திருக்குறள்... -/128/-குறிப்பறிவுறுத்தல்.



திருக்குறள் தொடர்கிறது



128. குறிப்பறிவுறுத்தல்.

 

குறள் 1271:

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்

உரைக்கல் உறுவதொன் றுண்டு.

மு. உரை:

நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:

நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.

கலைஞர் உரை:

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

English Explanation:

Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.

 

குறள் 1272:

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்நிறைந்த நீர்மை பெரிது.

மு. உரை:

கண் நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் உடைய என் காதலிக்குப் பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும் இயல்பு மிகுதியாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை:

என் கண் நிறைந்த அழகையும், மூங்கிலைப் போன்ற தோளையும் உடைய இப்பேதைக்குப் பெண்கள் எல்லாரிடமும் இருக்கும் குண மேன்மையிலும் அதிக மேன்மை இருக்கிறது.

கலைஞர் உரை:

கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.

English Explanation:

Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.

 

குறள் 1273:

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை

அணியில் திகழ்வதொன் றுண்டு.

மு. உரை:

( கோத்த) மணியினுள் விளங்கும் நூலைப் போல் என் காதலியின் அழகினுள் விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:

கோக்கப்பட்ட பளிங்கிற்குள் கிடந்து வெளியே தெரியும் நூலைப் போல இவளின் அழகிற்குள் கிடந்து வெளியே தெரியும் குறிப்பு ஒன்று உண்டு.

கலைஞர் உரை:

மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.

English Explanation:

There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.

 

குறள் 1274:

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

மு. உரை:

அரும்பு தோன்றும்போது அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

சாலமன் பாப்பையா உரை:

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

கலைஞர் உரை:

மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.

English Explanation:

There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.

 

குறள் 1275:

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்

தீர்க்கும் மருந்தொன் றுடைத்து.

மு. உரை:

காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:

நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.

கலைஞர் உரை:

வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.

English Explanation:

The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.

 

குறள் 1276:

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி

அன்பின்மை சூழ்வ துடைத்து.

மு. உரை:

பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது.

கலைஞர் உரை:

ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.

English Explanation:

The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.

 

குறள் 1277:

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்

முன்னம் உணர்ந்த வளை.

மு. உரை:

குளிர்ந்த துறையை உடைய காதலன் பிரிந்த பிரிவை நம்மை விட முன்னம நம்முடைய வளையல்கள் உணர்ந்து கழன்று விட்டனவே!

சாலமன் பாப்பையா உரை:

குளிர்ந்த துறைகளுக்குச் சொந்தக்காரரான அவர் என்னை உடலால் கூடி உள்ளத்தால் பிரிந்திருப்பதை என்னைக் காட்டிலும் என் கை வளையல்கள் முன்னமே அறிந்துவிட்டன.

கலைஞர் உரை:

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!

English Explanation:

My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.

 

குறள் 1278:

நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்

எழுநாளேம் மேனி பசந்து.

மு. உரை:

எம்முடைய காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.

சாலமன் பாப்பையா உரை:

என் காதலர் நேற்றுத்தான் என்னைப் பிரிந்து போனார்; அப்பிரிவிற்கு வாடி என் மேனியின் நிறம் வேறுபட்டு ஏழு நாள்களாகிவிட்டன.

கலைஞர் உரை:

நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.

English Explanation:

It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.

 

குறள் 1279:

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கிஅஃதாண் டவள்செய் தது.

மு. உரை:

தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நீ என்னைப் பிரிந்தால் இவை என்னுடன் இருக்கமாட்டா என்று கை வளையல்களைப் பார்த்தாள். துணையாக தன் மெல்லிய தோள்களும் மெலியும் என அவற்றைப் பார்த்தாள்; இவை இரண்டும் நடக்காதபடி நீர் நடந்து கொள்ள வேண்டும் என்று தன் பாதங்களையும் பார்த்தாள், பிரிந்தால் நானும் உடன் வருவேன் என்ற ஒரு குறிப்பும் இதனுள் இருக்கிறது.

கலைஞர் உரை:

பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்.

English Explanation:

She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).

 

குறள் 1280:

பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்காமநோய் சொல்லி இரவு.

மு. உரை:

கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்குமாறு இரத்தல், பெண் தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:

பெண்கள் தம் காதல் நோயைக் கண்ணாலேயே சொல்லி அதைத் தீர்க்கும்படி வேண்டுவது பெண்மை. மேலும் ஒரு பெண்மையைக் கொண்டிருப்பதாகும் என்பர் அறிந்தோர்.

கலைஞர் உரை:

காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.

English Explanation:

To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.

 

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

 

✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 Theebam.com: திருக்குறள்... -/129/- புணர்ச்சி விதும்பல்: 

✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து

No comments:

Post a Comment