சித்தர் சிந்திய முத்துக்கள்...... 3/26

 


சிவவாக்கியம்-154

சாவல் நாலு குஞ்சது அஞ்சு தாயதான வாறு போல்
காயமான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே
கூவமான கிழநரிக்கூட்டிலே புகுந்த பின்
சாவல் நாலு குஞ்சது அஞ்சும் தான் இறந்து போனவே!



நான்கு சாவல்களையும் ஐந்து குஞ்சுகளையும் அதன் தாய்க் கோழியையும் ஒரே கூட்டில் அடைத்து வைத்தால் அவை ஒன்றுக் கொன்று கூவி கொத்தி சண்டை போடுகிறது. அக்கூட்டில் ஒரு கிழநரி புகுந்துவிட்டால் அவை யாவும் இறந்து போய்விடும். அது போலவே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும்பஞ்ச பூதங்களும், ஆன்மாவும் நம் உடம்பான கூட்டில் இருந்து ஐம்புலன்களாக சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வுயிர் உடம்பில் இருந்து போய்விட்டால் அந்தக் கரணம் நான்கும், பஞ்சபூதங்களும் மறைந்து போய்விடும் என்பதையும், எல்லா தத்துவங்களும், ஆன்மாவில் அடங்கிவிடும் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். 

*******************************************
சிவவாக்கியம்-155

மூலமாம் குளத்திலே முளைத்தெழுந்த கோரையை
காலமே எழுந்திருந்து நாலு கட்டு அறுப்பிரேல்
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்
ஆழம் உண்ட க ண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே.

அதிகாலை எழுந்து நமது மூலாதார சக்கரத்தில் இருக்கும் குண்டலினி சக்தியை பிராணாயாம பயிற்சி செய்து கோரையைப் போல முளைக்கும் கோழையாகிய மரண பயத்தை  கட்டறுத்து வெளியேற்ற வேண்டும். பின் வாசியோகம் செய்து பிராணசக்தியை மேலேற்றி ரேசக பூரக கும்பகம் என்று மூச்சை கட்டுப்படுத்தி, மனதை இறைவனுடன் இருத்தி, நான்கு நாழிகை நேரம் முயற்சியுடன் தியானப் பயிற்சியைத் தொடர்ச்சியாக தினமும் செய்து வரவேண்டும். இதனை விடாமல் தொடர்ந்து செய்து வரும் யோகிகள் பாலனாகி வாழ்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள். ஆலம் உண்ட நீலகண்டர் பாதமும் அம்மை பாதமும் நம்முள் அமர்ந்திருப்பதை உண்மையாய் உணர்ந்து தியானியுங்கள்.

*******************************************

சிவவாக்கியம்-156  

செம்பினில் களிம்பு வந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணியரங்க சோதியை
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலந்திட
செம்பினில் களிம்பு விட்ட சேதி ஏது காணுமே!

செம்பினில் களிம்பு வந்து சேர்ந்தது போல் நீ செய்த பாவங்கள் உயிரில் சேர்ந்து அது அழிவதற்கு காரணமாகின்றது. ஆகவே இச்சீவனை பாவங்கள் சேரா வண்ணம் சிவனோடு சேர்த்து தியானியுங்கள். அச்சிவன் நம் உடம்பில் எழுதா எழுத்தாகவும், அணி அரங்கமான அழகிய சிற்றம்பலத்தில் சோதியாக உள்ளான். அதனை அறிந்து அவனையே நினைந்து வெம்பி வெம்பி அழுது உன் உயிரும் ஊணும்  உருக உணர்ந்து தியானம் செய்து வாருங்கள். செம்பினில் களிம்பு போனால் தங்கமாவது போல் நீயும் பாவங்கள் நீங்கி இறைவனோடு சேர்ந்து இன்புறலாம்.


****************************..அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment