தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]/பகுதி 78

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
எப்படி திராவிடர்களை தென் இந்தியாவின் சுதேசிகள் அல்லவென்றும் அவர்கள் இந்தியாவின் வட-மேற்கு எல்லைப் புறத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று சிலர் கருதினார்களோ,அப்படியே கருநிறமுடைய நீகிரோ ஆஃப்ரிக்கரும், ஆஃப்ரிக்காவில் உயர் விலங்கினமான மனித குரங்கினமாக பரிணாமித்து இருந்தாலும்,அவர்கள் ஆஃப்ரிக்கா சுதேசிகள் அல்லவென்றும் கருதுகிறார்கள்.குறைந்தது எழுபதாயிரம் வருடங்களுக்கு முன்னர், மனித இனம், ஆஃப்ரிக்க கண்டத்தில் இருந்து உலகின் பல பாகங்களுக்கும் பரவிச் சென்று,குடியேறி வாழ்ந்து வந்தது என்றும். மனித இனம்,வெள்ளையினம்,கருப்பினம்,சீன இனம்,திராவிட இனம் என்றெல்லாம் வேறுபட்ட உடல் தோற்றங் களைப் பெறுவதற்கு பல்லாயிரம் வருட கால பரிணாம வளர்ச்சி காரணமாக இருந்திருக்கலாம் என்றும்  கூறு கிறார்கள் ..

இன்றைய ஈராக்கில் இருந்த பாபிலோனிய நாகரிகம் பற்றி பலர்
அறிந்திருக்கிறார்கள்.விவிலிய நூலில் அது பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளதால்,அது பிரபலமாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது.அதே ஈராக்கிய பிரதேசத்தில், பாபிலோனியாவுக்கு முன்பிருந்தது சுமேரிய சாம்ராஜ்யம் ஆகும்.சுமேரிய சாம்ராஜ்யத்தின் குடி மக்கள் கறுப்பினத் தவராக இருந்திருக்க வேண்டும்.ஆஃப்ரிக்கர்கள்,திராவிடர்களாக இனம் மாறிய காலகட்டமும்
 [Tamil women Sri Lanka c.1909 by Skeen & Co ] 
அதுவாக இருக்கலாம். அரேபிய தீபகற்பத்திலும் அந்த இனம் பரவி வாழ்ந்திருக்கின்றது.அங்கிருந்து மீண்டும் சிலர் ஆஃப்ரிக்காவுக்கு புலம் பெயர்ந்து சென்றது என்கிறார்கள்.மத்திய தரை கடல் மக்கள் திரும்பி ஆஃப்ரிக்காவிற்கு வரும் முன்பு ,குள்ள இனத்தவர்கள்[Pygmies],காட்டு வாசிகள் [Bushmen] ஆஃப்ரிக்கா முழுவதும் பரவி இருந்ததாகவும் கருதுகிறார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளப் பட்ட கருத்து கி மு 8000-3000 இடைப்பட்ட காலத்தில் மேற்கு ஆசிய பெரும் பகுதியில், நைல்,சிந்து ஆற்று வரை Proto-Mediterranean, Mediterranean  and Hamite.போன்ற கருமையான மக்கள் இருந்தார்கள் என்பது ஆகும்.

[Tamil woman. Albumen print, c. 1880s]
செமிடிக் மக்களின் அழுத்தம் காரணமாக ஒட்டுநிலை மொழி ஒன்றை பேசிய முன்னைய குடிகளான சுமேரியர்கள் அங்கிருந்து கலைந்து கிழக்கு பக்கமாக இந்தியா நோக்கியும் மேற்கு பக்கமாக ஆஃப்ரிக்கா நோக்கியும் சென்றனர். இன்றைய திராவிட மொழி பேசுபவர்களும் நீக்ரோ-ஆஃப்ரிக்க மொழி பேசுபவர்களும் இந்த முன்னைய கூட்டத்தை பிரதிநிதிபடுத்துவதுடன் தங்களது புதிய பகுதிகளிலும்,அவைகளுக்கு இடையில் நீண்ட தூர இடைவெளி இருப் பினும் பல மூல மொழி அம்சங்களை தொடர்ந்து வைத்திருந்தார்கள்.மேலும் கலைந்து போகாமல் அங்கேயே தங்கிய மற்றொரு கூட்டம்,காலப்போக்கில் வென்ற கூட்டத்துடன் முற்றிலும் அல்லது Hamite போல் பகுதியாக ஒன்றிப் போயினர்,இதனால் தமது மொழியியல் பாரம்பரியத்தை,உரிமையை அவை இழந்தனர் அல்லது காக்கசு[Caucasus] பிரனீசு [Pyrenees ] போன்ற தொலைதூர மலை பகுதிகளில் அடைக்கலம் புகுந்து தமது மொழி அம்சங்களை காக்கேசிய,பாஸ்க் போன்ற மொழிகளில்[ Caucasian,Basque] பாதுகாத்தனர்.ஆகவே அவர்களின் சந்ததியான திராவிட மொழி பேசுபவர்களுக்கும் நீகிரோ-ஆஃப்ரிக்க மொழி பேசுபவர்களுக்கும் இடையில் கட்டாயம் ஒரு மொழியியல்,பண்பாட்டு சிறப்பியல்பு இருக்க வேண்டும்.இதை ஆராயும் போது,அவைகள் ஒரே கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்றாலும்,நெடுந்தொலைவில் நெருங்கிய உறவு இல்லாது அவை நீண்ட காலத்திற்கு வளர்ச்சி அடைந்து இன்றைய நிலை அடைந்ததையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
 
பண்டைய தாய்வழி சமுதாயம் இன்னும் திராவிடர்களிடம்,குறிப்பாக கேரளா மக்களிடமும் தெற்கு கரையோர கன்னட மக்களிடமும் இருக்கிறது.அதுபோல கருநிறமுடைய நீகிரோ ஆஃப்ரிக்கரும் தமது வழிவழிச் சொத்தை[மரபு வழி முதியத்தை ] பெண் வழி மூலமே கைமாற்றிக் கொடுகிறார்கள்.குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான மரபுவழிச் சட்டமாக உருவான தேசவழமைச் சட்டத்தின் தொடக்கத்தின் அடிப்படைகள் பிராமணியச் செல்வாக்குக்கு முந்திய திராவிட மரபான தாய்வழி மரபை அடிப்படையாகக் கொண்ட மலபார் பகுதியின் மருமக்கட்தாயம் எனப்படும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என ஆய்வாளர்கள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.ஆனாலும்,பெண்களுடைய வழிவருகின்ற சீதனச் சொத்து தொடர்பில் கணவனின் சம்மதம் இன்றிப் பெண் தீர்மானம் எடுக்கக்கூடிய வழி இல்லாது இருப்பதானது அக்காலத்தியேயே யாழ்ப்பாணச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமாக நிலை பெற்றுவிட்டதைக் குறிக்கிறது.

நாக வழிபாடு,தாய் தெய்வ வழிபாடு,போன்றவையில் ஒரு ஒற்றுமை காணப்படுகிறது.நாக வழிபாடு ஒரு முக்கிய சிறப்பியல்பாக இந்தியா,இலங்கை  திராவிடரிடமும்  நீக்ரோ - ஆஃப்ரிக்க போன்ற மக்களிடமும் காணப்படுகிறது. சிந்துவெளி நாகரிகக் கால கண்டுபிடிப்புகளில் முக்காலி மீதுள்ள கிண்ணமும் அருகில் காணப்படும் நாக வடிவமும் நாக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றாகும்.அத்துடன் தென் இந்தியாவில் பாம்பு வழிபாடு அம்மன்[தாய்] வழிபாட்டுடன் இணைந்து நடைபெறுகிறது.சர்ப்ப காவு எனப்படும் நாக பீடத்தில் அல்லது ஒரு புதரில் அல்லது மரங்களும் புதர்களும் அடர்த்தியாக வளர்ந்த ஒரு பகுதியில் கல்லாலான பாம்பு சிலைகள் வைத்து பொதுவாக அங்கு வழிபடுகின்றனர்.

இந்த திராவிட,நீக்ரோ-ஆஃப்ரிக்க சமுகத்தில் தாய் தெய்வ வழிபாடு ஒரு முக்கியத்துவம் பெற்றிருந்தன.அங்கு பல பெண் தெய்வங்கள் இருந்தன.என்றாலும் பிற்காலத்தில் இந்திய-ஐரோப்பியர்[Indo-European] குடுப்பத்தை சேர்ந்த கிரேக்கரும் ஆரியரும் மனிதவுருவகம் கொடுக்கப்பட்ட இயற்கை சக்திகளை ஆகாயத்தில் வாழும் கடவுளாக கொண்டுவந்தார்கள்.இது திராவிடர்களின் பூமியில் வசிக்கும் தாய் தெய்வத்திற்கு முற்றிலும் மாறுபட்டது.இந்த திராவிடர்களின் கோட்பாடுகளில் இருந்தே சக்தி,சிவா என்ற எண்ணம் உருவானது.மேலும் இந்த தாய் தெய்வம் கருத்த கடவுளாகவே இந்தியாவில்,இலங்கையில்[காளி] காணப்படுகிறது.இந்தியாவில் தாய் தெய்வத்திற்கும் சிவாவிற்குமான திருமண சடங்கு,பண்டைய சுமேரியாவில் தாய் தெய்வத்திற்கும் சந்திர கடவுளுக்கும் இடையில் நடைபெறும் சில திருமண சடங்குடன் ஒத்து போகின்றன.எப்படியாயினும் பின் காளி, துர்க்கை போன்ற திராவிடர் களின் தெய்வங்கள் எல்லாம் பார்வதியின் அவதாரங்களாக மாற்றப்பட்டன.பார்வதியை சக்தியாக்கி,சிவனின் மனைவியாக்கினார்கள்.அதே போல,தாய் தெய்வ வழிபாடு ஆஃப்ரிக்கா முழுவதும் பொதுவாக இருந்தது.என்றாலும் அதன் பெயர் இடத்திற்கு இடம் மாறுபட்டு இருந்தன.கானாவில்(Ghana) அசாந்தி(Ashanti) மக்கள் பெண் தெய்வம் 'Nyame'யையும் ஆக்கான்(Akan) மக்கள் பெண் தெய்வம் 'Ngame''யையும் வணங்குகிறார்கள்.

தமிழகத்தில்,தாய் தெய்வமான கொற்றவையின் மகனாக கருதப்படும் முருகனை வழிபாடு செய்தல் தொன்மை யானது. இதனைச் சங்க கால இலக்கியமான திருமுருகாற்றுப்படை,பரிபாடல்,என்பன மிகச் சிறப்பாக கூறுகின்றன. ஆஃப்ரிக்காவில் கென்யாவில்[Kenya] வாழும் கிகுயு[Kikuyu] இன மக்கள் முருகன் போன்ற ஒன்றை,தெய்வமாக,முழு முதற் கடவுளாக,வழிபடுகின்றனர்.ஏறக்குறைய 25 ஆஃப்ரிக்க பழங்குடி இனங்கள் இந்த முழுங்கு[Mulungu] அல்லது முருங்கு[Murungu,] கடவுளை வழிபடுகிறார்கள்.சிலர் இதை மலைக்கடவுள் என்று  சொல்லுகிறார்கள்,வேறு சிலர் போர்க்கடவுள் என்று  சொல்லுகிறார்கள்,முருங்கு கடவுள் பெயர் கூட ஒரே மாதிரி இருக்கிறது.மேலும் தமிழர்களின் முருகன் மலைகளில் குடியிருப்பதுடன் அவரும் ஒரு போர் கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது.கென்யா மலை கிகுயு மக்களுக்கு புனிதமானது.இதை இவர்கள் கிரி எங்கை[kirinyaga எங்கை கடவுளின் மலை] என்று அழைக்கின்றனர். தமிழிலும் கிரி என்பது மலையை குறிக்கும்.[நீல கிரி - blue mountain ]

தமிழில் அம்மா என்ற சொல் குப்பத்து[கிராம] பெண் தெய்வத்தையும் அவள் கொடுக்கும் அல்லது அவள் அருளால் குணமடையும் அம்மை நோயையும்[small-pox] குறிக்கிறது.இந்த அம்மா தெய்வத்தின் ஒத்த தன்மையை பிரெஞ்சு சூடானில்[ மாலி] உள்ள டோகோன்[Dogon] இனத்தவர்களின் உட்குழுவான அம்மா சமய பிரிவினரிடம்[The Amma sect] காணலாம்.இவர்கள் அம்மா என்ற பெண் படைப்பு தெய்வத்தை வழிபடுவதுடன் அம்மாவிற்கு தினைப் பொங்கலும் [boiled millet] பலிபீடத்தில் படைக்கிறார்கள்.அத்துடன் மேற்கு ஆஃப்ரிக்கா நாடுகளில் உள்ள கோயில் அமைப்பு கேரள தமிழ்க் கோயில் அமைப்பை ஒத்திருக்கின்றது.மேலும் ஒரு மத்திய திராவிட மொழியான கோண்டி பேசும் மக்கள் இன்னும் கிழக்கு ஆஃப்ரிக்காவில் அமைந்துள்ள சோமாலிலாந்து[Somaliland,] கல்லாஸ்[கிழக்கு ஆஃப்ரிக்க ஹமிடிக் இனக் குழுவினர்] மக்களைப்போல வீடு கட்டுகிறார்கள் 

மேலும் சோமாலிய மொழி - தமிழ் மொழிகளுக் கிடையில் சில ஒற்றுமையும் காணப்படுகிறது.

சோமாலிய மொழி - தமிழ் மொழி

பரஸ் -                       பரி (குதிரை)
(B)ரிஸ் -                 அரிசி
ஆப்பா -                    அப்பா
யரான் -                    சிறுவன்
ஹிந்டிஸ் -              சிந்துதல்
அலோல் -               அல்குல் (பெண்குறி)
குன் -                        உண்   

இந்த மொழிகளை இப்படி ஆராய்ந்து கொண்டே போனால்,இது போன்ற நிறைய ஒற்றுமைகளை மேலும் கண்டுபிடிக்கலாம்?


 [ மேலே வரைபடத்தில் உள்ள பாரசீகம்(Persia) என்ற இடத்தில்தான் சுமேரியா, அசீரியா, பாபிலோனியா, பாரசீக நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன. பண்டைய மேற்கு தமிழகத்தில்(கேரளா), இன்றைய கொச்சி அருகே, அன்று இருந்த முசிறியும்,வரைபடத்தில் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன./Ancient Trade route,the Silk Road extending through Arabia, Somalia, Egypt, Persia,South India and Java until it reaches China.]

மூல கூட்டமான திராவிட-சுமேரியர் கலைந்து வெவ்வேறு திசையில் இந்தியாவை நோக்கியும் ஆஃப்ரிக்கா நோக்கியும் சென்ற பின்பும் அவர்கள் தங்களுக்கிடையில் தொடர்புகளை கடல் வழியாக பேணி பாதுகாத்து இருந்தார்கள் என நாம் ஏற்று கொள்ளலாம்.ஆரியர்களின் வருகையால் அல்லது இயற்கையின் சீற்றத்தால் அல்லது இரண்டும் கலந்த ஒரு நிலையால் சிந்து சம வெளி மக்கள் கூட்டம் அழிந்து மேற்கு கரையோரத்தால் தென் இந்தியா வந்தார்கள் எனப்படுகிறது.சிந்து சம வெளி மக்களின் கடலோடு இணைந்த வாழ்க்கை நன்கு அறிந்ததே.அதே மாதிரி தென் இந்தியாவின் திராவிட அரசர்கள் கடல் வழியாக மெசொப்பொத்தேமியா,அரேபியா,எகிப்து மற்றும் கிழக்கு ஆஃப்ரிக்காவுடன் தொடர்புகள் வைத்திருந்தார்கள்.எகிப்து வணிகர்கள் இந்தியா கடலில் வியாபாரம் செய்தார்கள். தொல்பொருள் அகழ்வு ஆராச்சி இதை உறுதி படுத்துகின்றன.

ஆரம்பத்திலிருந்து வாசிக்க→ Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:01:

பகுதி 79 வாசிக்க →Theebam.com: தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]::பகுதி 79.



பகுதி:79 தொடரும்..

0 comments:

Post a Comment