நம் உடலின் அதிசயங்களில் ஒன்று சளி

சளி ஏற்படுவதோ அல்லது தும்மல் வாயிலாக சளியை அறை முழுவதும் பரப்புவதோ யாருக்கும் பிடிக்காது என்றாலும், நமது நாசி பாதை வழியாக வரும் சளி, மனித உடலின் அதிசயங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

அது நம்மை நோய்க்கிருமிகளில் இருந்து காக்கிறது, அதன் தனித்துவமான கலவை நம் உடலில் என்ன நடக்கிறது என்பதை உணர்த்தும் தகவல்களையும் வழங்கலாம். தற்போது விஞ்ஞானிகள் கோவிட்-19 முதல் நாள்பட்ட நுரையீரல் பிரச்னைகள் வரை எல்லாவற்றையும் சளியின் மூலம் கண்டறியவும் அதற்கு சிகிச்சை வழங்கவும் முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அதன் பிசுபிசுப்பு, மூக்கின் உட்புற பகுதிகளை காக்கிறது, நாசி பாதைக்கு ஈரத்தன்மையை வழங்குகிறது. காற்றின் வாயிலாக நம் உடலுக்குள் நுழைய முயற்சிக்கும் எந்தவித பாக்டீரியா, வைரஸ், மகரந்தத்தூள், தூசி, அழுக்கு மற்றும் மாசுபாடு ஆகியவற்றையும் தடுக்கிறது. நாசிதுவாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான மிகச்சிறிய முடிகள் உதவியுடன் சளி நம் வெளிப்புற உலகத்திற்கும் உள்ளுடலுக்கும் இடையே ஒரு அரணாக விளங்குகிறது.

வயது வந்த பெரியவரின் உடல் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 100 மில்லி லிட்டர் சளியை உற்பத்தி செய்கிறது. ஆனால், பெரியவர்களை விட குழந்தைகளுக்கு சளி திரவம் அதிகமாக சுரக்கிறது. ஏனெனில் குழந்தைகளின் உடல் முதன்முறையாக வெளிப்புற உலகின் மூலக்கூறுகளுக்கு வெளிப்பட்டு, அதை எதிர்கொள்ள அவர்களது உடல்கள் தயாராகி வருவதே அதற்கு காரணம் என்று பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் சுவாச தொற்று மற்றும் தடுப்பூசி இயலின் பேராசிரியர் டேனியலா ஃபெரெய்ரா கூறுகிறார்.

 

சளியின் நிறம் உணர்த்துவது என்ன?

சளியை வெறுமனே நோக்கினாலே அதன் நிறமும் தன்மையும் உடலில் என்ன நடக்கிறது என்பதை சொல்லிவிட முடியும்: சளி ஒரு தெர்மோமீட்டர் (visual thermometer) போன்று செயல்படுகிறது. தெளிவாக இருக்கக்கூடிய சளி, நாசி பாதையை எரிச்சலூட்டக்கூடிய மகரந்தத் தூள் அல்லது தூசியை வெளியேற்றுவதற்காக ஏற்பட்டிருக்கலாம்.

சளி வெள்ளையாக தோன்றினால், வைரஸ் நுழைந்திருக்கிறது என அர்த்தம். ஏனெனில், அந்த நோய்க்கிருமியை எதிர்த்துப் போராட வெள்ளை ரத்த அணுக்கள் முன்வந்திருக்கும் என்பதால், அது வெள்ளை நிறமாக காட்சியளிக்கிறது. சளி அடர்த்தியாக, ஒன்றாக திரண்ட பல வெள்ளை ரத்த அணுக்கள் இறந்து வெளியேறுவதால் இருக்கலாம்.

உங்கள் சளி இளஞ்சிவப்பு நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ இருந்தால், ஒருவேளை உங்கள் மூக்கின் உட்புறத்தை நீங்கள் எரிச்சலூட்டியிருக்கலாம்.


சளியில் உள்ள நுண்ணுயிரிகள்

நமது குடலில் உள்ள பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சை மற்றும் மற்ற நுண்ணுயிரிகள் குறித்து பொதுவில் அதிகம் அறியப்பட்டாலும், சளியில் உள்ள நுண்ணுயிரிகளும் அதே அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்கின்றனர் விஞ்ஞானிகள். உண்மையில், அவை மனித ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு முறையாக செயல்படுவதுடன் சிக்கலான முறையில் தொடர்புடையது என விஞ்ஞானிகள் தற்போது நம்புகின்றனர்.

ஒவ்வொருவருடைய சளியிலும் தனித்துவமான நுண்ணுயிரிகள் உள்ளன. அவை ஒருவருடைய பாலினம், வயது, வாழும் இடம், உணவுப் பழக்கம் மற்றும் நீங்கள் வேப் (vape) செய்கிறீர்களா என்பதைப் பொறுத்துக்கூட மாறும்.

இந்த நுண்ணுயிரிகள் தான், நோய்க்கிருமிகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. அவற்றில் சில நுட்பமானதாக நிகழ்கின்றன. உதாரணமாக, காய்ச்சல் மற்றும் சீழ் நிறைந்த கொப்புளங்களை ஏற்படுத்தவல்ல சாத்தியமான ஆபத்து கொண்ட ஸ்டஃபைலோகோகஸ் பாக்டீரியா நமது மூக்கில் தப்பிப் பிழைத்து, உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்துவது என்பது, சளியில் உள்ள நுண்ணுயிர் பாக்டீரியா அவற்றை எப்படி தாங்குகிறது என்பதை சார்ந்ததே என, 2024ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் டேனியலா ஃபெரெய்ரா ஓர் ஆரோக்கியமான சளி நுண்ணுயிரிகள் எப்படி இருக்கும் என்பதை கண்டறிவது குறித்து ஆய்வு செய்து வருகிறார். இதன்மூலம், நாசி பாதையில் பயன்படுத்தப்படும் தினசரி ஸ்பிரேயில் அவற்றை பயன்படுத்தி, ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். அதாவது, குடல் நலத்துக்கு எப்படி ப்ரோபயோடிக்குகள் பயன்படுத்தப்படுகின்றனவோ, அதேபோன்று நாசி நலத்துக்கு இவற்றைப் பயன்படுத்த முடியும்.

"நமது மூக்கில் உள்ள நுண்ணுயிரிகளை மாற்றி, சிறந்த நுண்ணுயிரிகளை பயன்படுத்தி, அவற்றை அங்கேயே இருக்குமாறு செய்ய முடிந்தால், எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள். அப்படி செய்யும்போது தீய நுண்ணுயிரிகள் உள்ளே நுழைந்து உடல்நல பிரச்னைகளை ஏற்படுத்த முடியாது," என்கிறார் ஃபெரெய்ரா.

அத்தகைய நல்ல நுண்ணியிரிகளை ஃபெரெய்ராவின் சகாக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இத்தகைய பாக்டீரியாக்கள் மனிதர்களின் நாசிக்குள் நுழைந்து, அங்கேயே நீடித்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமா என்பது குறித்து அவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

சளியில் உள்ள நுண்ணுயிரிகள் நோயெதிர்ப்பு அமைப்புடன் நெருக்கமாக தொடர்புடையதால், இந்த ஆய்வின் மூலம் எப்படி நோயெதிர்ப்பு அமைப்பையும் மேம்படுத்த முடியும் என்பதையும் தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்ளும் திறன் குறித்தும் ஆய்வு செய்து வருவதாக ஃபெரெய்ரா கூறுகிறார்.

ஒருவரின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளின் வகைகளை சார்ந்து அவரின் உடல் தடுப்பூசிகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பது மாறுவதாக ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

கோவிட் 19 தடுப்பூசி மீது செய்யப்பட்ட ஆய்வுகள், அது சளியின் நுண்ணுயிரிகள் மீது பாதிப்பை ஏற்படுத்துவதாக பரிந்துரைக்கின்றது. அதாவது தடுப்பூசி எவ்வளவு திறன் வாய்ந்ததாக உள்ளது என்பதில் நுண்ணுயிரிகள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

"உடல்நலம் பாதிக்கப்படாமல் காப்பதில் கோவிட்-19 தடுப்பூசிகள் சிறப்பாக செயலாற்றின, ஆனால் நாம் தொடர்ந்து அந்த வைரஸை பரப்பி வந்தோம்," என்கிறார் ஃபெரெய்ரா.

"நம்மால் இன்னும் சிறந்த தடுப்பூசிகளை உருவாக்க முடியும், அதனால் அடுத்த தலைமுறையினருக்கு உடல்நல பிரச்னைகள் ஏற்படாது. அது, கோவிட்-19 அல்லது காய்ச்சல் அல்லது வேறு எந்தவித மூச்சுசம்பந்தமான வைரஸ் தொற்றாக இருந்தாலும் சரி."

உண்மையில், நாள்பட்ட பிரச்னைகள் மற்றும் நுரையீரல் நோய்களுக்கு சளி ஒரு மிகப்பெரிய தடையாகக் கூட இருக்கலாம்.


 ஆய்வு

ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் காது மூக்கு தொண்டை நிபுணராக உள்ள ஜெனிஃபர் முல்லிகன், நாள்பட்ட ரைனோசினுசிடிஸ் (புரையழற்சி - சைனஸ்) மற்றும் உலகளவில் 5 முதல் 12% பேரை பாதித்துள்ள நாசி கட்டிகள் அல்லது சதை வளர்ச்சி (nasal polyps) குறித்து ஆய்வு செய்ய சளியை பயன்படுத்துகிறார்.

தன் பணியின் ஆரம்ப ஆண்டுகளில் ரைனோசினுசிடிஸ் உள்ள நோயாளிகளின் மூக்கின் திசுவை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க வேண்டியிருந்தது, ஆனால் அது ஆபத்தான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால், இப்போது ரைனோசினுசிடிஸ் உள்ளவர்களின் உடலில் என்ன நடக்கிறது என்பதை மிகவும் நெருக்கமாக ஆய்வு செய்ய ஒருவருடைய சளியே போதுமானது என்பதை அவரது ஆய்வு நிரூபித்துள்ளது.

"இந்த பிரச்னையை ஏற்படுத்தும் காரணிகளை நாங்கள் சளியை பயன்படுத்தி கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்" என கூறும் முல்லிகன், இந்த பிரச்னை ஏற்படுவதற்கான காரணங்கள் ஒவ்வொரு நோயாளிக்கும் சற்று வித்தியாசமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

அதேபோன்று, முன்பு இதற்கான சிகிச்சையும் பெரும்பாலும் சோதனைகள் மற்றும் தவறுகளின் அடிப்படையிலும் ஒவ்வொரு நோயாளிக்கும் வித்தியாசமானதாகவும் இருக்கும். ஒருவருடைய சளியை ஆய்வு செய்வதன் மூலம் என்ன சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும் என்பதை விரைவாக அடையாளம் காணலாம் என்கிறார் முல்லிகன்.

முல்லிகனுடைய இந்த நுட்பம் குறித்து, மனிதர்களிடத்தில் உலகம் முழுவதிலும் சில ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பொறியாளர்களால் தொடங்கப்பட்ட டியாக்-நோஸ் (Diag-Nose) போன்ற வளர்ந்துவரும் சுகாதார தொழில்நுட்ப நிறுவனங்கள், சளியை ஆய்வு செய்வதற்கான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்புகளை உருவாக்கி வருகின்றன.

நாசியிலிருந்து சிறியளவில் சேகரிக்கப்படும் மாதிரிகளுக்கான (microsampling device) சாதனங்களுக்கு காப்புரிமையை பெற்றுவருகின்றன: 2025ம் ஆண்டில் அந்நிறுவனம் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) அனுமதி பெற்ற, இத்தகைய முதல் சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த சாதனங்கள், மாதிரி முறைகளை தரப்படுத்துவதன் மூலம் ஆராய்ச்சி மாறுபாட்டைக் குறைக்க பயன்படுத்தப்படுகின்றன.

நோயாளி ஒருவரின் சளியில் IL-26 எனும் புரதம் எந்தளவில் இருக்கிறது என்பதை ஆராய்வதன் மூலம், அவர் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்க்கு (chronic obstructive pulmonary disease) எவ்வளவு எளிதில் ஆட்படுவார் என்பதை மருத்துவர்கள் கூற முடியும் என்பதை புதிய ஆராய்ச்சி ஒன்று பரிந்துரைக்கிறது.

இந்நோய் புகைப்பிடிப்பவர்கள் மத்தியில் அதிகம் ஏற்படும் ஒன்றாக உள்ளது. மேலும் உலகளவில் அதிகளவில் இறப்புகளை ஏற்படுத்தும் நான்காவது காரணியாக உள்ளது. நோயாளியின் சளியை ஆராய்வதன் மூலம், இந்நோயை முன்கூட்டியே கண்டறிந்து வேகமாக சிகிச்சையளிக்க முடியும்.

அதேபோன்று, ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், அல்சைமர் மற்றும் பார்கின்சன் ஆகிய நோய்களை சளியின் மூலம் கண்டுபிடிப்பதற்கான கருவிகள் மற்றும் முறைகளை உலகம் முழுவதிலும் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

கதிரியக்க பாதிப்பை அளவிடவும் சளியை பயன்படுத்தலாம். மேலும், சளியின் பிசுபிசுப்பான தன்மையை வைத்து ஒருவர் காற்று வாயிலாக எந்தளவுக்கு கன உலோகங்கள் மற்றும் நுண் துகள்களின் மாசுபாட்டுக்கு ஆட்பட்டுள்ளார் என்பதை குறிப்பிட்டு சொல்ல முடியும் என சில சமீபத்திய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

"ஒருவருடைய தனிப்பட்ட மருத்துவ முறையாக எதிர்காலத்தில் சளி உருவெடுத்து வருவதாக நான் முழுமையாக நம்புகிறேன்," என கூறுகிறார் முல்லிகன்.

 

நன்றி :பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

No comments:

Post a Comment