நான்மணிக்கடிகை/21/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்.

 


சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.

 

தொடர்ச்சி……

 

111. 👇

மனைக்கு விளக்கம் மடவாள்; மடவாள்-

தனக்குத் தகை சால் புதல்வர்; மனக்கு இனிய

காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்,

ஓதின், புகழ் சால் உணர்வு.

        

:-வீட்டுக்கு ஒளி மனைவி. மனைவிக்கு அழகு நன்மக்கள். நன்மக்களுக்கு அழகு கல்வி. கல்விக்கு விளக்கம் மெய்யுணர்வு.

 

மிகைப்பாடல்கள்

 

01. 👇

வைததனால் ஆகும் வசையே வணக்கமது

செய்ததனால் ஆகும் செழுங்கிளை - செய்த

பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த

அருளினால் ஆகும் அறம்.    

 

:-பிறரை வைதால் பகை உண்டாகும். வணங்கினால் உறவினர் மிகுவர். பொருளைக் கொடுத்தலால் இன்பம் உண்டாகும். இரக்கத்தினால் அருள் உண்டாகும்.

 

02. 👇

ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும்

ஒருவன் அறியா தவனும் - ஒருவன்

குணனடங்கக் குற்றமுள் ளானும் ஒருவன்

கணனடங்கக் கற்றானும் இல்.      

 

:-எல்லாக் கலைகளையும் அறிந்தவன் ஒருவனும் இல்லை. எதனையும் தெரியாதவனும் இல்லை. நல்ல பண்பு இல்லாத குற்றமே உடையவன் ஒருவனும் இல்லை. எல்லாம் கற்றவனும் இல்லை.

 

 

03. 👇

இன்சொலான் ஆகும் கிழமை இனிப்பிலா

வன்சொலான் ஆகும் வசைமனம் - மென்சொலின்

நாவினான் ஆகும் அருண்மனம் அம்மனத்தான்

வீவிலா வீடாய் விடும்.         

 

:-இன்சொல்லால் நட்பு உண்டாகும். கடுஞ்சொல்லால் கெடு நினைவு உண்டாகும். நயமான சொல்லால் அருள் நெஞ்சம் உண்டாகும். அவ்வருள் நெஞ்சத்தால் அழிவிலாத வீடுபேறு உண்டாகும்.

 

04. 👇

முனியார், அரிய முயல்வார்; அவரின்

முனியார், அறம் காமுறுவார்; இனிய

இரங்கார், இசைவேண்டும் ஆடவர்; அன்பிற்கு

உயங்கார், அறிவுஉடையார். 

 

:-கோபம் இல்லாதவர், உண்மைப் பொருளை அறிய முயல்பவர், அறத்தினை விரும்புவர், புகழ் வேண்டுபவர், பிறரிடம் இரந்து வாழாதவர், அன்பிற்கு கட்டுப்படுபவர் அறிவுடையவர் ஆவார்.

 

-நான்மணிக்கடிகை முடிவடைந்தது-

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

தேடல் தொடர்பான தகவல்கள்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, உண்டாகும், ஆகும், இலக்கியங்கள், ஒருவன், இல்லை, நான்மணிக்கடிகை, பதினெண், கீழ்க்கணக்கு, அருள், எல்லாம், அன்பிற்கு, ஒருவனும், முனியார், புகழ், விளக்கம், கல்வி, சங்க, மடவாள், சால், அழகு, இனிய, அறம்

0 comments:

Post a Comment