நீராவி,பிடி- கொரோனா வைரஸை விரட்டியடிக்குமா?

 



- கோவிட் சிகிச்சை உண்மை என்ன?

அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து கொண்டு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வீடு திரும்பியதும் கைகளை சோப்பு போட்டு கழுவிட வேண்டும் என்றும் அரசுகள் அறிவுறுத்தி வந்தன. ஆனால் மறுபுறம், கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் உள்பட அனைவரும் தினமும் நீராவி பிடிக்க வேண்டும் என்றும் இது நோய்த்தொற்றை இல்லாதொழிக்கும் எளிய வழி என்றும் வாட்சாப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதிகளவில் தகவல்கள் பகிரப்பப்பட்டு வருகின்றன.

 

நீராவிப் பிடித்தல் - மாறுபடும் கருத்துகள்

அதுமட்டுமின்றி, கொரோனா நோய்த்தொற்றை தடுக்க நீராவி உபகரண மையம் மற்றும் நடமாடும் நீராவி வாகனத்தை கோவையில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்துள்ளதும், இதையொத்த உபகரணத்தை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டிற்காக ரயில்வே பாதுகாப்பு படையினர் அமைத்துள்ளதும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் திங்கட்கிழமை பேசிய தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், கொரோனா சிகிச்சையின் ஓர் அங்கமாக நீராவி பிடித்தல் நிகழ்ச்சியைப் பொது இடங்களில் நடத்தக் கூடாது என்றும் அதனால் நோய்த்தொற்று மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

"பொது இடங்களில் ஆவி பிடிக்கிறோம் என்கிற பெயரில் சிலர் புகையை உள்வாங்குகிறார்கள். உடனடியாக அப்படிச் செய்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்தத் தவறைச் செய்யக்கூடாது என மக்களுக்கு அறிவுறுத்துகின்றனர். ஏனெனில், கொரோனா தொற்று உள்ள ஒருவர் மூலம் அது 400 பேருக்கு பரவ வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்" என்று மா. சுப்ரமணியன் கூறினார்.

 

"பொது இடங்களில் ஆவி பிடிக்கும்போது தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆவி பிடித்தால் அவர் நுகர்ந்து வெளிவரும் காற்றின் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அவருக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்படும். எனவே இதுபோன்ற நடவடிக்கைகளை மருத்துவர்களின் ஆலோசனை பெற்றே செய்ய வேண்டும்."

 

கொரோனாவை தடுக்க நீராவிப் பிடிப்பது தொடர்பில் தமிழக அமைச்சர்களுக்குள்ளேயே மாற்றுக்கருத்து உள்ளது.

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இரு தினங்களுக்கு முன்பு ஊடக ஆசிரியர்களுடனான கூட்டத்தில் "நித்தம் நீராவி பிடி, கொரோனாவை விரட்டி அடி" என்பன உள்ளிட்ட வாசகங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் இடையே ஒளிபரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் சில நாளிதழ்களிலும், சமூக ஊடகங்களிலும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அது விவாதப் பொருளாகி உள்ளது.

 

நீராவி பிடிப்பது உண்மையிலேயே பயனளிக்குமா?

உண்மையிலேயே கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக நீராவி பிடித்தல் செயலாற்றுகிறதா என்று நுரையீரல் சிறப்பு மருத்துவர் சபரிநாத் ரவிச்சந்தரிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, "ஆவி/ வேது/ நீராவி பிடித்தல் மூலம் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க முடியும், வந்த பின்னர் அதை கொல்லவும் முடியும் என்று பரப்பப்பட்டு வரும் இரண்டு கருத்துகளும் முற்றிலும் தவறானவை" என்று கூறினார்.

 

அப்படியென்றால் நீராவி பிடிப்பதால் எவ்வித பலனுமே இல்லையா என்று அவரிடம் கேட்டபோது, "நீராவி பிடிப்பதால் பலன் உள்ளது. ஆனால், அதற்கும் கொரோனாவிற்கும் சம்பந்தம் இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அடிப்படையில் ஒருவருக்கு சளித்தொல்லை ஏற்பட்டு மூக்கிலோ நுரையீரலிலோ அது கட்டிப்போய் இருந்தால், நீராவி பிடிப்பதன் மூலம் அதை இளகச் செய்து, பிறகு மற்ற மருந்துகளை கொடுத்து சளியை வெளியேற்ற வாய்ப்புண்டு. அந்த வகையில் பார்த்தோமேயானால், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஒருவருக்கு சளி இருந்தால் அதை கட்டுப்படுத்துவதற்கு நீராவி பிடிப்பது பலனளிக்கலாமே தவிர, அந்த நோய்த்தொற்றை முற்றிலும் வென்றுவிட முடியாது" என்று கூறினார்.

 

"கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர், பாதிக்கப்படாத மற்ற குடும்பத்தினர் முன்னிலையில் நீராவி பிடிக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் ஏரோசால் எனப்படும் வளிமக் கரைசல் மூலம் கோவிட்-19 நோய்த்தொற்று மற்றவர்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனியே ஓர் அறைக்குள் சென்று நீராவி பிடிப்பதே சரியானது."

 

நீராவி பிடித்தலால் தீமை ஏதாவது ஏற்பட வாய்ப்புண்டா? சாதாரண சளித்தொல்லைக்காக நீராவிப் பிடித்தாலும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? என்ற கேள்விகளுக்கு பதிலளித்த மருத்துவர் சபரிநாத், "சளியின் தீவிரத்தை குறைக்க உதவும் நீராவிப் பிடித்தலை அளவுக்கு அதிகமாக மேற்கொள்ளும் பட்சத்தில் தீவிரமான உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

 

குறிப்பாக, காலை - இரவு என ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் நீராவி பிடிப்பதன் மூலம், நோயாளிக்கு மூக்கில் எரிச்சல் ஏற்படுவது மட்டுமின்றி சுவாசப்பாதையில் தீப்புண் ஏற்படக் கூடும். இதை தவிர்க்க வேண்டுமென்றால், மிதமான சூடுள்ள தண்ணீரில் தைலம், யூகலிப்டஸ் எண்ணெய் உள்ளிட்டவற்றை கலக்காமல் நீராவிப் பிடிக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார்.

 

ஆய்வுகள் கூறுவதென்ன?

நீராவி பிடித்தலை கொரோனா வைரஸுக்கு எதிரான சிகிச்சை முறையாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமோ உலக சுகாதார அமைப்போ இதுவரை அறிவிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

 

அதேபோன்று கொரோனா வைரஸுக்கு எதிராக நீராவி பிடித்தலை சிகிச்சையாக கருதுவது ஆபத்தானது என்று ஸ்பானிஷ் குழந்தைகள் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ள நிலையில், இந்த முறையை பின்பற்றிய பலர் தீப்புண் ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக பிரிட்டனிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனை ஒன்று தெரிவித்துள்ளது.

 

ஆனால், இவை எல்லாவற்றிற்கும் மேலாக, 'தி லேன்செட்' என்ற சர்வதேச மருத்துவ சஞ்சிகையில் வெளியாகி உள்ள கட்டுரை ஒன்றில், சாதாரண சளி மற்றும் சுவாசப் பிரச்னைகளுக்கு பாரம்பரிய சிகிச்சை முறையாக கருதப்பட்டு வரும் நீராவிப் பிடித்தல் அதை சரிசெய்வதில் பங்கு வகிப்பதாக கூறப்படுவதற்கே வலுவான ஆதாரம் இல்லை என்று கூறுகிறது.

 

கடந்த ஆண்டு ஐந்து ஆராய்ச்சியாளர்களால் எழுதப்பட்ட அந்த கட்டுரையில், "நீராவிப் பிடித்தல் சளியை இளகச் செய்து, சுவாசப் பாதையை திறந்து, வீக்கத்தை குறைத்து, வைரஸ்களின் பெருக்கத்தை தடுக்கிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் வலிமையற்றதாக உள்ளதுடன், அந்த கூற்று நிரூபிக்கப்படாத கோட்பாடுகளை கொண்டதாக உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எனவே, அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத விடயங்களை அரசு எந்த விதத்திலும் ஊக்குவிக்காமலும், மருத்துவர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் மக்கள் கிடைத்த தகவல்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்பாமல் இருப்பதும் இதுபோன்ற சவாலான காலகட்டத்தில் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சாய்ராம் ஜெயராமன்-பிபிசி தமிழ்

0 comments:

Post a Comment