சுவாமி விபுலானந்தரும், மகா கவி பாரதியாரும்



 மகா கவி சுப்பிர மணிய பாரதியாரின் பாடல்கள் மேல்  சுவாமி விபுலானந்த (காலம்:மார்ச் 27, 1892 – ஜூலை 19, 1947) ருக்கு  இருந்த ஈடுபாடு அதிகமானது.

தமிழ்நாட்டில் பாரதி பாடல்கள் தமிழ் அறிஞர்களினால் ஒதுக்கப்படும் வேளையில் ,அவற்றினை ஆதரித்து ,பாரதி புகழ் பாடிய தமிழ் அறிஞர் எனில்   விபுலானந்தர் அவர்களையே குறிப்பிடலாம்.

இதற்கு உதாரணமாக 1928ல் திருகோணமலை ஆங்கில கலாசாலையில் பாரதியாரின் படத்தை திரைநீக்கம் செய்துவைத்து பாரதியாரை பலருக்கும் விபுலானந்தர் அறிமுகப் படுத்தினார். 1931ல் இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த போது, இவர் தமிழ் நாட்டில் பாரதி கழகம் கட்டினார். பாரதி பாடல்களுக்கு இசையமைத்தார். தமிழ் நாட்டில் பாரதியாரை ஜனரஞ்சகப் படுத்துவதில் முன்னெடுப்பாளனாக இருந்துவந்தார்..

ஈழத்துத் தமிழ் எழுத்தாளரும் ,   மூத்த கவிஞர். சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர், ஓவியர், ஆய்வாளர், நாடகாசிரியர் என அறியப்பட்டவரும் , மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றுப் பட்டம் பெற்று அங்கேயே நீண்ட காலம் விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவருமான  திமிலைத்துமிலன் (சின்னயா கிருஷ்ணபிள்ளை) என்பவர்  எழுதிய கவியில் , விபுலானந்தர்-பாரதி  பற்றிக் கூறுகையில்,

கூட்டுக்குட் கோழிக் 
குஞ்செனத் தமிழைப்
பூட்டிவந்த பண்டிதர்கள்,
 பாரதியின் பாட்டை
நல்ல தமிழல்ல 
நாங்கள் அனுமதியோம்,
மெல்ல அதுசாக 
மென்றிடுவோம் என்று,
பட்டடை நாய்கள் போல் 
பாதுகாத்த வேளையிலே,
அட்டமா இருள்முன் 
ஆதவனைப் போல்வந்து
இங்கிதமாய்க் கவிச் சிறப்பை
 ‘இழிசனர்க்கும்’ அறிவித்தும்,
சங்கங்கள் தொடங்கியும், 
சபையினிலே முழங்கியும்,
பாரதியின் புகழையவர்
 பாட்டின் திறமைகளைப்
பாரதத்தின் புத்திரர்க்கும், 
பாருக்கும் விளக்கியவர்”

என தனது பாடல்-கவியில்,  பாரதியின் பாடல்களில்  விபுலானந்தர் கொண்ட ஆர்வத்தினை விளக்குகிறார்.

'நல்ல தமிழல்ல நாங்கள் அனுமதியோம்' என்று கோஷமிட்டவர்கள் இன்று தமிழரங்கில் பேசப்படவில்லை. அவர்கள் பெயர்கள் மறைந்துவிட்டன. ஆனால் விபுலானந்தர் குறிப்பிட்ட பாரதியின்  பாடல்கள் இன்றும்,என்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

தொகுப்பு:செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment