சிந்தனைஒளி


யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா?
 இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம்,
தந்தத்தை நம்பி யானைஇருக்கலாம்,
சொந்தத்தை நம்பி நீ இருக்காதே,
பந்தத்தை நம்பி மதிப்பை இழக்காதே.
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

ஒளிர்வு-(35),- புரட்டாதி 2013:-


உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.

மனநல மருத்துவர் சந்தானம்

'கண்ணா லட்டு திண்ண ஆசையா' என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பிறகு அதே கூட்டணி தற்போது மற்றொரு படத்தில் இணைந்துள்ளது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த சேது, சந்தானம், விஷாகா, விடிவி கணேஷ் என இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் தான் 'வாலிப ராஜா'.


கே.வி.ஆனந்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சாய்கோகுல் ராம்நாத் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சந்தானம் மனநல மருத்துவராக நடிக்கிறார். விஷாக மனநல மருத்துவம் படிக்கும் மாணவியாக நடிக்கிறார். சேது டிசைனராக நடிக்கிறார். இவர்களுடன் மும்பை நடிகை நுஷ்ரத்தும் நடிக்கிறார்.


வாலிப ராஜா என்பது இப்படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரப் பெயர். மனநல துறையில் சென்னையில் பிரபலமான மருத்துவராக, படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் இப்படத்தில் நடித்துள்ளதால், அவருடைய கதாபாத்திர பெயரையே படத்தின் டைடிலாகவும் இயக்குநர் தேர்வு செய்துவிட்டாராம்.

படம் பற்றி கூறிய இயக்குநர் சாய்கோகுல் ராம்நாத், "வாலிப ராஜா என்கிற பெயரை வைத்து இது வாலிபம், கிளுகிளுப்பு சார்ந்த கதை என்று யாரும் யூகம் செய்து விட வேண்டாம். இது ஒரு முழு நீளகுடும்பச் சித்திரம். அதாவது ஃபேமிலி எண்டெர்டய்னர்." என்றவர், இப்படம் குடும்பத்துடன் வந்து பார்க்கும்படியான கலகலப்பான படமாகவும் இருக்கும் என்று உத்தரவாதத்தையும் கொடுக்கிறார்.


தற்போது சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் பாதிப்படத்தை முடித்திருக்கும் இயக்குநர் மீதிப்படத்தை முடிப்பதற்காக, தனது வாலிப ராஜா குழுவினருடன் மதுரை மற்றும் குற்றாலத்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு": ஒரு விளக்கம்

  April 13 தீபத்தில் ஒரு பெண் எப்போது பார்த்தாலும், வேண்டியது வேண்டாதது எல்லாத்துக்கும் நாணப்பட வேண்டும் என்றும், பயந்துகொண்டே இருக்க வேண்டும் என்றும், முட்டாளாகத் திரிய வேண்டும் என்று நம் முன்னோர்கள்  சொன்னார்கள் என குறிப்பிட்டு ஒரு கட்டுரை எழுதப்பட்டுள்ளதை கவனித்தேன்.அது தொடர்பாக  நான் ஆராய்ந்த போது எனக்கு மேலும் கிடைத்த தகவலை/விளக்கத்தை  கிழே தருகிறேன்.

போர்ச்சூழல் நிரம்பிய பழைய காலச் சங்க சமூகத்தில்,தொல்காப்பியர், களவியலில் ,அதாவது திருமணத்துக்கு முன்னுள்ள காதல் கட்டத்தில்,

96) "அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
நிச்சமும் பெண்பாற் குரிய என்ப." என்கிறார் .


இது களவியலுக்கு மட்டும்  தான்! ஒரு காதல் சுவைக்கு என்றும் சொல்லலாம்.

அச்சம் என்றால் பயம்.'மடம் என்றால் முட்டால்,நாணம் என்றால் வெட்கம்,பயிர்ப்பு என்றால் அசுத்தம் - அருவருப்பு,அல்லது கூச்சம்.

இப்ப ஒரு "காதல் களவியலில்" காட்சி ஒன்றை பார்ப்போம்.தலைவன் தலைவி [அல்லது கணவன், மனைவி] இரண்டு பேர் தனிமையில்  இருக்கிறார்கள் என வைப்போம்.

"ஐயோ, இப்பவா! யாராயினும் வருங்கள் ... வேண்டாம்". அச்சம்.இது ஒரு  பொய் அச்சம். இது ஒரு வகை.அடுத்தது சமையலறையில் கரப்பான் பூச்சியைப் பார்த்தால் விளக்குமாறால் ஒரு  போடு போடும் அதே தலைவி,இப்ப காதல் களவியலில் அதே கரப்பான் பூச்சியைப் பார்த்ததும் "ஐயோ! கரப்பான்".. என அலறுவது --பயப்படுவது--ஒரு மழலை மாதிரி பிதற்றி கண்ணைப் பொத்திக்கொள்வது மற்றொரு வகை. 

இப்படி ஒரு காதல் களவியல் சம்பவத்தில்: "சரி போதும்-- அலட்ட வேண்டாம்-- இனி காணும்-- எனக்கும் எல்லாம் தெரியும்" என்று கூற  மாட்டார்கள். தெரிந்திருந்தாலும் தெரியாதது  போல பண்ணும் பாவனை. அது தான் இந்த பொய்  மடம்.

இன்னும் கொஞ்சம் போக,"சீ போங்கோ .. கொஞ்சமாவது வெட்கம் இருக்கா பாரு..". இது பொய் நாணம்."எனக்கு இது பிடித்துத்தான் இருக்கிறது" என்று சொல்லும் ஒரு நாணம்.

இந்த மூன்றும் பொதுவாக காதலுக்கு சுவை சேர்க்கின்றன.தன் தலைவன்  அல்லாத வேறு ஒரு  ஆடவன்/அந்நியன் கெட்ட  எண்ணத்துடன் தொடும்போது உண்டாகும் இயல்பான அருவருப்புணர்ச்சி பயிர்ப்பு  ஆகும்.இந்த உணர்ச்சி பொதுவானது அதாவது ஆணுக்கும் உண்டு என கொள்ளலாம். அதாவது   இவையை கலவியல் கவர்ச்சி என்று கூட சொல்லலாம்.அவ்வளவுதான்.   

இது தான் தொல்காப்பியம் களவியலில் சொல்வது!இது பொதுவாக சொல்லப்படவில்லை என்பதையும் காண்க. தமிழ் சொல்வது இதைத்தான் !இந்த நாலு குணமும் பெண்ணுக்கு வேண்டும் என்றால் எப்போது வேண்டும்? இதை சரியாக புரிய வேண்டாமோ?இது சொல்லப்பட்ட "இடம் பொருள் காலம்" அறிய வேண்டும் .அதை விட்டு 
பொருளைச் சிதைத்து, மாற்றி என்னென்னவோ பொருளெல்லாம் சொல்லி வைத்தனர். 'மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார்' என்று ஏன் பாரதி கூறினான்? 

பண்டைக்காலத் தமிழரின் அக வாழ்க்கையின் அம்சங்களைத், தன்னைப் பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின் ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில் எடுத்துக்கூறுகின்ற நூல் கார் நாற்பது.அதில் ஒரு பாடல் இப்படி சொல்கிறது.

"கடல் நீர் முகந்த கமம் சூல் எழிலிஇடம் என ஆங்கே குறி செய்தேம் பேதைமடமொழி எவ்வம் கெட"குட மலை ஆகத்துக் கொள் அப்பு இறைக்கும்

பல நாள்களுக்குமுன்னால் நான் ஊரில் இருந்து கிளம்பிய நேரம், மடப்பத்தை உடைய வார்த்தைகளைப் பேசுகிற என் காதலி என்னைப் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினாள். அவளுடைய வருத்தத்தைப் போக்குவதற்காக, ‘மேற்கு மலைமீது மழை பெய்யும்போது நான் திரும்பிவிடுவேன்’ என்று வாக்குறுதி சொல்லி வந்தேன்.இப்போது, அந்த நேரம் வந்துவிட்டது. நாம் சீக்கிரமாக ஊர் திரும்பவேண்டும். தேரை வேகமாக ஓட்டு!என்கிறான்.அது என்ன "மடமொழி"?"மடம்"தான் இங்கேயும் வருகிறது.ஒரு காதல் சுவை!

இதே மாதிரி அந்த சங்க காலத்தில் குறுந்தொகை 135:"வினையே ஆடவர்க் குயிரே" என்று கூறுகிறது.அதாவது ஆண்மக்களுக்குத் தொழில்தான் உயிர் என்பது இதன் பொருள். 

அதாவது "அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு"  என்பது  காதலின் போது மட்டுமே! வாழ்க்கை முழுக்க  இல்லை என்பதை புரிய வேண்டும். 

இதே சங்க காலத்தில் காதல் களவியல் அற்ற சில சம்பவத்தை பார்ப்போம்.

ஒரு நாள், காவற் பெண்டு என்பவரின் இல்லத்திற்கு வந்த ஒருவர் ,அவர் மகன் எங்கு உளன் என்று கேட்டார்.அதற்கு,காவற் பெண்டு "இதோ என் வயிற்றைப் பார்,என தன்  வயிற்றைக் காட்டி,அவனைப் பெற்ற வயிறு இது.புலி இருந்து சென்ற குகை இது".அவள் அச்சம் கொள்ளவில்லை?முட்டாளாக பேசவில்லை?நாணம் கூட பட வில்லை?வீரமாக முழங்கினாள்!

இன்னும் ஒருத்தி போர்ப் பறை கேட்டுத் தன்மகனை-ஒரே மகனை இளம் பிள்ளையை அழைத்துக் கையில் வேலைக் கொடுத்துக் களத்திற்கு அனுப்பினாள் என அவளின் மாண்பினைப் படம்பிடித்துக் காட்டுகிறது. “புறங்காட்டினான் மகன் என்பது உண்மையானால் அவனுக்குப் பாலூட்டிய மார்பினை அறுப்பேன்” எனச் சூளுரைத்தாள் மற்றும் ஒருத்தி.இங்கு ஒரு வீரத் தாயை காண்கிறோம்.ஆகவே எங்கு சொல்லப்பட்டது ,எந்த சூழலில் சொல்லப்பட்டது,ஏன் சொல்லப்பட்டது என்பதை அறிந்து பொருள் கொள்வது மிகவும் சிறந்தது.

குறிப்பு:"வீரத்தை சேர்ப்பது தாய் முலைப் பாலடா" என்றான் பாரதி "கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை" என்றான்  கண்ணதாசன்.அப்படிப்பட்ட  வீரத் தாயைப் பற்றியும்  அவள் பால் ஊட்டி வளர்த்த புறநானுற்று  மா வீரர்களைப் பற்றியும்  5 பகுதிகளாக ஒரு கட்டுரை  விரைவில் சமர்ப்பிக்க உள்ளேன் 
[-கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

ஜி.பி.எஸ் ன் எதிர்கால வரவுகள்...


இன்று ஜி.பி.எஸின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது எனலாம்.
ஜி.பி.எஸ். (Global Positioning System) என்றழைக்கபடும் சாதனங்கள், சாட்டலைட்டின் உதவியுடன், நம்மை வழி நடத்தும் சாதனங்களாக அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது அவை தொழில் நுட்பத்தில் புதியதொரு புரட்சியையும், சாதனையையும் ஏற்படுத்தியதாக அறியப்பட்டன.
அதன் பின்னர், பெரிய பளிச் என்ற திரைகளுடன், ஸ்மார்ட் போன்கள் வந்தன. ஜி.பி.எஸ். சாதன வசதிகளைக் குறைந்த விலையில் தரும் சாதனங்களாக இவை அமைந்தன. இவை இயக்குவதற்கு எளிதானதாகவும், ஜி.பி.எஸ். சாதனங்களைக் காட்டிலும் விலை குறைவாகவும் இருந்தமையால், மக்கள் ஜிபிஎஸ் வசதி கொண்ட ஸ்மார்ட் போன்களையே அதிகம் நாடினார்கள்.
இதனாலேயே, ஜிபிஎஸ் சாதனங்களை வடிவமைத்த நிறுவனங்கள், நவீன தொழில் நுட்ப அடிப்படையில், கூடுதல் வசதிகளுடன் புதிய சாதனங்களைத் தரத் தொடங்கி உள்ளனர். அவற்றை இங்கு பார்க்கலாம்.

இணைப்பின்றி கூகுள் மேப்ஸ் :
ஸ்மார்ட் போனில் ஜிபிஎஸ் வசதிகளைப் பெற மொபைல் இணைப்பு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அண்மையில் கூகுள் அறிவித்தபடி, கூகுள் மேப்ஸ் டேட்டாவினை ஸ்டோர் செய்து வைத்துப் பயன்படுத்தும். இதனால் எந்த இடத்திலும் இணைப்பு எதுவுமின்றி நாம் ஜிபிஎஸ் வசதிகளைப் பெறலாம்.

ஜிபிஎஸ் வசதியுடன் கேம்கார்டர்:
ஜி.பி.எஸ். மூலம் ஜியோடேக்கிங் வசதி, அதாவது எந்த இடத்தில் நீங்கள் படம் எடுக்கிறீர்கள் என்ற தகவலைப் பதியும் வசதி, கிடைக்கிறது. இப்போது வந்திருக்கும் தொழில் நுட்ப வசதி மூலம், ஜிபிஎஸ் வசதி கொண்ட கேமராவினை ஹெல்மெட் அல்லது உங்கள் சைக்கிளில் இணைத்து, படம் எடுத்து, பின்னர் அதனை கம்ப்யூட்டரில் இணைத்து, இடத்தைக் குறிப்பிட்டு இணைக்கலாம்.

காருக்கான பிளாக் பாக்ஸ்:
தனியாகச் செயல்படும் ஜிபிஎஸ் சாதனங்கள், இனி அது இணைக்கப்பட்டுள்ள வாகனம், எங்கெல்லாம் செல்கிறது என்பதைப் பதிவு செய்து வைத்திடும். இதன் மூலம் ஒரு வாகனம் தற்போது எங்கிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

ஜிபிஎஸ் ஜாம்மர்:
உங்களுடைய வாகனம் ஒரு ஜிபிஎஸ் சாதனத்தால் அறியப்படுவதனைத் தடுக்கும் ஜிபிஎஸ் ஜாம்மர்கள் சந்தைக்கு வர இருக்கின்றன. இதனை உங்கள் காரில் இணைத்துவிட்டால், எந்த சாட்டலைட்டும் உங்கள் கார் நடமாட்டத்தினைக் கண்டறிய முடியாது.

மிகச் சிறிய ஜிபிஎஸ் சாதனம்:
வரும் காலத்தில், ஜிபிஎஸ் சாதனத்தை வைத்திட, அதிக இடம் ஒரு வாகனத்தில் தேவைப்படாது. பின்னால் உள்ளதைக் காட்டும் கண்ணாடியில் நான்கு அங்குலம் இருந்தால் போதும்; இதனைப் பொருத்திவிடலாம். உங்கள் மொபைல் போனுக்கான புளுடூத் இணைப்பும் இதில் கிடைக்கும்.
ஜி.பி.எஸ். தரும் வசதிகள் அடுத்த ஆண்டில் இன்னும் பலவாறாய் அதிகரிக்க இருக்கின்றன. இதனால், நம் நண்பர்கள் உலகம் இன்னும் சிறியதாக மாறி, அனைவரும் ஒருவருக்கொருவர் இணைப்பில் இருக்க இந்த சாதனங்கள் உதவும்.

மாற்று உறுப்பு அறுவை சிகிச்சை விடைபெறுகிறது


மேட்ரிட், ஸ்பெயின் : மாற்று கல்லீரல், மாற்று இருதயம்  என்று மாற்று உறுப்புகள் பொருத்தும் அறுவை சிகிச்சைகள் இனி பழையதாகி விடும். எந்த உறுப்பை இழந்தாலும் சம்பந்தப்பட்டவர் உடலிலேயே ‘ஸ்டெம் செல்’ எடுத்து, சம்பந்தப்பட்ட உறுப்பை உருவாக்கி பொருத்தும் நவீன எளிய சிகிச்சைகள் வரும் காலம் நெருங்கி விட்டது. 
  ஸ்பெயின் நாட்டில் மேட்ரிட் நகரில் உள்ள தேசிய புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மைய தலைவர் மேனுவல் செர்ரானோ தலைமையிலான மருத்துவ நிபுணர்  குழு இந்த நவீன சிகிச்சைக்கான ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளது. 
இது குறித்து செர்ரானோ கூறியதாவது: ஸ்டெம் செல் என்பது நம் உடலில் உள்ளவை தான். கரு உருவாகும் போதே இந்த செல்கள் உருவாகின்றன. இவை தான் கை, கால், தசை, எலும்புகள், ரத்தக்குழாய்கள் என்று பல்வேறு உறுப்புகளாக மாறி செயல்படுகின்றன.  உறுப்புகள் பழுது பட்டால், அதற்கு  மற்றவர்களிடம்தான்  தானமாக பெற வேண்டும்.கல்லீரல் போன்ற மாற்று உறுப்புகள் மற்றவர்களிடம் இருந்து பெறுவது என்பது அரிதான செயல். 
யார் உதவியையும் நாடாமல் இருக்க ஸ்டெம் செல் தொழில்நுட்பம் தான் சிறந்தது. இது மாற்று உறுப்பு அறுவைசிகிச்சைக்கு மாற்றாக வரப்போவது உறுதி. குறிப்பாக புற்றுநோய் செல்களை நீக்கி, புதிய செல்களை வளர்த்துக்கொள்ள ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மிகுந்த பலன்  அளிக்கும் என்பது உண்மை என்றார். 
எக்ஸ்ட்ரா தகவல் 
நம் உடலுக்கு மிக முக்கியமானது உயிரணு. இது தான் செல் எனப்படுகிறது. இதில் இருந்து தான் எல்லா உறுப்புகளும் உருவாகின்றன.

நல்லோரின் நட்பைப் பெறுவது எப்படி?

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.
எல்லா காரியங்களிலும் குறை கூறுகிற ஒருவரால் எந்த இனிமையான சூழ்நிலையையும் மகிழ்ந்து அனுபவிக்க முடியாது.

ஆசை

நேர்மறையான நபராக மாறுவதற்கு முதலில் தேவைப்படுவது, நேர்மறையான எண்ணம்.
நேர்மறை என்பது ஒரு நறுமணம் போன்றது, நேர்மறையாக இருந்தால் அறிமுகம் இல்லாதவர்களும் கனிவாக நடந்து கொள்வார்கள், உடன்பணியாளர்கள் பாராட்டுவார்கள், சுலபமாக உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

புதிய முயற்சிகள்

தினசரி வாழ்க்கை சம்பவங்களை பார்த்து, அவற்றை நேர்மறையாக எவ்வாறு கையாள்வது என்பதை குறித்து யோசிக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளையும் இனிய நாளாக மாற்ற, ஐந்து வழிகளை யோசிக்கவும்.

முக பாவணைகளை வைத்து காரியங்களை அறிந்து கொள்ள கற்றுக் கொள்ளலாம். மற்றவரை நம்புகிற தன்மை நேர்மையை வெளிப்படுத்தும்.

பேச்சு மற்றும் உடல் பாவணை

தினசரி பயன்படுத்தும் வார்த்தைகளில் நேர்மறையாக இருக்கவும். நட்பு உடையவராகவும், எளிதில் அணுகக்கூடியவராகவும் காணப்படும்படி உடல் பாவனைகளை பயன்படுத்த வேண்டும்.

ஒருவர் வியக்கத்தக்கவாறு இருந்தால் அவரை பார்த்து வியக்கவும், நகைச்சுவைகளுக்கு சிரிக்கவும், ஒருவர் புதிதாக செய்தால் அவரை பாராட்டவும், ஒரு காரியத்தை குறித்து மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களே சொல்ல அனுமதிக்கவும்.

செயல்பாடுகள்

எப்போதும் செயல்பாடற்று ஆழ்ந்த சிந்தனையோடே இருக்கக்கூடாது. பிறருடனோ அல்லது தனியாகவோ நேர்மறையான செயல்பாடுகளை செய்ய வேண்டும்.

நல்ல நகைச்சுவையை பகிர்ந்துகொள்ளவும், இனிமையான ஒரு சம்பவத்தை விவரிக்கவும், விளையாட்டுகளில் பங்கெடுத்துக் கொள்ளவும், வேலை நேரத்திற்கு பிறகு மாலையில் நன்றாக ஓடவும்,

நல்ல ஆரோக்கியமான உடல் உறவை பெற்றிடுங்கள் இவற்றின் மூலமாக நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதை காணலாம்.

எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும்

வாழ்க்கை தினந்தோறும் பல அதிர்ச்சிகளை கொடுக்கும். அதன் தாக்கத்தை குறைத்து, தோல்களை குலுக்கி அவற்றை உதரிச் செல்ல வேண்டும்.

சில காரியங்களை மாற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்டால் மற்றவர்களுடன் எளிதாக நடந்துகொள்ளலாம்.

ஒரு குறிப்பேட்டை பராமரிக்கவும்

நாளின் எல்லா நிகழ்வுகளையும் எழுதி வைப்பதற்கு பதிலாக, நேர்மறையான காரியங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து அவற்றை குறித்து வைக்கவும்.

சிறிய காரியங்களில் நேர்மறையான காரியங்களை பார்க்கும் போது, எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம் இருக்காது.

எவருக்கு?எது? அநாகரிகம்.


சம்பிறதாயம் என்பது(சம்பு + பிறம் + தாயம்) நாம் பிறந் ததை தொடர்ந்து, தாய் வழியாக வாழ்ந்து வரும் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என்பவற்றையே சம்பிரதாயம் என பொருள்படும். இதற்கிணங்க ஒவ்வொரு நாட்டு மக் களும் வெவ்வேறு வகையான சம்பிறதாயங்களை கொண் டுள்ளனர். இவ்வாறு உலகில் சில நாட்டு மக்கள அநாகரிகமாகக் கருதும் சில பழக்க வழக்கங்களை பார்போ மேயானால்,

ஆபிரிக்க நாடுகளுக்கு செல்லும் போது மேலே கையைத் தூக்கி அசைப்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

சீனாவில் கடிகாரத்தை பரிசாகக் கொடுத்தல் அநாகரிகமாகக் கருதப்படுகின்றது. ஏனெனில் அது அவர்களுக்கு மரணச்சின்னம் ஆகும்

கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கையுறை அணிந்து கொண்டு கைலாகு கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

எகிப்து நாட்டில் வெங்காயத்தை கொடுப்பதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

என்ன வேலை செய்கின்றீர்கள்? என்று இத்தாலி நாட்டில் கேள்வி கேட்பது அநாகரிகமாகக் கருதப்படுகின்றது.

படுக்கை மெத்தையில் தொப்பியை வைப்பது அர்ஜென்டினாவில் அநாகரிகமாகக் கருதப்படுகின்ற்து.

ஜப்பான் நாட்டில் குனியாமல் வணக்கம் சொல்லுதல் அநாகரிகமாகக் கருதப் படுகின்றது.

சிவப்பு மையில் பெயர் எழுதுவதை கொரியாக்காரர்கள் அநாகரிகமாகக் கருது கின்றார்கள்.

அறிமுகமாகாத பெண்களுக்கு உதவி செய்தலை பிலிப்பைன்சில் அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.ஏனெனில் அது நம் ஆசையை வெளிப்படுத்துவதாக அங்கே எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

தாய்லாந்தில் தலையில் கைவைத்து வாழ்த்துவதை அநாகரிகமாகக் கருதுகின்றார்கள்.

கடவுள் தண்டிப்பாரா?


இமயமலையில் யாத்திரையாக பிரம்மச்சாரிகளோடு சென்றிருந்தபோது, ஒரு பிரம்மச்சாரி என்னிடம் கேட்டார், “கடவுள் தண்டிப்பாரா?” என்று.”தண்டிப்பவர் கடவுளாய் இருக்க முடியாது” எனச் சொன்னோம்.உடனே அவர் கேட்டார், “அப்படியானால் கெடுதல்கள் செய்பவர்களுக்குத் தண்டனைகளே கிடையாதா? அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா?”அவரக்கு இந்தக் கதையைத்தான் பதிலாகச் சென்னோம்…குருகுல மாணவன் சிறுவன் ஆனந்தன், தன் குருவோடு முதல் முறையாக இமயமலை யாத்திரைக்கு வந்திருந்தான்.வானுயர, பிரம்மாண்டமாய் நிற்கும் மலைகளுக்கு நடவே எறும்பு போல, தான் இருப்பதைப் பார்த்து பிரம்மித்தான்.கீழே இருக்கும் தன் நண்பனை அழைப்பதற்காக “வாடா” என்றான்.சப்தமாய் மலையிலிருந்து “வாடா” என்று குரல் எதிரொலித்தது.தன்னை, “யார் வாடா” என்று கூப்பிட்டது என்பதை தெரிந்து கொள்ள, “யாரது?” என்றான்.”யாரது?” என்று மலையும் திரும்பக் கேட்டது.சிறுவன் கொஞ்சம் பயத்தோடு, “நீங்க யாரு?” என்றான். உடனே மலையும் அதேக் கேள்வியைத் திரும்பக் கேட்க, பயந்து, ஓடிப் போய் குருவைப் பார்த்து நடந்ததைச் சொன்னான்.குரு சிரித்தபடியே சொன்னார்…”இதுதான் இயற்கை, இதுதான் வாழ்க்கை.நீ என்ன செய்கிறாயோ அதுவே உன் வாழ்வில் எதிரொலிக்கும். வாழ்வை மதித்தால், வாழ்வும் உன்னை மதிக்கும். அலட்சியத்தோடு, இறுமாப்போடு வாழ்ந்தாலும், வாழ்வும் அப்படித்தான் உன்னை நடத்தும்,” என்று மலை எதிரொலிப்பு தத்துவத்தை, வாழ்வு தத்துவத்தோடு புரிய வைத்தார்.அதேப்போலத்தான், கெடுதல் கூட செய்ய வேண்டாம்.வாழ்வை எதிர்த்தாலே போதும், வாழ்வு அவரை எதிர்க்கும்.வாழ்வை வரவேற்றால்,அவரை….வாழ்வு வரவேற்கும்.எனவே இந்த நிமிடம் வாழ்வைக் களிப்போடு, உற்சாகத்தோடு அணுக ஆரம்பியுங்கள்.வாழ்வும் அதையே உங்களுக்குத் தர ஆரம்பிக்கும். வாழ்க்கை உங்களை நிர்ணயிப்பதில்லை. நீங்கள்தான் வாழ்வை நிர்ணயிக்கின்றீர்கள். கடவுள் நம்மைத் தண்டிப்பதில்லை, நாம்தான் நம்மையே தண்டித்துக் கொள்கிறோம்.பிரபஞ்சத்தை நோக்கிய உங்களின் அணுகுமுறையைத் தான் வாழ்க்கை எனும் எதிரொலிப்பாய் வாழ்கிறீர்கள்.இனிமையாய் அணுகுங்கள்.இனிமையாய் எல்லாம் அமையும்.இது வாக்கல்ல,என் வாழ்வில் நான் கண்ட அனுபவம்.வாழ்வை இனிமையாய் அணுகுவதும், நம்மை அதற்கென தயார் செய்வதும் ஜீவன் முக்த வாழ்வை வெளிப்படுத்த வைக்கும்.
நன்றி : ஜீவன் முக்திபரமஹம்ஸ நித்யானந்தரின் அமுதமொழிகள்

நீங்கள் அப்பாவாவதற்கு உகந்த வயது எது?

எனது பாட்டா அப்பாவாகும்போது வயது 18 வயது மட்டுமே. எனது அப்பா 23 வயதில் அப்பாவானார். அப்பாவாகும்போது எனக்கு 32 வயதாகிவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கு இன்னமும் அதிக காலம் தேவைப்படுகிறது.

நல்ல கல்வி, போதிய வருவாயுள்ள வேலை, புதிய மணவாழ்வில் சற்றுக் காலம் தொல்லையின்றி உல்லாச வாழ்வு. இவற்றையெல்லாம் முடித்துக் கொண்டு குழந்தை பெறுவதையிட்டு சிந்திக்கத் தொடங்குவதற்கு காலதாமதமாகி விடுகிறது இன்றைய இளைஞர்களுக்கு. 

வயது அதிகரிப்பும் அப்பாவாதலும்

மேலும் முதிர்ந்த வயதில் அப்பாவாகும் பலர் மேலை நாடுகளில் இருக்கிறார்கள். வேலைப் பளு, இரண்டாவது தரம் மூன்றாவது தரம் என மணம்முடித்தல் போன்ற காரணங்களால் அங்கு தந்தையாவது தாமதமாகிறது பலருக்கு. 

இருந்போதும் இன்னமும் பெரும்பாலானவர்கள் 20 முதல் 34 வயதிலேயே அங்கும் அப்பாவாகிறார்கள். ஆனால் 1980 ற்கும் 2002 ற்கும் இடைப்பட்ட காலத்தில் முதிர்ந்தவர்கள் அப்பாவாகும் தொகை அதிகரிக்க ஆரம்பித்தது. 40 - 44 வயதிற்கும் இடையில் 32 சதவிகிதத்தாலும், 45 - 49 வயதிற்கும் இடையில் 21 சதவிகிதத்தாலும், 50 - 54 வயதிற்கும் இடையில் 9 சதவிகிதத்தாலும் அதிகரிப்பதாக அமெரிக்க National Vital Statistics Report கூறுகிறது. புதிய தரவுகள் மேலும் அதிகரித்திருக்கும் என நம்பலாம். 

என் பாட்டா செய்தது சரியா அல்லது இன்றைய தலைமுறையினர் செய்வது சரியா?

நவீன விஞ்ஞான ஆய்வுகள் பாட்டாக்களின் பக்கம் நிற்கிறது.
40 வயதுகளை எட்டும் ஒரு மனிதனது விந்துவின் தரமானது 20 வயதுகளில் இருந்ததைத் போலிருப்பதில்லை. 

அவர்களது மரபணுக்களில் பிறழ்வுகள் (genetic mutations) ஏற்படுகின்றன. இவை அவரது வாரிசுகளைச் சென்றடையப் போகின்றது என்பதையிட்டு விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

ஐஸ்லண்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இன்னமும் சற்று விபரமாகச் சொல்கிறார்கள். Autism or Schizophrenia ஆகிய பாதிப்புள்ள குழந்தைகள் உருவாவதற்கு 40 வயதுடைய ஒருவர் தன்னிலும் ½ மடங்கு வயதுடையவரைவிட இரண்டு மடங்கு அதிகமாக காரணமாகிறார்கள் என்கிறது.

 மற்றொரு நோயான மனப் பிறழ்வு(Schizophrenia)ஏற்படுவதற்கும் ஓட்டிசம் போலவே, வயது அதிகமான தந்தையர் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். சூழல். பரம்பரை அம்சங்களும் காரணமாகலாம். மாயத் தோற்றங்கள், மாய ஒலிகள் உள்ளடங்க எண்ணம், செயல்களில் தெளிவற்ற தன்மையுடைய  மனக்கோளாறு இதுவாகும். 

பதின்மங்களில் அல்லது கட்டிளம் பருவத்தின் ஆரம்பத்திலேயே இதன் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும். முற்றிலும் குணப்படுத்த முடியாத போதும் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள் தற்போது உள்ளன.

இதனால் முன்னைய காலங்களில் தனக்குத்தானே பேசிச் கொண்டு அழுக்கு நிறைந்த உடைகளுடனும், குளித்து மாதக்காக நாற்றத்துடனும் வீதிகளில் 'விசரன்' என்ற பெயரோடு அலைந்து திரிபவர்களைக் காண்பது குறைந்து போயிற்று. 

நோயாளியை மட்டுமின்றி குடும்பத்தையும் சமூகத்தையும் அதிகளவில் பாதிக்கிற நோயாக இதுவும் இருக்கிறது.

அப்பாக்கள் இப்பொழுதுதான் இத்தகைய பிரச்சனைக்கு முகம் கொடுக்கிறார்கள். ஆனால் பெண்கள் பல காலமாகவே இளவயதில் தாய்மை எய்தாமைக்காக குற்றம் சாட்டப்படுகிறார்கள். காலம் தாழ்த்தி தாய்மை எய்தினால் Down syndrome போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகள் உருவாகலாம் என்பது பலகாலமாக அறியப்பட்ட செய்தியாகும். 
பெற்றோராகும் வயததை; தீர்மானிப்பதில் சமூகத்தின் தாக்கங்கள்
இருந்தபோதும் இன்றைய சூழலில் பெண்கள் பிந்திய பதின்மங்களிலோ, 20களின் ஆரம்பங்களிலோ குழந்தை பெறுவது சாத்தியமற்றுப் போகிறது. ஏனெனில் இன்றைய பல பெண்களும்  பொருளாதார ரீதியில் தமது காலில் நிற்பதையே விரும்புகிறார்கள். கல்வியை முடித்து தொழில் தேட 30 வயதைத் தாண்டிவிடுகிறது.

'நேர காலத்தோடு பிள்ளையைப் பெறு இல்லையேல் குறைபாடுடைய குழந்தை கிடைக்கலாம்' என பெண்கள் மீது ஆண்கள் சுமத்திய அதே குற்றச்சாட்டை இன்று பெண்கள் ஆண்கள் மீது திருப்பியடிக்க முடிகிறது.

குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட்டு உயிரியல் ரீதியாகச் சிந்தித்தால் ஆண்களும் சரி பெண்களும் சரி பிள்ளை பெறுவதை ஒரு தசாப்த காலம் முன்தள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது. மேலைநாடுகளில் இது பெண்களில் முப்பதுகளின் பிற்கூறும், ஆண்களில் 40க்கு மேலுமாகி விடுகிறது.

இருந்தபோதும் காலக் கடிகாரத்தின் டிக் டிக் ஓசை பெண்களையே அதிகமாக விரட்டித் தொலைக்கிறது. இதனால் பெண்களே அதிக மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். இது அவர்களது கருத்தங்கும் ஆற்றலுடன் (fertility) சம்பந்தப்பட்டது. 30வயதின் எல்லையை அண்மித்து 40வயதை தாண்டும்போது அவர்களது கருத்தரிக்கும் ஆற்றல் நலிவடையத் தொடங்குகிறது.
ஆண்களின் முகத்தில் அடி

ஆனால் ஆண்கள் நிலை அவ்வாறில்லை. ஒரு குழந்தைக்கு அப்பனாகும் நேரத்தை அவனே தீர்மானிக்கக் கூடியவனாக இருக்கிறான். அல்லது சூழலின் பாதிப்புகளால் அது நிகழலாம். ஆனால் உயிரியல் நியதியாக (biological determinism ) ஒருபோதும் இருப்பதில்லை. உதாரணங்கள் Rupert Murdoch had a child at 72, Saul Bellow at 84, Les Colley, an Australian miner, at 92.

'தன்னால் எப்பொழுதும் முடியும்' என இறுமாந்திருந்த ஆண்களுக்கு விஞ்ஞான உண்மைகள் முகத்தில் அடிப்பது போலானது என்பதில் சந்தேகம் இல்லை. 
அப்படியில்லாவிடினும் அவனது மனச்சாட்சியை உலுப்பக் கூடியதாகவே இருக்கிறது. 'குழந்தைக்கு அப்பனாகும் காலத்தைத் தான்  தள்ளிப்போடுதல் தன்னளவில் சௌகரியமானபோதும் அது தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் உடல்நலத்தை அதன் வாழ்நாள் முழுவதும் பாதிக்கலாம்'  என்ற எண்ணம் மனித இனத்தின் சரித்திரத்தில் முதல் முதலாக அவன் முன் எழுந்து நிற்கிறது. 
வயதான பெண்கள் அனைவரும் இப்பிரச்சனைக்கு ஏற்கனவே முகம் கொடுத்துக் கொண்டிருப்பது தெரிந்த விடயமே. அவர்கள் தமது வசதிகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப விட்டுக் கொடுப்புகளுடன் சமாளிக்கத் தெரிந்திருக்கிறார்கள்.

இப்பொழுது ஆண்கள் அவர்களது பாதையைப் பின் பற்ற வேண்டியதுதான். 

மாற்றுச் சிந்தனைகள்

விஞ்ஞான முடிவுகள் வேறுவிதமாக இருந்தபோதும், தந்தையாகும் காலத்தை பின்போடுவதில் அனுகூலங்கள் இருக்கின்றனவா?

20 வயதில் இருந்ததைவிட 40 வயதாகும்போது மரபணுக்களில் பழுதுகள் ஏற்படக் கூடுமாயினும், ஆண்களின் வாழ்க்கை முறைகளில், பழக்கவழக்கங்களில், மற்றவர்களுடனான தொடர்பாடல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அவசரமும் பதற்றமும் அடங்கி அமைதி வருகிறது. கோபம் பொறாமை அடங்கிப் பொறுமை அதிகரிக்கின்றது. போட்டி வாழ்வின் வேகமும் அதீத எதிர்பார்ப்புகளும் தளர்கின்றன.

இம் மாற்றங்கள் ஆண்மை வீரியத்தின் தளர்முகத்தைக் குறிக்கின்றபோதும், நல்ல தந்தைக்கு வேண்டிய குணாதிசயங்களுக்கும் வழிவகுக்கின்றன. அவசரக் கோபங்கள் அடங்கிப் புரிந்துணர்வு வளர்வதால் குழந்தையை ஆதரவோடு அணைத்து வளர்க்க முடிகிறது. 

20களிலும் முப்பதிகளிலும் இருந்ததைவிட 40களை அணுகும்போது தந்தைதுவப் பண்புகள் மெருகேறுகின்றன.

பொது நலம் 

மற்றொரு விடயம் பொது நலம் சார்ந்தது.

நீங்கள் இளவயதில் தந்தையானால் உங்கள் வாரிசும் விரைவில் பெற்றோர்ஆவதற்கான சாத்தியம் அதிகம். நீங்கள் சற்றுக் காலம் தாழ்த்தி தந்தையானால் அவர்கள் பெற்றோராவது பிந்தும். சற்று விளக்கமாகச் சொன்னால். 

வயது 40 களில் இருக்கும் உங்களுக்கு மகன் ஆரம்பப் பள்ளியில் கற்கிறான் என வைப்போம், ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் சொல்வதுபோல நீங்கள் இளவயதிலேயே மணமுடித்திருந்தால் உங்கள் மகன் இப்பொழுது பிரசவ அறையில் மனைவிக்கு துணையாக நின்றிருப்பான். அதாவது உங்கள் குடும்பத்தில் அடுத்த தலைமுறையும் வந்திருக்கும். 

இன்று உலகில் சனத்தொகை பெருகும் வேகத்திற்கு உங்கள் பங்களிப்பும் இருந்திருக்கும். அந்த வகையிலும் பிந்திய வயதில் தந்தையாதல் சனத்தொகை வளர்வதை உலகளாவிய ரீதியில் கட்டுப்படுத்த முடியும்.

குழந்தையைப் பெறுவதிலும் வளர்ப்பதிலும் பழுதடைந்த மரபணுக்கள் என்பது தந்தையின் பங்களிப்பில் ஒரு சிறிய அம்சமே. இருந்தபோதும் மிகவும் முதிர்ந்த வயதில் தந்தையாவதும் நல்லதல்ல. ஏனெனில் குழந்தையின் தலையில் பழுதான மரபணுக்களைச் சுமத்துவது மாத்திரமின்றி வளர்தெடுப்பதிலும் வழிநடுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படும். 

நோயும் பிணியும் ஏன் மரணமும் கூட தந்தையின் பங்களிப்பை தடுத்து நிறுத்தலாம். 

விஞ்ஞானமா? சமூகக் கடப்பாடுகளா?என்ற எதிர் முரணான தேர்வுகளுக்கு இடையில் மனிதன் சிக்கி நிற்கிறான். 

தெளிவான விடையில்லை.

பகுத்தறிவின் துணையோடு தனக்கு ஏற்ற தெரிவைத் தானே தேர்ந்தெடுக்கத்தான் இன்றைய நிலையில் முடியும்.


வியாபாரிமூலை:-எந்த ஊர் போனாலும்….….. நம்ம ஊர் போலாகுமா!!!



இலங்கைத்தீவின் வடமுனையாக விளங்கும் பருத்தித்துறையிலிருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார்வீதியில் திரும்ப வருவது வியாபாரிமூலையெனும் அமைதியான கிராமம்.

கடற்கரையிலிருந்து வீரபத்திரர் கோவில் வளைவு வரை வீதியின் இருமருங்கும் கிளைவிடும் சிறு சிறு ஒழுங்கைகளும் வீதிகளும், அங்கு வசிக்கும் அனைவருக்குமிடையிலான உறவுமுறைகளும், வியாபாரிமூலையெனும் கிராமத்தினை ஒருங்கிணைக்கும். ஆலய மணியோசைகள் துயிலெழுப்பும், உப்புக்காற்று இதமாய் வீசும்.

கிராமத்தின் ஒவ்வொரு குறிச்சியும் (சிறு பகுதிகளும்) தனித்துவமான பெயர்களைக்கொண்டது. வெள்ளையற்றணி, சிப்பிமணலடி, பெயர்ந்த ஆலடி, விராவளை, சின்னக்கிளானை, பெரியகிளானை, வாரியார்வளவு, கம்பளியப்பான், பலாப்பத்தை என்று பல்வேறுபட்ட காரணப்பெயர்களுடன் நீளும் குறிச்சிகளின் பட்டியல். அநேகமாக குடும்பப்பெயர்களுடன் குறிச்சிகளின் பெயர்களும் சேர்ந்தே பலரையும் இனங்காண உதவும்.

சில பத்தாண்டுகளிற்கு முன்னர் ஒரே பெயரை பலருக்கும் வைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் இவ்வாறே தீர்க்கப்பட்டன. இதேபோல ஒருவருக்கு இரண்டு (அதற்குமேலும் கூட) பெயர்களுமிருக்கும். தந்தைவழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் தாய்வழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் என்று பெயர்களை வைத்து எல்லாரையும் திருப்திப்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களிற்காக சத்தியக்கடதாசிகளிற்காக பலரும் அலைந்தது வேறு கதை.

குறிச்சிப்பெயர்களை விட அடைமொழிகளும், பட்டப்பெயர்களும் கூட பலரை குறிப்பிட உதவின. ஜப்பான் (குறுகிய காலத்தில் வியாபாரத்தில் முன்னேறியவர்), சக்கடத்தார், மனேச்சர், சவுடால், ஹொல்டோன் (hold-on), முயல், அதாவது (எப்பொழுதும் அதாவதுஎன்று கதைக்கத்தொடங்கும்) போன்ற அடைமொழிகளும் கருமுனி, குறுமுனி, சருகுமுனி போன்ற பட்டப்பெயர்களும் பிரபலமாக இருந்தன.

பதினைந்து அடி உயரமான கோட்டைச்சுவர் போன்ற கற்சுவர்களுடனும் மிகப்பெரிய வாயிற்கதவுகளுடனும் பளிங்குக்கல் பதித்த தரைகளுடனும் எஞ்சியிருக்கும் சில சுண்ணாம்புக் கட்டடங்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்த கிராமத்தின் பணக்கார குடும்பங்களின் கதைகள் சொல்லும். இலங்கைத்தீவின் வடமுனையிலிருந்து தென்முனைவரை வியாபாரத்தில் முத்திரை பதித்த அந்தக் குடும்பங்கள் தேடிய செல்வத்தின் அளவு அந்த வீடுகளில் காணப்படும் தரையுடன் சேர்த்துக்கட்டப்பட்ட பெரிய இரும்புப்பெட்டகங்களில் தெரியும். இப்படியாக வியாபரிகளின் கையோங்கியிருந்த கிராமத்திற்கு வியாபரிமூலையென்ற பெயர் வைத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இன்றைக்கு 50 ஆண்டுகளிற்கு முன்னர், பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளை சிறுவயதில் வியாபாரம் செய்யும் உறவினர்களுடன் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் வியாபார நுணுக்கங்கள் பழகும்வரை நீண்டகாலம் ஊதியமில்லாது வேலைசெய்வார்கள். பின்னர் அந்த முதலாளி (உறவினர்) மற்றும் பெற்றோரின் உதவியுடன் சொந்தமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இப்படி அநுபவத்துடன் வியாபாரம் தொடங்குவதால் அநேகம் பேர் தங்கள் தொழிலில் நட்டமடைவதில்லை. இன்றுகூட சில குடும்பங்களில் இந்தவழக்கம் தொடர்கிறது.

வியாபாரம் செய்பவர்கள் தவிர்ந்த ஏனையோர் விவசாயம் செய்பவர்களாக இருந்தார்கள். ஊரின் வடக்காக கடற்கரையோரமாக இருந்த வளங்குறைந்த தோட்டநிலங்களில் உழைப்பை உரமாகவும் வியர்வையை நீராகவும் பாய்ச்சி குரக்கன், தினை, மரவள்ளி, காய்கறிகள் என்று பயிர்செய்தார்கள். துலா ஓடி நீரிறைத்த அந்த நாட்களின் எச்சங்களாக ஆடுகால்களிற்கு நடப்பட்ட சில பூவரச மரங்கள் இன்றும் அந்த தோட்டக்கிணறுகளிற்கருகில் தனித்து நிற்கின்றன. விஞ்ஞானத்தைப் பாடமாகப் படிக்காத அந்தக்காலத்திலும் மழைநீரை சேமிக்கக் குளங்கள் இருந்தன. கடலிற்கருகில் இருப்பதால் கடல்நீர் உட்புகுவதைத்தடுக்க (நிலத்தடி நன்னீருடன் கலப்பதைத் தடுக்க) ஒற்றுமையாக சரியான நேர இடைவெளியில் நீரிறைத்தார்கள். மழைபெய்த அளவிற்கேற்ப பயிர்நட்டார்கள்.

வீதிகளில் ஆவுரோஞ்சிக்கற்களும் (ஆடு, மாடுகள் தங்கள் உடம்புகளை உரசிக்கொள்ள), சுமைதாங்கிகற்களும் (தலையில் சுமையுடன் செல்பவர்கள் அவற்றை இறக்கிவைத்து இளைப்பாற), குடிநீர்ப்பானைகளும் இருந்தன.
அறிவுப்பசிக்கு விருந்திடும் வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையம் ஊரின் மத்தியில் பெரும் பணிபுரிகிறது.

ஆன்மிகம் வளர்க்க ஊரின் நான்கு திசைகளிலும் கோயில்களும் அவற்றுடன் ஒன்றிவாழும் பண்புமிருந்தன. கோயில்களில் சைவக்குருக்கள் பூசைகள் செய்தனர். வேற்றூர்களில் வியாபாரம் செய்பவர்கள் கோவில் திருவிழாக்காலங்களில் ஊர்திரும்புவர். இயற்கை கற்பூரம் விளைந்த சித்தி விநாயகர் ஆலயமும், விரபத்திரர் ஆலயமும், சித்திராபௌர்ணமியில் இராப்பொங்கல் நடக்கும் நாச்சிமார் கோவிலும், அருளம்பல சுவாமிகளின் (மகாகவி பாரதியாரின் குரு) சமாதியும், காலனித்துவ ஆட்சியில் கல்விக்காக மதம்மாறுவதைத் தடுக்க ஆரம்பித்த சைவப்பிரகாச வித்தியாசாலையும் ஊர்மக்களின் ஆன்மீக ஈடுபாட்டிற்கு சான்றுகளாயுள்ளன.

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
 "கோவிந்த சாமிபுகழ் சிறிது சொன்னேன்;
குவலயத்தின் விழிபோன்ற யாழ்ப்பா ணத்தான்,.....
என்று ஆரம்பித்துப் பாடிய கவியொறில்  அவர் கூறும் யாழ்ப்பாணத்தான், வியாபாரிமூலையைச் சேர்ந்த மோனம் அருளம்பலம் சித்தர் என்பது எம் மண்ணிற்கு பெருமை சேர்க்கிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த பாம்புப் பரியாரியாரும் (விசக்கடிக்கு சிறந்த மருத்துவம் செய்ததால் ஏற்பட்ட பெயர்), எலும்பு முறிவுற்றவர்களை ஒட்டகப்புலத்திற்கு ஏற்றிச்செல்ல மாட்டுவண்டிக்காரரும் இருந்தார்கள்.

இப்படி சுயநிறைவுடனும் வளமாகவும் மக்கள் வாழ்ந்த கிராமம் வியாபாரிமூலை. இன்றும்கூட வியாபாரிமூலையான் என்று பெருமையாக என்று எங்களூரார் தங்களைச் சொல்லிக்கொள்வார்கள்.

–  வியாபாரி

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளே அதிக ஆபத்தானவை

Mosob Plateநவயுக உணவுப் பழக்கத்தில் இறைச்சி முக்கிய இடம் வகிக்கிறது. அதிலும் இள வயதினருக்கு இறைச்சி இல்லாத உணவுகள் வாய்க்குத் தோதுப்படாது.
Bacon, sausage, and ham  போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளால் தங்கள் உணவுக் கோப்பைகளை நிறைத்துக் கொள்வார்கள்.

ஆனால் இறைச்சிகள் கூடாது, கொலஸ்டரோலை அதிகரிக்கும், மாரடைப்பு போன்ற இருதய நோய்களுக்கு வித்திடும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

081029141035-largeஅதிலும் பறவையின இறைச்சிகள் நல்லவை. ஆனால் ஆடு, மாடு,பன்றி போன்ற மிருக இறைச்சிகள் கூடாது என்பதே பொதுவான நம்பிக்கை. ஆய்வுகளும் அதையே சுட்டின. அதிலும் சிவத்த இறைச்சிகள்  red meat கூடாது என்கிறார்கள்.

பொதுவாக கடும் நிறமுள்ள ஆடு, மாடு. குதிரை போன்றவற்றின் இறைச்சிகள்  red meat எனப்படுகிறது. மாறாக கோழி, முயல் போன்றவை வெள்ளை இறைச்சி எனப்படுகின்றன.
அண்மையில் இங்கிலாந்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் பிரகாரம் பதப்படுத்தப்பட்ட இறைச்சிவகைகளே மாரடைப்பு மற்றும் மூளையில் இரத்தம் உறைதல் போன்றவற்றால் ஏற்படும் மரணங்களுக்கு முக்கிய காரணம் என்கிறது.

பொதுவாகக் கிடைக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் இவை.
Canned meat
Cured meat
Ham
Lunch meat
Sausage
Bacon Gelatins
Fresh meat with additives

நடுதர வயதினரிடையே செய்யப்பட்ட இந்த ஆய்வின் பிரகாரம் அதிகளவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை உண்பதனால் அவர்கள் அடுத்த 12 வருட காலத்தில் இறப்பதற்கான சாத்தியம் இரண்டு மடங்காக அதிகரிக்கிறதாம்.
அதேபோல புற்றுநோய்களால் இறப்பதற்கான சாத்தியமும்  43மூ சதவிகிதத்தால் அதிகரிக்கிறதாம்.

அவற்றிலிருந்து நாம் பெறக் கூடிய செய்தி என்ன?

இறைச்சி வகைகளை உண்ணலாம். ஆனால் அளவோடு குறைந்த அளவில் உண்பதே நல்லது.

ஆனால் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உண்பதைத் தவிர்பதே நல்லது எனலாம். தினமும் உண்ண வேண்டாம். இடையிடையே உண்ணும்போதும் குறைந்த அளவே உண்பது உசிதமானது.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

சிந்தனைஒளி


* மலையை சாய்க்கும் வல்லமை மௌனத்திற்கே உண்டு!
* சிறியது பெரியது எனும் அளவுகோல் உதவிக்கு இல்லை!
* தெரியாததை தெரியாது என்று உணர ஆரம்பியுங்கள்!
* பணிவு என்பதுநீங்கள் நினைப்பது போல் பலவீனம் அல்ல –    பலம்!
* வாழ்வில் நன்றி உணர்வு நிறைந்தவன் மகிழ்ச்சி உடையவன்!