'மாயையின் மயக்கம்' -பகுதி: 02 -தொடர்கதை



ரியோ வுக்கு வந்ததும், தன் இருக்கையை அருணுக்கு மிக அருகில் இழுத்து, பட்டும் படாததுமாக நெருங்கி அமர்ந்து கொண்டு, உங்களைப்பற்றி சொல்லுங்களே என்றாள். ஆரணியின் அகவை 21 அல்லது 22 இருக்கலாம். என்றாலும் பேசுவது பழகுவதைப் பார்த்தால் ஒரு 'டீன் ஏஸ்' [teen age] பெண் மாதிரியே இருந்தது. சங்க காலத்து தமிழில் 'டீன் ஏஸ்'  பெண்ணை 'மடந்தை' என்று சொல்வார்கள். ஆனால் மடந்தை என்ற சொல் ஆரணியின் அழகை பூரணமாக கொண்டு வரவில்லை அவளைப் பார்க்கும் போதெல்லாம் 'முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள்' என்ற திருஞானசம்பந்தநாயனார் பாடல் எவருக்கும் ஞாபகம் வரலாம்? அப்படித்தான் ஓரளவு  மாந்தளிர் போல் நிறத்தினையும் அரும்பு போல்  முலையினையுடைய பார்வதி போலும் அவள் தன் இளமையையும், வனப்பையும் வெளிக்காடிக் கொண்டு இருந்தாள்.

அருண் தன் லண்டன் வாழ்வை  சுருக்கமாக, குறிப்பாக அவளுக்கு, மற்றவர்களுக்கு பொதுவாக விளக்கிக் கொண்டிருந்தான். முன் இரவு நேரம், விளக்கின் ஒளி அவள் முகத்தில் பட்டு பட்டு விழுந்து கொண்டிருந்தது. உறைந்த மழைபோல கேசங்கள் அவள் கன்னத்தில் வழிந்து கிடந்தன. ஆரணி, வைத்த கண் வாங்காமல் அருணையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வாயிலிருந்து விழும் வார்த்தைகளை கையேந்தி பிடித்துக் கொண்டிருப்பது போல் இருந்தது. அவள் கண்களின் இமைகள் ஏதேதோ பேசின. 

அவள் திடீரென, "எமக்கு பசிக்குதே, ஐஸ்கிரீமுடன் நாம் எதாவது  சாப்பிடுவோமாஎன்றாள் ஒருவித சிணுங்கல்களுடன். ”அவ்வளவுதானேபிரச்சனையில்லை, என்னென்ன வேண்டும் என்று பொதுவாக எல்லோரிடமும், ஆனால் குறிப்பாக அவள் முகத்தை பார்த்தபடி கேட்டான். அவள் கண்கள் மின்னின. அந்த ஒற்றைப் புன்னகை அவனை ஆழமாக இழுத்தது.

தன்னை சுற்றிய சூழல் மறந்து, அவனின் இரண்டு விழிகளும் ஒன்றையே தேடுது. இத்தனை இளம் பெண்களுக்குள் அவள் மட்டும் எப்படி தனியாகிறாள்? எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை. அவனுக்கு அதன் பதில் அப்பொழுது புரியவில்லை, என்றாலும் .. அவள் பார்வை ...  அதற்காகவே தவமிருக்கிறது அவனது விழிகள்!

நேர்வடிவான தாடையை கைகளில் ஏந்தி முழங்கையில் முட்டுக் கொடுத்து அவனையே பார்த்தபடி இருந்தாள், ஆரணி. மறவர்கள் தங்களுக்குள் ஏதேதோ பேசத் தொடங்கி விட்டார்கள். அவளின் சீரான பல் வரிசை பளிச்சென்றது. அந்தக் கணத்தில் ஏதோ ஒன்று அவனைப் பற்றி இழுத்தது. பல வருடங்கள் தூங்கிய சிக்காடா (Cicada) பூச்சி [சிள் வண்டு அல்லது சுவர்க்கோழி], பெண் சிக்காடாவை  ஈர்ப்பதற்காக வெளியே வந்தது சத்தம் போடுவது போல அவன் மனதும் சத்தம் போட தொடங்கிவிட்டது.

ரியோவை விட்டு வெளியே வரும் பொழுது, அவளது கைகள் அவனது கைகளுடன் இணைந்தன. கொஞ்சம் தூரத்தில் பொன் மஞ்சளில் அலங்காரக் கந்தன், வடக்கு வீதி நோக்கி தேவிகளுடன் ஊர்வலம் போய்க் கொண்டு இருந்தார். அவளது தோழிகள், எதோ சாட்டு சொல்லிவிட்டு, வடக்கு வீதிக்கு சென்று விட்டார்கள். அவன் அங்கு இருந்த ஒரு நகைக் கடையில் தனது முதல் பரிசாக தங்கச் சங்கிலி வாங்கி, தானே அவள் கழுத்தில் போட்டு ரசித்தான்! 

அப்பொழுது, ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பத்தில் நிற்பது போல குறுகுறுப்பாக அவன் மனம் துள்ளியது. விமான ஓடுதரை விளக்குகள் போல எண்ணங்கள் வந்து அவனைத் தாக்கின. அவன் உதடுகளில் இன்னும் கொடுக்கப்படாத முத்தங்கள் பல இருந்தன. அவன் விரல் நுனிகளில் இன்னும் தொட்டுப் பார்க்க வேண்டிய சமாச்சாரங்கள் நிறைய இருப்பது போல பட்டது. அவன் வயிற்றுக்குள்ளே இவ்வளவு காலமும் அடக்கி வைத்திருந்த ஆசைகள் இப்போது வெளியே வரத் துடித்தன. எல்லாத்தையும் அவிச்சு, வடித்துப் பார்த்தால் மிஞ்சியது ஒன்றுதான். ஆரணியை, அவளின் குறும்பு சேட்டையை, அவளின் அழகை, அவளின் கொஞ்சல் பேச்சை அவனால் மறக்க முடியவில்லை. அவன் வாழ்ந்த வாழ்க்கையின் உண்மையான காரணம் அவளிடத்தில் தான் இருப்பது போல அவனுக்குப் பட்டது.

இரவில் ஒன்றே ஒன்று .. மனதில் சென்றதேன்

தேடி .. உனைத் தேடி .. நான் அலைந்ததேன்

பறக்கும்  பறவை நானோ .. விரியும்  மலர்கள்  நீயோ 

தேனே ... கரும்பே ..நீ யென் தேவி .. தேவி

 

உன் கண்கள் அலைய என் மனம் அலைய

நான்...என் இதயத்தின் அருகே எரிகிறேன்

என் இதயத்தை நீ எடுக்க அழகுக்கு பலியாக

அழகான பெண்ணே காதலில் விழுகிறேன்

அவன் வாய் அவனை அறியாமல் பாடிக்கொண்டு இருந்தது! அவன் மீது படர்ந்த முதல் பெண் தீண்டல் [ஸ்பரிசம்] அவளுடையதே. இணைந்த கைகள் மெல்ல மெல்ல அவள் இடையை வருடின. அவளும் அவனை அணைத்தபடி நடந்தாள். அந்த நெருக்கத்தில் அவளின் மூச்சு காற்றோடு அவன் உறவாடினான். அவளது உள்ளங்கை வேர்வையை முதல் முதல்  உணர்ந்தான். அவள் சுவாசம் புரிந்தது, அவள் வாசம் தெரிந்தது. அவள் விழிகளின் வார்த்தைகள் உணர்ந்தான். என்றாலும், தோழிகள் திரும்பி வர, இருவரும் நாளை சந்திப்போமென பிரிந்தனர்.

அன்றில் இருந்து ஒவ்வொரு நாளும் அருண் நல்லூர் ஒழுங்காக  வந்தான். ஆனால் என்றுமே மிக எளிய சாதாரண பருத்தி வேட்டியும் பருத்தி வெள்ளை மேல் சட்டையுடன் மட்டுமே. என்றாலும் அவனின் நடை உடை பாவனை மற்றும் பேச்சு அவனை யார் என்று காட்டிக் கொடுத்துக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் அவளுடன் அவன் பொழுது போனது. அவன் அவளுக்கு ஒவ்வொரு நாளும் எதோ ஒரு பரிசு, அவள் கேட்பதெல்லாம் வாங்கிக் கொடுத்து அவளை அலங்காரப்படுத்தி அழகுபார்த்து அதில் ஒரு மகிழ்ச்சி அடைந்தான். அவளும் அவனுடன் நெருங்கி நெருங்கி பழகிக் கொண்டே இருந்தாள். முதலில் கொஞ்சம் திருவிழா, பின் கொஞ்சம் ரியோ, லிங்கம் என தோழிகளுடன் அவள் அவனை சந்தித்தாலும், அதன் பின் அவள் அவனுடன் மட்டும் தனியாக போய்விடுவாள். இருவரும் புது தம்பதிகள் போலவே நெருக்கமாக இருந்தார்கள்.

அவள் தினமும் வெவ்வேறு கண்ணைக் கவரும் உடையில் அவனுக்கு இன்பம் ஊட்டிக் கொண்டே இருந்தாள். அவனும் விலையுயர்ந்த உடைகள், மாலைகள், வளையல்கள் என அலங்காரங்கள் - அனைத்தும் திருவிழாக் கடைகளிலிருந்து வாங்க்கிக் கொடுத்துக் கொன்டே இருந்தான். அவள் எல்லாவற்றையும் ஏற்று, மேலும் மேலும் தன் நெருக்கத்தையும் கூட்டினாள். அவன் அவள் என்னுடையவளே என்ற மகிழ்வில்,  அவளுடைய அணைப்பில், சிரிப்பில், அழகில், கொஞ்சல் பேச்சில் தன்னையே இழந்து கொண்டு இருந்தான்.

நன்றி 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

பகுதி: 03 தொடரும்