்கள் வட பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களையும் நோக்கி, என்னிடம் கேட்டுக்கொண்டதை அவர்களிடத்திலும் முன்வையுங்கள்” என்றார்.
இதே போன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலும் அவர் துணிச்சலான கருத்துக்களை முன்வைத்தார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு அளித்த விவகாரம் தொடர்பாக பேசுகின்றபோது, அவர் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களையும் சாடுகின்றவகையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவர் அங்குஉரையாடுகின்றபோது, “தமிழர் அரசியலில் ஐக்கிய தேசியகட்சிக்கு ஆதரவானவர்களையே வைத்திருப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரும்புகின்றார்” என்று தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐ.தே.கதமக்கு சார்பானவர்களைதான் வடக்கு அரசியலில் வைத்திருக்கின்றது. இதேபோன்றுதான் எமதுகட்சியும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களிடையே ஒரு பெயரை பெற்றுவிடக்கூடாது என்ற எண்ணம் ஐ.தே.கவிடம் உள்ளது.
அண்மையில் மங்களச மரவீரவின் கருத்தும் அதனையே கூறுகின்றது. எனினும் மோசமான அரசு வந்துவிடும் என்ற காரணத்தினால்தான் அரசை காப்பாற்றியிருக்கின்றோம். வேறு வழி இல்லை, இவ்வாறு ஆதரவு வழங்கும்போது நிபந்தனைகள் எவையும் விதிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் கூறிவந்தவற்றை வலியுறுத்தியுள்ளார்கள், நிபந்தனை ஏதும் விதிக்கவில்லை.
அவ்வாறு இவர்கள் எமக்கு வாக்குறுதிகளை தந்தாலும் வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்கள் மாகாத்மா காந்திகளோ புத்தர்களோ இல்லை. தமிழர் தரப்பிலிருந்து பலம் வாய்ந்த தமிழர் கட்சிகள் உருவாகிவிடக்கூடாது என்பதில் அக்கறையாக இருக்கின்றனர். அவ்வாறு இருந்தாலும் அவர்களுக்கு சார்பாக இருக்கவேண்டும் என்று கருதுகின்றார்கள்.
தமிழர்களை வடக்கிலும் கிழக்கிலும் கொழும்பிலும் கடத்தி செல்லும்போது தமிழ்த் தலைவர்கள் எவருமே குரலெழுப்பவில்லை, இன்று பேசுபவர்கள் அன்று இல்லை என அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சர் மனோ கணேசன் அவர்களது பேச்சிலும் எழுத்திலும் நலல தெளிவு உள்ளதை நாம் அவதானிக்க வேண்டும். அவரது அரசியல் நகர்வுகளை நாம் உற்றுப்பார்ப்பதன் மூலம் எமது தலைவர்கள் செய்கின்ற தவறுகளை நன்கு புரிந்தும் கொள்ளலாம்.
நன்றி:உதயன் ,கதிரோட்டம் 

0 comments:

Post a Comment