சித்தர் சிந்திய முத்துக்கள் ......3/55

 


சித்தர் சிவவாக்கியம் - 450

அடைவுளோர்கள் முத்தியை அறிந்திடாத மூடரே

படையுடைய தத்துவம் பாதகங்களல்லவோ

மடை திறக்க வாரியின் மடையிலேறு மாறுபோல்

உடலில் மூல நாடியை உயர வேற்றி ஊன்றிடே.        

 

அடைவாகவே இருந்து மெய்ப்பொருளை அடையாதவர்கள் முத்தியை அறிந்திடாது ஞானத்தை அடையாமல் போகும் முட்டாள்கள். ஆர்பாட்ட அலங்காரங்களால் தத்துவங்கள் சொல்லி நானே கடவுள் என்று வாய் ஜாலம் பேசுவது எல்லாம் பாவமாகி உனக்கே பாதகங்கள் ஆகும் அல்லவோ? அதலால் அதனை விட்டு உனக்குள்ளேயே வாசியை தேக்கி வைத்த நீரை அணையின் மடையை திறந்தால்பாயும் வெள்ளம் ஆற்றின் மடையில் ஏறுவது போல் உடலில் உள்ள மூலாதாரத்தில் மூண்டெழு கின்ற கனலைமூலனாடியான சுழுமுனையில் உயர ஏற்றி மெய்ப் பொருளில் ஊன்றி தியானித்திருந்திடுங்கள்.        

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 454

சோதியாக உம்முளே தெளிந்து நோக்க வல்லிரேல்

சோதி வந்து உதித்திடும் துரியாதீதம் உற்றிடும்

ஆதி சக்கரத்தினில் அமர்ந்து தீர்த்தம் ஆடுவன்

பேதியாதி கண்டு கொள் பிராணனைத் திருத்தியே. 

 

சோதியாக உங்களுக்குள்ளே உள்ள மெய்ப் பொருளை தெளிந்து நோக்கி தியானிக்க வல்லவர்கள் ஆனால் அதிலேயே சோதி தோன்றி உதித்து நிற்கும். துரியாதீதமான வெளியையே உற்று நிற்கும். ஆதியான வாலை சக்கரத்திலேயே ஈசன் அமர்ந்து நீராகி நிறைந்து ஆடிக் கொண்டிருக் கின்றான். சக்தி சிவன் என்ற பேதம் பாராது சிவமாக நின்ற ஆதியிலேயே அனைத்தையும் கண்டு கொள்ளுங்கள். உயிரை வளர்த்து திருத்தமான யோக ஞான சாதகம் செய்து சிவத்திலே சேருங்கள்.      

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 465

நீங்குமைம் புலன்களும் நிறைந்த வல் வினைகளும்

ஆங்காரமா மாசையும் அருந்தடர்ந்த பாவமும்

ஓங்காரத்தினுள்ளிருந்த ஒன்பதொழிற் தொன்றிலத்

தூங்க விசர் சொற்படி துணிந்திருக்க சுத்தமே.            

 

ஐந்து புலன்களின் சேட்டைகளும், உடம்பையும் உயிரையும் பற்றி நிறைந்திருந்த வல்வினைகளும், ஆங்காரமும், மூவாசைகளும் பிறவியை தொடர்ந்த பாவங்களும் மெய்ப் பொருளில் தியானம் செய்து வர நீங்கும். ஓங்காரத்தின் உள்ளிருக்கும் ஒரெழுத்தில் ஒன்பது வாசலில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒன்றான பத்தாம் வாசல் தலத்தில் சோதியாக துலங்க விளங்கும் ஈசனை அறிந்துணர்ந்து அந்த பரிசுத்தமான இடத்தில் குரு சொற்படி துணிவுடன் யோக ஞானத்தால் தியானித்து தூயவனாகுங்கள்.            

***************************************************

…….அன்புடன் கே எம் தர்மா  & கிருஷ்ணமூர்த்தி


0 comments:

Post a Comment