மனிதனை ஆட்டி வைக்கும் தங்கம்



உலகில் 91 வகையான உலோகங்கள் காணப்படுகின்றன.அவற்றுள் தங்கம் மனித இனத்தில் செலுத்தும் ஆதிக்கம் கொஞ்சநெஞ்சமல்ல. தங்கம் அல்லது பொன் (Gold) என்பது மஞ்சள் நிறமுள்ள பார்ப்பதற்கு எளிதான ஓர் உலோகமாகும். அது ஆபரணங்களுக்கு மட்டுமல்ல முற்காலத்தில் நாணயங்களுக்கு பயன்பட்டு வந்தது. 

தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். அத்துடன் இது செங்கீழ்க்கதிர்களைத் தெறிக்கவிடும் ஆற்றலையும் கொண்டுள்ளது. இத்தன்மையின் காரணமாக வெப்பத் தடுப்பு உடைகள், சூரியக் கண்ணாடிகள், விண்வெளி உடைகளில் இது பயன்படுத்தப்படுகின்றது.
  
அமிலங்களால் தங்கம் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் நைட்ரிக் அமிலமும், ஐதரோகுளோரிக் அமிலமும் 1:3 என்ற விகிதத்தில் கலந்து உருவாகும் இராச திராவகத்தில் இது கரைகிறது.

தூய தங்கம் நச்சுத்தன்மை அற்றதாகும்.எனினும் தங்கத்தின் அயன் நச்சுத்தன்மை கொண்டதாகும். தங்க உப்புகள் மற்றும் தங்கக் குளோரைட் ஆகியவையும் ஈரலுக்கும், சிறுநீரகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும்.

தங்கத்தின் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும். தூய தங்கம் பெண்களையே அதிகம் ஒவ்வாமையால் பாதித்தது. எனினும் நிக்கல் போன்றவற்றுடன் கலந்து செய்யும் தங்கம் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை.
  
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்கா வில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்கா விலும், இந்தியா வில் கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூகொடை என்னுமிடத்திற் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது. 

 தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமென்பதற்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்க்கிறார்கள். வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா.
  
2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையானதாக சீனாவும் அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, உருசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, பெரு ஆகிய நாடுகளும் விளங்கின. 20ஆம் நூற்றாண்டில் தங்க அகழ்வில் முன்னணி வகித்த தென்னாபிரிக்கா ஏழாம் இடத்தில் இருந்தது. இந்நாடுகளுடன் கானா, மாலி, புர்கினா ஃபசோ, இந்தோனேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகியவையும் பிரதான தங்க உற்பத்தி நாடுகள் ஆகும்.

ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது.

ஏன் ,திருவிழாக்களிலும் .திருமணவீடுகளிலும் மனிதரை மனிதர் சந்திக்கும்போது, உறவுகளிலிருந்து ,திருடர் வரைக்கும் அடுத்தவர் கையிலும் ,கழுத்திலும் எவ்வளவு தங்கம் தங்கியுள்ளது என்பதை வைத்தே அவர்கள் கணிக்கப்படுகிறார்கள்.


.🜚🜚🜚🜚🜚தொகுப்பு:செ.மனுவேந்தன்🜚🜚🜚🜚🜚

0 comments:

Post a Comment