திருக்குறள்... -/120/- தனிப்படர் மிகுதி



திருக்குறள் தொடர்கிறது

 

/

120. தனிப்படர் மிகுதி

 

குறள் 1191:

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே

காமத்துக் காழில் கனி.

மு. உரை:

தாம் விரும்பும் காதலர் தம்மை விரும்புகின்ற பேறு பெற்றவர், காதல் வாழ்க்கையின் பயனாகிய விதை இல்லாத பழத்தைப் பெற்றவரே ஆவார்.

சாலமன் பாப்பையா உரை:

தாம் விரும்புபவராலேயே விரும்பப்பட்ட பெண்கள்தாம் காதல் இன்பம் என்னும் விதை இல்லாத கனியைப் பெற்றவர் ஆவர்.

கலைஞர் உரை:

தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.

English Explanation:

The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?

 

குறள் 1192:

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளி.

மு. உரை:

தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கினறவர்க்கு மேகம் மழை பெய்து காப்பாற்றுதலைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:

அவர் இன்றி வாழ முடியாத மனைவிக்கு, அவள் இன்றி அமையாத கணவர் காட்டும் அன்பு, தன்னை நோக்கி உயிர்வாழும் உலகத்தவர்க்கு வானம் உரிய நேரம் மழை தந்தது போலாம்.

கலைஞர் உரை:

காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.

English Explanation:

The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it.

 

குறள் 1193:

வீழுநர் வீழப் படுவார்க் கமையுமே

வாழுநம் என்னும் செருக்கு.

மு. உரை:

காதலரால் விரும்பப்படுகின்றவர்க்கும் ( பிரிவுத் துன்பம் இருந்தாலும்) மீண்டும் வந்தபின் வாழ்வோம் என்று இருக்கும் செருக்குத் தகும்.

சாலமன் பாப்பையா உரை:

தாம் விரும்பும் கணவனால் விரும்பப்பட்ட பெண்ணுக்கே (எப்படியும் விரைவில் அவர் வருவார் என்ற உறுதியினால்) வாழ்வோம் என்னும் செருக்கு, பொருத்தமாக இருக்கும்.

கலைஞர் உரை:

காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.

English Explanation:

The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands).

 

குறள் 1194:

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்

வீழப் படாஅர் எனின்.

மு. உரை:

தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.

சாலமன் பாப்பையா உரை:

தாம் விரும்பும் கணவனால் விரும்பப்படாதவளாக மனைவி இருந்துவிடுவாளானால், அவள் தீவினை வசப்பட்டவளே.

கலைஞர் உரை:

விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.

English Explanation:

Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.

 

குறள் 1195:

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடை.

மு. உரை:

நாம் காதல் கொண்ட காதலர் தாமும் அவ்வாறே நம்மிடம் காதல் கொள்ளாதபோது, நமக்கு அவர் என்ன நன்மை செய்வார்?

சாலமன் பாப்பையா உரை:

நாம் காதலித்தவர் நம்மைக் காதலிக்கவில்லை என்றால் நமக்கு எத்தகைய மகிழ்ச்சியைத் தருவார்?

கலைஞர் உரை:

நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?

English Explanation:

He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?

 

குறள் 1196:

ஒருதலையான் இன்னாது காமங்காப் போல

இருதலை யானும் இனிது.

மு. உரை:

காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.

கலைஞர் உரை:

காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.

English Explanation:

Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both.

 

குறள் 1197:

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்

ஒருவர்கண் நின்றொழுகு வான்.

மு. உரை:

( காதலர் இருவரிடத்திலும் ஒத்திருக்காமல்) ஒருவரிடத்தில் மட்டும் காமன் நின்று இயங்குவதால், என்னுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அறியானோ?

சாலமன் பாப்பையா உரை:

ஆண், பெண் இருவரிடமும் இருந்து செயல் ஆற்றாமல் ஒருவரிடம் மட்டுமே போரிடும் காமன், இன்னொருவரின் மேனி நிற வேறுபாட்டால் வரும் துன்பத்தையும் வருத்தத்தையும் அறிய மாட்டானோ?

கலைஞர் உரை:

காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொ English Explanation:

Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?ள்ளமாட்டான் போலும்!

 

 

குறள் 1198:

வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

மு. உரை:

தான் விரும்பும் காதலரின் இனிய சொல்லைப் பெறாமல் உலகத்தில் ( பிரிவுத் துன்பத்தைப் பொறுத்து) வாழ்கின்றவரைப் போல் வன்கண்மை உடையவர் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

தம்மால் விரும்பப்படும் கணவனிடமிருந்து ஓர் இன்சொல் கூடப் பெறாமல் உயிர் வாழும் மனைவியைப் போன்ற கொடியவர் இவ்வுலகத்தில் வேறு இல்லை.

கலைஞர் உரை:

பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.

English Explanation:

There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved.

 

குறள் 1199:

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்

டிசையும் இனிய செவிக்கு.

மு. உரை:

யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக்கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:

நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.

கலைஞர் உரை:

என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.

English Explanation:

145 Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears.

 

குறள் 1200:

உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்

செறாஅஅய் வாழிய நெஞ்சு.

மு. உரை:

நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.

சாலமன் பாப்பையா உரை:

நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.

கலைஞர் உரை:

நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்.

English Explanation:

Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).

 

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

 

✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 Theebam.com: திருக்குறள்... -/121/-நினைந்தவர் புலம்பல்

✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

 Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து: 

No comments:

Post a Comment