திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற..../08/

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]


திரிகடுகம் தொடர்கிறது.....

வெண்பா:36

ஊன் உண்டு, 'உயிர்கட்கு அருளுடையெம்!' என்பானும்,

'தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும்' என்பானும்,

காமுறு வேள்வியில் கொல்வானும், - இம் மூவர்

தாம் அறிவர், தாம் கண்டவாறு.

 

விளக்கம்:உயிரைக் கொன்று தின்று இரக்கமுடையவன் என்பானும், எல்லாம் விதி என்று சோம்பி இருப்பவனும், வேள்வியில் ஓருயிரைக் கொல்வானும், நூல்களின் உண்மையை அறியாதவன் ஆவான்.

 

வெண்பா:37

குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய

சால் பினில் தோன்றும், குடிமையும்; பால் போலும்

தூய்மையுள் தோன்றும் பிரமாணம்; - இம் மூன்றும்

வாய்மை உடையார் வழக்கு.

 

விளக்கம்:பொருள் சுருக்கத்தினால் நட்பின் எல்லை தோன்றும். இனிய செயல்களினால் குடிப் பிறப்பின் தன்மை தோன்றும். மனத் தூய்மையினால் வாழ்வின் அளவு தோன்றும். எனவே இம்மூன்றும் உண்மையான பெரியோரின் குணங்களாகும்.

 

வெண்பா:38

தன்னை வியந்து தருக்கலும் தாழ்வு இன்றிக்

கொன்னே வெகுளி பெருக்கலும், முன்னிய

பல் பொருள் வெஃகுஞ் சிறுமையும், - இம் மூன்றும்

செல்வம் உடைக்கும் படை.

 

விளக்கம்:தன்னைத் தானே வியந்து போற்றுதலும், அடக்கமில்லாமல் சினம் கொள்ளுதலும், பலவகைப் பொருட்களை விரும்புகின்ற சிறுமையும், இம்மூன்றும் செல்வத்தை அழிக்கும் படைகளாகும்.

 

வெண்பா:39

புலை மயக்கம் வேண்டி பொருட்பெண்டிர்த் தோய்தல்,

கலம் மயக்கம் கள் உண்டு வாழ்தல், சொலை முனிந்து

பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல், - இம் மூன்றும்

நன்மை இலாளர் தொழில்.

 

விளக்கம்:உடலை விரும்பி வேசியரைச் சேர்தல், மது மயக்கம் வேண்டி கள்ளுண்டல், சூதாடுவது இம்மூன்றும் அறம் இல்லாதவர் செய்யும் தொழில்களாகும்.

 

வெண்பா:40

வெகுளி நுணுக்கம் விறலும் மகளிர்கட்கு

ஒத்த ஒழுக்கம் உடைமையும், பாத்து உண்ணும்

நல் அறிவாண்மை தலைப்படலும், - இம் மூன்றும்

தொல் அறிவாளர் தொழில்.   

 

விளக்கம்:சினத்தை அடக்குதலும், பெண்கள் வயப்படப்பாமல் இருத்தலும், நல்லறிவு பெற்றிருத்தலும், கற்றவர் செயல்களாகும்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

 

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, தோன்றும், மூன்றும், மயக்கம், இலக்கியங்கள், திரிகடுகம், இம்மூன்றும், என்பானும், கீழ்க்கணக்கு, பதினெண், வியந்து, தொழில், சிறுமையும், வெகுளி, வேண்டி, அளவு, உண்டு, சங்க, வேள்வியில், கொல்வானும், இனிய, தாம், பொருள்

0 comments:

Post a Comment