மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும்,…(பகுதி 37)

வரலாற்றுச்  சான்றுகளும்

 


மகாவம்ச ஆசிரியர், இலங்கையில் புத்த சமயத்திற்கு ஒரு கவர்ச்சியை கொடுக்க, புத்தர் தனது கொள்கையை பரப்ப, தேர்ந்து எடுத்த மக்களாக சிங்களவர்களையும், தேர்ந்து எடுத்த நாடாக இலங்கையையும் தனது கதையில் வெளிக் காட்டி, அதற்கு மகுடம் வைத்தாற் போல், விஜயனினதும் அவனது தோழர்களினதும்  இலங்கை வருகை நாளை செயற்கையாக, புத்தரின் மரண நாளுடன் ஒத்து போக செய்தது வெளிப்படையாக எந்த நடுநிலையாளருக்கும் கட்டாயம் தெரியும் [The author of Mahavamsa, artificially fixed the arrival of Vijaya and his compatriots to coincide with the passing away of Buddha in 543 BCE.]. உதாரணமாக, இந்த தந்திரத்தால், விஜயனிற்கு பிறகு ஆட்சி அமைத்த சில அரசர்களின் ஆட்சி காலத்தை நீடித்தது தெரிய வருகிறது, குறிப்பாக தந்தையும் மகனுமாக '130' ஆண்டுகள் ஆட்சி செய்தனர் என குறிப்பிடுகிறார் ?. மன்னன் பண்டு அபயன் 70 ஆண்டுகளும் அவனுடைய மரணத்துக்குப் பிறகு அவனது மகன் மூத்த சிவன் என்பவன் 60 ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்கிறது. [King Pandukhabaya, nephew of Abhayan was supposed to have ruled from 377 BC – 307 BC that is 70 years. Muttasivan, son of Pandukhabaya ruled for 60 years  from BC 307 to BC 247], இதில் இன்னும் ஒரு விசேடம் என்னவென்றால், அறிவிற் சிறந்த அரசன் பாண்டுஅபயன் முப்பத்து ஏழு வயதில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான் என்றும் அதன் பின்பு தான் எழுபது வருடகாலம் சீரும், செல்வமும் மிக்க அனுராதபுரத்திலிருந்து அவனுடைய அரசாட்சியை ஆண்டு வந்தான் என்கிறது மகாவம்சம். அதாவது அவன் 107 ஆண்டுகள் வாழ்ந்துள்ளான். அதேவேளை, முத்தசிவனின் [மூத்தசிவனின்] பிறப்பு பற்றி எந்த செய்தியும் அங்கு இல்லை. ஆனால், பாண்டுஅபயன் தனது மனைவி, சுவன்னபலியை [Suvannapali] பதினாருக்கும் பதினெட்டு வயதுக்கும் இடையில் சந்தித்து உள்ளான். ஆகவே மூத்த மகன் அதிகமாக இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருக்கலாம் என்று நாம் ஊகித்தால், முத்த சிவ குறைந்தது அகவை 137 க்கும் 147 க்கும் இடையில் [between 107 - 30 + 60 & 107 - 20 + 60] வாழ்ந்திருப்பான். அதேபோல முத்தசிவவின் மகன் திஸ்ஸ முத்தசிவவின் அகவை  இருபதுக்கும் முப்பதுக்கும் இடையில் பிறந்து இருந்தால், திஸ்ஸ [தேவநம்பிய திசா] குறைந்தது அகவை 147 க்கும் 157 க்கும் இடையில் [between 137 - 30 + 40 & 137 - 20 + 40] வாழ்ந்திருப்பான். இவனுக்கு பிறகு இவனின் தம்பி உத்திய 10 ஆண்டுகள், அடுத்த தம்பி மகாசிவ 10 ஆண்டுகள், அடுத்த தம்பி சூரதிச்ச 10 ஆண்டுகள், அதை தொடர்ந்து சேனனும் குத்திகனும் 22 ஆண்டுகள், அதன் பின் கடைசிக்கு முதல் தம்பி அசேல முடி சூடுகிறான். அசேலக்கும் திஸ்ஸவுக்கும் இருபது ஆண்டு வித்தியாசம் என்று ஊகம் செய்தால், குறைந்தது 179 அகவையில் [147 - 20 + 10 + 10 + 10 + 22 = 179] அசேல [Asela] முடி சூடுகிறான். அதன் பின் 10 ஆண்டுகள் ஆள்கிறான். எனவே குறைந்தது 189 ஆண்டுகள் வாழ்ந்து உள்ளான். கௌதம புத்தரே தனது எண்பதாவது அகவையில் இறந்தது குறிப்பிடத் தக்கது. இவை தான் நம்ப முடியாத செய்திகள் ஆகும். மேலும் மகாவம்சம் 1000 ஆண்டுகளிற்கு பின் எழுத பட்ட கதை ஆகும். இதுவும் நம்ப முடியாத செய்திகளுக்கு ஒரு காரணமாகும். யார் வரலாற்றை வைத்திருக்கிறார்களோ , அவர்கள் நாட்டை வைத்துள்ளார்கள், ஆட்சி செய்வதற்கான உரிமையை வைத்துள்ளார்கள், மற்றும் இருப்பதற்கான உரிமையையும் வைத்துள்ளார்கள் என்கிறார் ஹெல்மண் -ராஜநாயகம்  [“Whoever possesses the history possesses the country, possesses the right to rule, the right to exist” - Hellmann-Rajanayagam]. அதனாலேயே மகாநாம தேரர் இவ்வாறு குழப்பி உள்ளார் என்று எண்ணுகிறேன். 

 

இதில் வேடிக்கை என்னவென்றால், ஒரே குடுப்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறையில், ஏழு அரசர்கள் 107  க்கும் குறைந்தது 189 க்கும் இடையில் நீண்ட வாழ்வு வாழ்ந்து உள்ளார்கள் ? இது ஒன்றே மகாவம்சத்தை எவ்வளவு தூரம் நம்பலாம் என்பதற்கு ஒரு உதாரணம் ஆகும். அது மட்டும் அல்ல, பண்டுவாசுதேவனில் இருந்து துட்டகாமினி வரை, அவர்கள் ஆண்ட காலங்கள் 30, 20, 70, 60, 40, 10, 10, 10, 10 என நேர்த்தியான பத்தின் பெருக்குங்கள் ஆகும், இந்த பரம்பரையில் வராத சேனன் குத்திகன் தவிர. இவர்கள் 22 ஆண்டுகள் ஆட்சி செய்தார்கள். இந்த உண்மையான அடிப்படையில் நோக்கும் பொழுது, இந்த பரம்பரை முழுவதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது? அது மட்டும் அல்ல, எல்லாளன் கூட, மனுநீதி  சோழன் மற்றும் சிபி  சக்ரவர்த்தி போன்றோர்களின் கதையின் தழுவல் போலவே தெரிகிறது. துட்டகாமினி கூட, இறந்து கொண்டு இருந்த ஒரு புத்த பிக்குவின் அவதாரம் என்கிறது [Dutthagamani who killed Elara must also be an invented person. He is the re-incaranation of a dying monk as per the Mahavamsa,] அதாவது விஹார மகாதேவியின் வயிறில் நேரடியாக அந்த பிக்கு கருவாக அவதரித்தார் என்கிறது. எனவே உயிரியல் தொடர்பு துட்டகாமினிக்கு, தந்தை காவந்தீசனிடம் இல்லை என்றாகிறது. இது கர்ணன் குந்திதேவிக்கு பிறந்ததை நினைவூட்டுகிறது.

 

ஆனால் அதே நேரத்தில் நான் அவரை இனவெறியாளர் என்றோ அல்லது அவர் தனது கவிதை இலக்கியமான மகாவம்சத்தில் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் இது [புத்த சமய] தெய்வ பக்தர்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்வுகளுக்காக தொகுக்கப்பட்டது [‘serene joy and emotion of the pious’] என்று வெளிப்படையாக எழுதி இனவெறி கோட்பாட்டை விதைத்தார் என்றோ நான் குற்றம் சாட்ட வில்லை. ஏன் என்றால், அந்த காலப்பகுதியில் புத்த சமயத்திற்கு இந்து, [சைவ] மதத்தில் இருந்து அச்சுறுத்தல்கள் கூடி, புத்த மதத்தின் செல்வாக்கு தென் இந்தியா உட்பட இந்தியா முழுவதிலும் சரிந்து போய்க்கொண்டு இருந்ததுடன், அதன் தாக்கம் இலங்கை வாழ் தமிழர்கள் மத்தியிலும் தலை தூக்கி இருந்தது. எனவே மகாநாம தேரருக்கு ஒரு தேவை இருந்தது, எப்படியும் இந்தியாவில் அழிந்து கொண்டு இருக்கும் புத்த மதத்தை இலங்கையிலாவது நிலைநாட்ட வேண்டும் என்று. அதைத்தான் அவர் செய்தார் என்று நம்புகிறேன். மற்றது எனது இந்த தொடர் கட்டுரை இலங்கை வரலாற்றின் ஆழமான பகுப்பாய்வு அல்ல. அதை கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்கள் ஏற்கனவே செய்துள்ளனர். எனவே கட்டுக்கதைகள் மற்றும் தவறுகளை முன்னிலைப்படுத்தும் ஒரு கண்ணோட்டம் மட்டுமே என் கட்டுரையாகும். மகான் புத்தருடைய பொன்மொழிகள் அடங்கிய தம்மபதம் [Dhammapada] என்ற நூலில், உண்மையை உண்மை என்று அறிபவரும், அதேபோல பொய்யை பொய் என்று அறிபவரும் உண்மையை உணர்கிறார் [they who know truth as truth and untruth as untruth arrive at truth] என்ற அவரின் கூற்றை காண்கிறோம். அதைத்தான் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

👈👉

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்-/-அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 38 தொடரும்.....வாசிக்க, அழுத்துக

Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள…. (பகுதி 38):

ஆரம்பத்திலிருந்து வாசிக்க, அழுத்துக Theebam.com: மகாவம்சத்தில் புதைந்துள்ள.../ பகுதி 01:


0 comments:

Post a Comment