திருக்குறள்... -/124/- உறுப்புநலன் அழிதல்


திருக்குறள் தொடர்கிறது

 


124. உறுப்புநலன் அழிதல்

 

👉குறள் 1231:

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி

நறுமலர் நாணின கண்.

மு. உரை:

இத்துன்பத்தை நமக்கு விட்டு விட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணி விட்டன.

சாலமன் பாப்பையா உரை:

பிரிவைப் பொறுக்காத சிறுமை என்னோடு இருக்கப் பிரிவைப் பொறுத்துக் கொண்டு தொலைவில் சென்று அவரை எண்ணி அழுவதால், கண்கள் ஒளி இழந்துவிட்டன. முன்பு கண்களைக் கண்டு வெட்கப்பட்ட மண மலர்களுக்கு இப்போது கண்கள் வெட்கப்பட்டுவிட்டன.

கலைஞர் உரை:

பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.

English Explanation:

While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers.

 

👉குறள் 1232:

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்

பசந்து பனிவாரும் கண்.

மு. உரை:

பசலை நிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் ( பிறர்க்குச்) சொல்வன போல் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை:

பசந்து, நீர் சிந்தும் கண்கள், நான் விரும்பியவர் என்னை விரும்பவில்லை என்பதைப் பிறர்க்குச் சொல்லும் போலும்!

கலைஞர் உரை:

பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றன.

English Explanation:

The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved.

 

👉குறள் 1233:

தணந்தமை சால அறிவிப்ப போலும்

மணந்தநாள் வீங்கிய தோள்.

மு. உரை:

கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், ( இப்போது மெலிந்தும்) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவை போல் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை:

அவர் என்னை மணந்தபோது இன்பத்தால் பருத்த என் தோள்கள், இன்று மெலிந்து அவர் என்னைப் பிரிந்திருப்பதை மற்றவர்க்குத் தெரிவிக்கும்.

கலைஞர் உரை:

தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.

English Explanation:

The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public).

 

👉குறள் 1234:

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்தொல்கவின் வாடிய தோள்.

மு. உரை:

துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.

சாலமன் பாப்பையா உரை:

அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.

கலைஞர் உரை:

பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.

English Explanation:

In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose.

 

👉குறள் 1235:

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடுதொல்கவின் வாடிய தோள்.

மு. உரை:

வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு, வாடிய தோள்கள் (என் துன்பம் உணராத) கொடியவரி்ன கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன.

சாலமன் பாப்பையா உரை:

வளையல்கள் கழல, முன்னைய இயற்கை அழகையும் இழந்த என் தோள்கள் கொடிய அவரின் கொடுமையைப் பேசுகின்றன.

கலைஞர் உரை:

வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.

English Explanation:

The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.

 

👉குறள் 1236:

தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்

கொடியார் எனக்கூறல் நொந்து.

மு. உரை:

வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன்.

சாலமன் பாப்பையா உரை:

வளையல்கள் கழன்று தோள்கள் மெலிய, அவரைக் கொடுமையானவர் என்று அவை நொந்து பேசுவதைக் கேட்டு நான் வருந்துகிறேன்.

கலைஞர் உரை:

என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.

English Explanation:

I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.

 

👉குறள் 1237:

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோட் பூசல் உரைத்து.

மு. உரை:

நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ?

சாலமன் பாப்பையா உரை:

நெஞ்சே! கொடுமையானவராகிய அவரிடம் சென்று என் மெலியும் தோள்களினால் ஏற்பட்டுள்ள வெற்றுரைகளைச் சொல்லி நீ பெருமை பெறுவாயோ?

கலைஞர் உரை:

நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?

English Explanation:

Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?

 

👉குறள் 1238:

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது

பைந்தொடிப் பேதை நுதல்.

மு. உரை:

தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, ( அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது.

சாலமன் பாப்பையா உரை:

முன்பு அவளை நான் இறுகத் தழுவி, அது அவளுக்கு வருத்தம் தருமோ என்று மெல்லக் கையை விட அதற்கே பொன் வளையங்களை அணிந்த அப்பேதையின் நெற்றியின் நிறம் ஒளி குறைந்ததே!

கலைஞர் உரை:

இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டது.

English Explanation:

When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow

 

👉குறள் 1239:

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற

பேதை பெருமழைக் கண்.

மு. உரை:

தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

சாலமன் பாப்பையா உரை:

(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?

கலைஞர் உரை:

இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.

English Explanation:

When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.

 

👉குறள் 1240:

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு.

மு. உரை:

காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

சாலமன் பாப்பையா உரை:

குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!

கலைஞர் உரை:

பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது.

English Explanation:

Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?

 

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

 

✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 Theebam.com: திருக்குறள்... -/125/-நெஞ்சொடு கிளத்தல்

✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து

No comments:

Post a Comment