வழுக்கை தலை –

 நீங்கள் நம்பும் 3 கட்டுக்கதைகள்

வழுக்கை தலைக்கு தீர்வு காண்பது என்பது விஞ்ஞானிகளுக்கு பல நூற்றாண்டுகளாக சவாலாக இருக்கிறது.

 

2,000் ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாவற்றுக்கும் பெரும் நம்பிக்கையாக இருந்த மதம் எனும் நம்பிக்கையில் இருந்து விலகி தனது அறிவியல் கண்ணோட்டத்தில் செயல்பட்ட நவீன மருத்துவத்தின் தந்தை என்று கருதப்படும் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரட்டீஸ், தலைமுடி அமைப்பு எப்படி செயல்படுகிறது மற்றும் முடி கொட்டுதலை மாற்றுவதற்கான வழிகளை சோதித்தார்.

 

ஆகவே, இன்றைக்கு நம் தலைமுடி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என மேலும் கூடுதலாக புரிந்திருக்கின்றோம். கூடுதலாக, தலையில் வழுக்கை ஏற்படுவதற்கு பல காரணங்கள் குறிப்பாக மரபியல் முதல் சூழல் வரை உள்ளன. இருந்தபோதிலும் முடி உதிர்வதற்கான காரணங்கள் எவை? என்பது பற்றி இன்னும் பல தவறான கருத்துகள் நிலவுகின்றன.

 

பிபிசி முண்டோவிடம் பேசிய லாஸ் ஏஞ்சலஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் முடி உதிர்தல் மற்றும் உச்சந்தலை குறைபாடுகள் தொடர்பான மருத்துவ நிபுணரும் தோல் மருத்துவருமான கரோலின் கோ, "தலை வழுக்கையாக இருப்பது குறித்து மோசமாக நினைக்க தேவையில்லை," என்று கூறுகிறார்.

 

மருத்துவர் கரோலின் கோ, வழுக்கை தலை குறித்த மூன்று கட்டுக்கதைகளை சுட்டிக்காட்டுகிறார்.

 

கட்டுக்கதை 1 - தாயின் மரபணுக்கள் காரணமா?

நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடனான சந்திப்புகளின்போது, தாய்வழி சொந்தங்கள் வழியாக வந்த மரபணுக்கள்தான் வழுக்கைக்கான காரணம் என்று சொல்லப்படுவதை கேட்டிருக்கலாம்.

 

அதைவிடவும் உண்மை என்பது மேலும் சிக்கலானது.

 

பி.எஸ்.ஓ.எஸ் ஜெனிடிக்ஸ் (PLOS Genetics) என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்ட 2017 ஆய்வில், பிரித்தானிய ஆராய்ச்சியாளர் குழுவினர், பரம்பரையாக தலை வழுக்கை கொண்ட 52,000 ஆண்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில், 287 பேர்களின் முடி உதிர்வு செயல்பாட்டுக்கு மரபணுக்கள் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

 

அவர்களில் 40 பேருக்கு, தாயிடம் இருந்து பெறப்பட்ட எக்ஸ் குரோமோசோம்கள் தொடர்பின் காரணமாகவும், பிறருக்கு மரபணுக்களால் முடிகள் உதிர்ந்தன என்பதும் தெரியவந்தது.

 

எனவே தாயின் குடும்பத்தின் தரப்பில் இருந்து வரும் வலுவான மரபணுக்கள் காரணமாக வழுக்கை ஏற்படுகிறது என்பது உண்மை, என்கிறார் கரோலின் கோ. "ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்கள் வழுக்கையை ஏற்படுத்துவதால் இது இரண்டிலிருந்தும் வந்திருக்கலாம்," என்கிறார்.

 

ஆண்களைப் போலன்றி, பெண்களுக்கு வயதாகும்போதும், அவர்கள் முடியை இழப்பது அரிதாக இருப்பது ஏன் என்பதை புரிந்து கொள்ள, "ஆண்ட்ரோஜெனெடிக் அலோபீசியா", அதாவது பரம்பரை என்று விஞ்ஞானிகள் புரிந்துகொள்வதை விளக்குவது அவசியம்.

 

கரோலின் கோவின் கூற்றப்படி, இந்த வகை அலோபீசியாவிற்கு காரணம் என அடையாளம் காணப்பட்ட மரபணுக்கள் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனில் உள்ள ஒரு தனிமத்திற்கு மிகைப்படுத்தப்பட்ட உணர்திறனை ஏற்படுத்துகின்றன. இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகளுடன் ஏற்படக்கூடிய ஒரு நிகழ்வாகும்.

 

பொதுவாக பெண்களுக்கு வழுக்கை வராது. அவர்கள் பொதுவாக உச்சந்தலையில் இருந்து சிறிது முடியை இழக்கிறார்கள், ஒருவேளை நெற்றிக்கும் காதுக்கும் இடையில் உள்ள பகுதியில் உள்ள முடியை சிறிது சிறிதாக இழக்க நேரிடலாம். ஆண்களைப் போல அதிக டெஸ்டோஸ்டிரோன் இல்லாதது இதற்கு காரணமாக இருக்கலாம், மேலும் நம்மிடம் அதிகமாக உள்ள ஈஸ்ட்ரோஜன்கள் அதை சமநிலைப்படுத்துகின்றன.

 

கட்டுக்கதை 2 - தொப்பி அணிவது மற்றும் தலை முடியை அடிக்கடி கழுவது முடியை கொட்டச் செய்யும்

வாரத்திற்கு எத்தனை முறை உங்கள் தலைமுடியைக் கழுவுகிறீர்கள்? நீங்கள் எப்போதும் தொப்பி அணிந்திருக்கிறீர்களா?

 

உங்கள் தலைமுடி உதிர்வதற்கு இவை எதுவும் காரணம் அல்ல.

 

நீங்கள் தலையை மூடிக்கொண்டு யாரையாவது பார்த்தால், அவர்களுக்கு வழுக்கை விழுவதால் அதை மறைக்கிறார்கள், அவர்களுக்கு அதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை" என்று மருத்துவர் கோ நகைச்சுவையாக கூறுகிறார்.

 

தொப்பிகள் அணிவதால் முடி உதிர்தல் ஏற்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

 

இந்த இரண்டு கட்டுக்கதைகளும் உண்மையுடன் நெருங்கிய தொடர்புடையவை. நம் உச்சந்தலை எண்ணெய் பசைமிக்க தோல் பகுதிகளில் ஒன்றாகும்.

 

இது வழுவழுப்பான பகுதிகளில் ஒன்று. அதே நேரத்தில் உணர்திறன் மிகுந்த பகுதியல்ல. உண்மையில், உடலின் மற்ற பகுதிகளை விட குறைவான ஒவ்வாமையே உச்சந்தலையில் பதிவாகியுள்ளன” என்று அவர் கூறுகிறார்.

 

சரியான தயாரிப்புகளைப் பயன்படுத்தினால், தினமும் தலைமுடியைக் கழுவுவதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் கூறுகிறார்.

 

கட்டுக்கதை 3 - முடி கொட்டுதலுக்கு அறிவியல்பூர்வ தீர்வு இல்லை

தற்போது, தலை வழுக்கையாவதைத் தவிர்க்க குறைந்தபட்சம் மூன்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட மாற்று வழிகள் உள்ளன.

 

முடி உதிர்தலுக்கு காரணமான சிக்கலான ரசாயன மற்றும் உயிரியல் அமைப்புகளால் அவை எதுவுமே 100% தீர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கவில்லை. ஆனால் அவை தலை வழுக்கையாவதை மெதுவாக்குகின்றன அல்லது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பச் செய்கின்றன.

 

மினாக்ஸிடில் - இது உச்சந்தலையில் நேரடியாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் களிம்பு மற்றும் திரவ வடிவில் விற்கப்படும் ஒரு கலவை. சில முறைசாரா ஆய்வுகளில், மினாக்ஸிடிலின் குறைந்த அளவிலான வாய்வழி மாத்திரைகள் உதிர்ந்த முடிகளை மீண்டும் வளரச் செய்யும் என்ற முடிவுகள் கிடைத்துள்ளன. ஆனால் இந்த வடிவிலான மினாக்ஸிடில் பயன்பாடு இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.

 

ஃபினாஸ்டெரய்ட் - இது வாய்வழியாக கொடுக்கப்படுகிறது. இது ஆண்களுக்கு வயதாகும்போது ஏற்படும் புரோஸ்டேட் சுரப்பி விரிவாக்கத்திற்கான சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது குறைந்த செறிவுகளில் முடி உதிர்தலைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது.

 

அறுவை சிகிச்சைகள்: தலையில் முடி வளர்ச்சி உள்ள பகுதிகளில் இருந்து மயிர்க்கால்கள் அகற்றப்பட்டு, வளர்ச்சி இல்லாத பகுதிகளில் ஊற்றப்படுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு மாற்று நுட்பங்கள் உருவாகியுள்ளன.

 

இந்த சமீபத்திய சிகிச்சைகளைப் பற்றி தவறான கருத்து இருப்பதாக மருத்துவர் கோ நம்புகிறார். "முடி மாற்று அறுவை சிகிச்சை ஒரு வேளை கடந்த காலத்தில் மோசமாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று முடி மாற்று அறுவை சிகிச்சை சிறப்பாக இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

 

இந்த சிகிச்சைக்கு மிகவும் துல்லியத்தன்மை தேவைப்படுவதால் நல்ல கண் பார்வை உள்ளவர்களிடம் இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்ளும்படி கோ பரிந்துரைக்கிறார்.

 

"இதில் நிறைய கலை இருக்கிறது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மயிர்க்கால்கள் அது இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு எப்படி வளர்ந்தது என்பதை நினைவில் கொண்டு புதிய இடத்தில் வளர்கின்றன" என்றும் அவர் கூறுகிறார்.

 

எழுதியவர்,ரஃபேல் அபுச்சாய்பே-/-பிபிசி

பழகத் தெரிய வேணும் – 49


நல்லவரை இனங்காண்பது

என் மகள் கல்யாணத்திற்குமுன் கலகலப்பாக இருப்பாள். இப்போது அதிகம் பேசுவதில்லை. சாந்தமாக, பொறுப்பாக இருக்கிறாள்,” என்று கூறும் பெற்றோர் மகளின் மாற்றம் அவளுக்கு நல்லதுதானா, அல்லது வயது கூடியதால் நேர்ந்ததா என்று யோசிப்பதோ, அதனால் கவலைப்படுவதோ கிடையாது. ஏனெனில், அனேகமாக எல்லாப் பெண்களுமே இப்படித்தான் மாறுகிறார்கள்.

 

::கதை::

பல இளைஞர்கள் தங்கள் நண்பனுடைய திருமணத்திற்கு வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்தார்கள்.

 

மணமகனுடைய உறவுக்காரப்பெண் மல்லிகா அவர்களுடன் கல்லூரியில் மேற்படிப்புப் படித்தவள். பழைய நண்பர்களைப் பார்த்ததும் உற்சாகம் பெருக, அவர்களுடன் உட்கார்ந்து, பழைய நாட்களைப்போல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள்.

 

ஆனால், ஒரு வித்தியாசம். மல்லிகாவுக்கு இப்போது கல்யாணம் ஆகி, பிள்ளைகளும் இருந்தார்கள். மாமியார் முகம் சுண்டிப்போயிற்று.

 

கல்யாணத்திற்கு முன்பு எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். எப்போதும் அப்படியா!

 

`இவள் கண்ட ஆண்களுடன் பேசினால், பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்!’ என்று ஆத்திரப்பட்டாள். தன் மகனுக்குத் தூபம் போட்டாள்.

 

காதலித்து மணந்த மனைவியின் போக்கை அவன் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. “நாங்க எல்லாரும் ஒண்ணாப் படிச்சவங்கம்மா,” என்றான் அலட்சியமாக.

 

கணவனோ, மாமியாரோ, ஒரு பெண் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் கூர்ந்து கவனித்துக்கொண்டு, அதில் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால் அப்பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும்?

 

`பெரியவர்களை மதித்து நட,’ என்று தாயும், கணவரும் போதிக்க, குடும்பத்தில் பிரச்னைகளைத் தவிர்க்க பழைய போக்கை மாற்றிக்கொள்வாள் — மகிழ்ச்சியுடன் என்று கூற முடியாது.

 

::கதை::

காமாட்சிக்குத் தான் பெற்ற குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதோடு திருப்தி கிடைக்கவில்லை.  வீட்டுக்குப் பெரியவள் என்ற முறையில், பேரக்குழந்தைகளுக்கும் தானே பெயர் வைக்கவேண்டும் என்பது அவள் நம்பிக்கை.

 

ஆனால், புதுமையாக, நாகரிகமாக, தான் பெற்ற அருமை மகளுக்குப் பெயர் வைக்கவேண்டும் என்று ஒரு மருமகள் எண்ணினாள். அப்படி ஒரு பெயரை யோசித்தும் வைத்திருந்தாள்.

 

`இந்தத் தெருவில் எல்லார் வீட்டிலும் அந்தப் பெயர்கொண்ட ஒரு சிறுமி இருக்கிறாள். நன்றாக இருப்பதால்தானே வைத்திருக்கிறார்கள்!’ என்பது காமாட்சிப்பாட்டியின் எண்ணம்.

 

`நாளைக்கு என் குழந்தை தெருவில் போகும்போது அந்தப் பெயரைச் சொல்லி அழைத்தால், பல குழந்தைகள் திரும்பிப் பார்க்கும்!’ என்பது மருமகளுடைய வாதம்.

 

`நான் சொல்வதை யார் கேட்பார்கள்!’ என்று மாமியார் அரற்றினாள். இறுதியில், அவள் பிடிவாதம்தான் வென்றது.

 

இவ்வாறு, `நீ என்னைக் கஷ்டப்படுத்துகிறாய்!’ என்பதுபோல் தன்னிரக்கத்துடன் பேசுவதால் மற்றவர் மனதைத் துன்புறுத்துகிறோம் என்று சிலருக்குப் புரிவதில்லை.

 

நம்மிடம் ஓயாது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, `உன் நன்மைக்காகத்தான் சொல்கிறேன்,’ என்று சப்பைக்கட்டுக் கட்டுபவர்கள் உற்றவர்கள் அல்லர்.

 

::கதை::

என் பெண்ணின் முகத்தில் சிரிப்பே மறைந்துவிட்டது. `ஏன் எனக்குக் கல்யாணம் செய்துவைத்தாய்?’ என்று கோபிக்கிறாள்,” என்று ஒரு தாய் என்னிடம் குறைப்பட்டாள்.

 

மாப்பிள்ளை நல்லமாதிரிதான். பின் என்ன குறை?

 

வெளியில் எங்காவது போனால், பட்டுப்புடவைதான் கட்டிக்கொண்டு போகவேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறாளாம் மாமியார். இவளுக்கோ, நைலக்ஸ்தான் பிடிக்கிறது!’

 

உடுத்துவது ஒவ்வொருவருடைய சொந்த விருப்பம். சிறு சமாசாரம்தான். ஆனால், ஒருமுறை விட்டுக்கொடுத்தால், தம் பிடியை இறுக்கிக்கொள்வார்களே, அதிகாரம் செலுத்துபவர்கள்!

 

புன்சிரிப்பு மறையாது, `இதைத்தான் சாப்பிட வேண்டும், இப்படித்தான் நடக்கவேண்டும்,’ என்று பிறரைத் தொணதொணத்துக்கொண்டு இருப்பவர்களுக்கு இறுதியில் ஏமாற்றம்தான் கிட்டும் – அவர்கள் எவ்வளவு இனிமையாகச் சொல்வதாக நினைத்தாலும்.

 

இம்மாதிரியானவர்களால் நம் நேரம்தான் விரயமாகிறது. அவர்கள் சுயநலம் பிடித்தவர்கள், அல்லது பொறாமையால் அப்படிப் பேசுகிறார்கள் என்று புரிந்துகொண்டால் பிழைக்கலாம். ஏனெனில் அவர்கள் செய்வது உணர்ச்சிபூர்வமான வதை.

 

கேள்வி: ஏன் வதை? அக்கறையுடன், நம் நன்மைக்குத்தானே சொல்கிறார்கள்?

 

பதில்: “உனக்கு சந்தர்ப்பத்துக்குச் சரியாக நடக்கத் தெரியாது. அறிவோ, அனுபவமோ போதாது!” என்று மறைமுகமாக மட்டம் தட்டுவது போலில்லை?

 

உடனிருப்பவர் பழித்துவிடுவாரே என்று பயந்து, எந்தக் காரியத்தைச் செய்யும்போதும் அதீத கவனத்துடன் செய்தால், அல்லது விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால், ஒருவரது தன்னம்பிக்கை குறைந்துகொண்டே போய்விடாதா!

 

இம்மாதிரி ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்து, உடலும் மனமும் ஒருங்கே பாதிக்கப்பட்டு வாழ்வதைவிட தனியாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது மேலானது,” என்கிறார் ஓர் அனுபவசாலி.

 

உபயோகமான, மகிழ்ச்சி மட்டுமே அளிக்கும் உறவுகள் நம் கனவுகள் நனவாக கூடியவரை ஒத்துழைப்பார்கள். அப்படி இல்லாவிடினும், `இது நடக்கிற காரியமா!’ என்று அவநம்பிக்கை தெரிவிக்காமலாவது இருப்பார்கள்.

 

ஒருவர் துக்கத்தில் ஆழ்ந்திருக்கையில் ஆறுதலாக இருக்கும் நபர்தான் நல்ல நண்பர்.

 

::கதை::

ஒரு நாளிரவு, “உன்னை நாளைக்குப் பார்க்கமாட்டேன்னு தோணுது!” என்று கணவன் சொல்ல, சரோ சிரித்தாள். “ராத்திரி அப்படி எங்கே போயிடப்போறீங்க?”

 

அப்போது இருவருமே எதிர்பார்க்கவில்லை, அவன் இவ்வுலகைவிட்டே போகப் போகிறான் என்று.

 

சரோவால் அந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை.

 

`முப்பது வயதுகூட நிரம்பவில்லை! இவள் என்ன பாவம் செய்தாளோ!’ என்பதுபோல், அவள் காதுபடவே சிலர் கரித்தார்கள்.

 

. அடுத்த சில ஆண்டுகளில், சரோ மேற்படிப்பைத் தொடர்ந்து, நல்ல உத்தியோகத்திலும் அமர்ந்தாள். முன்பு பழித்தவர்கள் இப்போது சொந்தம் கொண்டாட வந்தபோது அவளுக்கு உலகம் புரிந்தது.

 

வெளியூரில் இருந்த தன் இல்லத்திற்கு தூரத்து உறவினளான சுந்தரியை வற்புறுத்தி அழைத்து, நன்கு உபசரித்தாள். அவளுடைய சுந்தரி வயதில் மூத்தவள்

 

`ஒரு மாதம், தினமும், இரண்டு மைல் தொலைவிலிருந்த என் வீட்டிற்கு நடந்தே வந்து, ஆறுதலாகப் பேசினீர்களே! அந்த நன்றியை மறக்கவே மாட்டேன்!’ என்று திரும்பத் திரும்பச் சொன்னாளாம், நன்றிப் பெருக்குடன்.

 

இப்படிப்பட்ட நண்பர்கள் வெவ்வேறு துறையில் ஈடுபாடு கொண்டவராக இருக்கலாம். ஒத்த மனத்தினராக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. வயது வித்தியாசமும் பெரிதில்லை.

 

நல்ல நண்பரை எப்படி இனங்கண்டுகொள்வது?

 

அவருக்காக நாம் மாற வேண்டியிருக்காது. நம் கடந்த காலப் பிழைகள் அவருக்குத் தெரிய வந்தாலும், எதிர்காலம் சிறப்பாகத்தான் அமையும் என்ற நம்பிக்கையுடன் நாம் இருக்கிறபடியே நம்மை ஏற்பார்.

 

பிரதிபலனை எதிர்பாராது, நம்மை ஊக்குவிப்பார்.

 

நம்மையே நமக்கு உணர்த்துகிறவர். நம் வெற்றிக்காகப் பெருமைப்படுகிறவர்.

 

நம் இழப்புகள், குறைகள் பெரிதாகத் தோன்றாதுபோக, நம்மை நம்மால் ஏற்கமுடியும்.

 

அவர் அண்மையில் இருக்கையில், நாம் அதிகம் சிரிப்போம்.

 

நாம் என்ன சொன்னாலும், மனதில் எதை நினைத்து அப்படிச் சொல்கிறோம் என்பது அவருக்குப் புரியும்.

 

இப்படி ஒருவர் கிடைத்தால், அவரை SOULMATE (ஆத்மார்த்தி) என்கிறோம்.

 

இப்போதெல்லாம், இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்தால் அவர் நாணுவதில்லை. நல்லவர்களை `ஏமாளி’ என்று எண்ணிவிடும் காலம் இது.

 

நமக்கென்று சில உண்மையான நண்பர்கள் கிடைக்காமலா போவார்கள்!

::--நிர்மலா ராகவன் -/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

தொடரும்.... 
👉👉ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக