காணாமல் போனவர்கள்


Ø  பள்ளிப் பருவ மதில்
அள்ளியே புத்தகங்களை
அணைத்தே கையினில்
 நனைந்தே வெய்யினில்
நடையாகச் செல்கையில்
நண்பனானவன் ஒருவன் .

Ø  மாலை வேளைகளில்
சாலை ஓரங்களில்
கிட்டிப் பொல்லடித்து
முட்டி விளையாடுகையில்
இளநீர் குடித்து இனிய
நண்பனானவன் ஒருவன்


Ø  காளைக்   காலமதில்
வேளைக்கொரு வீதியில்
வண்டியை மிதிக்கையில்
அண்டிப் பழகியதில்
எண்ணங்களைப் பகிர்ந்தே
நண்பனானவன் ஒருவன்.


Ø  ஆலை இல்லை ஊரும் பாழ்
வேலை இல்லா ஆணும் வீண்என
புத்திகள் கூறிப் பக்தியுடனே
உத்தியோகமதில் உழைத்திடவே
உண்மை யுணர்வில் உதவி செய்தே
நண்பனானவன் ஒருவன்.

Ø  புலம் பெயர்ந்து வந்த வேளை
குலத்துடன் கூடி இருந்து
காலம் கடந்த காலத்தில்
புதிய நாட்டின் புதினங்களை
புரிய வைத்த பண்பாளனாய்
நண்பனானவன் ஒருவன்.

Ø  சுழன்று ஓடும் நாட்களில்
வாழ்ந்து கடந்த பயணங்களில்
குலைந்து போன கனவுகளாய்
தொலைந்து போன நண்பர்களை
ரெயில் சிநேகிதர் என்றே 
மையில் எழுதி வைத்தேன்.
                                                   ----------------செ.மனுவேந்தன்.

0 comments:

Post a Comment