பூமி என்னும் சொர்க்கம் 07:

கடலுக்குச் சென்ற திமிங்கிலம்

நிலத்தில் வாழும் விலங்குகளில் யானைதான் மிகப் பெரியது. ஆனால், கடலில் வாழும் நீலத் திமிங்கிலத்தைப் பிடித்து, யானைக்கு அருகில் கிடத்த முடிந்தால் திமிங்கிலம்தான் பெரியதாக இருக்கும். பூமியில் வாழும் விலங்குகளில் நீலத் திமிங்கிலம்தான் பெரியது. அதன் நீளம் 30 மீட்டர். எடை 180 டன்கள் (1,80,000 கிலோ). யானையின் எடை அதிகபட்சம் 7 டன்கள் (7000 கிலோ).

 

நீலத் திமிங்கிலம் கடல் வாழ் விலங்குதான். ஆனால், யானையைப் போல அது காற்றைச் சுவாசிக்கும். யானையைப் போல் குட்டி போட்டுப் பால் கொடுக்கும்.

 

கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் கடல்களில் மட்டுமே உயிரினங்கள் இருந்தன. நிலத்தில் வாழ இயலும் என்ற நிலைமை ஏற்பட்டபோது சில உயிரினங்கள் கடலிலிருந்து நிலத்துக்கு வந்தன. அவை நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவையாக இருந்தன. இப்போதும் தவளையைப் போல் சில உயிரினங்கள் உண்டு. பின்னர் நிலப் பகுதியில் முதுகெலும்புள்ள பல உயிரினங்கள் தோன்றின. அவற்றில் சில மீண்டும் கடலுக்கே திரும்பின. பரிணாம வளர்ச்சியில் அவற்றின் வழியில் வந்த ஓர் உயிரினம்தான் திமிங்கிலம். எந்த விலங்கு பின்னர் திமிங்கிலமாக மாறியிருக்கும் என்று விஞ்ஞானிகள் தடயங்களைத் தேடிவந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானை ஒட்டியுள்ள கடலுக்கு அடியில் அதற்கான தடயம் கிடைத்தது.

 

கடல் நீரில் வாழ்ந்தாலும் மீன்களுக்கும் திமிங்கிலத்துக்கும் எந்தவிதமான ஒற்றுமையும் கிடையாது. ஒட்டகமும் பசுவும் திமிங்கிலத்தின் தூரத்து உறவினர்கள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

மீன்கள் நீரில் கரைந்துள்ள ஆக்சிஜனைச் செவுள்கள் மூலம் எடுத்துக்கொண்டு உயிர் வாழ்கின்றன. அவற்றுக்கு நுரையீரல் கிடையாது. ஆனால், திமிங்கிலங்களுக்கு நம்மைப் போல நுரையீரல் உண்டு. அவை நம்மைப் போல மூச்சை இழுத்து, மூச்சை வெளிவிடுகின்றன. அவ்வப்போது காற்றைச் சுவாசிப்பதற்காகவே திமிங்கிலங்கள் நீருக்குள்ளிருந்து மேலே வருகின்றன.

 

திமிங்கிலம் ஒரு தடவை தலையை வெளியே நீட்டி மூச்சை இழுத்துக்கொண்டால் சுமார் 90 நிமிடங்கள்வரை நீருக்குள் இருக்க முடியும். இதற்கு ஏற்ற வகையில் தன் தசைகளில் ஆக்சிஜனை நன்கு சேமித்து வைத்துக்கொள்ளும் விசேஷ வகைப் புரதம் அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

 

திமிங்கிலங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பற்களைக் கொண்ட திமிங்கிலங்கள் ஒரு வகை. இன்னொரு வகைத் திமிங்கிலங்களுக்குப் பற்கள் கிடையாது. அதற்குப் பதிலாகச் சீப்பு போன்று வாய்க்குள் வடிகட்டிகள் உள்ளன. இவற்றுக்கு பலீன் திமிங்கிலங்கள் என்று பெயர்.

 

இறால்களைப் போல் இருக்கும் கிரில்கள்தான் இவற்றுக்கு முக்கியமான உணவு. கடலுக்குள் சுமார் 100 மீட்டர் ஆழத்தில் இவை கூட்டம் கூட்டமாக வாழும். பலீன் திமிங்கிலம் தனது பெரிய வாயைத் திறந்தபடி நீருக்குள் சென்றுகொண்டிருக்கும்போது அதன் வாய்க்குள் பல ஆயிரம் கிரில்கள் அகப்பட்டுக்கொள்ளும். திமிங்கிலம் வாயை மூடிக்கொண்டு தண்ணீரை வெளியேற்றி, கிரில்களைச் சாப்பிட்டுவிடும்.

 

அண்டார்டிகா கண்டத்தை ஒட்டிய கடல் பகுதிகளில் பலீன் திமிங்கிலங்கள் நிறைய உள்ளன. திமிங்கிலங்கள் மட்டுமன்றி டால்பின், சீல்கள், பார்பாய்ஸ் முதலிய கடல்வாழ் விலங்குகளும் நீருக்குள்ளிருந்து வெளியே வந்துதான் சுவாசிக்கின்றன.

 

பல நூற்றாண்டுகளாகவே திமிங்கிலங்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஆனால், நவீனக் கப்பல்களும் கருவிகளும் வந்த பின்னர் அதிக அளவில் திமிங்கிலங்கள் வேட்டையாடப்பட்டன. ஒரு கட்டத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் திமிங்கிலங்கள் கொல்லப்பட்டன. எனவே, இதைக் கட்டுப்படுத்த உலக அளவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. திமிங்கிலம் என்ற இனமே அழிந்துவிடுமோ என்ற கவலை ஏற்பட்டு, 1986-ம் ஆண்டு வாக்கில் திமிங்கில வேட்டை சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டது.

 

ஆனால் ஜப்பான், நார்வே, ஐஸ்லாந்து ஆகியவை இந்தத் தடைச் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, தொடர்ந்து திமிங்கில வேட்டையில் ஈடுபட்டுவருகின்றன. ஜப்பானில் திமிங்கில இறைச்சி விரும்பி உண்ணப்படுகிறது. திமிங்கில வேட்டையில் ஈடுபட்டுள்ள ஐஸ்லாந்து நாட்டில், மக்கள் திமிங்கில இறைச்சியை விரும்பி உண்பதில்லை அதனால், திமிங்கில இறைச்சியை அந்த நாடு ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறது.

கட்டுரையாளர், எழுத்தாளர்:-தொடர்புக்கு: nramadurai@gmail.com

சித்தர் சிந்திய முத்துகள்....3/52

 


சித்தர் சிவவாக்கியம் -417

சுத்தமென்று சொல்லுவதுஞ் சுருதி முடிவில் வைத்திடீர்

அத்தனித்த மாடியே அமர்ந்திருந்த தெவ்விடம்

பத்தி முற்றி யன்பர்கள் பரத்திலோன்று பாழாது

பித்தரே இதைக் கருதிப் பேசலா தெங்ஙனே .    

எல்லா நூல்களும் முடிவாகச் சொல்வது இறைவன் பரிசுத்தமான இடத்தில்தான் இருக்கின்றான் என்பதைத்தான் கூறுகின்றது. இப்படியான இடத்தில் அத்தனாகிய ஈசன் நித்தியமாய் நின்று ஆடிய வண்ணம் அமர்ந்திருந்தது நம் உடலில் எந்த இடம்? அதுவே பரிசுத்தம். அதனை அறிந்து அதிலேயே பக்தி வைத்து பற்றி நின்று முக்தி அடையும் மெய்யன்பர்கள் பாழ் என்ற சூன்யமாக நின்ற ஒன்றே பரம்பொருள் என்பதை அறிந்துகொண்டு அடைவார்கள். பித்தர்களே! இதையே கருதி மெய்ப்பொருளை அடைவதையன்றி வேறு பேசுவதனால் பயன் இல்லை.

****************************************************

சித்தர் சிவவாக்கியம் -423

எப்பிறப்பிலும் பிறந்திறந்தழிந்த ஏழைகாள்

இப்பிறப்பிலும் பிறந்தென்ன நீறு பூசுறீர்

அப்புடன் மலமறுத்தே ஆசை நீக்க வல்லிரேல்

செப்பு நாத வோசையிற் றெளிந்து காணலாகுமே.          

எல்லாப் பிறப்பிலும் பிறந்து இறந்து அழிந்த ஏழைகளே! பெறுதற்கரிய இம்மானிடப் பிறப்பில் பிறந்த நீங்கள் இறவா நிலைப் பெற்று இறைவனை அடைய நினையாது, நீராக நின்ற நிலையை உணராது, சாம்பலை திருநீறு என்று உடம்பு முழுதும் பூசித்திரிகிறீர். நீரால் விளைந்த மும்மலங் களையும், ஞானிகள் செப்பும் நாத ஓசை உங்களுக்குள் தோன்றி, சோதியில் சேர்வதை உணர்ந்து தெளிவாகக் காணலாம்.

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 424

மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே

மந்திரங்கள் கற்று நீர் மரித்த பொது சொல்வீரோ

மந்திரங்களும் முளே மதிக்க நீறு மும் முளே

மந்திரங்களாவது மனத்தினைந் தெழுத்துமே.  

பற்பல மந்திரங்களைக் கற்று ஓதியும் உண்மையை உணராமல் மயங்குகின்ற மனிதர்களே! இத்தனையும் படித்தும் செத்துவிட்டால் அம்மந்திரங்களை உங்களால் சொல்ல முடியுமா? ஆதலால், உடலில் உயிர் இருக்கும் போதே மந்திரங்களாக உங்களுக்குள் நின்ற ஓங்காரத்தையும், அதனுள் இருந்த ஊமை எழுத்தையும் அறிந்து கொள்ளுங்கள். உயிர் இருந்தால்தான் யாவரும் மதிப்பார்கள். அந்த உயிருள் நீராக நின்ற ஈசனை உணர்ந்து, அவனையே மனத்தில் இருத்தி அஞ்செழுத்தை நினைந்து தியானியுங்கள். மந்திரங்களாவது உங்கள் மனத்தில் நின்ற ஒரேழுத்தே. அதுவே அஞ்செழுத்தாக இருப்பது உண்மை.   

***************************************************

..அன்புடன் கே எம் தர்மா &கிருஷ்ணமூர்த்தி

அவனுக்கென்றொரு மனம் - கதை (Tamil Short Story )

 பல்கலைக்கழ படிப்பினை முடித்த சலீஷா ஒரு  அலுவலகத்தில் தொழில் நியமனம் பெற்று சில வாரங்களே கடந்திருந்தன.

 

அதே அலுவலகத்தில் கடமை புரியும் சதீஷ் அவள் கண்களில் மெல்ல மெல்ல தங்க ஆரம்பித்தது ஏன் என்று அவளுக்கு ஆரம்பத்தில் புரியவில்லை.

 

நாட்கள் நகர்ந்தன. அவளின் கண்களில் நிறைந்த அவன், அவளின் நெஞ்சிலும் நகர ஆரம்பித்தது எப்படி என்று அவளால் சொல்லிவிட முடியவில்லை.இதுதான் காதலா என்ற கேள்வியுடன் உதயமான அவள் உணர்வுகள் துள்ளிக் குதித்திட........... எப்படி அவன்கூட பேசுவது? நினைக்கவே அவளுக்கு வெயர்த்துக் கொட்டியது. எத்தனை நாளுக்குத்தான் பொறுத்துக்கொள்ள முடியும்? ஒருநாள்  மதிய போசன இடைவேளையின் போது அவன் இருந்து உணவு அருந்திய  இடம் அருகே சென்றவள் தயங்கியபடியே

 

''சதீஷ், ..உங்களோட ...பேச வேணும்'' என மெதுவாகவே தன் சொற்களை உதிர்த்தாள் சலீஷா

 

''பேசுங்க, இதில என்ன தயக்கம்.ஒரு இடத்தில தானே வேலை செய்கிறோம். பேசுறது தப்பில்லையே'' என புன்னகையோடு   சதீஷ் பதில் கூறியது அவளுக்கு சற்று தென்பினை ஊட்டியது.

 

''இல்லை, வெளியில தான் பேசவேணும்''

 

ஆச்சரியத்தோடு அவளை நோக்கிய சதீஷ் '' அப்படி என்னங்க வெளியில...'' என்றவன் சற்று சிந்தித்தவாறே ''சரி எங்க, எப்ப  என்று சொல்லுங்க, பேசலாம்'' என்று அவள் வழிக்கே வந்தான் சதீஷ்.

 

சந்திப்புகள் தொடர்ந்தன

 

சலீஷா ,சதீஷ் இருவரினதும் சில மாதக் காதலின்  புதினம் வீடுவரை எட்டிவிட்டது. காதல் என்றாலே எம்மவர்  வீடுகளில்  வழமையாக  கிளம்பும் பூகம்பம்  சலீஷா வீட்டையும் விட்டுவைக்கவில்லை.

 

சலீஷாவினால் வீட்டில் எழுந்த எதிர்ப்பினை தாங்கமுடியவில்லை. ஒரு முடிவுக்கு வந்தவளாக அன்று சலீசா அலுவலகத்தில் இருந்தபடியே சதீஷின்  கைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினாள்.

 

''சதீஷ் உங்கள் கூட ஒன்று பேசவேணும்''

 

''என்ன சலீஷா ,பேசிக்கொண்டு தானே இருக்கிறம்''

 

''பகிடி விட இது நேரமில்லை சதீஷ்,வேலை முடிஞ்சதும் வழமையான இடத்திற்கு வாறியளா?''

 

''சரி சலீஷா''

 

அழுதுகொண்டு  வந்த சலீஷாவை கண்டு அதிர்ச்சியடைந்தான் சதீஷ்.

 

''என்ன சலீஷா? என்ன பிரச்சனை? ஏன் அழுகிறியள்? எனக் கேள்விகளை  அடுக்கிக்கொண்டே போனான் சதீஷ்.

 

தன்  கண்களைத் துடைத்துக்கொண்ட சலீஷா '' சதீஷ் எங்கட காதல் வீட்டில தெரிஞ்சிட்டுது''

 

''அதுக்கேன்  அழுகிறியள் சலீஷா?''

 

''அழாம என்ன செய்யச்சொல்லுறியள் சதீஷ். அம்மா,அப்பா,அண்ணா எல்லோருமே எங்க காதலை எதிர்க்கினம். அவையள் என்னுடைய மச்சானுக்கு செய்து வைக்க இருக்கினமாம்.''

 

''அப்போ காதலைக் கைவிடப்போறியளா?''

 

''என்ன சதீஷ், ஏன் அப்பிடி என்னை நினைக்கிறியள்? ரிஜிஸ்டர் மறிஜ் செய்துபோட்டு இரண்டு பெரும் பிறம்பாய் ஒரு வீடெடுத்து வாழுவம் சதீஷ்''

 

''அதாவது பெற்றோரை கைவிட்டு ,ஓடிப்போய் வாழுவோம் என்று  சொல்லுறியள்''

 

விக்கியபடியே ''ஓமோம் '' என அனுங்கினாள்  சலீஷா

 

தன்னை அறியாமலேயே, சத்தமாகவே சிரித்துவிட்டான் சதீஷ்

 

''என்ன சதீஷ்! நான் துடிச்சுக்கொண்டிருக்கிறன்,உங்களுக்கு அது விளையாட்டாயோ  இருக்கு?''

 

''வேறென்ன சலீஷா! என்மேல அவ்வளவு நம்பிக்கையா உங்களுக்கு?

 

''நம்பிக்கைதான் சதீஷ் வாழ்க்கை.உங்களைப்பற்றி (office)ஒஃபீசில யார் தான் குறை சொல்லியிருப்பான்கள்!இல்லையே!

 

''ஆனால் உங்கள்மேல் இருந்த நம்பிக்கை எனக்கு இல்லாமல் போயிடுச்சே!''

 

அதிர்ந்த சலீஷா''என்ன சதீஷ் சொல்லுறியள்?''

 

''சலீஷா நல்லா யோசிச்சுப் பார்.சில மாதங்கள் உன்னோட நான் கதைச்சது மட்டும் தான். எதையுமே உனக்கு நான் செய்ததில்லை.  ஆனால் உன்னுடைய பெற்றோர்கள், உன்னைப்  பெற்று,வளர்த்து, ஆளாக்கி இன்டைக்கு 25 வருஷம். அவை உனக்காக பட்ட கஷ்டங்கள், வேதனைகள் அதெல்லாம் நான் கணக்கு சொல்லேலை. ஒன்றே ஒன்று மட்டும் கூறுகிறேன். 25 வருஷம் பழகின உன்ர பெற்றோர்,சகோதரன் அவையளை,அவையளின்ர அன்பினை  தூக்கி ஏறிய முடிஞ்ச உன்னால 25 கிழமை பழகின என்னை நீ  தூக்கி ஏறிய எத்தனை செக்கன் எடுக்கும் சொல்லு!

 

''சதீஷ் என்ன சொல்லுறியள்'' கதறினாள்  சலீஷா

 

''என்ன சலீஷா? விளங்கேல்லையா

 

''25 வருஷம் பழகின உன் உறவுகளின் உணர்வுகளை மதிக்க முடியாத நீ , 25 கிழமை பழகின என்னுடைய உணர்வுகளை மதிப்பாய் என்பதில்  என்ன நம்பிக்கை?''

 

''ஐயோ ,சதீஷ் ''குலுங்கிக் குலுங்கி அழுதாள் சலீஷா.

சதீஷ் தொடர்ந்தான்,''சலீஷா! நீ இப்ப அழுகிறது  உன் இதயத்திலிருந்து வருவதாக நீ கூறலாம்,ஆனால் அது உண்மையில்லை சலீஷா.  இப்ப தங்கள் இதயங்கள் நோக உண்மையாய் அழுதுகொண்டு இருப்பவர்கள் யார் தெரியுமா? உன்னை பற்றி அவர்கள் கொண்டிருந்த  கனவுகள் இடிந்துவிட்டதே என்று இதயம் நொறுங்கி போய் இருக்கிறார்களே உன்ரை பெற்றோர்கள், அவையள்தான். முதலில அவையளுக்கு உன்மேல ஒரு நல்ல நம்பிக்கை  உள்ள மகளாக வாழப்பார்! அப்பதான் அடுத்தவர்களுக்கும் உன்மேல நம்பிக்கை வரும். நன்றி, நான் போய் வருகிறேன்''

 

மன உறுதியுடன் தன் உபதேசத்தினை முடித்துக்கொண்ட சதீஷ், மனதில் பெரும் பாரத்தினை இறக்கிவிட்ட நிறைவுடன் தன் பாதையில் அவளைக் கடந்துசென்றான்.


கதை:செ.மனுவேந்தன்


எம்மவரின்-இழிநிலை(video)

இது எங்கள் இழிநிலை. 2014 நாம் பதிவிட்ட இக்குறும்படம் காலத்தின் தேவையறிந்து மீண்டும் பதிவிடுகிறோம் 
தீபத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் கருத்துக்களுடன் இழிநிலை குறும்படம் ஈழத்து கலைஞர்களின் முயற்ச்சியில் இப்பொழுது வெளிவந்துள்ளது இழிநிலை குறும்படம்.உலகத்தில் உள்ள பல மொழிகளை ஒருவன் பேசதெரிந்தாலும் சொந்த தாய் மொழியே அவனை அவனுடைய சிந்தனையை இயங்கவைகிறது என்ற விஞ்ஞானம்  சார்ந்த கருத்தை கூறியிருக்கிறது.
                                       

    ஒலிபதிவு -கிஷோக்
                                                    இசை -திலீப்
                                         உதவி ஒளிபதிவு -செல்வா
                                        ஒளிபதிவு,படத்தொகுப்பு  -திலீப்
                                         இணை இயக்கம் -கிஷோக்
                                          கதை இயக்கம் -அகீபன்
நன்றி

பூமியின் சுழற்சி விமானப் பயண நேரத்தை மாற்றுகின்றதா?

 


நம் எல்லோருக்கும் தெரியும், நமது பூமியானது (மத்திய இரேகையில்) மணிக்கு 1670 கி.மீ. வேகத்தில் மேற்கிலிருந்து கிழக்குத் திசையில் சுழன்றுகொண்டே இருக்கின்றது என்று.

 

அப்படியானால், 10 கி.மீ. உயரத்தில் கொழும்பில் இருந்து நேர் மேற்கே இருக்கும் பனாமா நகரை நோக்கி  மேற்குத் திசையில், 900 கி.மீ. (தரை) வேகத்தில் பறக்கும் விமானம் ஒன்றுக்கு, அந்த நகர், ஒவ்வொரு மணித்தியாலமும் 1670 கி.மீ. அந்த விமானத்தை நோக்கி சுழன்று வந்து கொண்டு இருக்கின்றது என்று எதிர்பார்க்கலாம். இப்பொழுது, 1670+900=1570 கி.மீ. சார்பு வேகத்தில் அந்த இடத்தை அடைந்துவிடலாம் என்றும் கணக்குப் போடலாம்.

 

அதேபோல, விமானம் கிழக்குத்திசையில் பயணம் செய்யும்போது, விமானத்தின் சார்பு வேகம் 1670-900=770 கி.மீ என்றாகிவிட,.அந்த நகரம் விமானத்தை விட்டு சுழன்று விலகிக்கொண்டே போவதாகவும் நினைக்கலாம்

 

அப்படியானால், விமானம் ஓடாமல் மேலே நின்றுவிட்டுக் கீழே இறங்கினால் இன்னொரு இடத்தில் தரை  இறங்கிவிடும் என்றல்லவா வந்துவிடும்?

 

ஆனால் அது உண்மை அல்ல!

 

பூமியின் பாரிய ஈர்ப்புச் சக்தியின் காரணமாக பூமி சுழர்வதோடு சேர்த்து, ஒட்டுமொத்தமாக 16 கி.மீ.உயரம் வரை செல்லும் அடர்த்தியான மற்றும் 480 கி.மீ. வரை செல்லும் செறிவு குன்றிய வளி மண்டலங்களும், இதே ஆரை வேகத்துடன் சுழன்று கொண்டே இருக்கின்றன. இவ்வானத்தில் புவி ஈர்ப்பு எல்லைக்குள் அகப்படும் எந்த ஒரு பொருளும், 30 மீ உயரத்தில் பறக்கும் கிளி, 300 மீ உயரத்தில் பறக்கும் வல்லூறு, 400 கி.மீ. தூரத்தில், 28,000 கி.மீ. வேகத்தில் உந்தி விடப்பட்ட விண்வெளி நிலையம், பல்வேறு தூரங்களில் இருக்கும் செயற்கைக் கோள்கள் எல்லாமே இவ்வாறே சேர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கின்றன.

 

ஒரு 300 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டு இருக்கும் அதி வேக இரயில் வண்டியினுள், உங்கள் முன்னாள் பறந்து வரும் ஈ ஒன்று 301 அல்லது 299 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டு இருக்கவில்லை.

 

அங்கு, போத்தலில் இருந்து கிளாஸினுள் ஊற்றப்படும் பானம் 50 மீ. தள்ளிப் பின்னால் வரும் பெட்டிகளுக்குள் விழுவதும் இல்லை.

 

எல்லாமே ஓடும் பெட்டிக்குள் ஒன்றாகி அடக்கமாய் விட்டன.

 

என்? நாம் தரையில் நின்று ஒரு தொங்கல் தொங்கி, கீழே காலைப் பதிக்கும்போது அதே இடத்தில்தான் விழுகின்றோம்; பூமி சுற்றுவதால் 468 மீ. தள்ளிப் பக்கத்து வீதியில் விழுவதில்லை.

 

ஆதலால், பூமி சுழர்வதால், விமானப் பயணத்தை எந்தவொரு மாற்றமும் இருக்காது என்பதுதான் உண்மை.

 

ஆனால், பூமியின் சுழற்சி வேறு காரணத்தினால் பயண வேகத்தைப் பாதிக்கின்றது.

 

பூமியின் மத்திய இரேகையில், பூமி சுற்றலின் கூடிய வேகமும், வெப்பமும், மற்றும் வடக்கு, தெற்கு பாகங்களில் குறைந்த  வேகமும் குளிரும் காரணமாக, விமானம் பறக்கும் பகுதிகளில் ஜெட் ஸ்ட்றீம் என்றழைக்கப்படும் புயல் போன்ற காற்று மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி 150-200 கி.மீ. வேகத்தில் வீசுகின்றது. இதன் காரணமாக விமானப் பயணம் மேற்கிலிருந்து கிழக்கே செல்லும் நேரம், கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் நேரத்திலும் பார்க்க குறைவாகவே இருக்கும்.

 

எனவே, பூமியின் சுற்று எந்த ஒரு இடத்தையும் நம்மை நோக்கிக் கொண்டு வரவோ அல்லது  விலகிப் போகவோ செய்ய மாட்டாது.

 

சுழற்சியால் உருவாகும் புயல்தான் (மேற்கு நோக்கி அல்லாது) கிழக்கு நோக்கி விமானத்தை விரைவாய்க் கொண்டு செல்லும்.

 

ஆக்கம்:செ.சந்திரகாசன்