தனிமை: தேர்வா அல்லது தண்டனையா?

(உளவியல் கட்டுரை)




ஒரு காலத்தில் தனிமை என்பது துறவியின் நிழல். இன்று அது நகர மனிதனின் நிலை.

இன்றைய மனிதன் எங்கும் தனியாக இல்லை. ஆனால் எங்கும் தனிமையில்தான் இருக்கிறான். உறவுகளின் நடுவில், திரைகளின் வெளிச்சத்தில், சத்தங்களின் கூட்டத்தில்—அவனுள் மட்டும் ஒரு அமைதி அல்ல, ஒரு வெறுமை.

தனிமை இனி ஒரு இடம் அல்ல. அது ஒரு மனநிலை.


ஒரு வீட்டில் உறவினர்கள் கூடியிருக்கிறார்கள். சிரிப்புகள், உணவின் வாசனை, பழைய நினைவுகளின் ஓசை—அனைத்தும் இருக்கிறது. ஆனால் பிள்ளைகள் தனித்தனியாக கைபேசிக்குள். பெரியவர்கள் தொலைக்காட்சியின் முன். பேசப்படாத உரையாடல்கள் காற்றில் மிதக்கின்றன.

அங்கே யாரும் தனியாக இல்லை. ஆனால் அனைவரும் தனிமையில்.

உறவுகள் அருகில் இருக்க, உணர்வுகள் தொலைவில் நிற்கும் இந்த நிலையே நவீன தனிமை.


உளவியல் சொல்கிறது: மனிதன் தொடர்புக்காகப் பிறந்தவன். பேசப்படுவதற்காக அல்ல—புரிந்துகொள்ளப்படுவதற்காக.

இன்றைய மனிதன் பலருடன் பேசுகிறான். ஆனால் தன்னைப் பற்றி யாரிடமும் பேசுவதில்லை. கேட்கப்படுகிறான்; ஆனால் உணரப்படுவதில்லை. இந்த இடைவெளிதான் தனிமையை உருவாக்குகிறது.

இது தேர்ந்தெடுக்கப்பட்ட தனிமை அல்ல. மெதுவாக மனிதனுக்குள் புகுந்து, அவனைச் சோர்வடையச் செய்யும் அமைதியான தண்டனை.


ஆனால் எல்லாத் தனிமையும் தண்டனை அல்ல.

சில தனிமைகள் மனிதனை மீட்டெடுக்கின்றன. சத்தம், எதிர்பார்ப்பு, போட்டி, ஒப்பீடு—இவைகளிலிருந்து தப்பி, மனிதன் தன்னைச் சந்திக்கத் தேடும் தருணம் அது.

இந்தத் தனிமை கேள்விகளை உருவாக்கும்:

“நான் யார்?” “என்ன தேவை?” “எது உண்மை?”

இத்தகைய தனிமை மனிதனை உடைப்பதில்லை. அவனை ஆழப்படுத்துகிறது.


ஆனால் தனிமை தேர்வாக இல்லாமல் பழக்கமாக மாறும் போது, அது ஆபத்தாகிறது.

ஒரு மனிதன் எல்லாவற்றையும் தனியாகச் சமாளிக்க முயல்கிறான். உதவி கேட்கத் தயங்குகிறான். உணர்ச்சிகளைச் சொல்ல வெட்கப்படுகிறான். மெதுவாக மனிதர்களிடமிருந்து விலகுகிறான்.

அப்பொழுது தனிமை அவனுக்கு ஓய்வாக இல்லை—சுமையாகிறது.


திரை இந்தத் தனிமையின் முக்கிய காரணியாக மாறியுள்ளது.

ஒரு வீட்டுக்குச் சென்றாலும், அங்குள்ள மனிதர்களைப் பார்க்கும் முன் திரையைத் திறக்கும் பழக்கம். அருகில் இருப்பவர்களை விட, தூரத்தில் இருப்பவர்களோடு அதிக நேரம். இது உறவினர்களுக்கு இடையில் உறவுகளை வளர்த்துக்கொள்ளாது மாறாக பெரும் இடைவெளியினை உருவாக்குகிறது.

இதனால் உறவுகள் அழிவதில்லை. ஆனால் உறவு  வளர்வதில்லை.

உறவுகள் பேசப்படாமல் போனால், அவை மெதுவாக மௌனமாகி விடுகின்றன.

இது ஒவ்வொரு மனிதனையும் தனிமையாக்கி விடுகிறது.


தனிமை எப்போது பிரச்சனையாக மாறுகிறது?

தனிமை வலியாக உணரப்படும் போது. பகிர விரும்பியும் பகிர முடியாதபோது. “யாருக்கும் நான் தேவையில்லை” என்ற எண்ணம் ஆழமடையும் போது.

அப்போது தனிமை தேர்வு அல்ல. அது மனதிற்கு விதிக்கப்படும் தீர்ப்பாக மாறுகிறது.


இலக்கியம் எப்போதும் தனிமையோடு பயணித்திருக்கிறது.

கவிஞன் தனியாக அமர்ந்து உலகை எழுதுகிறான். எழுத்தாளர் தனக்குள் இறங்கி மனிதரை கண்டெடுக்கிறான்.

ஆனால் அந்த தனிமை பிறரை விலக்குவதற்காக அல்ல—பிறரை அணுகுவதற்காக.


தனிமை ஒரு கத்தி போன்றது.

அதைச் சிந்திக்கப் பயன்படுத்தினால்—அது கருவி. அதை மனதை வெட்டப் பயன்படுத்தினால்—அது ஆயுதம்.

இன்றைய மனிதன் தீர்மானிக்க வேண்டியது ஒன்றே:

இந்த தனிமையை நான் தேர்ந்தெடுத்தேனா? அல்லது அதை எதிர்கொள்ளாமல் தவிர்த்தேனா?

இந்தக் கேள்விக்கான பதில்தான், மனித வாழ்வின் திசையை மாற்றும்.

🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸🕸

- தீபம் உளவியல் / Theebam / Deepam / www.ttamil.com

அஞ்செழுத்தும் ஆன்மிகப் பாதையும்: சிவவாக்கியம்

இன்றைய மனிதர்களின் தவறுகள் மற்றும் தீர்வுகள்



சிவவாக்கியம் -024
அஞ்சும் அஞ்சும் அஞ்சுமே அனாதியான தஞ்சுமே
பிஞ்சு பிஞ்சதல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்
நெஞ்சிலஞ்சு கொண்டு நீர் நின்று தொக்க வல்லிரேல்
அஞ்சுமில்லை யாருமில்லை அனாதியாகத் 

இன்றைய மனிதர்கள் பல இடங்களில் தங்கள் ஆன்மிக வாழ்வில் பிழைகள் செய்கிறார்கள். குறிப்பாக, அஞ்செழுத்து போன்ற ஆழமான ஆன்மிக உண்மைகளை புரிந்து கொள்ளாமல், வெறும் பரம்பரை வழிகாட்டுதல்களை மட்டும் பின்பற்றுவதால் உண்மையான ஆன்மிக அனுபவம் இல்லை. சிவவாக்கியம் -024 இல் சொல்லப்பட்டதைப் போல, அஞ்செழுத்து என்பது வெறும் எழுத்து அல்ல; அது ஐந்து பூதங்களாகவும், ஐந்து புலன்களாகவும் உடம்பில் இயங்கும் ஆழமான சக்தி ஆகும்.

அஞ்செழுத்தை அறியாமல், பலர் அதை வெறும் வாயால் மட்டுமே பிதற்றுகிறார்கள். அதாவது, கவனம், உணர்வு, மனம் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு, சிதறிய முறையில் அந்த எழுத்தை உச்சரிப்பதில் தான் அவற்றின் நோக்கம் நிறைகிறது என்று நம்புகின்றனர். இதனால்:

  • ஆன்மிக அடிப்படை உருவாகவில்லை: சிந்தனை, உணர்வு, மனச் சுத்தி இல்லாத நிலை.

  • உண்மையான சக்தி வெளிப்படவில்லை: சிவமாகும் அஞ்செழுத்தின் சக்தி அனுபவிக்கப்படவில்லை.

  • ஆரோக்கியமான ஆன்மிக அனுபவம் இல்லை: தியானம், மன ஓய்வு, ஆனந்தம் இல்லாமல் சுருங்கிய பக்தி மட்டுமே.

தவறான கருத்துகள்

  1. வாய்வழி மட்டுமே பக்தி:
    மக்கள் “மந்திரத்தை உச்சரிப்பதே போதும்” என்று நினைக்கிறார்கள். ஆனால் வாசிப்பும், மனதின் உணர்வும் இல்லாத போது, அந்த சக்தி உணரப்படாது.

  2. புறநிலை அடிப்படையிலான பக்தி:
    தோட்டமோ, கோவில் பார்வையோ, உடற்பயிற்சியோ மட்டும் ஆன்மிகம் என்று எண்ணுவோர். ஆன்மிகம் உடலிலும் வெளிப்படுவதாக இருந்தாலும், மனம் தியானமில்லாமல் இருந்தால் ஆழமான அனுபவம் கிடையாது.

  3. சட்டத்தினை பின்பற்றுவதே ஆன்மிகம் என்று நினைத்தல்:
    நெஞ்சம் உருகாமல், விதிகளின் பெயரில் கடுமையாக ஒழுங்கு செய்தாலும், ஆன்மிகம் சிந்தனையோடு இணைந்துவிடாது.

ஆன்மிகத்திற்கு ஆரோக்கியமான வழிகள்

  1. மனச் சுத்தி மற்றும் கவனம்:
    அஞ்செழுத்து, மந்திரம், தெய்வ சக்திகள் அனைத்தும் உணர்வின் வழியாகவே செயல்படும். மனம் சுத்தமாக, உள்ளம் கண்ணீருடன் உருகும் போது மட்டுமே சக்தி பூரணமாக வெளிப்படும்.

  2. அறிவு + உணர்வு இணைப்பு:
    அஞ்செழுத்து என்ன என்பதை அறிந்து, அதன் அர்த்தத்துடன் மனதை இணைத்தால், அது சிவமாகி அனாதியாக தோன்றும்.

  3. தியானம் மற்றும் நிகழ்நிலை உணர்வு:
    கண்ணீர் கசிந்து, உள்ளத்தில் நினைவு நிறுத்தி தியானிக்கும் போது, மனம், உடல், ஆன்மா ஒருங்கிணைந்து சக்தி பெருகும்.

  4. வெறுமனே வழிபாடு அல்ல, செயல்முறை பக்தி:
    ஆன்மிகம், பக்தி, சமய வழிபாடு அனைத்தும் மனநிலையை உயர்த்தும் ஒரு நடைமுறை. செயல்களில் கவனம் வைப்பது அவசியம்.

தீர்வு

இன்றைய மனிதர்களுக்கான தீர்வு:

  • பக்தி வாய்வழி மட்டும் அல்ல, மனச்சிந்தனை மற்றும் உணர்வுடன் இணைக்க வேண்டும்.

  • அஞ்செழுத்தின் ஆழ அர்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  • தியானம், மன ஓய்வு, ஆனந்தம் ஆகியவற்றை அனுபவிக்கும் வகையில் பக்தி வழியை அமைக்க வேண்டும்.

  • உடல், மனம், ஆன்மா ஒன்றுபட்டு செயல்படும் போது மட்டுமே உண்மையான ஆன்மிக சக்தி வெளிப்படும்.



அஞ்செழுத்து, தெய்வ சக்திகள், ஆன்மிக வழிகள் அனைத்தும் வெறும் சொல்லாடல் அல்ல. அது மனத்தின் ஆழ சுத்தி, கவனம் மற்றும் உணர்வோடு இணைந்தால் மட்டுமே உண்மையான அனுபவத்தை தரும். இன்றைய மனிதர்கள் அந்த அடிப்படை உண்மைகளை பின்பற்றினால் மட்டுமே ஆரோக்கியமான ஆன்மிக வாழ்க்கை மற்றும் ஆனந்தம் அடைய முடியும்.
📿📿📿📿📿📿📿📿
--------------------------------தீபம் ஆன்மிக வளம் 

"கரை கடந்த புயல்" - சிறுகதை -



நவம்பர் 27, 2024 அன்று காலை கடற்கரை நகரமான திருகோணமலை அபாய எச்சரிக்கையுடன் விழ்த்தெழுந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பின்னர் புயலாக வலுப்பெற்ற, பெஞ்சல் புயலாக [Fengal Cyclone] வலுவடைந்து வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. செல்வராஜா குடும்பத்தினருக்கு இந்தப் புயல் இயற்கைப் பேரிடரை விட அதிகம்; இது அவர்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக இருந்தது.

மீன்பிடி தொழிலாளியான செல்வராஜாவுக்கும், மீனா என்ற அவரின் மனைவிக்கும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களது மூத்தவரான 18 வயது கவிதா, தனது குழந்தைப் பருவ காதலியான அரவிந்துடன் நவம்பர் 29ஆம் தேதி திருமணத்தை பதிவு செய்யவிருந்தார். அரவிந்த் அடுத்த வாரம் உயர் படிப்பைத் தொடர லண்டனுக்குப் புறப்பட இருப்பதால், அவன் புறப்படுவதற்கு முன்பு அவர்கள் தங்கள் காதலை, திருமணப் பதிவாக, அதை இரு குடும்பத்தார்களின் மத்தியில் உறுதிப்படுத்த முடிவு செய்தனர். ஆனால், அவன் திரும்பி வந்த பின்புதான், குடும்ப மரபின்படி [சம்பிரதாய முறைப்படி]  திருமணம் செய்வதென்றும் முடிவெடுத்தனர்.  

இலங்கையில், நவம்பர் 27 2024 புதன்­கி­ழமை மாலை வரை, நிலவும் சீரற்ற கால­நி­லையால் பாதிக்­கப்­பட்டோர் எண்­ணிக்கை இரண்டு இலட்­சத்தைத் தாண்­டி­யுள்­ளதுடன் நால்வர் உயி­ரி­ழந்­துள்ளதோடு, 8 பேர் காணாமல் போயுள்­ளனர். இது தவிர 9 பேர் காய­ம­டைந்­துள்­ளனர். அத்துடன் 8 வீடுகள் முழு­மை­யா­கவும், 620 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ளன என அரசு அறிவித்தது. இவைகளில், திரு­கோ­ண­ம­லையில் 1537 குடும்­பங்­களைச் சேர்ந்த 4385 பேரும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதே­வேளை இது கிழக்கு கடலின் ஊடாக நகர்­வதால் அப்­ப­கு­தி­களில் காற்றின் வேகம் மணித்­தி­யா­லத்­துக்கு 40 – 50 கிலோ மீற்­ற­ராகக் காணப்­படும் எனவும்  ஆழ்­கடல் பகு­தி­களில் 80 – 90 கிலோ மீற்றர் வரை காற்றின் வேகம் அதி­க­ரிக்கும் என்­பதால் கடற்­றொ­ழி­லா­ளர்கள் கட­லுக்கு செல்­வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அரசு தெரி­வித்தது.

செல்வராஜாவும் மீனாவும் தங்கள் வீட்டில் இருந்து கடலை நோக்கினார்கள். அங்கே, அவசர அவசரமாக கரைக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் மீன்பிடி படகு ஒன்று, புயல் காற்றினால்  கவிழ்வதைக் கண்டனர்.  

"கால் ஏமுற்ற பைதரு காலைக்
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு"

'கடிய புயற்காற்று வீசிச் சுழற்றுதலாலே துன்புற்று கடலிலே தாம் ஏறியிருக்கும் மரக்கலங் கவிழ்ந்து விட, கலக்கமுற்றுத் தாமும் ஒருசேர வீழ்ந்து' என நற்றிணை (30: 7-8) கூறுவதை செல்வராஜா ஒப்பிட்டுப் பார்த்தான். அவன் கண்களில் கண்ணீர் சிந்தியது.
 
இந்த பெஞ்சல் புயல் மேகங்கள் மெல்ல மெல்ல பெரிதாக திரண்டதால், செல்வராஜா குடும்பத்தின் கவலைகளும் அதிகரித்தன. அவர்களின் சாதாரண வீட்டிற்கு மேலும் பலமான காற்றுடன் மழை பெய்தது, அந்தக் கடலோரக் காற்று அச்சுறுத்தலாக வளர்ந்தது. எனவே திருமண பதிவை ஒத்திவைக்கலாமா என்று செல்வராஜாவும் மீனாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதிவாளர் அலுவலகம் கூட அருகில் இல்லை, சில கிலோமீட்டர் தொலைவில் தான் இருந்தது.

அதேவேளை இலங்கை வானொலி, எச்சரிக்கை அறிவித்தல்களை தொடர்ந்து அவசரம் அவசரமாக அறிவித்துக்கொண்டு இருந்தது. மரங்கள் வேரோடு சாய்ந்தன .கூரைகள் பறந்தன. ஆடு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பெரியோரும் குழந்தைகளும் உணவின்றி தவித்தனர் என ஒரு பட்டியலையே கொடுத்துக் கொண்டு இருந்தது. 

"கடற்கரை ஊருகள், நகரங்கள் அழிந்திடுமாம்    
வெள்ளம், ஊதி வந்த காற்றுடனே போட்டியிடுமாம் 
சீருந்துகள் [மகிழுந்து], படகுகள் அழிந்திடுமாம்     
வீடுகள், பாடசாலைகள் வெள்ளம் நுழைந்துடுமாம்  
சோலைகளும் மரங்களும் வேர்கள் பிடுங்கிடுமாம்" 

"புயல் தீவிரமடைந்தால் என்ன செய்வது?" மீனா கேட்டாள், அவள் குரல் கவலையில் கனத்தது. "இது மிகவும் ஆபத்தானது." ஆனால் கவிதா, அரவிந்தின் கையைப் பிடித்துக் கொண்டு உறுதியாக இருந்தாள். 

“அம்மா, இது எங்களுக்கு முக்கியம். புயல் நம்மைத் தடுத்து நிறுத்த அனுமதிக்க முடியாது. அரவிந்தும் தலையசைத்தான், அமைதியான உறுதியால் அவர்கள் இருவரினதும் கண்கள் நிரம்பி ஒளிர்ந்தன. "இதை ஒன்றாகச் சந்திப்போம்," என்று அவன் உறுதியளித்தான்.

"உரு கெழு யானை உடை கோடு அன்ன,
ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ,
தயங்கு இருங் கோடை தூக்கலின், நுண் தாது
வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம்
காமர் சிறுகுடி புலம்பினும், அவர்காண்:         
நாம் இலம் ஆகுதல் அறிதும் மன்னோ
வில் எறி பஞ்சி போல, மல்கு திரை
வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும்
நளி கடற் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே"

'அச்சம் தரும் யானையின் உடைந்த தந்தம் போல மலர்ந்திருக்கும் தாழம்பூவின் மடல், வாடைக்காற்று வீச்சில், மகளிர் வண்டல் விளையாடும் களத்தில் வந்து விழும் ஊர் நம் [கடற்கரை] ஊர். இந்த ஊரே என்னைக் கைவிட்டுத் தனிமைப்படுத்தினாலும், அவர் தான் எனக்குத் துணை. அவரும், நான் இல்லாமல், தான் இல்லை என்று வாழ்பவர். வில்லால் அடித்த பஞ்சு போல அலைநுரை பொங்கும் குளிர்ந்த கடல்நிலத் தலைவனாகிய சேர்ப்பன் [நெய்தல் நிலத்து மகன் ] அவன். அவனோடு சிரித்துக்கொண்டு விளையாடாவிட்டால் நான் இருக்கமாட்டேன்.' என்கிறது நற்றிணை 299 கூறுகிறது. அப்படித்தான்  கவிதா  இருந்தாள். 

நவம்பர் 29 காலை இடைவிடாத மழை மற்றும் பலத்த காற்றுடன் விடிந்தது. வெளியே குழப்பம் இருந்தாலும், செல்வராஜா குடும்பத்தினர் அன்றைய தினத்திற்கு தங்களை தயாராக்கினர். அக்கம்பக்கத்தினர் எல்லோரும் எல்லாவித உதவிக்கும் விருப்பத்துடன் உள்ளே வந்தனர். கையில் குடைகள் மற்றும் மழையங்கிகளும் கொண்டுவந்தனர். மற்றும் பதிவாளர் அலுவலகத்திற்கு பயணம் செய்ய ஒரு வேனையும் [கூண்டுந்து] கொண்டு வந்தனர். கவிதாவின் சகோதரர்கள், 15 வயது ரமேஷ் மற்றும் 12 வயது சஞ்சய், மழையில் இருந்து அக்காவை பாதுகாக்க, ​​குடைகளைப் பிடித்துக் கொள்ளும் பணியில் ஈடுபட்டனர்.

செல்வராஜா குடும்பம் வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் செல்லும்போது, ​​மரங்கள் மற்றும் மின்கம்பிகள் அங்கும் இங்கும் விழுந்து கிடந்தது . வேன், அங்கு வீதியில் ஓடாமல் தேங்கி இருக்கும் வெள்ளத்தில் பல முறை சறுக்கியது, ஆனால் ஓட்டுநர், அனுபவம் வாய்ந்த உள்ளூர்வாசி,  திறமையாக அந்த வீதியில் சமாளித்து ஓட்டினான். "நாங்கள் சரியான நேரத்துக்கு முன் அங்கு போவோம்," என்று அவன் அவர்களுக்கு உறுதியளித்தான், “பொதுவில் தூங்கு விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின்” எனப் புறநானூறு 89 இல் கூறும் 'மன்றத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் போர்த்தண்ணுமையில் (போர்முரசு) காற்று மோதுவதால் உண்டாகும் சிறிய ஒலியான' ஊளையிடும் காற்றையும் மீறி அந்த அவனது குரல் அவர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தது.
 
பதிவாளர் அலுவலகத்தில், ஒரு சில தம்பதிகள் மட்டும், புயலையும் தைரியமாக எதிர்கொண்டு, தங்கள் குடும்பத்துடன் பதிவு திருமணம் செய்ய அங்கு வந்திருந்தனர். வளிமண்டலம் பதட்டமாக இருந்தாலும், தங்கள் நல்ல நாளை பின்போடாமல், நிறைவேற்றுவதில் அவர்கள் மகிழ்வாகவும் உறுதியாகவும் இருந்தார்கள். கவிதா மற்றும் அரவிந்தின் முறை வந்ததும், பதிவாளர் விழாவை விரைவாக, சுருக்கமாக ஆனால் ஆடம்பரமாக நடத்தினார். இளம் தம்பதிகள் ஒருவருக்குஒருவர் சபதம் பரிமாறிக் கொண்டார்கள்.  அவர்களின் காதல், வெளியில் வீசும் புயலை விட பலமாக இருந்தது.

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்டைய சுமேரியாவில் ஆண் பெண் இருவருக்கும் இடையிலான உறவுகள், ஒரு திருமணக் கோரிக்கை  அல்லது முன்மொழிதல்  உடன் ஆரம்பமாகி, அதை தொடர்ந்து, திருமண ஒப்பந்தம் நிறைவேற்றப் பட்டு , இறுதியாக ஒரு கல்யாணத்தில் முடிவுக்கு வருகிறது. அங்கு பொதுவாக எல்லா பெண்களும் தமது சம்பிரதாய பங்கான, மனைவி, தாய், வீட்டுக் காப்பாளர் ஆகிய நிலைகளுக்கு சிறு வயதில் இருந்தே நன்கு பயிற்றுவிக்கப் பட்டுள்ளனர். பெண் தெய்வம் குலாவிற்கான [goddess Gula] துதிப்பாடல், பெண்களின் வெவ்வேறு  நிலைகளை "நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு  மனைவி, நான் ஒரு இல்லத் தரசி" ["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house keeper"].என கூறுகிறது. அப்படித்தான் இன்று கவிதா மகள் நிலையில் இருந்து மணமகள் நிலைக்கு வந்துள்ளார்.  

"புதல்வற் பயந்த திதலை அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடி,
''கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக!'' என,
நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி    
பல் இருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நல் மணம் கழிந்த பின்றை"

திருமண பதிவு நிலையத்தில் கூடியிருந்த சிறுகூட்டத்தில் இருந்த திருமணமான மகளிரும் தம் தம் கணவருடன் சேர்ந்து கூடிநின்று ஈரமான பூக்களையும், நெல்லையும் தலையில் போட்டு, நீர் தெளித்து வாழ்த்திச் சடங்குத் திருமணத்தை நடத்திவைத்தனர். “கற்புநெறி வழுவாமல் வாழ்க, நல்ல பல பிள்ளைகளை உலகுக்கு உதவி வாழ்க, தன்னைப் பெற்ற பெற்றோரையும், கணவனைப் பெற்ற பெற்றோரையும் விரும்பிப் பேணும் பிணைப்புடையவளாக வாழ்க” என்றல்லாம் வாழ்த்தினர். கவிதாவின் தலையில் போட்ட பூவும், நெல்லும், சீவி முடித்த கூந்தலில் (கதுப்பு) கிடந்தன. அவள் மகிழ்ச்சியின் ஒரு எல்லைக்கே போய்விட்டாள்.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான “பெங்கல்” சூறாவளியானது திருகோணமலைக்கு வடக்கே 360 கிமீ தொலைவிலும் காங்கேசன்துறைக்கு வடகிழக்கே 280 கிமீ தொலைவிலும் நவம்பர் 29, 2024 இரவு 11.30 மணிக்கு நிலை கொள்ளுமென வானிலை ஆய்வு மையம் அன்று தெரிவித்தது. மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், வட மாகாணத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அறிவித்தது. எனவே வீட்டிற்கு திரும்பிய குடும்பம், அவசரம் அவசரமாக ஒரு சிறிய கொண்டாட்டத்திற்கு கூடியது. அக்கம் பக்கத்தினர் கலந்து கொண்டு, வீட்டில் இருந்து இனிப்புகளை எடுத்து வந்து வாழ்த்துக்கள் [ஆசிர்வாதம்] கூறிர். அரவிந்தும் கவிதாவும் எதிர்கால கனவுகளைப் பகிர்ந்து கொண்டு, மாலைப் பொழுதை தங்கள் வீட்டின் சுற்றாடலில் கழித்தனர்

"புயல்கள் கரையைத் தாக்கினாலும், கடல் கிசுகிசுக்கிறது: எங்கள் காதல் நிலைத்திருக்கும்." என்ற உணர்வுதான் அவர்கள் இருவரிடமும் இருந்தது. புயல் ஓயாமல் தொடர்ந்தாலும், அவர்களின் இதயம் அமைதியாக இருந்தது, அவர்களின் அன்பாலும், குடும்பத்தினரின் ஆதரவாலும் அது நங்கூரமிட்டது. மறுநாள் காலை, வானம் தெளிவாகத் தொடங்கியது. என்றாலும் இருவர் குடும்பமும் மற்றொரு சவாலை எதிர்கொண்டது: அரவிந்தை கிட்டத்தட்ட 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லவேண்டி இருந்தது. பொது போக்குவரத்து தடைப்பட்டதால், செல்வராஜா ஒரு நம்பகமான வேனை ஏற்பாடு செய்தார். ஆனால் மரங்கள் முறிந்து விழுந்த மற்றும் உடைந்த பாலங்கள் நிறைந்த சாலைகளும் இடைவிடாத மழையும் பயணத்தை அவர்களுக்கு  கடினமாக்கியது. எது எப்படியாயினும் அவர்கள் சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைந்தனர்.

புறப்படும் வாயிலில் கவிதாவும் அரவிந்தும் கண்ணீர் மல்க விடைபெற்றனர். அரவிந்த் அவளை இறுக்கி அணைத்து முத்தமிட்டான். “தினமும் உன்னுடன் பேசுவேன், எழுதுவேன், இந்த ஆண்டுகள் விரைவில் கடந்துவிடும்" என்று ஆறுதல் கூறினான். அவன் சென்றதும், கவிதா தன் கண்ணீரைத் துடைத்தாள், அவளுடைய இதயம் கனமாக இருந்தாலும் நம்பிக்கையுடன் இருந்தது. அவர்களின் காதல் தூரத்தையும் நேரத்தையும் தாங்கும் என்று அவளுக்குத் தெரியும்.

செல்வராஜா குடும்பத்தினர் அன்று மாலையே திருகோணமலைக்குத் திரும்பினர். புயல் அவர்களின் நெகிழ்ச்சியை சோதித்தது, ஆனால் அவர்கள் அதை ஒன்றாக எதிர்கொண்டனர். கவிதா மற்றும் அரவிந்துக்கு, புயல் இயற்கையின் சக்தி மட்டுமல்ல, அவர்களின் அன்பின் வலிமைக்கு ஒரு சான்றாக இருந்தது, கடுமையான காற்று கூட அவர்களைப் பிரிக்க முடியாது என்பதை நினைவூட்டியது. காதலும் கரையைப் போலவே ஒவ்வொரு புயலையும் தாங்கும் என்பதை உணர்ந்தாள்.

"புளகாங் கிதமே புறவேலி யாக. 
கன்னந் தனில் நீ சின்ன மாகள். 
அடைக்கலப் பொருள்போல் அமையப்  பேணும்" [காதா சப்த சதி 1 - 69]

[காதா சப்த சதி' என்பது கி. மு. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிராகிருத மொழியில் எழுதப்பட்ட பாடல்கள்]

ஒரு பொருளை ஒருவரிடம் அடைக்கலமாகக் கொடுத்தால், அதை பாதுகாப்பது அவரின் அறத்தின் கடமை. அதைப்போலத்தான் அரவிந், விமான நிலையத்தில் பிரியும் முன் கவிதாவை காதலுடன் முத்தமிட்ட பற்குறியை கவிதா கண்ணாடியில் காணும் போதெல்லாம் புளகிதம் அடைந்து, அதை அரவிந்தின் நினைவாக விரும்பி பாதுகாத்தாள்!
➖➖➖➖➖➖➖➖➖➖➖
நன்றி   
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

'கருப்பி' -குறும்படம்


'கருப்பி'  -குறும்படம் 

கருப்பு தோல் பணத்திடம் கூட தோற்று போகும் காலமா இது?

📽பகிர்வு:தீபம் இணையத்தளம் / theebam /ttamil.com / dheepam


 

 

விஞ்ஞானத்தின் விந்தை

 அறிவியல் =விஞ்ஞானம் 



👩 புற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி: mRNA தனிப்பயனாக்கப்பட்ட தடுப்பூசி
விளக்கம்: கரோனா தடுப்பூசியில் பயன்படுத்தப்பட்ட mRNA தொழில்நுட்பம் இப்போது புற்றுநோய்க்கு எதிராகத் திரும்பியுள்ளது. குறிப்பாக, மிகவும் ஆபத்தான கணைய புற்றுநோயைத் (Pancreatic Cancer) தடுக்க இந்தத் தடுப்பூசி உதவுகிறது. நோயாளியின் உடலில் இருந்து புற்றுநோய் செல்கள் அகற்றப்பட்டு, அவற்றின் மரபணு மாற்றங்களை ஆராய்ந்து, ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக இந்தத் தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது.
விஞ்ஞானிகள்/நிறுவனம்Memorial Sloan Kettering Cancer Center (நியூயார்க்) மற்றும் BioNTech நிறுவனம். முதன்மை ஆராய்ச்சியாளர்: டாக்டர் வினோத் பாலச்சந்திரன் (Dr. Vinod Balachandran).
முக்கியத்துவம்: 2025-ல் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்ட நோயாளிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகப் புற்றுநோய் மீண்டும் வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👸 குவாண்டம் பேட்டரிகள்: நொடிகளில் சார்ஜ் ஆகும் வசதி
விளக்கம்: சாதாரண பேட்டரிகள் ரசாயன மாற்றங்கள் மூலம் செயல்படுகின்றன. ஆனால், குவாண்டம் பேட்டரிகள் அணுக்களுக்கு இடையிலான 'குவாண்டம் பிணைப்பை' (Entanglement) பயன்படுத்திச் செயல்படுகின்றன. இதனால், ஒரு மின்சார வாகனத்தை சார்ஜ் செய்ய ஆகும் நேரம் ஒரு சில நிமிடங்களிலிருந்து ஒரு சில வினாடிகளாகக் குறையும்.
விஞ்ஞானிகள்: ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜேம்ஸ் குவாச் (Dr. James Quach) தலைமையிலான குழுவினர்.
முக்கியத்துவம்: 2025 ஆகஸ்ட் மாதத்தில் ஜெர்மனியின் University of Augsburg விஞ்ஞானிகள் அரிசி அளவிலான ஒரு முன்மாதிரியை (Prototype) உருவாக்கி சாதனை படைத்தனர்.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👳 கனவுகளைத் திரையில் காணும் தொழில்நுட்பம் (Dream Decoder)
விளக்கம்: மனிதர்கள் தூக்கத்தில் காணும் காட்சிகளை அப்படியே வீடியோவாகப் பதிவு செய்யும் தொழில்நுட்பத்தில் ஜப்பானிய விஞ்ஞானிகள் வெற்றி பெற்றுள்ளனர். fMRI ஸ்கேன்கள் மூலம் மூளையின் செயல்பாடுகளைப் பதிவு செய்து, அதை AI மூலம் படங்களாக மாற்றுகிறார்கள்.
விஞ்ஞானிகள்: கியோட்டோவில் உள்ள ATR Computational Neuroscience Laboratories மற்றும் கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் யுகியாசு காமிதானி (Professor Yukiyasu Kamitani).
முக்கியத்துவம்: 2025-ல் வெளியிடப்பட்ட மேம்பட்ட சோதனைகளில், சுமார் 70% துல்லியத்துடன் கனவின் உள்ளடக்கங்களை வீடியோவாக மாற்ற முடிந்தது.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👨 மூளை-கணினி இணைப்பு (BCI): எண்ணங்களால் இயங்கும் உலகம்
விளக்கம்: பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பேச முடியாதவர்கள், தங்களின் எண்ணங்கள் மூலமாகவே கணினியில் டைப் செய்யவும், ரோபோ கைகளை இயக்கவும் உதவும் சிப் இது.
விஞ்ஞானிகள்Neuralink (எலான் மஸ்க்) மற்றும் Synchron நிறுவனங்கள். சமீபத்தில் கலிபோர்னியாவின் UC Davis Health குழுவினர் டாக்டர் டேவிட் பிராண்ட்மேன் (Dr. David Brandman) தலைமையில் மூளை சிக்னல்களை 97% துல்லியத்துடன் பேச்சாக மாற்றும் சிப்பை உருவாக்கினர்.
முக்கியத்துவம்: 2025 டிசம்பரில் சீன விஞ்ஞானிகள் (CAS) எண்ணங்கள் மூலம் ஒரு சக்கர நாற்காலியை (Wheelchair) வெற்றிகரமாக இயக்கி சாதனை படைத்தனர்.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👵 ஆய்வகத்தில் வளர்க்கப்படும் 'மினி இதயங்கள்'
விளக்கம்: ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி மனித இதயத்தின் செயல்பாட்டைக் கொண்ட சிறிய உறுப்புகளை ஆய்வகத்தில் உருவாக்குதல். இதில் முதன்முறையாக இரத்த நாளங்களை (Blood Vessels) வெற்றிகரமாக இணைத்துள்ளனர்.
விஞ்ஞானிகள்: ஆஸ்திரியாவின் Institute of Molecular Biotechnology (IMBA) விஞ்ஞானிகள் மற்றும் சான் பிரான்சிஸ்கோவின் Gladstone Institutes.
முக்கியத்துவம்: இது மருந்துகளின் செயல்பாட்டைச் சோதிக்கவும், எதிர்காலத்தில் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பயன்படும் முழு இதயத்தை உருவாக்கவும் அடிப்படையாக அமையும்.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👶 செவ்வாய் கிரகத்தில் உயிரினத் தேடல்: பெர்சிபரன்ஸ் ரோவர்
விளக்கம்: நாசாவின் ரோவர் செவ்வாய் கிரகத்தின் 'ஜெஸிரோ' (Jezero Crater) பள்ளத்தில் ஆய்வு செய்து வருகிறது. அங்குள்ள பாறைகளில் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நுண்ணுயிரிகள் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறு உள்ள கரிம மூலக்கூறுகளை (Organic Molecules) இது கண்டறிந்துள்ளது.
அமைப்புNASA Jet Propulsion Laboratory (JPL) குழுவினர்.
முக்கியத்துவம்: இந்தத் தரவுகள் 2030-களில் பூமிக்குக் கொண்டு வரப்படும்போது, செவ்வாயில் உயிர் வாழ்ந்ததா என்ற ரகசியம் முழுமையாக உடையும்.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👷 விலங்கு-மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை (Xenotransplantation)
விளக்கம்: மனித உறுப்புகளுக்குத் தட்டுப்பாடு உள்ள நிலையில், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தும் சாதனை.
விஞ்ஞானிகள்: நியூயார்க் பல்கலைக்கழகத்தின் NYU Langone Health மருத்துவக் குழு, டாக்டர் ராபர்ட் மாண்ட்கோமெரி (Dr. Robert Montgomery) தலைமையில்.
முக்கியத்துவம்: 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்தகைய சிறுநீரகத்துடன் ஒரு நோயாளி சுமார் 271 நாட்கள் (சுமார் 9 மாதங்கள்) ஆரோக்கியமாக உயிர் வாழ்ந்து மருத்துவ வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👳பிளாஸ்டிக்கைச் செரிக்கும் பாக்டீரியாக்கள்
விளக்கம்: பிளாஸ்டிக் கழிவுகளைச் சிதைத்து அழிக்கக்கூடிய புதிய வகை பாக்டீரியாக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இவை பிளாஸ்டிக்கை உணவாக உட்கொண்டு, அதைச் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பொருளாக மாற்றுகின்றன.
விஞ்ஞானிகள்: ஜெர்மனியின் Leipzig University மற்றும் ஜப்பானின் Kyoto Institute of Technology.
முக்கியத்துவம்: 'Comamonas testosteroni' போன்ற பாக்டீரியாக்கள் பிளாஸ்டிக் மாசுபாட்டை ஒழிப்பதில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

👱ஒளியை உறைய வைத்தல் (Stopping and Freezing Light)
விளக்கம்: ஒளியானது வினாடிக்கு 3 லட்சம் கி.மீ வேகத்தில் பயணிக்கும். ஆனால், இத்தாலிய விஞ்ஞானிகள் ஒளியை ஒரு குறிப்பிட்ட படிகத்தில் (Crystal) மோதச் செய்து, அதன் வேகத்தைப் பூஜ்ஜியமாக்கி 'உறைய' வைத்துள்ளனர்.
விஞ்ஞானிகள்: இத்தாலியின் Sapienza University of Rome மற்றும் தேசிய ஆராய்ச்சி கவுன்சில் (CNR) குழுவினர்.
முக்கியத்துவம்: இது எதிர்காலத்தில் ஒளியையே தரவுகளாக (Data Storage) சேமித்து வைக்கும் குவாண்டம் கணினி தொழில்நுட்பத்திற்கு மிக முக்கியமானது.
🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻

💆பி.ஐ.எஸ்.சி (BISC) குவாண்டம் சிப்
விளக்கம்: மிகச் சிறிய அளவில், ஒரு உளுந்து பருப்பை விடக் குறைவான அளவில் வடிவமைக்கப்பட்ட இந்த சிப், மூளையின் பல்லாயிரக்கணக்கான நரம்புத் துடிப்புகளை ஒரே நேரத்தில் கவனிக்கும் திறன் கொண்டது.
விஞ்ஞானிகள்: அமெரிக்காவின் Columbia University மற்றும் Stanford University ஆராய்ச்சியாளர்கள்.
முக்கியத்துவம்: 2025 டிசம்பரில் வெளியிடப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், மனித மூளைக்கும் AI-க்கும் இடையிலான பாலமாக அமையும். 

🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻🔻
-தீபம் அறிவியல் புதினம்