தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:17

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
எப்படி சுமேரியர்கள் வாழ்ந்தார்கள் என்பதையும் காட்டு வாசிகள் மாதிரி வாழும் நாகரிகம் அடையாத மற்றவர்களுக்கு தமது நாகரிகத்தை எப்படி பரப்பினார்கள் என்பதையும் நீங்கள் கில்கமேக்ஷ் காவியத்தை மேலும் படித்து அறிந்து கொள்ளலாம்.இது மேலும் நாகரிகம் என்ற சொல்லுக்கு,   பண்டைய மெசொப் பொத்தேமியா மக்கள் அதை  எப்படி விளங்கி கொண்டார்கள் என்பதில் இருந்து ஒரு விளக்கம் கொடுக்கிறது

[என்கிடு+சமாட்]
மேய்ச்சல் வெளியில் மிருங்களோடு மிருகமாக வாழும் என்கிடு[Enkidu] என்ற ஒரு காட்டு வாசியை மூர்க்கத்தன்மை குறைத்து சாதுவான மனிதனாக மாற்றி  கானகத்தினின்றும் நாகரிகப்படுத்தி வெளிக் கொணர கில்கமேக்ஷ் என்ற அரசன்  ஒரு கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நடனமாதினை,ஒரு அழகான கோயில் தேவதாசியை, "உன் மடியை அவனுக்குத் திறந்திடு உன் எழிலினில் அவனை மயக்கிடு. அவன் உன்னைக் கவனித்ததும் உன்னிடம் வருவான். உன் ஆடையை நெகிழவிடு. அவனை உன் மேல் படரவிடு. பெண்ணாகிய உன் திறத்தினை காட்டு. அவனுள் காமத்தை மூட்டு. அவன் காமம் உன்னிடம் எழுந்திடும். அனைத்து உயிரினங்களும்[மிருகங்களும்] அவனிடம் வேறுபாடு கொண்டிடும்." என்று உரைத்து அங்கு அனுப்பினான்.மனிதர்களின் குடியிருப்புகள் குறித்து என்கிடு அறியான்.அவன் மான்களுடன் மேய்கிறான். காட்டுயிர்கள் எங்கு நீர் அருந்துமோ அங்கு செல்கிறான்.அவைகள் மாதிரியே அருந்துகிறான். அவைகளில் ஒன்றாகவே பராக்கிரமசாலியான என்கிடு வாழ்க்கை நடத்துகிறான். அவன் உடல் முழுக்க மயிர் மயமாக மிருகங்கள் போல் இருக்கிறது.அவளும்[சமாட்/Shamhat] தனது எழிலை காட்டி, வசப்படுத்தி, தொடர்ந்து ஆறு நாட்களும் ஏழு இரவுகளும் காம இன்பம் ஊட்டி, என்கிடுவை மயக்கி, காட்டில் இருந்தும் காட்டுமிராண்டித் தனத்தில் இருந்தும் நாகரிகம் படுத்தினாள்.அதன் பின் சில நாட்களால் அவனது முன்னைய  தோழர்களான காட்டு மிருகங்கள் அவனை விட்டு விலகின,அவனை கண்டதும் ஓட்டம் பிடித்தன.


"அந்த பிராணிகள் போய்விட்டன.எல்லாமே மாறிவிட்டது.மலை முழுவது பிராணிகளின் துணையுடன் நட்புடன்  அலைய விரும்பிய அவன் உடம்பு, இப்ப அதை வெறுக்கிறது.காட்டு வாசியான அவன் மனதில் ஒரு புது புரிந்து கொள்ளும் ஆற்றல் பிறக்கிறது.அவன் மனங்குழம்பி,இப்ப அவன் மனம் அந்த தேவதாசியின் துணை நாடிச் செல்கிறது. "அவன் அனுபவித்த காமம் அவனை மிருகங்களிடம் இருந்து பிரித்து அவளின் நட்பை மீண்டும் தேடிப்  போக வைக்கிறது.குறுந்தொகை 204 இல் மிளைப்பெருங்கந்தனார் 2000-2700 ஆண்டுகளுக்கு முன்பு கூறியது போல "காமம் காமம் என்று அதனை அறியாதவர்கள் இகழ்ந்து பேசுகிறார்கள். காமம் அணங்கு (வருத்தும் சக்திகள்) இல்லை. நோயும் இல்லை. மேட்டு நிலத்து முளைத்த பசும் புல்லை ஏறிக் கடித்து (மென்று) சாப்பிட முடியாத முதிய பசு, புல்லைத் தன் நாவால் நக்கி இன்பம் அடைவதுபோல் காமம் அது கொண்டவர் ஆர்வத்தின் அளவுக்கு இன்பம் பயப்பதாக இருக்கும்".அப்படியே இவனுக்கும் அது நினைக்க நினைக்க இன்பம் தரும் விருந்தாக,அவன் மனம் அவளை நாடுகிறதுஅவனில் ஒரு மாற்றம் ஏற்படுகிறது 


"காமம் காமம் என்ப காமம்
அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே."  [குறுந்தொகை 204]

பின்பு சமாட் என்கிடுவை இடையர்களின் கூடாரத்திற்கு கூட்டிவந்தாள். இங்கு இவளின் நல்லெண்ணத்தைப் பற்றிய மேல் அதிக விபரங்களை அறியலாம். முதலாவதாக,தனது உடையில் சிலவற்றை எடுத்து என்கிடுவை சிங்காரிக்கிறாள்.அவன் கில்காமெஷ் போலவே இருக்கிறான்அதன் பிறகு,ஒரு சில இடையர்கள் நடத்திய ஒரு உல்லாச விருந்திற்கு அன்போடு அழைத்துப்போகிறாள்.அங்கு முதல் தடவையாக அவனுக்கு ரொட்டியும் மதுவும் கொடுக்கிறார்கள்

"அனால் என்கிடுவிற்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியா.ஆகவே அங்கு இருந்து பல நேரமாக அந்த சமைத்த உணவையும் மதுவையும்  உற்றுப்பார்த்து கொண்டு இருந்தான்.என்ன செய்வது என்று அவனுக்கு தெரியாது.எனவே சமாட்,அந்த பரத்தை,அழகிய கோயில் தேவதாசி அவனிடம் சொன்னாள்:இது உணவும் பாணமும்.மனிதர்கள்   சாப்பிடுவதும் குடிப்பதும்.எனவே நீயும் சாப்பிட்டு குடித்து உன்னை நிரப்பு.ஆகவே என்கிடுவும் சமைத்த உணவை உண்டு மதுவை குடித்தான்.தொடர்ந்து எழு கூசா மது அருந்தி,எதிர்பாராமல் மகிழ்ச்சி நிறைந்து இருந்தான். சத்தம் போட்டு பாடினான்.அதன் பின்பு தனது மயிர்கள் நிறைந்த உடம்பை கழுவி எண்ணெய் தேய்த்து,புது உடை போட்டான்.அவன் ஒரு அழகிய மணமகன் மாதிரி இருந்தான்.அவன் ஆயுதம் ஏந்தி, மந்தையையும் இடையர்களையும் அந்த கொடுங்காட்டில் உள்ள சிங்கங்களும் ,ஓநாய்களும் நெருங்கா வண்ணம் காவல் காத்தான்.அதனால் இடையர்கள் மிக அமைதியான ஆழ்ந்த நித்திரை கொண்டார்கள் "


அப்பொழுது சமாட்  தன்னை பின்தொடர்ந்து கில்கமேக்ஷ் அரசன் ஆளும் நாகரிகம் அடைந்த உலகமான உருக் நகரத்திற்கு,பழைய காட்டு வாழ்வை துறந்து,தன்னுடன்  வருமாறு என்கிடுவை  வற்புறுத்தினாள். அவள் தனது பாலியல் கவர்ச்சிகளை பாவித்து அவனது நம்பிக்கையை வெற்றி கொள்ள, அவனிடம் கூறினாள்:


"என்னுடன் உருக் நகருக்கு வா, அனு[வான் கடவுள்] கோயிலுக்கும் அனுவின்
மகளான  பெண்  தெய்வம் இஸ்தாருக்கும்.....நகர்வலமும் இசையும் கொண்ட உருக் நகருக்கு,.....நாம் இருவரும் ஆட்டங்களுக் கூடாக கில்கமேக்ஷ் தலைமைதாங்குகின்ற அரண்மனைக்கு  ஒன்றாய் போவோம்என்கிறாள்
என்கிடுவுக்கு அவள் உடை போட்டாள்..மிருகச்சூழ்நிலையில் வாழ்ந்த என்கிடுவுக்கு எப்படி சமைத்த ரொட்டியையும் பியரையும் சாப்பிட /குடிக்க வேண்டும் என்று கூடத் தெரியாது.ஆகவே அவள் அந்த தேவதாசி அவனுக்கு அதை சொல்லிக்கொடுத்தாள்.தேகத்திற்கு எண்ணை தடவியும் குளிக்கவும் கற்றுக் கொடுத்தாள்.ஒரு காவலாளியாக கடமையாற்றவும் பழக்கினாள்.அவளுடைய மேலே சுட்டிக்காட்டிய பேச்சும் செயல் பாடும் பண்டைய மெசொப்பொத்தேமியா நாகரிக வாழ்வின் சாயலை எமக்கு அடையாளம் காட்டுகிறது.

சமாட் என்ற தேவதாசி  அந்த கில்கமேக்ஷ் காப்பியத்தில் முதல் இரண்டு களிமண் வில்லைகளில் மட்டும் வந்தாலும்,அவள் ஒரு மிக முக்கிய கதாபாத்திரம்.ஏனென்றால் அந்த கதையின் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் அவளின் பாத்திரமே முக்கியம் ஆகிறது.அவள் தனது சூதுவாது நிரம்பிய வழியில் என்கிடுவை மயக்கி ஒரு நாகரிக மனிதனாக உருமாற்றுகிறாள்
தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:18 அடுத்தவாரம் தொடரும்


0 comments:

Post a Comment