நவீன உலகில் நெருங்கிவரும் புதுமைகள்

 அறிவியல்=விஞ்ஞானம்=Science 



தேடல் நுண்ணறிவு...

தேடல் நுண்ணறிவு இணையத்தில் தேடு பொறிகள் வந்து கால் நுாற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அடுத்து, தேடு தேடு பொறியுடன், செயற்கை நுண்ணறிவையும் சேர்க்கும் போக்கு வந்துள்ளது. விரைவில், கூகுள், மைக்ரோசாப்டின் 'பிங்' மற்றும் சீனாவின் 'பைடு' போன்ற தேடுபொறிகள், செயற்கை நுண்ணறிவுத் துறையை கலக்கி வரும் 'சாட் ஜி.பி.டி.,' போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளன.

அப்பாவித்தனமான கேள்விகளுக்கு, ஆதாரபூர்வமான பதில்களைத் தரும் வல்லமை செயற்கை நுண்ணறிவுத் தேடல் பொறிகள க்கு உண்டு. அதேபோல, பதில்களையடுத்து எழும் துணைக் கேள்விகளையும் அடுத்தடுத்து, ஒரு உரையாடல் போலக் கே ட்டுப் பெறலாம்..

 

மாடும், குட்டி கங்காருவும்...

இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் வளர்க்கப்படும் மாடுகள் ஏப்பமாகவும், பின்வழி வாயுவாகவும் மீத்தேன் வாயுவாகவும் மீத்தேன் வாயுவை வெளியேற்றுகின்றன. மீத்தேன் வாயு ஒரு பசுமைக் குடில் வாயு. எனவே அது காற்றினை உடனடியாக மாசு படுத்துகிறது. இதைத் தடுக்க பல ஆராய்ச்சிகள் நடக்கின்றன.

அதில் சுவாரசியமான ஒன்றுதான் கங்காரு குட்டியைப் பற்றியது. ஏற்கனவே கங்காருக்களைப் பற்றி ஆராய்ந்தவர்கள் , கங்காரு குட்டிகளின் வயிற்றில் உள்ள பேக்டீரியாக்கள், மீத்தேனை உற்பத்தி செய்வதற்கு பதிலாக அசிடிக்  அமிலத்தை உண்டாக்குகின்றன என கண்டறிந்துள்ளனர். இந்த விளைவு பெரிய கங்காருக்களின் வயிற்றில் நிகழ்வதில்லை.

எனவே, அமெரிக்காவின் வாஷிங்டன் மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள், குட்டி கங்காருக்களின் குடலில் இருக்கும் சில பேக்டீரியாக்களை எடுத்து, மாட்டின் குடல் போல ஒரு அமைப்பை செயற்கையாக உருவாக்கி அதில் வைத்தனர்.

சில மாதங்களுக்கு மாட்டின் செயற்கைக் குடலில் அந்த பாக்டீரியாக்கள் இருந்ததால், மீத்தேன் உற்பத்தியாகவே இல்லை. இந்த கண்டுபிடிப்பு, அசல் மாடுகளின் வயிற்றிலும் நிகழ்ந்தால், உலகில் மீத்தேன் வாயு மாசினை வெகுவாகக் குறைக்கலாம் என வாஷிங்டன் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

 

பூஞ்சை தொற்றுக்கு தடுப்பூசி!

மனித உடலுக்குள்ளும் தோல் மீதும் நுண்ணுயிரிளான பூஞ்சைகள் குடியிருந்தாலும், சில பூஞ்சைத் தொற்றுகள், மனித உயிர்கொல்லிகளாகிவிடுவதுண்டு. உலகெங்கும் ஆண்டுக்கு 15 லட்சம் பேர் பூஞ்சைத் தொற்றுகளால் கொல்லப்படுகின்றனர்.

இதைத் தடுக்க, முதல் முறையாக அமெரிக்காவின் ஜார்ஜியா பல்கலை விஞ்ஞானிகள் பூஞ்சைத் தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளனர். கேண்டிடா, நியூமோசிஸ்டிஸ் மற்றும் ஆஸ்பெர்கில்லஸ் ஆகிவற்றின் தொற்றிலிருந்து புதிய தடுப்பூசி காப்பாற்றும். இதன் விலங்கு சோதனை முடிந்து, முதல்கட்ட மனித சோதனைக்கு விஞ்ஞானிகள் தயா ராகி வருகின்றனர்.

 

தன்னைத்தானே சுத்தம் செய்யும் திரை!

மனுசப்பயல்களின் விரல்கள் அடிக்கடி படுவதால் தொடுதிரையில் அழுக்கும், கைரேகையும் படிகிறது. தன்னைத்தானே தொடுதிரையால் துடைத்துக்கொள்ள முடியுமா?

அதைத்தான் ஜெனரல் மோட்டார்சின் ஆராய்ச்சிப் பிரிவு கண்டுபிடித்திருக்கிறது. பல அடுக்குகள் கொண்ட தொடுதிரையின் மேற்பரப்பில் புதிதாக ஒரு அடுக்கை வைத்து, அதன் மீது புற ஊதா கதிர்களை பாய்சுவர். இதனால், காற்றிலிருக்கும் ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு, திரை மேல் படிந்து, அழுக்கு ஆவியாகி, கிருமிகளும் கொல்லப்படும். நொடியில் சுத்தமான தொடுதிரை தயார்!

 

விரைவில் வருகிறது:

பூச்சிப் பண்ணை லண்டனைச் சேர்ந்த என்ட்டோசைக்கிள் (Entocycle) என்ற புத்திளம் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மென்பொருளால் நிர்வகிக்கப்படும் பூச்சிப் பண்ணைகளை சோதனை அளவில் துவங்கியுள்ளது. இறைச்சியைவிட கூடுதல் இரும்புச் சத்து. பாலைவிட கூடுதல் கால்சியம். இப்படி ஒரு மனிதனுக்குத் தேவையான பெரும்பாலான சத்துக்கள், பூச்சிகளில் இருக்கின்றன. எனவே, புரதம் மற்றும் ஊட்டச் சத்துள்ள உணவுகளுக்கு தட்டுப்பாடு வந்தால், பூச்சிகளை பண்ணையில் வளர்த்து, அவற்றை உணவாக ஆக்கலாம் என்கின்றனர் வல்லுனர்கள். என்ட்டோசைக்கிள் போன்ற முயற்சிகள் இனி நிறைய நடக்கும்.

தொகுப்பு:செ.மனுவேந்தன்-/-S.Manuventhan


0 comments:

Post a Comment