சித்தர் சிந்திய முத்துக்கள் ......... ....3/30


சிவவாக்கியம்-183 

 

ஒன்றும் ஒன்றும் ஒன்றுமே உலகனைத்தும் ஒன்றுமே
அன்றும் இன்றும் ஒன்றுமே அநாதியானது ஒன்றுமே
கன்றல் நின்ற செம்பொனைக் களிம்பருத்து நாட்டினால்
அன்று தெய்வம் உம்முளே அறிந்ததே சிவாயமே!!! 

சக்தியும் சிவனும் ஒன்றாகி இந்த உலகம் அனைத்திலும் ஒன்றான சிவமே எல்லாமாய் இருக்கின்றது. இதனை சக்தியாகிய உடலையும் சிவனாகிய உயிரையும் ஒன்றில் ஒன்றாக்கி ஒன்றி தியானித்து சிவம் ஆகிய மெய்ப்பொருளை உணர்ந்து கொள்ளுங்கள். அன்றும் இன்றும் ஒன்றே தெய்வம். ஒருவனே தேவன். அவன் அனாதியாக என்றும் எப்போதும் நிலையான ஒன்றாக இருப்பவன். என்றும் இளமை மாறாமல் நின்ற செம்பொன்னம்பலத்தைக் கண்டு செம்பில் களிம்பருத்து பொன்னாக்குவது போல் நீங்கள் செய்த பாவங்கள் யாவையும் நீக்கி சோதியில் மனதை நாட்டி தியானித்தால் அப்போதே தெய்வம் உமக்குள்ளே இருப்பதை அறிவீர்கள். அது சிவம் என்று. (கன்றல் - இளமை) 
******************************************* 

சிவவாக்கியம்-186


கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே!!!

கோயில் என்பதும் மெய் கல்வி கற்க வேண்டிய பள்ளி என்பதும் எது? மெய்ப்பொருளை குறித்து நின்றது எது? கோயில் என்ன்பது இறைவனை தொழுவதற்கும் பள்ளி என்பது arivai வளக்கவும் உள்ள இடங்களே! வெறும் வாயினால் மட்டும் சொல்லுன் மந்திரங்களால் மட்டுமே இறைவனைக் காண முடியுமா? இறைவனும் அறிவும் கோயிலாகவும் பள்ளியாகவும் உங்கள் உள்ளத்தில் உறைவதை உணருங்கள். யோக ஞானத்தால் அதனை அறிந்து இறை நாட்டத்துடன் நன்மையாய் வணங்கி மந்திரங்களைச் செபித்து தியானித்தால் இறைவனைக் காணலாம். 
******************************************* 

சிவவாக்கியம்-188


மனத்தகத்து அழுக்கறாத மவுன ஞான யோகிகாள்
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத் அழுக்கறார்
மனத்தகத்து அழுக்கருத்த மவுன ஞானி யோகிகள்
முலைத்தடத்து இருக்கினும் பிறப்பறுத்து இருப்பரே!

மனதின் உள்ளே இருக்கும் பாவம், ஆசை எனும் மாசுகளை நீக்காமல் வாய்மூடி மவுனத்தில் இருக்கும் ஞான யோகி என்போர் காட்டிற்குள் சென்று ஆஸ்ரமம் அமைத்து இருந்தாலும், அவர்களின் மனத்தில் அழுக்கு அகலாது. காம கோப தாபங்களை விட்டு மனதின் ஆசைகளை ஒழித்து உண்மையான மவுனத்தை அறிந்த ஞான யோகியர் கலவி இன்பத்தில் பெண்ணில் முலைதடத்தில் கிடந்தாலும் அவர்களின் எண்ணம் முழுதையும் இறைவனிடத்திலேயே இருத்தி பிறப்பு இறப்பு எனும் மாயையில் சிக்காது இறைநிலை அடைவார்கள்.  


******************அன்புடன் கே எம் தர்மா. 

0 comments:

Post a Comment