ஏமாற்றப்படும் அப்பாவித் தமிழர்கள்


அரசியல் என்னும் உயர்ந்த அதிகார பீடத்தின் ஊடாக மக்களின் நலன்களுக்காகவும் நாட்டின் உயர்விற்காகவும் சேவையாற்ற வேண்டிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும் சுக போகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்களை செலவிடுகின்றார்கள் என்பதை முன்னர் பலதடவைகள் இந்தப் பக்கத்தில் பதிவு செய்திருந்தோம்.

நாம் இங்கு தலைப்பில் இரண்டு நாடுகள் என்று குறிப்பிட்டுள்ளது, , ஆமாம் எமது இலங்கை மற்றும் இந்தியா ஆகியநாடுகளில் வாழும் சாதாரண தமிழ் மக்கள், அதுவும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் அரசதனியார் சேவையில் சாதாரண தரங்களில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோரையே நாம் அப்பாவித் தமிழர்கள் என்று சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.
எந்தெந்தநாடுகள் என்பதை எமது வாசகர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதும் நாம் அறிந்ததே

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டிலும், இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கிலும் எமது தமிழ் மக்கள், நாம் மேலேசொல்லிய அரசியல்வாதிகளும் அவர்களோடு இணைந்து பணியாற்றும் உயர் அதிகாரிகளும் மக்கள் நலனைப் பார்க்காது தங்களை நலன்களுக்காகவும் சுகபோகங்களுக்காகவும் தொடர்ச்சி தங்கள் பணி நேரங்களை செலவிடுகின்றார்கள் என்பதையும் பொய்யான செய்திகளையும் வாக்குறுதிகளையும் தந்தவண்ணம் உள்ளார்கள் என்பதை உணர்கின்ற பொழுது, இதைப் பற்றிய கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்தப் பக்கத்தில் தொடர்ந்தும் பதிவுகளைத் தரவேண்டும் என்ற எண்ணமே இவ்வாரக் கதிரோட்டம்.

முன்னெரெலலாம், இலங்கையில் உள்ராட்சி மன்றங்களுக்கு அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்படுகின்றவர்கள் அந்த கிராமத்திற்கோ அன்றி நகரத்திற்கோ சேவையாற்றுவதற்கு என்றே தங்கள் பதவிகளில் அமர்கின்றார்கள். ஆனால் தற்போது, வடக்கு கிழக்குப் பகுதிகளில் சாதாரண உள்ராட்சி மன்றங்களின் “ஆட்சியை பிடிக்கின்றோம்” என்ற உணர்ச்சியூட்டும் சொற்பதங்களைப் பாவித்து, சாதாரண அங்கத்தவர்களின் மனங்களில் நீங்களும் “ராஜாக்களே” என்ற எண்ணத்தை தவறான வழியில் பரப்பி வருகின்றார்கள்.

இந்த ஏமாற்று நடவடிக்கைகளில அதிகளவில் ஈடுபட்டு வருவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே என்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்வாறு “ஆட்சியைப் பிடிப்பதற்கு” அவர்கள் மேற்கொள்ளும் தந்திரங்களை பார்த்து, மக்கள் அங்கு தங்களுக்குள் நகைத்துக் கொள்ளும் காட்சிகளாக இருப்பதை அரசியல்வாதிகள் அறியாதவர்களாக உள்ளார்களா என்பதே எமது கேள்வி!

தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகளாக உள்ள அதிமுக மற்றும் திமுக ஆகியன மேற்கொள்ளும் நகைப்பிற்கிடமாக உள்ள சம்பவங்கள் அங்கு மக்கள் ஏமாற்றப்படுகின்றவர்களாகவே உள்ளார்கள் என்பதை நன்கு காட்டுகின்றுத. ஐபிஎல் என்னும் கிறிக்கெட் ஆட்டத்தில் ஓரு அணியின் உரிமையாளராக, திமுக செயல் தலைவர் ஸ்டாலின்pன் புதல்வர் உதயநிதி மைதானத்திற்கு உள்ளே சென்று ஆட்டத்தை கண்டு களித்து தனது வீரர்களை உற்சாகப்படுத்த, வெளியே அவர் தந்தை ஐபிஎல் ஆட்டத்தை பகிஸ்கரிக்கின்றோம் என்று தரையிலஅமர்ந்த வண்ணம் தனது காடையர் கூட்டத்தின் பாதுகாப்போடு தனது ஏமாற்று வேலையை செய்கின்றார்.


இவற்றைபார்க்கும் போது தமிழ் நாட்டில் அரசியல் செல்வாக்கையும் சினிமாவில் சம்பாதிக்கும் பண பலத்தையும் வைத்துக் கொண்டு அராஜகம் செய்யும் அரசியல்வாதிகள் ஒருபுறம் செயற்பட, நமது இலங்கையில் இலங்கை அரசு அமர்த்தியுள்ள சிங்கள ஆயுதப்படையினரையும் பொலிஸ்காரர்களையும் கொண்டே தமக்கு எதிராக கேள்விகளைத் தொடுக்கும் தமிழர்களை எச்சரிக்கும் தலைவர்களையும் ஒரே மேடையில் காண்புத போன்ற விரக்தி உணர்வோடு எமது தமிழர்கள் தங்கள் காலத்தை வீணடிக்கின்றனர் என்பதையே இங்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

-நன்றி உதயன் 

தமிழரின் தோற்றுவாய்?[எங்கிருந்து தமிழர்?]பகுதி:03‏



"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்"  


என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்லும் மண்ணும் தோன்றுவதற்கு முன்பே மனிதன் தோன்றியிருக்க முடியாது.ஆனால் இது தாம் மூத்த குடி என்பதையும் வீரக் குடி என்பதையும் வெளிக்காட்ட ஏற்படுத்திய சொல் வழக்காக இருக்கலாம் என்று நம்புகிறேன்.என்றாலும் இது  பண்டைய பெருமையை பறைசாற்ற கூறப்பட்ட வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை நிரூபித்திருக்கிறது சமீபத்தில் வெளியான மரபியல் ஆராய்ச்சி முடிவு ஒன்று.ஆமாம்.‘தொன்மையான இந்தியாவின் மூத்த குடிகள்,முதல் குடிமக்கள் தென்னிந்தியர்கள்தான்’ என்பதை நிரூபித்து இருக்கிறார்கள் ஹைதராபாத்தில் உள்ள ‘சென்டர் ஃபார் செல்லுலார் அன்ட் மாலிகுலார்  பயாலஜி’['the Centre for Cellular and Molecular Biology /Hyderabad] ஆய்வு மையத்தினர். இந்தியாவின் மூத்த குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாட்டை சேர்ந்த திரு.விருமாண்டிக்கு கிடைத்திருக்கின்றது.இவருடைய மரபணு தான் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில்  ஆஃப்ரிக்காவிலிருந்து  இந்தியாவிற்கு குடிபெயர்ந்த பூர்வ குடி மரபணுவை ஒத்திருக்கின்றது என கண்டுபிடித்திருக்கின்றனர். "M130" எனப்படும் இந்த வகை மரபணுவானது சுமார் 60,000இல் இருந்து 70,000 ஆண்டுகள் பழமையானது!.உலகில் தோன்றிய முதல் மனிதனின் கலப்பற்ற நேரடி வாரிசு, உசிலம்பட்டியில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழன் விருமாண்டியே என்கின்றனர்.இப்போதைக்கு இவருடைய மரபணு மட்டுமே பழமையானது. "THE STORY OF INDIA" என்ற தலைப்பில் "Michael Wood " என்ற இந்தியாவை ஆராயும் பிரபல பிரிட்டிஷ் வரலாற்றாய்வாளர் BBC தொலைக்காட்சியில் இந்த தகவலை
வெளியிட்டுள்ளார்.




அது மட்டும் அல்ல,2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 51 அன்றே இந்த தமிழனின் சிறப்பை உறுதிப்படுத்துவது போல பாடுகிறது.



"நீர்மிகின் சிறையும் இல்லை; தீமிகின்
மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை;
வளிமிகின் வலியும் இல்லை; ஒளிமிக்கு
அவற்றோர் அன்ன சினப்போர் வழுதி,
தண்தமிழ் பொதுஎனப் பொறாஅன் போர்எதிர்ந்து
கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்கஎனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே;
அளியரோ அளியர்அவன் அளிஇழந் தோரே;
நுண்பல் சிதலை அரிதுமுயன்று எடுத்த
10 செம்புற்று ஈயல் போல
ஒருபகல் வாழ்க்கைக்கு உலமரு வோரே."
புறநானூறு 51,

நீர் மிகுந்தால் அதைத் தடுக்கக்கூடிய அரணும் இல்லை
[அணைக்கட்டுவை பற்றி அப்பவே அவனுக்கு தெரிந்து உள்ளது] ; தீ அதிகமானால், உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் பாதுகாக்கக்கூடிய நிழலுமில்லை[இன்றும் காட்டு தீயின் அழிவை அறியாதவர்கள் இல்லை.அதுமட்டும் அல்ல அதற்கான பாதுகாப்பு இந்த நவீன உலகிலும் இன்னும் இல்லை]; காற்று மிகையானால் அதைத் தடுக்கும் வலிமை உடையது எதுவும் இல்லை[இன்று எந்த நேரமும் வானொலி,தொலை காட்சி செய்தி இவைகளே] நீர், தீ மற்றும் காற்றைப் போல் வலிமைக்குப் புகழ் வாய்ந்த, சினத்தோடு போர் புரியும் வழுதி, தமிழ் நாடு [தமிழ் நாடு எவ்வளவு வீரத்திலும் வாழ்க்கையிலும் அன்றே முன்னேறி இருந்தது என்பதை கவனிக்க]மூவேந்தர்களுக்கும் பொது என்று கூறுவதைப் பொறுக்க மாட்டான்.அவனை எதிர்த்தவர்களிடமிருந்து திறை வேண்டுவான். அவன் வேண்டும் திறையைக் ”கொள்க” எனக் கொடுத்த மன்னர்கள் நடுக்கம் தீர்ந்தனர். அவன் அருளை இழந்தவர்கள், பல சிறிய கறையான்கள் கடினமாக உழைத்து உருவாக்கிய சிவந்த நிறமுடைய புற்றிலிருந்து புறப்பட்ட ஈயலைப்போல, ஒரு பகல் பொழுது வாழும் உயிர் வாழ்க்கைக்கு அலைவோராவர்.ஆகவே, அவர்கள் மிகவும் இரங்கத் தக்கவர்கள்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த மரபனு குறியீடுகள் ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. அவையை தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம். இந்த இரு தொன்மையான இந்தியர்களில்,  தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள்.ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது என்பது மேலும் குறிப்பிடத்தக்கது.இந்தியர்களின் மூதாதையர்கள் குறித்த இந்த ஆய்வின் புதிய முடிவுகள் வரலாற்றை மாற்றி எழுதக் கூடியவை என்பதால் விஞ்ஞானிகளின் முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது இன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.[மரபனு குறியீடு ஆய்வுகள் ] 


"குயிலோசைக் கேளாவிட்டால் செவி அழிவதில்லை
மயில் நடம் காணாவிட்டால் மலர் விழி துடிப்பதில்லை
உயிர் தமிழ் நினைப்பு இன்றேல் உலகினில் வாழ்வே இல்லை"

என்று தமிழ் உயர்வைப் பாடி வைத்தான் ஒரு கவிஞன்.அவன் காதில் இந்த பெருமை விழட்டும்.அவனோடு சேர்ந்து நாமும் மகிழ்வோம்,ஆனால் அதே நேரத்தில் உண்மைகளை மேலும் மேலும் கொண்டுவர தொடர்ந்து முற்சிப்போம்.

-[கந்தையா, தில்லைவிநாயக லிங்கம்]


காதல் கல்யாணம் & கடவுள் :சுகி சிவம்


பொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 2

அபத்தமான நோய்த் தகவல்கள்
அறிவியல்:  உடலையும் மனதையும் தூய்மையாக வைத்து கொள்வது; உணவை சரியான அளவில், சரியான நேரத்தில் எடுத்து கொள்வது; தேவையான உடல் உழைப்பை மேற்கொள்வது அல்லது உடற்பயிற்சியை மேற்கொள்வது; இம்முறைகளை அனுசரித்தால் மனிதன் நோய்நொடியில்லாத வாழ்க்கையையும் மூப்படைவதை தள்ளிப்போடவும் முடியும். இது அறிவியல்.
அபத்தம்: புற்றுநோய், இருதய நாளங்கள் முழுவதும் அடைப்பு, சிறுநீரகங்கள் செயல் இழப்பது போன்ற நோய்கள் வந்தபின் இயற்கை முறையில் வாழ்வதாலேயே அந்நோய்களைக் குணப்படுத்தி விடலாம் என்று நம்புவது அபத்தம்.

வெடியுப்பு பீரங்கிசாமியிடம் Gmail படும்பாடு
சில மாதங்களுக்கு முன் Gmail-இல் Priority Inbox என்றொரு வசதியை ஏற்படுத்தினார்கள். மிகவும் அவசியமான மின்னஞ்சல்கள் மட்டுமே இந்தப் பகுதிக்கு வரும். நானும் இதை உபயோகித்து வருகிறேன். எனக்கு அடிக்கடி மின்னஞ்சல் அனுப்புபவரிடமிருந்து மின்னஞ்சல் வந்ததால் அந்தப் பகுதிக்கு வந்து விட்டது. திறந்தால் ஒரே குப்பையான அறிவியல். அனுப்புபவர் யார் என்றுதான் Gmail-ஆல் சோதித்துப் பார்க்க முடியுமே தவிர, உள்ளிருக்கும் விவரங்களை எப்படி ஆராய முடியும்?.
இணைய தளங்களிலும் பத்திரிகைகளிலும் சில சரியான நோய் குறித்த செய்திகள் வெளிவந்தாலும் பெரும்பாலும் பரபரப்புக்காக மிகைப்படுத்தலும் அதையும் தாண்டி பல நேரங்களில் அப்பட்டமான பொய்களும் பிரசுரிக்கப் படுகின்றன. முற்காலங்களில் போல் அல்லாது, பொதுஜனம் சற்றே அதிகப் பொதுஅறிவு கொண்டிருப்பினும் இப்பொய்களுக்கு முக்கியத்துவம் சமூகத்தில் அதிகரித்து வருவது மிகவும் ஆபத்தானது. இது இந்தியர்களுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல. மேற்குலக நாடுகளிலும் பொய்கள் எந்தக் கூச்சமும் இன்றி பரப்பப்பட்டு வருகின்றன.

புற்றுநோய் பற்றின அபத்தப் புரிதல்
15 நாள்களில் உடல் பருமனில் இருந்து விடுதலை, இதய நாளங்களில் முழுவதுமாக அடைப்பு இருந்தாலும் (Complete blockage of Arteries) அறுவை சிகிச்சையின்றி குணம், சீறுநீரகம் முற்றிலுமாக செயல் இழந்திருந்தாலும் டயாலிஸஸ் இல்லாமல், அறுவை சிகிச்சை இல்லாமல் குணம் என்றெல்லாம் நமக்கு ஊடகங்களில் இருந்து செய்திகள் வருகின்றன.
இன்று சமூகத்தில் அனைத்து நோய்களைப் பற்றின தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வந்தாலும் இக்கட்டுரையில் புற்றுநோயை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.
மேலே கூறிய மின்னஞ்சலில் எனக்கு ஒரு தகவல் வந்தது. “வெறும் பழங்களைச் சாப்பிடுவதின் மூலம் புற்றுநோயிலிருந்து விடுதலை பெறலாம்”. இந்த மின்னஞ்சலில் இருந்து முக்கிய பகுதிகளைத் தமிழ்படுத்தி கீழே தருகிறேன்.
fruits-for-cancer-treatment
ஸ்டீபன் மேக் (Stephen Mak) என்றோரு மருத்துவராம். அவர் மிகவும் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோயாளிகளுக்கு வைத்தியம் செய்கிறாராம்.
அவர் இதுவரை சிகிச்சை செய்த புற்றுநோயாளிகளில் 80 சதவிகிதம் பேரை குணப்படுத்தி விட்டாராம்.
“புற்றுநோய்க்கு மருந்து கிடைத்து விட்டது. நாம் நம்புகிறோமா இல்லையா என்பதுதான் இன்றைய கேள்வி!” என்கிறார் இந்த மருத்துவர்.
புற்றுநோயைக் குணப்படுத்துவது மிகவும் சுலபமாம். வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிட வேண்டும். நன்றாக எச்சிலுடன் கலந்து மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். ஹையா!!! புற்றுநோய் போயே போச்சே போயிந்தே Its gone.!!!
அது மட்டும் இல்லை. இந்த முறையில் பழங்களைச் சாப்பிட்டால் முடி நரைப்பது, சொட்டை விழுவது, கண்களின் கீழ் வரும் கருவட்டம் போன்றவை ஏற்படாது.
3 நாள்கள் வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டால், 3 நாள்கள் கழித்து முகத்தில் தேஜஸ் ஒளி விடும்.
(அனுப்புநர், பெறுநர் பகுதிகளை நீக்கிவிட்டு இந்த மின்னஞ்சலின் பகுதிகளை Upload செய்துள்ளேன். நீங்களும் இந்தத் தகவலைப் பெற்று புற்றுநோயிலிருந்து சாகா வரம் பெறலாம்.
சரி, இதில் உள்ள சில விஷயங்கள் உண்மைதான். அவையாவன–
(1) பழங்கள் உடலுக்கு நல்லது.
(2) பழங்களில் உள்ள Anti-Oxidants இதயத்திற்கு நல்லது.
(3) பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் மூப்பு அடைவதை தள்ளிப்போட முடியும். (மூப்பு அடைவதின் இரு முக்கிய வெளி அடையாளங்களான தோல் சுருங்குதலைத் தள்ளிப்போடவும் தேவையான சக்தியை உடலுக்கு அளிப்பதிலும் பழங்கள் முக்கியப் பங்காற்ற முடியும்.)
ஆனால் இந்த பலன்களை மனிதர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக அறிந்து வைத்துள்ளார்கள். இதைப் பிரசுரிப்பதால் யாரும் சீண்ட மாட்டார்கள். நவீன அறிவியல் சமூகத்தில் இல்லாத காலத்திலும் உலகம் முழுவதிலும் மனிதர்கள் பழங்களைத் தங்கள் உணவின் முக்கியமான பகுதியாக சாப்பிட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். கொஞ்சம் மசாலாவைத் தடவி, வாய்க்கு வந்தபடி எழுதி, புற்றுநோய் குணமடையும் என்றால் குப்பனும் சுப்பனும் படிப்பார்கள். இன்று நாம் நவீனத்துவம் அடைந்து விட்டதால் சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களும் கார்பரேட் எக்ஸிக்யூடிவ்களும்கூட படிக்கிறார்கள்.
எனக்கு வந்த மின்னஞ்சல் பலருக்குச் சென்று, கடைசியாக எனக்கு வந்தது என்று குறிப்பிட்டேன். அந்த மின்னஞ்சலின் பெறுநர் பகுதிகளைக் கவனித்தேன். இந்தியாவின் பிரபல கம்பெனிகளில் பணிபுரிபவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அவர்களில் சிலர் நம்பியதனாலேயே என்வரை இந்த குப்பை வந்து சேர்ந்துள்ளது.
இதிலும் கடைசியாக வெடியுப்பு பீரங்கிசாமி உலா வருகிறார். மின்னஞ்சலில் கடைசியாக மேலும் 10பேருக்கு அனுப்பி உங்கள் கருணையை மனித சமுதாயத்திற்கு அளியுங்கள் என்று எழுதியிருப்பதால் பல பேரிடம் மின்னஞ்சல் மூலமாகப் பரவி கடைசியாக எனக்கும் வந்துசேர்ந்திருந்தது.

ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவு
10 ஐரோப்பிய நாடுகளில் 5 இலட்சத்திற்கும் அதிகமான மக்களிடம் கிட்டத்தட்ட 15 வருடங்கள் நடத்தியஆராய்ச்சியின் முடிவு, பழங்களைச் சாப்பிடுவதால் மட்டும் புற்றுநோயைத் தடுக்க முடியாது என்பதுதான். (பழங்களை சாப்பிடக்கூடாது என்று அவர்கள் கூறவில்லை. புற்றுநோயைத் தடுக்க முடியவில்லை என்பதுதான் செய்தி)
மேலே கூறிய மின்னஞ்சல் மூலமாக மட்டுமல்லாமல் பத்திரிகை, தொலைகாட்சி போன்றவற்றின் மூலமாகவும் பொய்யான நோய்த் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. உதாரணமாக ஒரு தொலைக்காட்சியில் சமையல் குறிப்பு ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. பேட்டி அளித்தவர் பழங்களால் செய்யப்படும் ஓர் உணவைச் செய்து காண்பித்தார். கூடவே சர்வசாதாரணமாக, பழங்களில் Anti-Oxidants இருப்பதால் அதைச் சாப்பிடுபவர்களுக்கு இருதய நோய் வரவே வராது என்று ஒரே போடாகக் கூறினார். நான் ஏற்கெனவே சுட்டிக் காட்டியபடி, பழங்களை சாப்பிடுவது இருதயத்துக்கு நல்லது என்பது அறிவியல் என்றாலும், பழங்களை சாப்பிட்டால் இருதய நோய் வரவே வராது என்பது அபத்தமான வாதம்.

காண்டாமிருகங்கள் படும்பாடு
 
rhino-horn-cancer-fraud-treatment
சகலகலா வல்லவர்களான இந்தக் கட்டுரையின் “அறிவியல் எதிர்ப்பு ஜாம்பவான்கள்” ஏதோ ஒரு வழியில் வதந்தி ஒன்றைக் கசிய விட்டுள்ளார்கள். அதன்படி, புற்றுநோய் உள்ள நோயாளிகள் காண்டாமிருகத்தின் கொம்பை அரைத்து அதனை திரவத்தில் கலந்து குடித்தால் புற்றுநோய் குணமாகும்.இதனால் காண்டாமிருகங்கள் அழிவின் விளிம்புக்குச் சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இந்தக் கட்டுரை காண்டாமிருகத்தைக் காப்பாற்ற எழுதப்படவில்லை. அதைச் செய்ய மிருகப்பாதுகாப்புக் குழுக்கள் உள்ளன. இந்தக் கட்டுரைக்கு விஷயம்– பொழுதுபோகாத சில “வெடியுப்பு பீரங்கிசாமி”க்கள் நோயுற்றிருக்கும் மக்களைத் தவறாக வழிகாட்டி இலாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதுதான்.

ஒரு திரைப்பட உதாரணம்
சுக்ருதம் என்றொரு மலையாளத் திரைப்படம். நாம் அத்திரைப்படத்தின் விமர்சனத்தை விட்டு விடுவோம். கதாநாயகனுக்கு புற்றுநோய் என்பது தெரிய வருகிறது. புற்றுநோய் முற்றிவிட்டதால் சிகிச்சை, பலனளிப்பது சாத்தியமில்லை என்கிறார் மருத்துவர். சில மாதங்களே வாழ முடியும் என்றும் கூறிவிடுகிறார். இதை அறிந்த கதாநாயகன், எப்படியும் சாகத்தான் போகிறோம், நம் கிராமத்திலேயே கடைசி நாள்களைக் கழித்து விடலாம் என்று முடிவெடுக்கிறார். அவரின் நண்பன் ஓர் இயற்கை மருத்துவரை அறிமுகப்படுத்துகிறார். முதலில் தயங்கும் கதாநாயகன் கடைசியாக மருத்துவருடன் அந்த இயற்கை மருத்துவமனைக்குச் செல்கிறார்.
இயற்கையுடன் ஒட்டிய வாழ்க்கை முறையை கதாநாயகன் கடைபிடிப்பதை நமக்குக் காண்பிக்கிறார்கள். சில காட்சிகளுக்கு பிறகு அந்த இயற்கை மருத்துவர் இரத்தப் பரிசோதனை முடிவைப் பார்க்கிறார். (இரத்தப் பரிசோதனைக்கு மட்டும் நவீன மருத்துவம் வேண்டுமாம். செம போங்கு). இரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை (Blood White Cells Count) கிட்டத்தட்ட ஒழுங்காக ஆகிவிட்டது என்று அறிவிக்கிறார்.
நாம் ஒரு சமூகத்தில் எப்படிப்பட்ட தகவல்களைத் தருகிறோம் என்று கவனியுங்கள். இத்திரைப்படத்தைப் பார்த்த சில இரசிகர்களாவது தங்களின் குடும்பத்தினருக்குப் புற்றுநோய் வந்தால், இயற்கை வாழ்க்கைமுறையை நாடினால்? விளைவு அவசியமில்லாமல் சில உயிர்கள் உலகிலிருந்து வெளியேறும்.
இதைப் படிக்கும் அன்பர்கள் நான் ஏதோ இயற்கை மருத்துவத்துக்கு எதிரி என்று எண்ண வேண்டாம். நானே என் உணவுப் பழக்கத்தில் வேப்பம்பூ, மணித்தக்காளி போன்றவற்றைச் சேர்த்து கொண்டுதான் இருக்கிறேன்.
நான் கூற வந்த விஷயம், இயற்கை மருத்துவத்தைப் பற்றி அல்ல. இயற்கையாக வாழ்வதனாலேயே புற்றுநோய் வரை குணப்படுத்த முடியும் என்ற அபத்தத்தை வெளிப்படையாக எதிர்ப்பதற்குத்தான்.

புற்றுநோய் பற்றின நவீன அறிவியலின் புரிதல்
நம் மனித உடல் பல கோடி செல்களால் ஆனது. செல்கள் பிரிந்து இரண்டாகவும் நான்காகவும் உற்பத்தி ஆகிக் கொண்டே இருக்கின்றன. மரணம் ஏற்படும் வரை. இது கிட்டத்தட்ட ஒரு பிரதி எடுக்கப்படும் வேலைதான். பிரதி எடுக்கப்படும்போது சில சிறிய தவறுகள் ஏற்படும். அவற்றை சரிசெய்யவும் நம் உடலில் இயக்கங்கள் உள்ளன. Carcinogens என்று கூறப்படும் ஒரு கூறு இந்தத் தவறு ஏற்படுவதை வேகப்படுத்துகிறது. (மது, புகையிலை, சில சூழ்நிலை காரணிகளால் உடலில் carcinogens அதிகரிக்கிறது என்பது தற்போதைய அறிவியல்). ஒரு செல் (malignant) தவறுகளுடன் உற்பத்தியாகி விட்டால் உடலில் புற்றுநோய் ஏற்பட்டுவிட்டது என்றுதான் அர்த்தம். பிறகு அந்த செல் பிரிந்து பிரதி எடுக்கப்படும் போது புற்றுநோய் செல்கள் உடல் முழுதும் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது.
20-ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை பாதிக்கப்பட்ட உடல் பகுதியை நீக்கும் முறைதான் இருந்தது. பிறகு மாத்திரைகள் Chemotherapy, Radiation Therapy போன்றவை மூலம் புற்றுநோயைக் கட்டுக்குள் வைத்து கொள்வதில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தத் துறை அனுதினமும் புதிய கண்டுபிடிப்புகளை சமூகத்துக்கு அளிக்கிறது. உதாரணம் Targeted Therapy. மாத்திரைகள் மூலம் செல்களை அழிக்கும் போது நல்ல செல்களும் அழியத்தான் செய்யும். அதைப் பெருமளவில் குறைப்பதில் நவீன மருத்தவம் பெரிய முன்னேற்றங்களை அடைந்துள்ளது.
அமேரிக்காவில் 2008-ஆம் ஆண்டின் அதிபர் தேர்தலுக்காகப் போட்டியிட்ட ஜான் மெக்கைன்,மெலனோமா என்னும் சருமப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். 3 முறை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 30 வருடங்களாக அவர் இதற்கான சிகிச்சை எடுத்து கொள்கிறார். இன்றும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்பதே புற்றுநோய் சிகிச்சை மிகப்பெரிய முன்னேற்றம் அடைந்திருப்பதை காண்பிக்கிறது.
இன்றுள்ள நிலையில் புற்றுநோய் முற்றுவதற்கு முன்னால் கண்டுபிடித்து விட்டால் உயிர்விட வேண்டிய அவசியமே இல்லை.

புற்றுநோய் ஒரு நவீன நோய்
ஒரு முக்கியத் தகவலை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். கி.பி.1500-க்கு மேல்தான் மேற்கத்தியர்கள் ஒரு மனித உடலை (பிணத்தை) அறுத்து உள்ளிறுக்கும் பகுதிகளை ஆராய முற்பட்டதாக ஏராளமான குறிப்புகள் வரலாற்றிலிருந்து நமக்குக் கிடைக்கின்றன. உதாரணமாக “லியோனார்டோ டா வின்சி” (Leonardo Da Vinci) அக்காலத்திய போப்பாண்டவரின் அனுமதியின் பேரில் பல அநாதைப் பிணங்களை அறுத்து ஆராய்ந்து குறிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளார். 1700-க்கு மேல் நுண்பொருள்நோக்கியின்(Microscope) மூலம் மனித உடலின் கட்டிகள் சோதிக்கப்பட்டன. புற்றுநோய் சமூகத்தில் பெரிய அளவில் இருந்திருக்கவேயில்லை என்பது வரலாற்றிலிருந்து நமக்குத் தெரிய வருகிறது.
நவீன வாழ்க்கையின் அடையாளங்களான மது, புகையிலை, சுரங்கம் தோண்டுதல், ஆஸ்பஸ்டாஸ் போன்றவைகளால்தான் புற்றுநோய் இன்று பெரிய அளவில் உள்ளது என்பதும் இன்றைய அறிவிலாளர்களால் நிறுவப்பட்டுள்ளது. அதனாலேயே பழைய மருத்துவ முறைகளில் இந்நோயை சமாளிப்பதை பற்றின முக்கியத்துவம் இல்லாமல் இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

பத்திரிகைகளின் சீரிய பணி
தமிழில் வெளியாகும் மகளிருக்கான பத்திரிகை ஒன்றில் மணித்தக்காளிக் கீரையைச் சாப்பிடுவதால் தொண்டை புற்றுநோயை குணப்படுத்தி விடலாம் என்று ஒரு கண்டுபிடிப்பு. என் தாயார் என்னிடம் இந்தச் செய்தியைக் காண்பித்தார். நான் என்ன கூறுவது? மணித்தக்காளிக் கீரையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் உண்கிறோம். (நானும்தான்). அதற்காக அதைச் சாப்பிட்டாலே தொண்டைப் புற்றுநோய் குணமாகும் என்பது முற்றான அபத்தம். மணித்தக்காளிக் கீரை வாய்ப்புண்ணை குணமாக்கும் என்பது இந்திய மருத்துவம். தொண்டை புற்றுநோயும் வாய்ப்புண்தான் என்று நினைத்து விட்டார்களோ என்னவோ!
இந்தச் செய்திகளை எழுதுபவர்கள் பலே கில்லாடிகளாக இருக்கிறார்கள். முற்றிலும் அறிவியல் அல்லாதவற்றை எழுதுவதில்லை. ஓர் அளவிற்கு நோய் வராமல் தடுக்கும் குணமுள்ள உணவை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதற்கு மசாலா தடவி, நோய் வந்தவுடன் அந்த உணவு பெரிய நோய்களையே சரிசெய்து விடும் என்பார்கள். இதை எதிர்ப்பவர்களை இந்திய, சீன மருத்துவ முறைகளை எதிர்ப்பவர்கள் என்று முத்திரை குத்தவும் முடியும் என்பதால் அவர்கள் Safe-ஆகவே இருப்பார்கள்.
மேலும் நவீன அறிவியல் ஒரு Closed Entity இல்லை. அது, முன்னேற்றம் ஏற்பட ஏற்பட அவற்றை உள்வாங்கிக் கொண்டு தன் தரத்தை அதிகப்படுத்திக் கொள்கிறது. புற்றுநோய்க்கான மருந்தாக மாத்திரைகளையும் கதிர்வீச்சையும் பயன்படுத்தினால் நோயாளிகளுக்கு பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அந்தப் பக்க விளைவுகளை (புற்றுநோயை அல்ல) மட்டுப்படுத்த தற்பொழுது பழமையான சீன மருத்துவ முறைகளைக் கைக்கொண்டுள்ளனர்.
இது அறிவியல்; இது ஊகம், இன்னும் முழுமையான ஆராய்ச்சி முடிவுகள் வரவில்லை- என்று பிரித்து எழுதுவதே சரி. அப்படி எழுதாத பத்திரிகைகளை நாம் கண்டிப்பாக பகிஷ்கரிக்க வேண்டும்.
நவீன மருத்துவம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும் என்று கூறவில்லை. இன்றும் சில நோய்களைச் சமாளிப்பதே பெரிய விஷயமாக உள்ளது. சில நோயாளிகளுக்கு என்ன நோய் என்பதைக் கூடக் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை இன்றும் உள்ளது. அமேரிக்காவில் இதற்காக ஒரு தனி மருத்துவமனை இயங்குகிறது. Undiagnosed Diseases Program (UDP) அறியமுடியாத நோய்களைக் குணப்படுத்த முயற்சிக்கும் இந்த அமைப்பில் கைவிடப்பட்ட கேஸ்கள் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. இந்த நோயாளிகள் ஏதோ ஓர் உபாதையினால் அவதிப்படுவார்களே தவிர அதற்கான காரணத்தை எந்த மருத்துவராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த அமைப்பு இப்படிப்பட்ட நோயாளிகளின் இரத்தத்திலிருந்து, D.N.A வரை எந்த முன்அனுமானமும் இன்றி ஆராய்ந்து நோயைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள். 15 சதவிகிதம் மட்டுமே இவர்களால் வெற்றி அடைய முடிகிறது என்பதுதான் இதன் விசேஷம்.
இதைக் கூற வந்ததே, நவீன அறிவியலால் இன்னும் பல நோய்களைக் கண்டுபிடிக்க கூட முடியவில்லை என்பதையும் பிறகுதான் அதற்கான மருந்தையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதையும் நாம் அறிந்து கொள்வது அவசியம்.
                                          நன்றி: