தீபவம்சத்தின்படி, அலவத்த [புலகத்த] சபியா (பாகிய), பனய, பழைய மற்றும் தட்டிக ஆகிய ஐந்து தமிழ் மன்னர்கள் [புலகத்தன், பாகியன், பண்டியமாறன், பழையமாறன் மற்றும் தட்டிகன் / Alavatta (Pulahattha), Sabhiya (Bahiya), Panaya, Palaya, and Dathika] மொத்தம் பதினான்கு ஆண்டுகள் ஏழு மாதங்கள் ஆட்சி செய்தனர். ஆனாலும் இவர்கள் இலங்கைக்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்று தீபவம்சம் கூறவில்லை. தீபவம்சம் 20-17ன் படி தட்டிக என்பது தமிழர் பெயர் என்பதைக் கவனியுங்கள். மகாநாமதேரர் [மஹாநாம] தீபவம்சத்தில் உள்ள ஐந்து தமிழர்களை, ரோகணத்தில் இருந்து ஒரு பிராமணனையும் மற்றும் ஏழு தமிழர்களையும் சேர்த்து, எட்டு பேராக மகாவம்சத்தில் திரித்து விரிவுபடுத்தினார். அதாவது தீபவம்சத்தில் அரியணைக்கு போட்டியிட்ட ஐந்து போட்டியாளர்கள், மகாவம்சத்தில் எட்டு பேர் ஆனார்கள். மேலும் பிராமணனை தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தினர். பிராமணனின் பெயர் திஸ்ஸ. எனவே, முன்பு கூறியது போல், பிராமணனும் ஒரு தமிழனாக இருக்கலாம்? பின்னர் ஏழு தமிழர்கள் பிராமணனையும் மன்னனையும் தோற்கடித்தனர். மேலும் மன்னன் தனது இரண்டு மனைவிகளில் ஒருவரான சோமாதேவியை, அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். ஏழு தமிழர்களில் ஒருவன் சோமாதேவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு திரும்பிச் சென்றுவிட்டான். ஆனாலும் அனுலாவும் சோமாதேவியும் [Anula and Somadevi] வட்டகாமினியின் மனைவிகள் என்று தீபவம்சம் ஒன்றும் கூறவில்லை.
ஒருவன் வெளியில் இருந்து வந்து, நாட்டை கைப்பற்ற போரில் ஈடுபட்டு, ஏற்கனவே திருமணமான தோற்ற மன்னனின் மனைவி, தனக்கு காணும் என்று அவளுடன் திருப்தி அடைந்து, நாட்டை விட்டுவிட்டு திரும்பி போனார் என்பதை, யாராவது நம்புவார்களா? மற்றொரு தமிழர், ஒரு பௌத்தர் என்பதைச் சுட்டிக்காட்டி, அவர் புத்தரின் பிச்சைப் பாத்திரத்துடன் திருப்தியடைந்து நாடு திரும்பினாராம் ! பின்னர் தீபவம்சத்தில் கூறப்பட்டதைப் போலவே மற்ற ஐந்து பேரும், இலங்கையை அடுத்தடுத்து ஆண்டனர். இது ஒன்றே மற்றைய மூவரையும் வலிந்து கதையில் உட் புகுத்தியதைக் காட்டுகிறது. பின்னர் அரசன் வட்டகாமினி திரும்பி வந்து, தமிழ் அரசன் தட்டிகனை தோற்கடித்து மீண்டும் ஆட்சியைத் கைப்பற்றி, பன்னிரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் ஆட்சி செய்தார். அவர் தனது மற்றொரு மனைவி சோமாதேவியையும் இந்தியாவிலிருந்து அழைத்து வந்தார். இலங்கையைச் சேர்ந்த ஒருவர், பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஒரு பெண்ணைக் கண்டுபிடித்தார் என்றால் யாராவது நம்புவார்களா?
எப்படியாகினும், அந்த காலத்திலும் இலங்கை மற்றும் தென்னிந்தியா இடையே வணிகம், சமயப் பரிமாற்றம் மற்றும் அரச மரியாதை தொடர்புகள் இருந்ததுடன், பௌத்த பிக்குகள் மற்றும் வணிகர்கள் இரண்டு தீவுகளுக்கும் இடையே சுதந்திரமாகச் சஞ்சரித்தனர். எனவே, பௌத்த பிக்குகள், வணிகர்கள், மற்றும் இராசஅரண்மனையினர் வழியாக சோமதேவியின் இருப்பிடம் பற்றிய தகவல் அரசனிடம் வந்திருக்கலாம் என்று நம்பவும் ஒரு அரிய வாய்ப்பு உண்டு. குறிப்பாக, காஞ்சிபுரம், மதுரை, அனுராதபுரம் போன்ற பகுதிகள் பல உறவுகளால் அன்று இணைக்கப்பட்டிருந்தன என்பதற்கு வரலாற்று சான்றுகள் உண்டு.
மகாவம்சத்தின் 33 ஆம் அத்தியாயம் பத்து அரசர்களைப் பற்றியது, அடுத்த அத்தியாயம் பதினொரு மன்னர்களைப் பற்றியது, அதுக்கு அடுத்த அத்தியாயம் பன்னிரண்டு மன்னர்களைப் பற்றியது, மகிழ்ச்சியான ஒரு ஏறுவரிசையில் அதிகரிப்பு! வட்டகாமினி மதக்கொள்கை கோட்பாட்டை முதல் முறையாக புத்தக வடிவில் எழுதச் செய்தார். பிற்காலப் பகுப்பாய்வில் தமிழ் அரசன் தட்டிக மிகவும் முக்கியமானவராக வருகிறார்.
வட்டகாமனிக்குப் பிறகு மகசுழி மகாதீசன் [Mahachuli Mahatissa] பதினான்கு ஆண்டுகள் கி.மு. 76 தொடக்கம் கி.மு. 62 வரை ஆட்சி செய்தார். பின்னர் வட்டகாமனியின் மகன் கோரநாகன் [Coranaga] பன்னிரண்டு ஆண்டுகள் கொள்ளையனைப் போல அரசாண்டான். மகசுழியின் மகன் திஸ்ஸா [Tissa], கோரநாகனுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். பின்னர் சிவா [Siva] ராணி அனுலாவுடன் ஒன்றாக இணைந்து வாழ்ந்து, ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். பின்னர் வெளிநாட்டில் இருந்து வந்த வடுக [Vatuka], ஒரு தமிழன் ஒரு வருடம் மற்றும் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தார். வடுகா என்பது தெலுங்கு பேசும் மக்களைக் குறிக்கப் பயன் படுத்தப்படும் ஒரு சொல், ஆனால் இங்கு அவர் ஒரு தமிழர் என்று குறிக்கப் பட்டுள்ளது. பின்னர் திஸ்ஸ ஒரு வருடமும் ஒரு மாதமும் ஆட்சி செய்தார். பின்னர் ஒரு தமிழ் மன்னர் நிலயா [Nilaya] மூன்று மாதங்கள் ஆட்சி செய்தார். தீபாவம்சம் 20 - 30 இன் படி, அனுலா மேற் கூறிய சிறந்த நபர்களைக் கொன்று நான்கு மாதங்கள் ஆட்சி செய்தார். இந்த அனுலா வட்டகாமினியின் மூத்த சகோதரனின் மனைவி என்றால், அவள் மிகவும் வயதான காலத்திலும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது?. வட்டகாமினி அவளை அழைத்துச் சென்றபோது அவள் ஒரு குழந்தையுடன் இருந்தாள். எனவே அப்பொழுது அவளுக்கு 25 வயது என்றால், வட்டகாமினி இறக்கும் போது அவளுக்கு 37 வயது இருக்க வேண்டும். பிறகு மற்றவர்கள், 14+12+3+4, மொத்தமாக 33 ஆண்டுகள், ஆட்சி செய்தனர்.
எனவே, அவள் 70 வயதிலும் தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும். இருப்பினும், அது தெளிவாக இல்லை, ஆனால் சாத்தியம் உள்ளது. சிவா, வடுக, நிலயா என்பன தமிழ்ப் பெயர்கள், இந்த ஆட்சியாளர்கள் அனைவரும் சிறந்த மனிதர்கள் என்று வர்ணிக்கப்படுகிறார்கள். திஸ்ஸா கூட தமிழ் பெயராக இருக்கலாம்?