எண்ணெய் வளம் அறிந்துகொள்வோம் (அறிவியல்)

பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னர் வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய தாவரங்களும் விலங்குகளும் மடிந்து போய் புவியில் புதையுண்டு எண்ணெய், நிலக்கரி, இயற்கை வாயு போன்ற புதையுண்டு, எரி பொருட்கள் (fossil fuels) உருவாயின. மடிந்த தாவரம் மற்றும் விலங்குகளின் சிதைந்த உடல் பகுதிகள் ஆகியவை, பாறை மற்றும் புவியினால் அழுத்தம் பெற்று புவியில் புதையுண்டன. இத்தகு எரிபொருட்கள் இல்லையெனில், நம் வாழ்க்கை இப்போதுள்ளது போல் இருக்க இயலாது. நம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான வெப்பம் மற்றும் எரிபொருட்கள் மட்டுமின்றி நாம் பயன்படுத்தும் மின்சாரத்தின் உற்பத்திக்கும் இவை தேவைப்படுகின்றன. மேலும் புதையுண்ட எரி பொருட்கள் பதப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக், வண்ணச் சாயங்கள், பிட்டுமின் (bitumen) போன்ற கனிமங்கள் ஆகியவையும் உற்பத்தி செய்யப் படுகின்றன.

 

எவ்வகைப் பாறைகள் எண்ணெய்ப் படிவங்களைக் கொண்டிருக்கும் அல்லது மூடியிருக்கும் என்பதை நிலவியல் வல்லுநர்கள் (geologists) அறிவர். குறிப்பிட்ட நிலம் அல்லது நீர்ப் பகுதியில் எண்ணெய் இருப்பதாக அவர்கள் உணர்ந்தால், சோதனை ஆழ் துளைக் கிணறுகளைத் தோண்டி அங்குள்ள எண்ணெய் வளம் பற்றி அவர்கள் ஆய்வு மேற்கொள்வர்.

 

எண்ணெய் எடுக்கும் சாதன மேடைகள் (oil rigs) தீப்பிடித்துக்கொள்ளல்

உலகின் எண்ணெய் வளத்தில் பெரும் பகுதி கடலுக்கு அடியில் தான் புதையுண்டு கிடக்கிறது. எண்ணெய் எடுக்கும் மேடை அமைப்பு மிகப் பெரிய மிதக்கும் சாதனமாகும்; எண்ணெய் வளம் கொண்ட பாறைகளில் ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டும் போது, மிதக்கும் இவ்வமைப்பு கடல் பகுதியில் நங்கூரம் இடப்படும். இந்த மேடை அமைப்பில் துளையிடுவதற்கான அனைத்து எந்திரங்கள் (drilling machinery), பொருள்களைப் பெறுவதற்கும் அனுப்புவதற்குமான உலங்கு ஊர்தி (helicopter) இறங்குவதற்கான தளம் (helipad) ஆகியவை அமைந்திருக்கும்.

 

எண்ணய்ப் பாறைகளிலிருந்து எண்ணெயை எடுக்கும்போது, வெளிவரும் பெருமளவுக்கான வாயுவை மேற்பகுதியில் எரிக்க வேண்டியுள்ளது. எண்ணெய்க் கிணற்றிலிருந்து வெளிவரும் இவ்வாயுவானது எளிதில் தீப்பிடித்துக் கொள்வதோடு மிகத் தீவிரமாகக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கும். இத்தீயை நீர் அல்லது பிற தீ அணைப்பான்களைக் (fire extinguishers) கொண்டு அணைக்க வேண்டும். மாறாக, தீயணைப்பு வீரர்கள் சிறப்பு வகைப் பாரந்தூக்கிகளில் (cranes) வெடிப் பொருட்களைப் பயன்படுத்தித் தீப்பிழம்புகளில் வெடிக்கச் செய்வர். வெடிப்பொருளைக் கொண்டு தீயை அணைப்பது விந்தையாகத் தோன்றலாம்; ஆனால் வெடி நிகழ்வு உண்டாகும் போது சுற்றிலுமுள்ள உயிர்வளியை (oxygen) அது உட்கொண்டு தீயை அணைக்கும் செயல் மேற்கொள்ளப்படுகிறது.

 

எண்ணெயிலுள்ள கார்பன் மற்றும் நீர்வளி (hydrogen) ஆகியவற்றைப் பல்வேறு முறைகளில் கலந்து பல்லாயிரம் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. நமது கார்களில் எரி பொருளாகப் பயன்படுத்தப்படும் பெட்ரோல் இவ்வகைப் பொருட்களுள் ஒன்றே.

 

-:டாக்டர்.விஜயராகவன்

0 comments:

Post a Comment