நான் வணங்கும், உலகிலேயே சக்தி மிகுந்த கடவுள்.



என் பெயர் காகியோ. நான் ஒரு நைஜீரிய நாட்டவன்.

அந்த நம்ப முடியாத அதிசயம் நடக்கும்வரை நான் எனது பழைய கடவுளே உண்மையானவர் என்று ஒரு பிழையான நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

 

என்னைப்  பாவ மார்க்கத்திலிருந்து மீட்டெடுத்து உயர் புனித அலுகிரி சமயத்துக்கு உள்வாங்கிய, நைஜீரிய நாட்டில், எல்லாம் வல்ல (எ.வ) இறைவனாம் சொல்லாசுவினால் (எ.வ) புனித நகரமாக பிரகடனம் செய்து ஆசீர்வதிக்கப்பட்ட  'ஜெமெரா' என்ற புண்ணிய நகரத்தில் பிறந்த மொகேசா (மிக, மிக புனிதமானவர் - மி.மி.பு.- ) என்ற இறைவிம்ப தூதூதருக்குக் கோடானு கோடி நமஸ்காரங்கள். 

 

எல்லாம் வல்ல இறைவனாம் சொல்லாசு (எ.வ.) எம்பால் கருணை மிகக் கொண்டு, தானே, தனது சொந்த  உருவச் சாயலில் மொகட்டி என்னும் பெண்ணின் வயிற்றில் இறைவனாக இப்பூமியில் அவதரிப்பதற்காக கருவாக உருவாகினார். இந்தப் பிறப்புத்தான் உலகின் கடவுளின் ஒரே, ஒரு பிறப்பு என்றும் அறிவித்தார். பிறக்கும் குழந்தைக்கு  'மொகேசா' என்று பெயரும்படி ஜெமெரா நகர சகல மக்கள் 10,252 பேரின் கனவிலும் - என் கனவிலும் உட்பட- வந்து தெரிவித்துச் சென்றார்.

 

60 ஆம் ஆண்டு தை மாசம் முதலாம் திகதியில் இறைவன் இப்பூவுலகை உய்விக்கப் பிறந்தருளும்போது எனக்கு 40 வயசுதான். அந்த வயசில்தான் அந்த முதல் அதிசயத்தைக் கண்டேன்.

 

மொகேசா (மி.மி.பு) பிறந்தது இரவு 12 மணி. அமாவாசை இருள் சூழ்ந்திருந்த நேரம்.

 

ஆனால், என்ன அதிசயம்! சொல்லாசு (எ.வ) பூமிக்கு வருவதை நேரில் காண்பதற்காக அந்த ஒரு நிமிடத்துக்கு சூரியனும், சந்திரனும் ஒன்றாக வான் வெளியில் தோன்றினார்கள்! அத்தோடு, அந்தத் தெய்வீகக் குழந்தை ஆயிரம் கோடி சூரிய ஒளியின் பிரகாசத்துடன் மொகேசாவாக (மி.மி.பு.) பூமியில் தோன்றினார். நம்பவே மாட்டீர்கள்; ஆனால் நாமும் நேரில் பார்த்த சாடசிகள்தான் என்பது உண்மை.

 

அது மட்டும் அல்ல, வான் வெளியில் இலட்ஷக்கணக்கான நட்ஷத்திரங்கள் அங்கும், இங்கும், தாறு, மாறாக சிதறி ஓடிய காட்சியையும் கண்டோம். இதற்குக் காரணம், மித மிஞ்சிய பிரகாசம் காரணமாக வழி தப்பித் தடம் மாறி,  நட்ஷத்திரங்களினால்  மொகேசா (மி.மி.பு) வின் பிறப்பை பார்க்க முடியாத தவிப்பில், சரியான கோணம் நோக்கி அங்கும், இங்கும் ஓடின என்று பின்னர் மொகேசா (மி.மி.பு) சொல்லி அறிந்தோம்.

 

மொகேசா (மி.மி.பு),  பிறந்த உடனே அழுவதற்குப் பதிலாக சொல்லாசு (எ.வ) வின் நாமத்தைச் சொல்லத் தொடங்கினார். இரண்டு - மூன்று வயசில், உலகில் உள்ள 4200 சமயங்களின் சகல புனித நூல்கள், வேத சாஸ்திரங்கள்  எல்லாவற்றையும் கற்று அறிந்தார். அவற்றில் எல்லாம் கூறப்பட்டிருக்கும் பொய்யான கடவுள்களையும், பிழையான தத்துவங்களையும் எடுத்து விளக்கினார். அதன் பின்னர் சொல்லாசு (எ.வ) வின் 20 கட்டளைகளை நமக்கு வாழ்வின் கடமைகளாக அளித்தார்.

 

மெய்யான இறைவன்  சொல்லாசு (எ.வ) தான் என்று நிரூபித்துக் காட்டினார். அவரை அடையக்கூடிய ஒரே ஓர் உண்மையான மார்க்கம் அலுகிரி மதம்தான் என்பதை தெரியப்படுத்தினார். அலுகிரி மதத்தை பின்பற்றுபவர்கள் மாத்திரமே இப்பிறப்பில் உயர்ந்த நிலையில் வாழ்வார்கள். இறந்த பின்னரும் இதே உடலுடன், ஆனால் இளமையானவர்களாக சொர்க்க உலகத்தில், சுக போக உல்லாசத்துடன் அவருடன் வசிக்கும் உரிமையைப் பெறுகின்றார்கள்.

 

பிற சமயத்தவர்கள் எல்லோருமே கடவுள் மறுப்பாளர்கள். பாவிகள். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை. இப்பிறப்பில் இழிவான வாழ்க்கையும், இறந்த பின்னர், முதுமையுடன் நரக வாழ்வில் அகோர சித்திரவதைகளுக்கு உள்ளாகிக் கொண்டே இருப்பார்கள்.

 

நானும் முதலில் இதை நம்பவில்லை. அவர்  (மி.மி.பு)  நேரில் காட்டியபோது மிகவும் ஆச்சரியப்பட்டு உண்மை என்று அறிந்து கொண்டேன். எப்படி என்று அறிய ஆவலா?

 

ஒரு சிறிய கோலா இலையை எடுத்து தடவினார் அது ஒரு ஆள் அளவுக்குப் பெரியதானது. அதிலே சில வர்ண மைகளை பூசினார். அப்புறம் இருப்பவர்கள் சிலரின் பெயரைக் கூறினார். அந்த இலையில் தொலைக்காட்சியில் தெரிவது போல அவர்கள் தற்சமயம் எங்கு, என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று காட்டியது. அப்புறம், இறந்தவர்கள் என்று கூறியும் சில பெயர்களைக் கூறினார்; அவர் (மி.மி.பு) கூறியபடியே அவர்களின் சொர்க்க சௌகரிய வாழ்க்கைகளும், நரக சித்திரவதை வேதனைகளும் அப்படியே அந்த இலையில் தெரிந்தது..

 

எனக்கு ஆசை வந்து என் பெயரைக் கூறும்படி வேண்டினேன். அவர் (மி.மி.பு) என்மேல் புன்முறுவலுடன் ஒரு பார்வையை விட்டு என் பெயரைச் சொன்னார். என்ன ஆச்சரியம் அப்படியே காட்டியது. மேலும் விடுவேனா? எனக்குத் தெரிந்த இருக்கும், மற்றும் இறந்த சிலரின் பெயர்களைக் கேட்டுப் பார்த்தேன்; எதிர்பார்த்தபடியே எல்லாமே நன்று தெளிவாக்க காட்டியது. மெய் சிலிர்த்துப் போனேன்.

 

அன்றில் இருந்து தீவிர சொல்லாசு (எ.வ) பக்தனாகி புனிதமான, உண்மையான அலுகிரி சமய மார்க்கத்தைக் கடைப்பிடிக்கத் தொடங்கினேன். அன்றிலிருந்து எனது வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் தெரிந்தது.

 

எனது ஆறு மனைவிமார்களுக்கும் இதுவரை பிறந்த 25 பிள்ளைகளும் மிகவும் நோய்வாய்ப் பட்டவர்களாகவும், படிப்பில் நாட்டமில்லாதவர்களாயும் இருந்தார்கள். எப்பொழுது நான் அலுகிரி சமயத்தைத் தழுவினேனோ, அன்றிலிருந்து எல்லோரும் சுகதேகிகளாய் மாறிவிட்டனர். படிப்பில், தொழிலில் சிறந்து விளங்கத் தொடங்கி விட்டனர். அதன் பின்னர் பிறந்த 18 பிள்ளைகளையும் கேட்கவே வேண்டாம்! எல்லோருமே வகுப்பில் 100 க்கு 100 புள்ளிகள் எல்லாவற்றிலும் எடுக்கிறார்கள்.

 

மொகேசா (மி.மி.பு) இருகைகளையும் கூப்பி எடுத்தாரேயானால் சர்வ ரோக நிவாரணியான புனித 'யாம்' கிழங்குக் களி உருண்டை ஒன்று கையில் அதிசயமாகத் தோன்றும். அந்தக் களியினை பிரசாதமாகப் பெற்று எல்லாப் பக்தர்களும் தங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய்கள் எல்லாவற்றையும் மாற்றுவது வழக்கமாய்க் காணக்கூடிய ஒரு காட்சியாகும்.

 

எனது இரண்டாவது மனைவியின் மூத்த மகனுக்கு சிறுநீரகக் கல்லினால் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தான். உடனடியாக சத்திர சிகிச்சை செய்யவேண்டி இருந்தது. மொகேசா (மி.மி.பு) அவனை அருகில் அழைத்து வயிற்றில் தடவி, உள்ளிருந்து ஒரு தேங்காய் அளவு கருங்கல்லொன்றினை வெளியே எடுத்துக் காட்டினார்.

 

அதுமட்டுமல்ல, என் ஆறாவது அருமை மனைவிக்கு கருப்பையில் புற்றுநோய்; சாவை நோக்கி எதிர்பார்த்துக் கொண்டு  இருந்தாள். மொகேசா (மி.மி.பு) அவளை அழைத்து புனித களியை  வாயில் வைத்தார். சிறு கணத்தில் வாயில் இருந்து மாங்காய் அளவு சிவப்புக் கட்டி ஒன்று வெளியில் வந்தது. அதை அவர் (மி.மி.பு) தன் திருக்கைகளில் ஏந்தி என்னிடம் தந்தார். முழுப் புற்று நோயும் மறைந்து இப்பொழுது மிகவும் சுகதேகியாக இருக்கிறாள்.

 

கோலா இலைச் சருகினை எரித்தார்; ஒரு வாசனைப் புகை வந்தது. அதைக் கொண்டு சொல்லாசு (எ.வ) வின் சக்தியால் குருடர்களைப் பார்க்க வைத்தார்; செவிடர்களைக் கேட்க வைத்தார்; முடவர்களை நடக்க வைத்தார்.

 

சொல்லாசு (எ.வ) எங்கும், எப்பொழுதும், எவரையும் (அவரின் பக்தர்களை மட்டும்) பார்த்துக்கொண்டே இருக்கிறார். இதற்கு வசதியாக, எல்லாப்புறமும் தெரியக்கூடிய கண்ணாடிப் பந்தினுள் நித்தமும் உறைகின்றார். நாம் கண்ணாடியால் செய்யப்பட்ட பந்தை எப்பொழுதும் மாலையில் கட்டி கழுத்தில் அணிந்தும், வண்டிகளிலும் தொங்க விட்டும் அவரை  (எ.வ), எப்பொழுதும் நினைவு கூறுவோம். வணக்க ஸ்தலங்களில் ஒரு தடியின் உச்சியில் பொருத்தி, அந்தப் புனித கண்ணாடிப் பந்தை பார்த்து மதித்திடுவோம்.

 

சொல்லாசு (எ.வ) வை ஒரு நாளுக்கு அல்லது ஒரு கிழமைக்கு இத்தனை தரம் வணங்க வேண்டும், இப்படிப் புகழ வேண்டும், என்ன இரங்கிப் பாட வேண்டும், எது வெல்லாம் கேட்கவேண்டும் என்ற கட்டுப்பாடுகள், சட்டங்கள் ஒன்றுமே கிடையாது. அவருக்கு (எ.வ) அது ஒன்றும் பிடிக்காது. அவர் (எ.வ) இட்ட கட்டளைகளின்படி அவரே உங்களை வழி  நடத்துவார். ஏனென்றால், அவர் (எ.வ)  உங்களை எப்பொழுதும் கண்ணாடிப் பந்தினுள் இருந்து பார்த்துக்கொண்டே இருப்பதனால்!  ஆனால், நாம் எல்லோரும் அவருக்கு நன்றி உடையவர்களாக இருப்பதால் கோவில் கட்டி அவர் பெருமையை ஒன்றுகூடிப் பேசிக்கொண்டிருப்போம்.

 

நோயுற்ற மிருகங்கள், பறவைகளுக்கு ஏற்படும் நோய்களையும்  இப்புனித பந்தினைக் காட்டுவதன்மூலம் மாற்றலாம். இதில் ஒன்று கவனிக்கப்பட வேண்டும்: இப்பந்து பொய்ச் சமயங்களை முட்டாள்தனமாகப் பின்பற்றுபவர்களுக்குப் பலிக்காது. உண்மையான புனித அலுகிரி சமயத்தவர்களுக்கு மட்டும்தான் பலிக்கும். புனித அலுகிரி சமயத்தவர்களுக்கு புதிதாக நோயே வராதே!

 

ஆகவே, அறிவுக் குறைவினால் இருண்ட வாழ்வில், பிழையான மார்க்கங்களில் இருந்து அல்லல் பட்டுக்கொண்டிருக்கும், இறந்தபின்னரும் அல்லல்படவிருக்கும் பாவப்பட்ட ஜென்மங்களே! உங்களுக்கு நான் உண்மையாகவே சொல்லுகிறேன்! 

 

சொல்லாசுவே (எ.வ) பெரியவர்!

சொல்லாசுவே (எ.வ) உண்மையானவர்!

சொல்லாசுவே (எ.வ) உலகை ஆளுபவர்!

சொல்லாசுவே (எ.வ) உலக இரட்ஷகர்!

 

சால்  லோல்  ஆம் சொல்லாசு! சால் லோல் ஆம் சொல்லாசு!

-நைஜீரியாவிலிருந்து ....s.santhiragasan

1 comments:

  1. கண்ணன்Thursday, January 27, 2022

    கடவுள்மார் எப்பொழுதும் இந்தியாவிலும், மத்திய கிழக்கிலும்தான் பிறப்பது வழக்கம். இருந்தாப்போல ஏன்தான் வேறு ஒரு புது இடம் நாடிப் போனார்? நம்பவே முடியவில்லையே!

    ReplyDelete