விளக்கம் என்னடியோ?

                                       




போலி வேஷங்கள் பெருகும்    

வாழ்க்கையின் உலகமடி

கூலிப் பாசங்கள் கூடும்  குலவும்

  குடிகளின்  காலமடி


மூச்சில் கூட முட்டி முட்டிக்கொல்லும் பொல்லாத உலகமடி

பேச்சும் செயலும் பொருந்தாமலே

போகிற காலமடி.

 

 

பணத்தினை எண்ணி பழக்கம் கொள்ளும் பாசாங்கு உலகமடி

பிணத்தினில் கூட கணக்கினை கொள்ளும்  கஞ்சர் காலமடி

கடன்பட்டாரோ கலகலப்பாய்  வசதியாய் வாழுற உலகமடி

உடன்பட்டாரோ அவ் வுறவை இழந்து

வாடுற காலமடி.

 

மாறும் உலகினில் மோதும்  மதங்களும் நிறைந்த உலகமடி

கூறும்நூல்களும் கூடவழி காட்டமுடியாத கொலைஞர் காலமடி

ஓயா வாழ்க்கையாய் ஓட்டிஒழித்திட

ஓடும்  உலகமடி

நோயால்  மனிதன்  நொந்தே 

வெந்திடும் காலமடி.

 

பணமும்பெருகையில்   குணமும்மறையும்   கலியுக உலகமடி

மனமும் கறைபட  மனிதம் மறையும்  பாவிகள் காலமடி

கற்றோர் கண்முன்  கனமொன்றும்  கிட்டா கடின உலகமடி

நற்றோர் கூட நலங்கெட வாழும்

புதிரான காலமடி.

 

பெற்றோர் இருப்பை பாரமா எண்ணும் தரங்கெட்ட  உலகமடி

உற்றார் உறவை உதாசீனம் செய்யும் உருக்கெட்ட  காலமடி

மாயை உலகில் மயங்கி மூழ்கும் மதிகெட்டஉலகமடி

பேயைக் கூடப் பிடித்து ஆட்டும்

 மாந்தர்   காலமடி.

 

பொறுமையிலா பொங்கி எழும்

 பொல்லாதோர்  உலகமடி

மறுத்தேபேசி மகிழ்ச்சி கொள்ளும் மனசிலாதோர்  காலமடி

 

மந்தைகள் போல மாறும் மனிதர்

 கூட்டம் ஏனடியோ!

விந்தை வாழ்வில் வினைகள் சூழும்

 விளக்கம் என்னடியோ?

 

👉.................செ.மனுவேந்தன்




0 comments:

Post a Comment