'இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி'

 


மலைமேல் மிதந்த மேகத்தைத் தேடி,
மனம்தான் பறக்கிறது திசைதிசையாய்.
அருகிலே ஓடும் ஆற்றின் இசையைக் கேளாது,
அலைந்து செல்கிறது அப்பால் கடலின்கண்.

தாமரைக் குளத்தில் தங்கமென மலர்கள்,
தழுவுமென காத்தும் திரும்பிப் பார்ப்பாரோ?
அன்னம் இணைந்து அணையுமென அருகில்,
அந்த சுகம் கைவிட்டு வானம் தேடுவாரோ?

மருத நிலம் மணம் தர, மல்லிகை மலர,
மனமே எப்படியோ   மாயை பின் சென்றிடும்.
பனிமலைத் தொட்டில் பறவை பறந்திட,
பாழ்மண் வழியே பாதை தடுமாறும்.

காற்று ஓசை கொண்டு காதலின் செப்பல்,
கண்ணோரம் இருந்தும் கேட்கமாட்டாரே.
மாறும் மாயையின் மாயம் பிடித்தெடுத்து,
மாறாத உண்மையை மறந்திடுவாரே.

அலைந்த அடிகள் அயர்ந்து நிற்கும் போது,
அருகிலிருக்கும் அமைதி அருளும் பூமி.
மலை, கடல், பறவை, தாமரை சொல்லும் –
“இருக்கும் இடமே சொர்க்கம்; இல்லாதது மாயை” என.

-செ.மனுவேந்தன் 

No comments:

Post a Comment