திருக்குறள்...-/57/-வெருவந்த செய்யாமை


திருக்குறள் தொடர்கிறது




57. வெருவந்த செய்யாமை

 

குறள் 561:

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்ஒத்தாங் கொறுப்பது வேந்து.

மு.வ உரை:

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

சாலமன் பாப்பையா உரை:

தவறு செய்வோரைக் கண்டு, நடுநிலையில் நின்று ஆய்ந்து, அத்தவற்றை அவர் திரும்பவும் செய்யாமல் இருக்கத் தவற்றுக்கு ஏற்பத் தண்டிப்பதே ஆட்சி.

கலைஞர் உரை:

நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

English Explanation:

He is a king who having equitably examined (any injustice which has been brought to his notice), suitably punishes it, so that it may not be again committed.

 

குறள் 562:

கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்கம்

நீங்காமை வேண்டு பவர்.

மு.வ உரை:

ஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும் போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

நெடுங்காலம் ஆட்சி செய்ய விரும்புபவர் தண்டிக்கும்போது கடுமையாகத் தண்டிப்பவர்போல தொடங்கி வரம்பு கடவாமல் செய்க.

கலைஞர் உரை:

குற்றங்கள் நிகழாமல் இருக்கக் கண்டிக்கும்போது கடுமை காட்டித், தண்டிக்கும் போது மென்மை காட்டுகிறவர்களின் செல்வாக்குதான் தொய்வின்றி நெடுநாள் நீடிக்கும்.

English Explanation:

Let the king, who desires that his prosperity may long remain, commence his preliminary enquires with strictness, and then punish with mildness.

 

குறள் 563:

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

மு.வ உரை:

குடிகள் அஞ்சும் படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:

குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.

கலைஞர் உரை:

குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்.

English Explanation:

The cruel-sceptred king, who acts so as to put his subjects in fear, will certainly and quickly come to ruin.

 

குறள் 564:

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

உறைகடுகி ஒல்லைக் கெடும்.

மு.வ உரை:

நம் அரசன் கடுமையானவன் என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:

நம்மை ஆளுவோர் மிகவும் கொடியவர் என்று குடிமக்களால் சொல்லப்படும் கொடுஞ் சொல்லைப் பெற்ற ஆட்சி அதன் ஆட்சிக் காலம் குறைந்து விரைவி்ல் அழியும்.

கலைஞர் உரை:

கடுஞ்சொல் உரைக்கும் கொடுங்கோல் என்று குடிமக்களால் கருதப்படும் அரசு, தனது பெருமையை விரைவில் இழக்கும்.

English Explanation:

The king who is spoken of as cruel will quickly perish; his life becoming shortened.

 

குறள் 565:

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்பேஎய்கண் டன்ன துடைத்து.

மு.வ உரை:

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

சாலமன் பாப்பையா உரை:

தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.

கலைஞர் உரை:

யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.

English Explanation:

The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.

 

குறள் 566:

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்நீடின்றி ஆங்கே கெடும்.

மு.வ உரை:

கடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீடித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.

சாலமன் பாப்பையா உரை:

சுடுசொல்லையும், முகதாட்சண்யம் இன்மையும் உடைய அரசின் பெருஞ்செல்வம், பெருகாமல் உடனே அழியும்.

கலைஞர் உரை:

கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

English Explanation:

The abundant wealth of the king whose words are harsh and whose looks are void of kindness, will instantly perish instead of abiding long, with him.

 

குறள் 567:

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தன்அடுமுரண் தேய்க்கும் அரம்.

மு.வ உரை:

கடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்கு காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

கடுமையான சொற்களும், வரம்பு மீறிய தண்டனையும் அரசின் பகையை வெல்லுதற்கு ஏற்ற ஆயுதத்தைத் தேய்த்துக் குறைக்கும் அரம் ஆகும்.

கலைஞர் உரை:

கடுஞ்சொல்லும், முறைகடந்த தண்டனையும் ஓர் அரசின் வலிமையைத் தேய்த்து மெலியச் செய்யும் அரம் எனும் கருவியாக அமையும்.

English Explanation:

Severe words and excessive punishments will be a file to waste away a king's power for destroying (his enemies).

 

குறள் 568:

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்சீறிற் சிறுகுந் திரு.

மு.வ உரை:

அமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் உடன் அமைச்சர்களுடன் கலந்து பேசிச் செயற்படாத அரசு, தன்னைச் சினவழி நடத்தித் தவறு வரும்போது அமைச்சர்களைச் சினந்தால், அரசின் செல்வம் நாளும் குறையும்.

கலைஞர் உரை:

கூட்டாளிகளிடம் கலந்து பேசாமல் சினத்திற்கு ஆளாகிக் கோணல் வழி நடக்கும் அரசு தானாகவே வீழ்ந்து விடும்.

English Explanation:

The prosperity of that king will waste away, who without reflecting (on his affairs himself), commits them to his ministers, and (when a failure occurs) gives way to anger, and rages against them.

 

குறள் 569:

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்வெருவந்து வெய்து கெடும்.

மு.வ உரை:

முன்னமே தக்கவாறு அரண் செய்து கொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

சாலமன் பாப்பையா உரை:

நெருக்கடி வருவதற்கு முன்பே தான் தப்பித்துக் கொள்ளப் பாதுகாப்புச் செய்துகொள்ளாத ஆட்சி, நெருக்கடி வந்தபோது பாதுகாப்பு இல்லாததால் அஞ்சி, விரைவில் அழியும்.

கலைஞர் உரை:

முன்கூட்டியே உரிய பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் வேந்தன், போர் வந்துவிட்டால் அதற்கு அஞ்சி விரைவில் வீழ நேரிடும்.

English Explanation:

The king who has not provided himself with a place of defence, will in times of war be seized with fear and quickly perish.

 

குறள் 570:

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோல் அதுவல்லதில்லை நிலக்குப் பொறை.

மு.வ உரை:

கடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக் கொள்ளும், அது தவிர நிலத்திற்கு சுமை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

மக்கள் அஞ்சும்படி தண்டனை தரும் ஆட்சி, நீதி நூல்களைக் கல்லாதவரின் துணையுடன் நிற்கும் நாட்டிற்கு அக்கூட்டத்தாரைவிடப் பெரிய சுமை வேறு இல்லை.

கலைஞர் உரை:

கொடுங்கோல் அரசு படிக்காதவர்களைத் தனக்கு பக்கபலமாக்கிக் கொள்ளும் அதைப்போல பூமிக்குப் பாரம் வேறு எதுவுமில்லை.

English Explanation:

The earth bears up no greater burden than ignorant men whom a cruel sceptre attaches to itself (as the ministers of its evil deeds).

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து

பழம் நீ அப்பா! -சிறுகதை



"இற் இஸ் மெடிக்கல் மிறாக்கிள்" என்று கூறிக்கொண்டு வெளியில் வந்த டொக்டரை அங்கு காத்துக்கொண்டு நின்றவர்கள் கவனிக்கவே இல்லை.

உள்ளே கழுத்தெலும்பு முறிவினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கதிரேசனுக்கு என்ன ஆகுமோ என்று அந்தரப்பட்டு, அழுதுகொண்டிருக்கும் அவன் அம்மாவை, அப்பா சிவகுருவும், அண்ணன் கணேசனும் ஆறுதல் கூறிக்கொண்டிருக்க, மறு பக்கத்தில் கதறிக்கொண்டு இருக்கும் கதிரேசனின் இளைய மனைவியை, மூத்த சம்சாரம் என்னவெல்லாமோ சொல்லித் தேற்றிக்கொண்டு இருந்தார்.

**********

கதிரேசன் உயரமான ஒரு மலை உச்சியில் உள்ள பிரதேசத்தில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவன். அவன் மிகவும் அழகும், வீரமும், அறிவும் உடையவன் என்பதாலோ என்னவோ அழகிய இரு பெண்களுக்குக் கணவனாகியிருந்தான். ஊருக்கு உழைப்பதில் முன்னிற்பவன். மக்களுக்காக வாழ்பவன்.

இம்முறை ஊரில் பருவ மழை பொய்த்ததால் ஊர் மக்கள் மழை வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். அதன் நிமித்தம், ஊருக்கு நல்லதையே செய்ய நினைக்கும் கதிரேசனைத் தெரிவு செய்து, அவனுக்கு அளவுக்கு அதிகமாகவே அலங்காரம் செய்து, ஊர் வீதிகள் எல்லாம் வலம் வர வைத்தார்கள். அலங்காரம் என்றால் கொஞ்சம் அல்ல; நிறையவே!

கழுத்துக்குப் பல அடுக்கில் பழ மாலைகள்! முதலில் மாதுளம் பழங்களால் ஒரு மீட்டர் ஆழத்திற்கு மாலை. அதன் மேலே மாம்பழங்களினால் அடுத்த அடுக்கில் இன்னொரு மாலை. தொடர்ந்து ஆப்பிள் பழம் , தோடம்பழம், பியேர்ஸ் பழம், வாழைப்பழம், எலுமிச்சம் பழம், திராட்சைப் பழம், செரிப் பழம் என்று ஒன்பது அடுக்கில், பார்த்தவர்கள் 'பழம் நீ அப்பா' என்று கூறும் அளவுக்கு பழ மாலை அலங்காரம்.

இவ்வளவையும் சுமந்துகொண்டு காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரை, மேள தாளங்களுடன், காவடி ஆட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பொம்மை ஆட்டம்  என்று சூழவர, சேவல் கொடி பிடிக்க, மூன்று ஆண் மயில்கள் தோகை விரித்து நடக்க, கால்களை முன்புறமாகவும், பின் புறமாகவும் ஓடி, இடைக்கிடை இடப்பக்கமும், வலப் பக்கமுமாக ஆட்டி, மேலே தொங்கி, கீழே பதிந்து, சுற்றிச் சுழன்று நடனம் ஆடித் தொடர்ந்து முழு ஊரையும் வலம் வந்ததால், கழுத்தில் மாட்டப்பட்டிருக்கும் 50 கிலோ நிறையுள்ள பழ மாலைகளின் பாரத்தினால் கழுத்து/முதுகு எலும்புகள் எல்லாம் முறிந்து நொறுங்கி இருக்க வேண்டும். வலி தாங்க முடியாமையினால்தான் அவனை அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டோடினார்கள்.

**********

வெளியில், அப்பா சிவகுரு, அம்மாவுக்கு ஆறுதல் கூறினார். "கவலைப் படாதே. அவன் நீ தைரியம் கொடுத்து வளர்த்த பிள்ளை. எப்படியும் வழக்கம்போல வென்று வருவான்; அமைதியாய் இரு".

அண்ணன் கணேசன் தன்  தம்பியின் மனைவிமார் கதறுவதைக் கண்டு, தனக்கு இப்படி ஒரு மனைவியும் அமையவில்லையே என்று சிறிது சங்கடப்பட்டார். இன்னும் நிரந்தர பிரமச்சாரி. வயதே போவதில்லை.  தனது மொபைலின் கமெராவை எடுத்துத் தன் மூஞ்சையைப் பார்த்ததும், " சீ.., இந்தப் பெரிய நீண்ட மூக்கோடு... , பானை வயிறும், தோற்றமும்......,சகிக்க முடியவில்லை... எவள் எனது பக்கம் வருவாள்? இனிப்புச் சாப்பிடுவதை முதலில் நிற்பட்ட வேண்டும்; இனிமேல், உந்தப்  புக்கை, மோதகம், அவல் என்று ஒன்றும் இனிப்புச் சாப்பாடு செய்து தர வேண்டாம் என்று அன்போடு உணவு தரும் சனங்களுக்கும் சொல்ல வேண்டும்" என்று நினைத்தபடி,  "என்றாலும், ஊர் மக்கள் என்னைத்தானே என்ன செய்தாலும் முதலில் கூப்பிட்டுக் கூட உதவிக்கு நிற்கச் சொல்வார்கள்" என்று திருப்திப்பட்டார்.

அம்மா, ''இந்தப் பாழாய்ப் போன பழங்களால்தானே இவ்வளவும்.." என்று கண்களைக் கசக்கிக் கொண்டார்.

கணேசன் சொண்டுக்குள் சிறிய முன்முறுவலுடன் "சின்ன வயசில், ஓர் அங்கிள் கொடுத்த உந்த ஒற்றை மாம்பழத்தை, அப்பா, அம்மா எனக்குத் தந்ததனால்தானே உவன் என்னோடு சண்டை போட்டு, உலகமெல்லாம் சுற்றி, கோவித்துக்கொண்டு மலை மலையாய் ஏறிப் போய் ரகளை செய்தவன். இப்போ அதே பழமே அவனை....." என்று நினைத்துச் சிரித்த அடுத்த கணமே, தனது முகத்தைக் கவலையாக மாற்றிக் கொண்டு தாயை நோக்கி "அம்மா, நீங்கள்தான் எங்களுக்குச் சக்தியும், பலமும் தருபவர்; நீங்களே இப்படி நொடிந்துபோனால்...." என்று கூறிச் சமாதானம் செய்ய முனைந்தார்.

**********

இப்பொழுது டொக்டர் அவர்களின் அருகில் வந்து, "ஒன்றுக்கும் கவலைப் படாதேயுங்கோ. இவ்வளவுக்கும் எலும்புகள் எல்லாம் சுக்கு நூறாய் உடைந்திருக்க வேண்டும்; ஆனால், உங்கள் பிள்ளைக்கு ஒருவிதமான முறிவும் இல்லை, சாதாரண மஷெல் பெயின்தான், நீங்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போகலாம். நீங்கள் கும்பிடுகின்ற கடவுள்தான் அவனைக் காப்பாற்றினார்" என்றார்.

**********

வெளியில் வரும் கதிரேசனை வரவேற்க, அந்தக் கொட்டும் மழையில் ஊர்ச் சனங்கள் எல்லோரும் வந்திருந்தார்கள். அவனுக்கு நன்றி தெரிவிக்கும் நோக்கத்தில் முன் வரிசையில் நின்ற 9 பேரிடம் - பழப் பிரார்த்தனை பலன் அளித்தபடியால் - அவனுக்குச் சாத்துவதற்காக பழ மாலைகள் இருந்தன. அதில் கோர்க்கப்பட்டிருக்கும் பழம் பலாப்பழம்!

மாலைகளைக் கண்டதுமே கதிரேசன் அலறி அடித்துக்கொண்டு திரும்பவும் E.D. யில் போய்ப் படுத்தவன் திரும்பி வரவே இல்லை.

நிலைமையைக் கண்ட கணேசன், 'என் தம்பி சார்பில் நான் உங்கள் மாலைகளை அணிகிறேன்" என்று கூறி, எல்லாவற்றையும் யானைப் பலத்தோடு ஏற்றுக்கொண்டார். இதனைத் தூரத்தில் நின்ற எலியொன்று வேடிக்கை பார்த்தது.

பாசக்கார அண்ணனல்லவா? 

:செ.சந்திரகாசன்

[குறிப்பு: பெயர்கள், சம்பவங்கள் எல்லாம் கற்பனையான உண்மைகளே(?)]