10 சிரிப்புகள்


செந்தமிழ் படிப்போம்.. [பகுதி - 3]




திருநிறைச்செல்வன் - திருநிறைசெல்வன்

   திருநிறைச்செல்வன் என்று வல்லினம் மிகுத்தல் தவறாகும். திருநிறைசெல்வன் என்பது வினைத்தொகையாகும், வினைத்தொகையில் வல்லினம் மிகா. எனவே திருநிறைசெல்வன் என்று எழுதுக. இது போல் திருவளர்செல்வன், திருவளர்செல்வி ஆகிய இடங்களில் வல்லினம் மிகாமல் எழுதுக.

புள்ளாங்குழல் - புல்லாங்குழல்

   புள்ளாங்குழல்  என்று எழுதுவது தவறாகும். புல் என்பதற்கு மூங்கில் எனப் பொருட்படும். எனவே மூங்கில் குழாயில் உருவாக்கப்படும் இசைக்கருவிக்குப் புல்லாங்குழல் என்று பெயர். (புள் என்றால் பறவை என்று பொருள்).

சக்கரை - சருக்கரை


   சக்கரை என்று சிலர் எழுதுகின்றனர். சருக்கரை, (அ) சர்க்கரை என்று எழுதுவதே சரியாகும். மகாகவி பாரதியார் எழுதிய பாஞ்சாலி சபதத்தில் முதற்பாகத்தில் 86 ஆம் பாடலில்  'சுவை மிக்க சருக்கரை பாண்டவர்'  என்று வருவதைக் காண்க. வடலூர் வள்ளலார் அளித்த திருவருட்பாவில், அருள் விளக்க மாலையில் 'சர்க்கரையுங் கற்கண்டின் பொடியு மிகக்கலந்தே' என்று வருவதைக் காண்க.

சிறிதரன் - சிரீதரன்

   சிறிதரன் என்று எழுதுவது தவறாகும். வடமொழிச் சொல்லாகிய ஸ்ரீதரன் என்பது, தமிழில் சிரீதரன் என்று எழுத வேண்டும். பெரியாழ்வார் திருமொழியில் 58 ஆம் பாடலில் 'குழகன் சிரீதரன் கூவ' என்றும், 147 ஆம் பாடலில் 'செய்தன சொல்லிச் சிரித்தங் கிருக்கில் சிரீதரா' என்றும் வருவனவற்றை காண்க.

கலை கழகம் - கலைக் கழகம்

   கலை கழகம் என்றால் கலைகின்ற கழகம் எனப் பொருட்படும். கலைக்கழகம் என்று வல்லினம் மிகுத்தால் கலையை வளர்க்கின்ற கழகம் எனப் பொருட்படும். எனவே பொருள் உணர்ந்து எழுதுக.

பெறும் புலவர் - பெரும் புலவர்

   பெறும் புலவர் என்றால் பரிசைப் பெறுகின்ற புலவர் எனப் பொருட்படும். பெரும் புலவர் என்றால் புலமையுள் பெரிய புலவர் எனப் பொருட்படும். எனவே செயலறிந்து எழுதுக.

தந்த பலகை - தந்தப் பலகை

   தந்த பலகை என்றால் அவன் எனக்குத் தந்த மரப்பலகை எனப் பொருட்படும். தந்தப் பலகை என்று வல்லினம் மிகுத்தால் யானையின் தந்தத்தால் ஆன பலகை எனப் பொருட்படும். எனவே இடமறிந்து எழுதுக. 

செடி கொடி - செடிக் கொடி

    செடி கொடி என்றால் செடியும் கொடியும் எனப் பொருட்படும். செடிக் கொடி என்று வல்லினம் மிகுத்தால் செடியின் மேல் ஏறியுள்ள கொடி எனப் பொருட்படும். எனவே கருத்துணர்ந்து எழுதுக.

நடுக்கல் - நடுகல்

   குறிலிணை மொழிகளில் வரும் முற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகும். சான்று: திருக்குறள், முழப்பக்கம், விழுப்புண், பொதுப்பணி, புதுப்பாட்டு, அணுக்குண்டு ஆகிய சொற்களைப்போல் நடு என்ற சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.. சான்று: நடுத்தெரு, நடுப்பக்கம். ஆனால் நடுகல் என்ற சொல் வினைத்தொகையாகும். வினைத்தொகையில் வல்லினம் மிகா. புறநானூறு 306 ஆம் பாடலில் ''நடுகல் கைதொழுது பரவும்'' என்று வருவதைக் காண்க.

காவேரி - காவிரி

   காவிரி என்ற சொல்லிவிருந்து காவேரி என்ற போலிச் சொல் உருவாகியுள்ளது. காவிரி என்னும் சொல்லுக்குச் சோலைகளை உருவாக்குவது வள்ர்ப்பது என்னும் பொருள் உண்டு. ( கா - சோலை) காவிரிப் பூம்பட்டினம், காவிரிப்புதல்வர், காவிரி நாடன் என எழுதுவதே சிப்பாகும்.
          நன்றி:கவிஞர் கி.பாரதிதாசன் 

வறுமை நீங்க...


வியர்வை ஓடும் விளைநிலம்
விலையில்லா உணவளிக்கும் உறைவிடம்
விவசாயி உள்ளவரை
 காத்திருக்கும் விளைநிலம்
விட்டு கொடுக்க முடியாத கற்பகம்
விழி மூடி மௌனமாய்
விலைகொடுத்து  வாங்க வேண்டாமே!

உயிர்கள் உண்டாக
பெண்மைகள் இல்லை என்றால் 
உனக்கும் அழகான உயிர்
 கிடைத்துவிடுமா?
உணவு உண்டாக
விளைநிலம் இல்லையென்றால்
உன் வாழ்வும் நிலைத்துவிடுமா?

வீணான விதண்டா வாதமென
விலகியே போவீர்கள் எனில்
விரைவிலேயே வந்துவிடும் பட்டினி!
இருளில்லா வாழ்வுக்காய்
 இன்றே செயற்படுவோம்
ஓங்கியே உலகமெங்கும்
 வறுமை நீங்கட்டும்!

-காலையடி அகிலன்.

சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்!



வெள்ளித்திரையில் மாஸ் ஹீரோக்களுடன் டூயட் பாடிய டாப் மோஸ்ட் நடிகைகள், சின்னத்திரையையும் கலக்கத் தவறியதே இல்லை. அந்த வகையில் ராதிகா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் இன்றைக்கும் டிவி உலகின் வான்டட் நாயகிகள். இந்த இரண்டு பேரும் உதாரணம் மட்டுமே! மெகாத்தொடர் வரலாறு தொடங்கிய காலகட்டத்திலிருந்தே சினிமாவில் பல ரவுண்டுகளை முடித்துவிட்டு, டிவியிலும் ஒரு ரவுண்டு வருவதுதான் கதாநாயகிகளின் ஃபேஷன்...இன்றும் அது தொடர்கிறது. அவர்களில் சிலரைப் பற்றிய ஒரு குட்டி ரீகேப் இது!

சுகன்யா:

சின்ன ராசாவே சித்தெறும்பு உன்னைக் கடிக்குதா?’ என்று பிரபுதேவாவுடன் அதிரிபுதிரி நடனம் ஆடி சிட்டி ரசிகர்களையும், ‘முத்துமணி மாலை’ என்று கண்டாங்கி கொசுவப் புடவையுடன் கிராமத்து ரசிகர்களையும் ஒருசேரக் கவர்ந்த சுகன்யா, பரதநாட்டியத்திலும் கில்லி. சினிமாவில் நடிகையாக நடித்துக் கொண்டிருந்தவர், அதிலிருந்து விலகியதும் கால் வைத்தது டிவி சீரியல்களில்.  சன் டி.வியில் ஒளிப்பரப்பான ‘ஆனந்தம்’ சீரியலுக்கு சிறுசுகளில் இருந்து மீசைகள் வரை ரசிகர்களாக இருந்தனர். ‘ஆனந்தம் இது ஆனந்தம்’ என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கும்போதே  கணவர், குழந்தைகளை மறந்து சுகன்யாவை ரசிக்கத் தொடங்கியிருப்பார்கள் இல்லத்தரசிகள்.

தேவயானி:

டி.வி சீரியல்களில் ‘ப்ரைம் டைம்’ என்னும் ஹாட் சீட்டில் ஒளிபரப்பான சீரியல் ‘கோலங்கள்’. இதில் க்யூட்  அபியாக, வில்லன் ஆதிக்கு சவால் விடும் பிசினஸ் லேடி ‘அபிநயா’வாக நடித்திருந்தவர் ‘காதல் கோட்டை’யில் கமலியாகக் கலக்கிய அதே தேவயானிதான். ராஜகுமாரனை மணம் புரிந்த பிறகு சினிமாவுக்கு லீவு விட்டிருந்த தேவயானியின் முதல் ‘டிவி என்ட்ரி’ கோலங்கள் சீரியல். 1,500 எபிசோடுகளைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது இந்த சீரியல்.

பானுப்ரியா:

ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று 80 மற்றும் 90-களில் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர் பானுப்பிரியா. திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆனவர், கணவருடனான பிரிவுக்குப் பின்னர் சீரியல் உலகில் பிஸியானார். ஏ.வி.எம்-ன் `வாழ்க்கை’ சீரியலில் சீதாவாக நடித்து அசத்தினார். நடிகர் சிவக்குமாருடன் அவர் இணைந்து நடித்த `பொறந்த வீடா புகுந்த வீடா’ திரைப்படம் அதே கதையுடன் சீரியலாக உருவெடுத்தபோது, அதிலும் ஹீரோயின் பானுப்ரியாதான். தற்போது பானுப்ரியா எடுத்திருக்கும் அவதாரம், `யமுனா’.

சீதா:

விசுவின் குடும்பம் சார்ந்த கதையாகட்டும், கமலின் தைரியமான கதாபாத்திரமாகட்டும், ரஜினியின் அல்ட்ரா மாடர்ன் பெண் கேரக்டராகட்டும் அத்தனையிலும் அசத்தக் கூடியவர் நடிகை சீதா. ஜோ-வுக்கு முன்பே தன்னுடைய குண்டு விழிகளால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர். சினிமாவிற்கு முழுக்குப்போட்ட பிறகு சீரியலுக்குள் நுழைந்தார். ‘இதயம்’, ‘பெண்’ என்று அழகான, அன்பான மாமியாராகவும், வழிமாறி வந்து அடைக்கலம் கேட்ட பெண்ணுக்கு நல்ல தோழியாகவும் நடிப்பில் மிளிர்ந்தார். கூடவே, ‘வேலன்’ தொடரில் முருகனுக்கே அம்மாவான வேடம் என்று ‘ஹேப்பி டூ ஆக்ட் இன் சீரியல்’ என்றார் சீதா.

சிம்ரன்:

90களின் பிற்பாதியில் இளைஞர்களின் மனம்கவர்ந்த கனவுக்கன்னி. இடைக்காகவே பெயர் போனவர். மொழி தெரியாவிட்டாலும் நடனத்திலும் நடிப்பிலும் அத்தனை பேரையும் ரசிக்க வைத்தவர். பைலட் தீபக்குடனான திருமணத்துக்குப் பிறகு குழந்தை, குடும்பம் என்று செட்டில் ஆனவர் மீண்டும் டிவி உலகின் மூலமாக ரசிகர்களுக்காகத் திரும்பி வந்தார். ‘ஜாக்பாட்’ ஷோவில் குஷ்புவை ரீப்ளேஸ் செய்தவர், ‘சிம்ரன் திரை’, ‘அக்னிப் பறவை’ என சீரியல்களிலும் சூப்பர் சிம்ரனாக நடிப்பில் பின்னியெடுத்தார்.

ஸ்ரீப்ரியா:

பில்லா’வில் ரஜினிக்கே சவால் விட்ட கதாநாயகி ஸ்ரீப்ரியா. சினிமா கடலிலிருந்து ஒதுங்கி, சீரியல் கரையோரம் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். ‘சின்னப் பாப்பா பெரிய பாப்பா’ பார்ட்-1ல் சின்னப் பாப்பாவாக காமெடி நடிப்பில் கலகல அட்ராசிட்டி செய்திருப்பார் ஸ்ரீப்ரியா.



பூர்ணிமா இந்திரஜித்:

இவர்களுக்கெல்லாம் நடுவில் இவர் யார் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழலாம். மலையாள, தமிழ் சினிமாவில் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் நடிகர் ப்ருத்வி ராஜின் அண்ணன் இந்திரஜித். அவரும் மலையாள சினிமாவில் டாப் நடிகர்தான். இந்திரஜித்தின் மனைவிதான் பூர்ணிமா இந்திரஜித். தமிழில் விஜய், ஷாலினி நடிப்பில் காதலர்களின் உலகில் நீங்கா இடம்பிடித்த ’காதலுக்கு மரியாதை’ படத்தில் ஷாலினி தோழியாக ஒரு பெண் வருவாரே... அவரேதான். மலையாள சினிமா, திருமணம், குடும்பம் என்று செட்டிலானவர், தமிழில் ஒரே ஒரு சீரியலில் நடித்திருக்கிறார். ஆனால், இன்றுவரை தமிழ் ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு பவர்ஃபுல்லான கேரக்டர். ‘கோலங்கள்’ சீரியலில் ’மேனகா’ என்னும் பிசினஸ் பெண்ணாக, தேவயானிக்கே சவால் விட்டுக் கலக்கியிருப்பார் பூர்ணிமா. தற்போது மேடம் கேரளாவில் பாப்புலர் காஸ்ட்யூம் டிசைனர்.

இவர்களையும் தாண்டி தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்திலிருந்த ஆச்சி மனோரமா, குஷ்பு, சோனியா அகர்வால், நளினி, சங்கவி, மீனா, விஜயலட்சுமி, உமா என்று முக்கால்வாசி ஹீரோயின்கள் டிவி சீரியல்களிலும் ஹீரோயின்களாக வலம் வந்துள்ளனர். சுஹாசினி, அமலா, ரேவதி, ஸ்ரீவித்யா என எல்லா டாப் நடிகைகளுக்குமே சினிமா தாய் வீடு... சீரியல் உலகம் புகுந்த வீடு!
-தொகுப்பு:கயல்விழி,பரந்தாமன்.

ஷிரிடி சாய் பாபா கோவிலில் அற்புதம்!

கண்ணுக்கு தெரியாத பாபாவின் புகைப்படம்சமீபத்தில் நித்திய சொரூபி சந்தண மழை ஷிரிடி சாய் பாபா ஆலயத்தில், கடந்த வருடம் நிகழ்ந்த அதிசயம், அற்புதம் ஒன்று, இரவில் CCTV  கமெராவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உண்மையான யூ டியூப் வீடியோ ஒன்றின் மூலம் பார்க்கும் நற்பாக்கியம் எனக்கு அவர் திரு அருளாலே கிடைத்தது!

இவ் வீடியோவில், சாய் பாபாவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த  பூ மாலை, இரவு நேரத்தில், யாருமே இல்லாத சமயத்தில், அது கட்டவிழ்ந்து, தானாகவே தோளை விட்டு விலகி, கை மேல் தவழ்ந்து, தரையில் கீழே விழுந்திருக்கின்றது! அது மட்டுமல்ல, ஒருவரின் உதவியோ அல்லது தொழில் நுட்ப புனைபாடுகளோ இன்றி, மாலையை அவர் தன் மார்பினை விரித்தும், கைகளை அசைத்தும் கீழே தள்ளி, வலு ஒழுங்காக கீழே விழுத்தியும் காட்டி உள்ளார்.

ஆஹா, ஆஹாஇச்செயலின்மூலம் அவர் எங்கள் மீது காட்டிய கருணையே கருணை! அப்பப்பா! இந்த அற்புத செயலைக் காண நாம் எத்தனை, எத்தனையோ ஜென்மங்களில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று விடயம் தெரிந்தவர்கள் கூறுகின்றார்கள். இந்த அற்புதத்தினை உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும்!

பக்தர்கள் இட்ட மாலையை வேண்டாம் என்று அவர் உதறித் தள்ளினார் என்று சில விதண்டாவாதிகள் கூறிக்கொள்ளுவார்கள்; நம்பாதீர்கள்! அவர்கள் எல்லாம் ஞானக் கண் அற்ற ஊனக் கண்ணினர்! இது அவர்களுக்கு விளங்க மாடடாது.

இந்த அதிசயம் நடந்த கோவிலில் நேரே சென்று தரிசனம் செய்து அருள் பெற்றிட ஏராளமான பகதர்கள் திரள், திரளாகச் சென்று கொண்டு இருக்கின்றார்கள். எக்கச்சக்கமான பலன்களை அவர் வாரி, வாரி  வழங்க, அவர்கள்  அள்ளி, அள்ளிக்கொண்டு செல்வது கண் கொள்ளாக் காடசியாக இருக்கிறது!

இந்தப் பெரிய அதிசயத்தின்மூலம், பாபா நம் எல்லோரையும் ஆசீர்வதிக்க வந்திருக்கின்றார் என்பது மறுக்க முடியாத ஓர் உண்மை ஆகும். இது உலகத்திற்கு ஒரு நன்மையான விடயம் ஆகும். உலக நாடுகள் எல்லாம் இதுபற்றி மிகவும் ஆனந்தம் அடைந்துள்ளன. அனைத்து தேசத்து தலைவர்கள், மக்கள் எல்லோரும், இனி என்ன கஷ்டம்; கடவுள் வந்துவிடடார்தானே என்று மிகவும் நிம்மதி அடைந்துள்ளனர்.

எந்தப் பொருளும், அது மாலையோ, சேலையோ கழன்றால் நிச்சயமாக  மேலே நோக்கித்தான் செல்ல வேண்டும் என்ற நியூட்டனின் புவியீர்ப்பு விதிக்கு எதிராக, ஒரு சின்னக் குழந்தைக்கே தெரிந்த அறிவுக்கும் அப்பால், அது மேலே போகாது கீழே விழுந்திருக்கிறது! என்னே ஆச்சர்யம்! என்னே அற்புதம்!
இந்த அற்புதத்தால் இனிமேல் உலகெங்கும்,
- பசி, பட்டினி என்பது நீங்கி விடும்.
- எல்லோருக்கும் நிறைய பணம், பொருள் எல்லாம் கிடைக்கும்.
- ஒருவரையும் தீராத நோய்கள் ஒன்றும் அண்டாது.
- சகல பயங்கர வாத கொலைகள் எல்லாம் இல்லாது ஒழியும்.
- பொய், களவு, வெட்டு, குத்து, கடத்தல், கொலைகள் எல்லாம் இருக்காது.
- நல்ல அரசு உருவாகும்.
- லஞ்சம் ஒழியும்.
- சுபீட்ஷம் உண்டாகும்.
- எல்லாவற்றிலும் மேலாக, எல்லோரும் விரும்பும் சொர்க்கம் இறந்த பின்னர்  போய்ச் சேருவோம்.
இதேபோல, சமீபத்தில் கனடாவில் கடவுள் சாய் பாபா, சுவரில் நிழல் வடிவத்தில் வந்து விழுந்தும் அடியார்களைப் பரவசப் படுத்தி, கருணை மழை பொழிந்துள்ளார் என்பதும் ஒரு  நம்ப முடியாத, ஆனால் உண்மையில் நடந்த அற்புதம் ஆகும். வந்தது உலகத்துக்கு நல்ல காலம்!
அதனால், எல்லோரும் இனிமேல் வீட்டில் சும்மா இருந்து, 'சாய் ராம்' என்று சொல்லிக்கொண்டே இருப்போம்!
அவர் (கடவுள்) எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்!
மேலும், இந்தியாவில் உள்ள செத்துப்போன, மற்றும் இனி சாகப்போகும்  ஆயிரக்கணக்கான கடவுள்மார் எல்லோரும் அடிக்கடி இப்படியான, நம்பவே முடியாத அற்புதங்களை நிகழ்த்தி, இவ்வுலகில் உள்ள மக்களின் ஆன்ம முன்னேற்றத்துக்காக உழைக்க முன் வர வேண்டும் என்று, அதே கடவுள்மார்களை நாங்களும் எந்நேரமும் பிரார்த்தனை செய்து கொண்டு இருப்போமாகசாய் ராம்.
                          --செல்வத்துரை    ,    சந்திரகாசன்-- 

குறிப்பு: கடவுள் என்றால் என்ன என்று அறியமுடியாத, உணரமுடியாத , புரியமுடியாத மேற்படி அப்பாவிகளை  வைத்து உழைக்கும் இப்படியான 
கூட்டம் பெருக்கிச் செல்லும் நிலைக்குக்  காரணம் அந்த அப்பாவிகளின் [கடவுளைப்  பயங்கர வாதியாக கருதும்] பய பக்தியே! மந்திரம்,தந்திரம் செய்பவர்கள் கடவுள் என்றால் வளர்ந்துவிடட நாடுகளில் ஏராளம் கடவுள்கள் இதுவரையில் உருவாக்கப்பட்டிருப்பார்கள். அற்புதங்கள் கடவுளின் செய்கைகளாக இருக்கவும் முடியாது. அதனால் மனிதனுக்கோ ,உலகிற்கோ இல்லை நீங்கள் கருதும் கடவுளுக்கோ எவ்வித பயனுமில்லை. அதை வைத்துப் பிழைப்போர் பணப்பைதான் நிரம்புகிறது.
- சித்தர் குறிப்பிலிருந்து..
.......................................................................................................................