ஒளிமயமான எதிர்காலம் -1:


செயற்கை நுண்ணறிவு மனிதன்:

 


மனிதனின் விஞ்ஞான அறிவு நாளாந்தம் அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போது தன்னைப்போலவே உருவம் கொண்ட, ஆனால் பலமடங்கு ஆற்றல் கொண்ட செயற்கையான நுண்ணறிவு மனித இயந்திரங்களை உருவாக்கத்  தொடங்கிவிட்டான். இவை வெகு விரைவில் மனிதன் செய்யும் பணிகள் அத்தனையையும் தாங்களே, ஆனால் வெகு துல்லியமாகவும், புத்திக் கூர்மையுடனும் செய்யத் தொடங்கி விடும்.

 

செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள், உலகில் அறியக்கூடிய பலவிதமான கலைகளையும், நுட்பங்களையும்  கற்று, மிகவும் திறமையுடன் செயல்படக்கூடியன. அவை, தரவுகளிலிருந்து கற்றுக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுத்து, எதிர்கால விளைவுகளைக் கணித்து கச்சிதமாக, மிகவும் விரைவாக கொடுக்கப்பட்டிருக்கும் பணிகளைச்  செய்து முடிக்க வல்லன.

 

இவ்வியந்திரங்கள் செய்யக்கூடிய சில அலுவல்களாவன :

 

* தானியங்கும் தரை / ஆகாய வாகனப் போக்கு வரத்து.

* கல்வி வசதி சாதனங்கள் / கல்வி போதனை.

* தொழிற்சாலை நிர்வாகம் / இயக்கம் / விற்பனை.

* வீதி, வீடு நிர்மாணம் / பராமரிப்புகள்.

* சுற்றாடல் சுத்தமாக்கல் / குப்பை அகற்றுதல்.

* கனிம ஆராய்ச்சி / சுரங்கத் தொழில்கள்

* அன்றாட வீடு மற்றும் அலுவலக வேலைகள் / மேலாண்மைகள்.

* வைத்திய உபகரணங்கள் / சத்திர சிகிச்சைகள்.

* விண் வெளி ஆராய்ச்சி / பயணம்.

* சுற்றாடல் மாசு அகற்றுதல் / பேணுதல்.

* விவசாய நடவடிக்கைகள் / ஆய்வுகள் / இயந்திரங்கள்/ வேளாண்மை.

* பொழுது போக்கு உள் / வெளி மற்றும் போட்டி விளையாட்டுகள் .

* சமூக வலை தகவல் /அறிவியல் பரிமாற்றங்கள் .

* பொருள் சந்தைப்படுத்தல் / விநியோகம்..

* பொருளாதார திட்டமிடல் / வழிநடத்தல்.

* மனித வள மேம்பாடு பரிந்துரைகள் / செய்முறைகள் .

* சமூக / இணைய வழிக் குற்றத் தடுப்பு .

* முக அடையாள சேமிப்பு / தனி நபர் பாதுகாப்பு.

* இன்னும் பல, பல!

 

உலகளாவிய ரீதியில் சீனா கூடிய அளவிலான தானியங்கி நுண்ணறிவு இயந்திரங்களை செயல்பாட்டில் விட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் பெருமளவில் தங்கள் அலுவல்களை இவ்வியந்திரங்களிடம் விட்டுள்ளன.

 

வெகு விரைவில் இவ்வியந்திரங்கள் மனிதனின் நண்பனாகவும், அறிவுரை கூறி வழி நடந்ததும் ஆசிரியனாகவும், சகல பணிகளையும் செய்து முடிக்கும் சேவகனாகவும், வீடு கட்டித் தந்து, உடுத்து, உணவளித்து, தூங்கவைக்கும் பெற்றோர்களாகவும், நோய் நொடி ஒன்றும் வராது பாதுகாத்துக்கொள்ளும் வைத்தியனாகவும் நம் கூடவே வாழ்ந்துகொண்டிருக்கும்.

 

இவை நவீன வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது. இவை மனித வரலாற்றில் மிகப்பெரிய தொழில் நுட்பப்  பாய்ச்சலாக இருக்கும்

 

இன்னும் சில வருடங்களில் மனிதன் வேலை செய்துதான் பிழைக்க வேண்டும் என்ற தேவையே இருக்கமாட்டாது, எல்லாம் நம்மிலும் பார்க்க அறிவு கூடிய, அசுர சக்தி வாய்ந்த, மிகவும் விரைவாய் செயல் படக்கூடிய தானியங்கும் மனிதன் செய்து முடித்து நம் முன் கை கட்டிக்கொண்டு நிற்பான்.

 

இனி வரும் அக்காலத்தில் வெளியில் நாம் சென்றால், வீதியில் கண்டு சுகம் விசாரித்து, வாழ்த்துச் சொல்லுவது பெரும்பாலும் ஓர் இயந்திரத்துக்காகத்தான் இருக்கும்!

 

ஒளிமயமான எதிர்காலம்! நாம் அதுவரை இருப்போமா?

 [அடுத்த பகுதியினை வாசிக்க ,அழுத்துக  Theebam.com: ஒளிமயமான எதிர்காலம் 2:: ]

ஆக்கம்:செ.சந்திரகாசன்

0 comments:

Post a Comment