(செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனை சிறுகதை)
மேல் வானம் தாழ்வாகத் தொங்கியது, அதுவும் துக்கம் அனுசரிப்பது போல. சிவப்பு பூமியின் அடியில், நீண்ட நேரம் அலறல்கள், பிரார்த்தனைகள் மற்றும் கனவுகளுடன் மங்கின. முப்பத்தி மூன்றாவது மண்டை ஓடு மெதுவாகத் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த வாரம் அமைதி மீண்டும் உடைந்தது. அதன் அருகில் - ஒரு சிறு குழந்தையின் பள்ளிப் பை, காலத்தால் மங்கிப்போனது, ஆனால் அதன் இருப்பு பல கதைகளைச் சொல்லப்போகுது. மறக்கப்பட்ட ஒரு தாலாட்டை உச்சரிப்பது போல, தமிழ் எழுத்துக்கள் அதன் குறுக்கே நடனமாடின.
அந்தக் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அருகே, கூடியிருந்த பார்வையாளர்களிடையே, ஐம்பது அகவை மதிக்கத்தக்க அனந்தி என்ற பெண், 1996 ஆம் ஆண்டு ஒரு சோதனைச் சாவடியில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போன தனது தம்பி சிவகுமாரின் புகைப்படத்தை கையில் ஏந்தி நின்றாள். "கண்ணா, நீ அழுதாயா? உன்னைப் பேச அனுமதித்தார்களா? நீ இறந்தபோது நீ தனியாக இருந்தாயா?" இப்படியான அவளின் மனஉளைச்சலுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை, அவள் பதில்களை எதிர்பார்க்கவும்
இல்லை.
ஆனால் இன்று, ஏதோ மாற்றம் ஏற்பட்டது. குழந்தையின் எலும்புகளுக்கு அருகில் ஒரு சிறிய கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய இதயம் பதைபதைத்தது. அவள் கண்கள் கலங்கின. ஒருகாலத்தில் தம்பி அந்தக் கண்ணாடியை, பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தைக்கு வாங்க உதவியிருந்தார் என்பது, அவளுக்குத் திடீரென நினைவில் வந்தது.
1948-இல் சுதந்திரம் வந்தபின் தொடங்கியது – ‘சிங்களமொழி மட்டும்’, கல்வித் தரப்படுத்தல், நில ஆக்கிரமிப்பு, மற்றும் சிறைகள் இல்லாத கொலைகள்!
அதன் உச்சியில் – 1996: கிருஷாந்தி குமாரசுவாமி. ஒரு பள்ளிச்சிறுமி. செம்மணி இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. தாயார், சகோதரர், உறவினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்கள் செம்மணியில் தான் புதைக்கப்பட்டன. அவள் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன.
இன்று, தடயவியல் நிபுணர் எச்சங்களின் மீது மண்டியிட்டு எதோ தேடுகிறார். அவருடன், கூட இருந்த தொல்பொருள் பேராசிரியர் மண் வடிவங்களை ஆய்வு செய்கிறார். மேலும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தி திகிலை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவ்வளவு மட்டும் தான். அது மட்டும் தான் அவர்களால் முடியும் !
இவை சாதாரண மரணங்கள் அல்ல. இவை போரில் உயிரிழந்தவை அல்ல. இவர்கள் பொதுமக்கள் - பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், கடைக்காரர்கள் - கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள். மீட்கப்பட்ட எலும்புகள், பழிவாங்கலைப் பற்றி கிசுகிசுக்கவில்லை ஆனால் அவை சாட்சியைக் கோருகின்றன. அவை நீதியைக் கேட்கின்றன. ஆனந்திக்கு அவை தன்னிடம் கேட்பது போலவே இருந்தது!
அவள் செம்மணியில் கூடியது துக்கம் பின்பற்ற மட்டுமல்ல, உண்மை அறிந்து நினைவு கூருவதற்காகவும். மண்ணில் உள்ள எலும்புகள் வெறும் அட்டூழியத்தின் சான்றுகள் மட்டுமல்ல - அவை தமிழ் தேசத்தின் ஆன்மாவின் துண்டுகள் என்பதை எடுத்துக் காட்டவுமே!
அவள் அந்தக் கண்ணாடியைப் பற்றி சொல்ல நினைத்தாள், ஆனால் கேட்கத்தான் அதிகாரிகள் இல்லை. அங்கு இருந்த படை வீரர்களும் அரச அதிகாரிகளும் அவளை, அகழாய்வு செய்பவர்களிடமோ, அதை மேற்பார்வையிடம் நீதிபதியிடமோ செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், அவளை காவல் நிலையத்தில் வந்து சொல்லும்படி கட்டளையிட்டனர்.
காவல் நிலையத்தில் எத்தனை முறைப்பாடுகள், சான்றுகள் தூங்கிக் கிடக்கின்றன என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அது அவளின் அனுபவம் கூட.
அவள் அன்று இரவே மக்களுக்கு தன் இணையத் தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்தாள்
என் இனமே என் சனமே …
நம்மை அழிக்க முயன்றவர்கள், நம்மை மறக்கச் சொல்லுகிறார்கள்.
ஆனால், இந்தக் குழந்தைகளின் எலும்புகள் பேசுகின்றன. கண்ணாடியும் பாடசாலைப்
பையும் சத்தமில்லா சாட்சிகள்!
சம தருமம் இல்லா நீதியின் முகத்தை, நீதி மன்றமில்லாத இராணுவ கெடுபிடியை, இன அழிப்பின் பிசாசை, இந்த செம்மண் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!
நாம் அழக்கூடாது. நாம் பேச வேண்டும். நாம் பதிவு செய்ய வேண்டும்.
செம்மண் நாம் உறங்கும் இடமல்ல — நம் சத்தியத்துக்கான மன்றம்!
அங்கு புதைந்துள்ள ஒவ்வொரு எலும்பும், “நீதி” என்றொரு குரல்!
நீதி ஒரு நாள் பிறக்கும். அந்த நாளுக்காக — நாம் மறவாமலிருப்பதே நாம் செய்யும் பெரிய போராட்டம்!
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]