தமிழ்மொழி... நல்லதே.... அன்பின்... -கவிதைகள்

 


"தமிழ்மொழிப் பற்று"

[அந்தாதிக் கவிதை]

 

"தமிழ்மொழிப் பற்று ஓங்கட்டும் வளரட்டும்

வளரும் குழந்தைகள் தமிழில் கதைக்கட்டும்

கதைக்கும் ஒவ்வொன்றும் உண்மையைப் பேசட்டும்

பேசும் போது நிதானம் இருக்கட்டும்!"

 

"இருக்கும் நிலையை ஆராய்ந்து செயல்படட்டும்

செயல்படும் அத்தனையும் நன்மை கொடுக்கட்டும்

கொடுக்கும் இதயம் எவருக்கும் வேண்டும்

வேண்டும் பொழுது எல்லோரையும் நினைக்கட்டும்!"

 

"நினைக்கும் எதுவும் உண்மையைச் சொல்லட்டும்

சொல்லும் செயலும் ஒன்றாய் மலரட்டும்

மலரும் ஒற்றுமை இணைக்கட்டும் எல்லோரையும்

எல்லோருக்கும் ஓங்கட்டும் தமிழ்மொழிப் பற்று!"

🎷🎷🎷🎷🎷 

 

"நல்லதே நடக்கும்"

 

"நல்லதே நடக்கும் நன்மை செய்வோம்

செய்வது எதுவும் பெருமை கூட்டட்டும்

கூட்டுவதும் கழிப்பதும் இயற்கையின் விளையாட்டு   

விளையாடல் இல்லையேல் வாழ்வு இனிக்காது

இனிப்பது எதிலும் கவனம் எடுத்திடு!"

 

"எடுத்த அடியை பின்னோக்கி வைக்காதே

வைக்காதா தீர்வால் நேரத்தை வீணாக்காதே

வீணாக்கும் எதுவுமே திரும்பி வராதே

வராததை மறந்து செய்திடு நல்லது   

நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்!"

 🎷🎷🎷🎷🎷 

 

“அன்பின் வடிவே அழைப்பது புரியாதா?"

 

"அன்பின் வடிவே அழைப்பது புரியாதா 

பண்பின் இருப்பிடமே பழகியது தெரியாதா

அன்ன நடையாளே அருகினில் வருவாயா

சின்ன இடையாளே சினம் மறவாயா  

மண்ணின் வாசனை அள்ளி வீசுபவளே         

வண்ணப் பூந்தென்றலே தோள் சாயவா?"

 

"உண்மையை உணர்ந்து உள்ளம் தாராயா

கன்னக் குழிக்குள் என்னை வீழ்த்தாயா 

மின்னல் வேகத்தில் தோன்றி மறைபவளே     

எண்ணம் எல்லாம் என்றும் நீதானே!" 

 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]

No comments:

Post a Comment