திருக்குறள் தொடர்கிறது…
116. பிரிவு ஆற்றாமை
👉குறள் 1151:
செல்லாமை உண்டேல்
எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்
குரை.
மு.வ உரை:
பிரிந்து செல்லாத நிலைமை இருந்தால்
எனக்குச் சொல், பிரிந்து சென்று விரைந்து வருதலைப் பற்றியானால் அதுவரையில்
உயிர்வாழ வல்லவர்க்குச் சொல்.
சாலமன் பாப்பையா உரை:
என்னைப் பிரிவதில்லை என்றால் என்னிடம்
சொல். சீக்கிரம் வருவேன் என்பதை எல்லாம் நீ வரும்போது உயிரோடு இருப்பார்களே
அவர்களிடம் சொல்.
கலைஞர் உரை:
பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த
மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல் நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ
திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போது விடைபெற்றுக்
கொள்.
English Explanation:
If it is not departure, tell me; but
if it is your speedy return, tell it to those who would be alive then.
👉குறள் 1152:
இன்கண் உடைத்தவர்
பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால்
புணர்வு.
மு.வ உரை:
அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக
இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக
இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை:
அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான்.
அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!
கலைஞர் உரை:
முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக்
கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப்
பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!
English Explanation:
His very look was once pleasing; but
(now) even intercourse is painful through fear of separation.
👉குறள் 1153:
அரிதரோ தேற்றம்
அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை
யான்.
மு.வ உரை:
அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு
காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித்
தெளிவது அரிது.
சாலமன் பாப்பையா உரை:
எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும்
ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள
முடியவில்லை.
கலைஞர் உரை:
பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள
காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; ``பிரிந்திடேன்'' என அவர் கூறவதை
உறுதி செய்திட இயலாது.
English Explanation:
As even the lover who understands
(everything) may at times depart, confidence is hardly possible.
👉குறள் 1154:
அளித்தஞ்சல் என்றவர்
நீப்பின் தெளித்தசொல்தேறியார்க் குண்டோ தவறு.
மு.வ உரை:
அருள் மிகுந்தவராய் அஞ்ச வேண்டா என்று
முன் தேற்றியவர் பிரிந்து செல்வாரானால் அவர் கூறிய உறுதிமொழியை நம்பித்
தெளிந்தவர்க்கு குற்றம் உண்டோ.
சாலமன் பாப்பையா உரை:
என்னை மணந்தபோதே என்மீது அன்பு
காட்டிப் பயப்படாதே, உன்னைப் பிரியமாட்டேன் என்று சொல்லி என்னைத் தேற்றிய அவர்
சொல்லை, நான் நம்பியது தவறோ?
கலைஞர் உரை:
பிரிந்திடேன்; அஞ்சாதே எனச்
சொல்லியவர் எனைப்பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன
குற்றமிருக்க முடியும்?
English Explanation:
If he who bestowed his love and said
"fear not" should depart, will it be the fault of those who believed
in (his) assuring words ?
👉குறள் 1155:
ஓம்பின் அமைந்தார்
பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால்
புணர்வு.
மு.வ உரை:
காத்துக் கொள்வதானால் காதலராக
அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும்
கூடுதல் அரிது.
சாலமன் பாப்பையா உரை:
என் உயிரைக் காக்க எண்ணினால் அதைக்
காப்பதற்கு உரிய அவர், என்னை விட்டுப் பிரிவதைத் தவிர்க்க வேண்டும். மீறிப்
பிரிந்தால் நான் இனி அவரைச் சேர்வது அரிது.
கலைஞர் உரை:
காதலர் பிரிந்து சென்றால் மீண்டும்
கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலியேயே காத்துக் கொள்ள
வேண்டும்.
English Explanation:
If you would save (my life), delay
the departure of my destined (husband); for if he departs, intercourse will
become impossible.
👉குறள் 1156:
பிரிவுரைக்கும்
வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
மு.வ உரை:
பிரிவைப்பற்றி தெரிவிக்கும்
அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார்
என்னும் ஆசை பயனற்றது.
சாலமன் பாப்பையா உரை:
நான் வேலையின் பொருட்டுப் பிரியப்
போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர்
பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு
பயனற்றது.
கலைஞர் உரை:
போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற
அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது
வீண்.
English Explanation:
Is hard, when he could stand, and of
departure speak to me.
👉குறள் 1157:
துறைவன் துறந்தமை
தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.
மு.வ உரை:
என் மெலிவால் முன் கையில் இறை கடந்து
கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத்
தூற்றாமலிருக்குமோ.
சாலமன் பாப்பையா உரை:
அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார்
என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?
கலைஞர் உரை:
என்னை விட்டுத் தலைவன் பிரிந்து
சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத்
தூற்றித் தெரிவித்து விடுமே!
English Explanation:
Do not the rings that begin to slide
down my fingers forebode the separation of my lord?
👉குறள் 1158:
இன்னா தினன்இல்லூர்
வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப்
பிரிவு.
மு.வ உரை:
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத
ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.
சாலமன் பாப்பையா உரை:
உறவானவர் இல்லாத ஊரிலே வாழ்வது
கொடுமை; என் உயிர்க்கு இனியவரைப் பிரிவது அதைவிடக் கொடுமை.
கலைஞர் உரை:
நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர்
இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப்
பிரிந்து வாழ்வது.
English Explanation:
Painful is it to live in a
friendless town; but far more painful is it to part from one's lover.
👉குறள் 1159:
தொடிற்சுடின் அல்லது
காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
மு.வ உரை:
நெருப்பு, தன்னைத் தொட்டால் சுடுமே
அல்லாமல் காமநோய் போல் தன்னை விட்டு நீங்கிய பொழுது சுடவல்லதாகுமோ.
சாலமன் பாப்பையா உரை:
தீ தன்னைத் தொட்டவரைத்தான் சுடும்;
காதல் நோயைப் போல அதை விட்டு அகன்றாலும் சுடுமோ?
கலைஞர் உரை:
ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும்
பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை
நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!
English Explanation:
Fire burns when touched; but, like
the sickness of love, can it also burn when removed ?
👉குறள் 1160:
அரிதாற்றி அல்லல்நோய்
நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார்
பலர்.
மு.வ உரை:
பிரிய முடியாத பிரிவிற்கு உடன்பட்டு,(
பிரியும் போது) துன்பத்தால் கலங்குவதையும், விட்டு பிரிந்த பின் பொருத்திருந்து
பின்னும் உயிரோடிருந்து வாழ்வோர் உலகில் பலர்.
சாலமன் பாப்பையா உரை:
சம்பாதிப்பதற்குக் கணவன் பிரிந்தால்
அவன் பிரிவைத் தாங்கிக் கொண்டு, பிரிவுத் துன்பத்தையும், விட்டுவிட்டு, அரிய
செயலாற்றி உயிர் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர்.
கலைஞர் உரை:
காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல்
அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும்
பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?
English Explanation:
As if there were many indeed that
can consent to the impossible, kill their pain, endure separation and yet
continue to live afterwards.
திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….
✬✬✬அடுத்த பகுதியை
வாசிக்க
... அழுத்துக...
✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக
Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து
0 comments:
Post a Comment