அரைத்த மாவினை அரைக்கும் தமிழ் சினிமா


இன்று  தமிழ்த் திரைப்படங்கள் செக்கிழுத்த மாடுகள் போல் எழுதி வைத்த விதிகள் மீண்டும் மீண்டும்  பின்பற்றப் படுவது போன்று  குறிப்பிட்ட விடயங்களை மட்டுமே தாங்கி வெளிவந்து  கொண்டு இருக்கின்றன.
பொதுவாக எல்லாப் படங்களுமே காதலை மையமாக வைத்தே வெளிவருகின்றன.

தற்காலத்தில் தமிழில் படம் எடுக்க விரும்புவோர் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்:

*. கதாநாயகன் படிப்போ, வேலையோ இல்லாதவனாக, தொடர் சிகரட் ஊதி, தண்ணி அடித்து, அரட்டை அடிக்கும், பெற்றோரை மதிக்காத, அழகே இல்லாத பொறுக்கியாக இருக்கவேண்டும். பல பெண்கள் அவன் காதலுக்காக அலைந்து திரியக், கடைசியில் அவன் குடும்பத்தின் பழைய அலங்கோலமான, பயங்கரமான  எதிரியின் அழகான, படித்த, செல்வந்த மகளுக்கே அந்தப் பேறு கிடைத்தல் வேண்டும். அல்லது ஆங்காங்கு சில மாறுதல் செய்யலாம்; அவன் விரும்ப, அவள் முதலில் விரும்பாமல், வில்லன் அல்லது வில்லி, மகள் அல்லது தங்கை என்று போட்டு முற்றிலும் வேறு கதையாக மாற்றலாம்.

*. கதாநாயகியை முதலில் காட்டும்போது, கூந்தலால் முகத்தை மூடிவிட்டு, தலையை ஒரு சுழற்றுச் சுழற்றி, கூந்தலை விலத்தித் திருமுகத்தைக் காட்டவேண்டும். அவள் தமிழ் கஷ்டப்பட்டுக் கதைக்க வேண்டும். பெற்றோரை டாடி, மம்மி என்று கூப்பிடவேண்டும்.

*. கதாநாயகனை முதலில் காட்டும்போது, ஒரு பெரிய வீர சூரானாகக் காட்டவேண்டும். சுப்பர்மான், ஸ்பைடர்மான், ப்ரூஸ் லீ  தோற்க வேண்டும். பல crane களைப் பாவித்து பறவைகாவடிபோலச் சுழன்று, பறந்து தாக்கவேண்டும்.

- நாயகன் ஒரே பாடலில், பிச்சைக்காரனாய் இருந்து இந்தியாவின் நம்பர் 1 தொழில் அதிபராகவோ அல்லது பெரும் பணக்காராய் இருந்து பிச்சை எடுக்கும் நிலைக்கு வரலாம்.

*. நாயகன்- நாயகி இருவருக்கும், கனவிலும் நிஜத்திலும் ஒரு 4 - 6 குத்துப் பாடல்கள், பின்னணியில் ஒரு 50 - 100 பேருடன், பலவித நவீன உடைகளுடன் பேயாட்டம் ஆடவேண்டும். முக்கியமாக பெண்களின் வயிற்றுப் பக்கம், கழுத்துப் பக்கம்  ஒரு 300 மி.மீ. வெற்றுடம்பு தெரிய வேண்டும்.

*. அடியாட்கள் கருத்த, தடித்த, முடி வளர்த்த, தாடி உள்ள/அற்றவர்களாக ஆங்காங்கு நிற்க வேண்டும். கைகளில் இரண்டரை அடி நீள, நாலு இஞ்சி விட்டப் பிளாஸ்டிக் தடி அல்லது பிளாஸ்டிக் கத்தியுடன் திறந்த வண்டியில் நகர மத்தியில் கொக்கரித்தபடி திரிய வேண்டும்.

*. ஒரு 5 - 6 x (5 -10) நிமிடச் சண்டை. வில்லனின் அடியாட்கள் 12 பேரும் எவ்விதம் தாக்கினாலோ, சுட்டாலோ ஒன்றுமே அவனில் படவே கூடாது. ஆனால், நாயகனின் ஒரே கைவீசல், 12 பேரையும் துளைத்து, வளைத்து, நொறுக்கி, முறித்து,  2 + 2 கிடைப்பக்க, நிலப்பக்க சுழற்சிகளோடு அலறிச் சுவரோடு/ காரோடு/மரத்தோடு  மோதி விழவேண்டும். இரத்தம் ஆறாகப் பாயவேண்டும். சண்டையின் போது, குறுக்கே நிற்கும் மரக்கறி வண்டிகள் (கட்டாயம்), பானைகள், தகரப் பீப்பாக்கள், ஓட்டோக்கள், கார்கள் எல்லாம் உடைந்து நொறுங்கவேண்டும். கார்கள், லாரிகள் மூலம் கலைத்துக் கலைத்தும் சண்டை பிடித்துக் கதையை அடியோடு மாற்றலாம்.


* சண்டை முடிவில் நாயகன் திரும்பிப் பாராமல் நடந்துகொண்டிருக்கும்போது, எதிரிகள் வந்து கொடூரமாகத் தாக்கி, விழுத்தி, அவன் இறந்துவிட்டான் என்று விட்டு விட்டுப் ஒரேயடியாய்த் திரும்பிப் பாராமல் போக, அவன் சீறிப்பாய்ந்து,'டேய்' என்று அவர்களை அழைத்து, திரும்பவும் அடிவாங்கியும், கடைசியில் அவர்கள் எல்லோரையும் கொல்லவேண்டும்.

*நாயகனைப்  பிடித்த வில்லனும், அடியாட்களும் அவனை ஒரே சூட்டில் கொல்லாமல், அவனைக் கொல்வதற்கான நியாயத்தினைச்  சொல்லி விளங்கப் படுத்த வேண்டும். அல்லது, ஏதாவது, சிக்கலான புதிய பொறிமுறை யுக்தியில் அவனைக் கொல்லச் சிக்க வைத்துவிட்டு, இனிச் செத்துவிடுவான் என்றுவிட்டுப் போகவேண்டும். ஆனால், அவன் சாகாது பிழைத்து அவர்களை ஒழிக்க வேண்டும்.

*. நடுக்காட்டில் மழை பெய்ய, அவர்களைப் புதைக்கக் குழி தோண்ட மண்வெட்டி ஒன்று அங்கு இருக்க வேண்டும். இதனால் வெட்டப்படும் குழிகளோ மிகவும் சீரான 8x4x8  அடி அளவில் ஒரு சொத்தி / நெளிவு இல்லாமல் இருக்க வேண்டும்.

*. இவர்கள் எந்தவிதமாகவும், எந்தனை பேரையும் ஓட ஓட வெட்டலாம், கொல்லலாம். போலிஸ் விசாரணை ஒன்றும் இருக்காது. அவர்கள் வைத்ததே சட்டம்.

*. அரசில்வாதி, மந்திரி என்றால் மறு பெயர் படு அயோக்கியன், யாவரும் பயப்படும் ஒரு பணக்காரனாகச் சித்தரிக்க வேண்டும்.  கள்ளக் கடத்தல், கொள்ளை அடித்தல், தீர்த்துக் கட்டுதல்லஞ்சம் வாங்குதல் என்று எல்லாம் இருக்க வேண்டும். வில்லனின் மகன் மகா, மகா அயோக்கியன். மனைவி நல்லவள்.குற்றச்செயல்கள் பற்றிக் கதைக்க ஒரு கைவிடப்பட்ட அல்லது கட்டுமான வேலை நடந்துகொண்டிருக்கும் கட்டிடம் தேவை. வில்லன் ஒன்றுக்குப்  பின்னால் ஒன்றாய் ஒரு பத்து வெள்ளைக் கார்களிலோ அல்லது 4wd  களிலோ வந்து 1 , 2 , 3  சொல்லி ஒரே நேரத்தில் கதவுகள் திறக்கப்பட்டு இறங்கவேண்டும். அவர்கள் எல்லாரையும் அடித்துக் கொல்லும்போது சகலரும் ஒரு பெரிய வட்டத்தில் நின்று வேடிக்கை பார்க்க வேண்டும்.

*. கதாநாயகனைப் பிடிக்க, வில்லன் கடத்துவதற்கு  ஒரு தங்கைச்சி இருந்தால் நல்லது. கடத்தினதும் அப்படியே விலாசத்தினை மோப்பம் பிடித்து அவ்விடத்தை அடையவேண்டும்.

*. வீட்டுப் பத்திரம் யார் கையில் இருக்கின்றதோ அவர்களுக்கே அந்த வீடு சொந்தம். அல்லது, சொத்துகளைப்  பலவந்தமாகக் கையெழுத்து வைக்கப் பண்ணியும்  சொந்தமாக்கலாம். (கள்ளக் கையெழுத்துப் போட அஞ்சும் வில்லன்). லோயர், கச்சேரி என்று ஒன்றுமே  தேவை இல்லை.

*. ஒரு ஆயிரம் பேருக்கு முன்னால் நின்று நாயகன் 'உங்களுக்கு வெட்கம் இல்லையோ' என்று கேட்க, அந்த ஆயிரம் பேரும் ஒரே நேரத்தில் 1 , 2 , 3 சொல்லித் தலைகளைக் குனியவேண்டும். பின்பு, 'துணிவு கொள்ளுங்கள்' என்றவுடன் 1 , 2 , 3  தலையை நிமிர்த்தவேண்டும். தான் செய்யவிருக்கும் நல்ல விடயத்தைச் சொன்னதும் திரும்பவும் 1 , 2 , 3 ஒருவருக்கொருவர் பக்கத்தில் உள்ளவருடன் கைகளைக் காட்டிக் கதைக்க வேண்டும். முடிந்ததும் எல்லோரும் 1 , 2 ,3  திரும்பிப் போக வேண்டும்.

*. எந்த நடிகராய் இருப்பினும் கார் ஓடும்போது ஸ்டேரிங்கை அங்கும் இங்கும் சுழற்றவேண்டும். வாத்திய இசைக்கருவிகள் வாசிக்கும்போது தேவையில்லாது விரல்களை அசைக்கவேண்டும் அல்லது மரக்கட்டை போலப் பிடித்து வைத்திருக்க வேண்டும். பயணம் செய்யும்போது ஒரு வெறும் சூட்கேஸைக் கொண்டு செல்ல வேண்டும். துணைக்கு ஒரு கொமேடியன் நடிக்கலாம். கூட்டாளிகளும் ஒரு நாலைந்து பேர் இருக்கலாம். இந்த எண்ணிக்கையை மாற்றியும் கதையை அடியோடு மாற்றலாம்.

*. முன்னுக்கு நிற்பவரைப் பார்க்கும்போது காமரா முகத்தில் வந்ததும் ஓணான் தலையை அசைப்பது போல-முன்னே எதோ மறைப்பு இருப்பது போல- கழுத்தை அசைத்துப்போட்டுப்  பார்க்க வேண்டும்.  பலபேர் பார்த்தால், ஒவ்வொரு திக்கும் காமரா போகும்போதும்அவரவர் ஒரே நேரத்தில் முகத்தைத் திருப்பிப் பார்க்கவேண்டும்.

* கதையின் கரு எப்படியும் ஏழை நாயகன், பணக்கார நாயகியைக் கடைசியில் மணம் செய்ய வேண்டும். அங்கும் இங்கும் ஒரு சில சிறு மாறுதல்களைச் செய்து விதம் விதமான பெயர்களுடன் புதுப்புதுப் படங்கள் எடுக்கலாம்.

இப்படியே தொடர்ந்து கதைகளை விதம் விதமாக இன்னும் 100 வருட காலத்திற்கு எடுத்துக்கொண்டே இருக்கலாம்.

சரி, இதுதான் விதிமுறைகள் என்றுவிட்டுத் தொலைக்காட்சி நாடகம் ஒன்றை இந்தமாதிரி எடுத்துவிடாதீர்கள்! அதற்கு வேறு விதமான பாத்திரம் தேவை. ஒரு தன்னலமே இல்லாத, பல்லாற்றால் படைத்த, பின்னால் வருவதை முன்கூட்டி அறிய வல்ல, தியாகசொரூப, ஞான பண்டித, சகல கலா வல்லப, சமஜோசித, சகலமும்  தாங்கவல்ல  சுமைதாங்கிக் கதாநாயகி, பல முட்டாள் ஆண்களுக்கு மத்தியில் தேவை. அவளைச்  சுற்றி இருப்பவர் எல்லாருமே, ஒருவித காரணமும் இல்லாது, வேறு வேலை ஒன்றும் செய்யாது, 24 / 7 முழுநேரமும், மிகவும் கேவலமான, அதி உயர் வில்லத்தனங்களை அவள்மீது செய்துகொண்டே இருக்கவேண்டும். கடத்தல், கொலை, போலிஸ், புற்று நோய், மாரடைப்புகால் கை முறிவு, ICU , இரண்டு மனைவி, கல்யாணம் கடைசி நேரத்தில் குழம்பல், அத்தைகள் கொடுமை, டிவோர்ஸ்  என்று மாறி மாறி ஒவ்வொரு நாளும் இருக்க வேண்டும். போலிசும் வில்லனுக்கு உடந்தையாய் இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒட்டுமொத்தமாக,  24 / 7 எல்லோருமே அழுது வடிந்துகொண்டே இருக்கவேண்டும். நாடகத் தொடர் என்பதால், ஒருபோதும் ஒரு முடிவே வராது தொடர்ந்துகொண்டே போக வேண்டும்.

இப்படியான கருக்களோடு, அங்கும் இங்கும் சில சேர்க்கைகளையும், விடுப்புகளையும் செய்தும்இலக்கங்களையும், இடங்களையும் மாற்றியும்  உங்கள் படங்களையும், நாடகத் தொடர்களையும் எடுத்தால் ஓஹோ, ஓஹோ என்றும் கட்டாயம் ஓடும்.


📹📹📹📹📹📹📹📹📹📹📹ஆக்கம்:செல்வதுரை சந்திரகாசன்

2 comments:

  1. தமிழ் சினிமா மக்களுக்கு நற்கருத்துக்களை கூறி வந்தது முற்காலம்.மக்கள் செய்யும் தவறுகளை நியாயப் படுத்தி அவர்களை இன்னும் அத்தவறுகளை செய்யத் தூண்டுவது இக்காலம்.

    ReplyDelete
  2. அப்பப்பா!நாடகத்தில் மட்டும் குறைச்சலே?சின்னப்பிள்ளை வந்தால் கடத்துவார்கள்,பின்னர் ரோட்டு ரோடாய் தேடுவார்கள்!அதிலயே வருசங்கள் கழிந்திடும்.எப்பிடியய்யா முடிக்கறது.

    ReplyDelete