பழங்கள், காய்கறிகளை தோலுடன் சாப்பிடுவது நல்லதா?

காய்கறிகள் மற்றும் பழங்களை உண்பதற்கு தயார் செய்யும்போது அதன் தோல்களை அணிச்சையாகவே உரித்து விடுவோம். ஆனால், அதற்கு அவசியம் அல்ல. பழங்களின் தோல்களில் முக்கியமான சத்துக்கள் இருக்கலாம். தவிர, பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல் கழிவுகள் காலநிலை மாற்றத்தில் பங்கு வகிக்கின்றன.

 

பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் பல்வேறுவித சேர்மங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்துள்ளன.

 

காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளாதது இதய நோய்கள் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்  உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும். உலகம் முழுவதிலும் ஆண்டுக்கு 39 லட்சம் உயிரிழப்புகள் போதுமான காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக்கொள்ளாததால் ஏற்பட்டதாக 2017இல் உலக சுகாதார அமைப்பு கூறியது.

 

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி தினசரி 400 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது பெரும்பாலானோருக்கு கடினமானதாக உள்ளது.

 

எனவே, பழங்கள் மற்றும் காய்கறிகளை அவற்றின் தோலுடன் சாப்பிடுவது, இந்த பிரச்னைக்கு உதவுமா?

 

உதவும் என்பதுதான் பதிலாக உள்ளது.

 

உதாரணமாக, விட்டமின் சி, ரிபோஃப்ளேவின், இரும்புச்சத்து உள்ளிட்ட தாதுக்கள் உள்ளிட்டவை ஏழு வகையான வேர் காய்கறிகளில் உள்ளது. அவை பீட்ரூட், கடுகு தாவரம், கேரட், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, முள்ளங்கி, இஞ்சி மற்றும் உருளைக்கிழங்கு.

 

தோலில் உள்ள சத்துக்கள்

தோல் உரிக்கப்படாத ஆப்பிளில் தோல் உரிக்கப்பட்ட ஆப்பிளை விட 15% விட்டமின் சி, 267% விட்டமின் கே, 20% கால்சியம், 19% பொட்டாசியம், 85% நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது என, அமெரிக்க வேளாண் துறை தெரிவிக்கிறது.

 

மேலும், பல பழங்களின் தோல்களில் ஆன்டி ஆக்ஸிடென்டுகள் அதிகமாக உள்ளன.

 

பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்கள் சுற்றுச்சூழல் மீது எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்துகிறது. அவை 8% முதல் 10% பசுங்குடில் வாயுக்களின் வெளியீட்டுக்கு காரணமாக அமைவதாக, ஐநாவின் வேளாண் அமைப்பு தெரிவிக்கிறது.

 

குப்பை கிடங்குகளில் அழுகும் உணவு, மிக சக்திவாய்ந்த பசுங்குடில் வாயுவான மீத்தேனை வெளியிடுகிறது.

 

வெறும் 51 லட்சம் பேர் மக்கள்தொகை உள்ள நியூசிலாந்து மட்டும் ஆண்டுதோறும் 13,658 டன் காய்கறி தோல் கழிவுகளையும் 986 டன் பழத்தோல் கழிவுகளையும் வெளியேற்றுகிறது.

 

காய்கறி, பழங்களின் தோலில் சத்துக்கள் நிறைந்திருந்தும் ஏன் அதனை மக்கள் அகற்றிவிடுகின்றனர்?

 

சில பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோல்களை உரித்தாக வேண்டும். ஏனெனில், அவை சுவையாகவோ அல்லது சாப்பிட ஏற்றதாகவோ இருக்காது.

 

உதாரணத்திற்கு வாழைப்பழம், ஆரஞ்சு, தர்பூசணி உள்ளிட்ட பூசணி வகைகள், அன்னாசிப்பழம், மாம்பழம், அவக்காடோ, வெங்காயம் மற்றும் பூண்டு உள்ளிட்டவை.

 

மேலும், அவற்றின் தோல்களை உரித்துமட்டுமே உணவு வகைகளை தயார்செய்ய முடியும்.

 

ஆனால், உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட், கிவி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை தோல்களை உரிக்காமலேயே சாப்பிட முடியும். ஆனாலும் அவற்றின் தோல்களையும் மக்கள் உரித்தே சாப்பிடுகின்றனர்.

 

 

பூச்சிக்கொல்லிகள் குறித்த அச்சம்

பழங்கள், காய்கறிகளின் மேற்பகுதியில் பூச்சிக்கொல்லிகள் இருக்கும் என்ற அச்சத்தில் மக்கள் தோல்களை உரித்து சாப்பிடுகின்றனர்.

 

பூச்சிக்கொல்லி எச்சங்கள் நிச்சயமாக அவற்றின் மேற்பரப்பில் அல்லது அதற்குக் கீழே தக்கவைக்கப்படுகின்றன.

 

எனினும், இந்த பூச்சிக்கொல்லிகளை காய்கறிகள், பழங்களை தண்ணீரில் சுத்தம் செய்வதன்மூலமே நீக்கிவிட முடியும். மக்கள் விளைபொருட்களை குளிர்ந்த நீரில் நன்கு கழுவி, பூச்சிக்கொல்லிகள், அழுக்கு மற்றும் ரசாயனங்களை அகற்ற கடினமான தூரிகை மூலம் தேய்க்க வேண்டும் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பரிந்துரைக்கிறது.

 

வேக வைத்தல், அவித்தல் போன்ற சமையல் முறைகளின் மூலமும் பூச்சிக்கொல்லிகளை அகற்றலாம்.

 

ஆனால், சுத்தம் செய்தல் மற்றும் சமையல் முறைகள் மூலம் அனைத்துவித பூச்சிக்கொல்லிகளையும் நீக்கிவிட முடியாது.

 

அதனால், சிலர் காய்கறிகள் மற்றும் பழங்களின் தோல்களை நீக்கி சாப்பிடுகின்றனர்.

 

சில நாடுகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள பூச்சிக்கொல்லிகளின் அளவு பட்டியல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, பிரிட்டனின் பெஸ்டிசைட் ஆக்ஷன் நெட்வொர்க்கால் இத்தகைய அளவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

இதன்மூலம் ஒருவர் எந்தெந்த பழங்கள், காய்கறிகளை தோல்களை உரித்து சாப்பிடலாம் அல்லது தோலை உரிக்க வேண்டியதில்லை என்பதை முடிவு செய்ய முடியும்.

 

 

:கிர்ஸ்டி ஹன்டர்/பதவி,தி கான்வர்சேஷன்/BBC Tamil.

0 comments:

Post a Comment