"அறிவியல் நோக்கில்....பகுதி:25A --"பெளத்தம் ஒரு அலசல்

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]


[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]

பகுதி: 25 A / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'எல்லாளனுக்கு முந்திய மன்னர்கள், எல்லாளன் உட்பட, கற்பனைப் கதாபாத்திரங்களா?'

சந்தமுக சிவாவுக்கு அடுத்தபடியாக யசலாலக்க தீசன் (Yassalalaka Tissa)  தீபவம்சத்தின்படி எட்டு வருடங்களும் ஏழு மாதங்களும் மகாவம்சத்தின்படி ஏழு வருடங்களும் எட்டு மாதங்களும் ஆட்சி செய்தார்; வருடங்கள் மற்றும் மாதங்களின் எண்ணிக்கை, தீபவம்சத்தில் இருந்து மகாவம்சத்துக்கு போகும் பொழுது, ஆண்டு மாதமாகவும், மாதம் ஆண்டாகவும் ஒன்றுக்கொன்று மாற்றப் பட்டுள்ளது. திஸ்ஸ [Tissa] தனது சகோதரன் சந்தமுக சிவாவை ஒரு திருவிழா விளையாட்டில் கொன்றதாக மகாவம்சம் கூறுகிறது. பின்னர் சபா [மகாவம்சத்தில் சுபகராஜா / Sabah (Subharajah in the Mahavamsa)] ஆறு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் ஒரு கதவுக் காவலாளியின் மகன். மகாவம்சத்தில் உள்ள இந்தக் கதவுக்காவலரைச் சுற்றிய ஒரு கதை, அரசனைப் பற்றியும் அதே ஒற்றுமையைக் கொண்ட ஒரு வேலைக்காரனைப் பற்றியும் பழங்காலத்தில் நிலவிய ஒரு கதையுடன் ஒத்துப் போகிறது.

மகாவம்சம் 35-58 இன் படி சுபகராஜா ஒரு வள்ளி - விகாரை கட்டினார். மேலும் வள்ளி என்பது மிகவும் பொதுவான தமிழ்ப் பெண் பெயர்.  அதன் பின் வசபா [முதலாம் இலம்பகர்ண வம்ச மன்னனான வசபன் / Vasabha] என்ற அரசன் நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தான். தீபவம்சம் அவரது வம்சாவளியைப் பற்றிப் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் மகாவம்சம் அவர் வடக்கு மாகாணத்திலிருந்தும் இலம்பகர்ண அரச குலத்திலிருந்தும் வந்தவர் என்று கூறுகிறது. வட மாகாணத்தை சேர்ந்தவர் என்பதால் அவரும் தமிழராக இருக்கலாம்? அவர் தனது மாமாவின் மனைவியை ராணியாகக் ஏற்றுக்கொண்டார். இவனுடைய ஆட்சி எல்லாளனுக்குப் பிறகு மிக நீண்டது ஆகும்; இருவருமே ஒரே கால ஆட்சியைக் கொண்ட தமிழர்களாகக் காணப்படுகிறது. என்றாலும், முன்பு நாம் பல சந்தேகங்களைக் சுட்டிக்காட்டியவாறு, எல்லாளனுக்குப் முந்தைய மன்னர்கள் எல்லோரும், எல்லாளன் உட்பட, கற்பனையான பாத்திரங்கள் போல்த் தெரிகிறது. 

மகாவம்சத்தின் படி, வசபா இன்னும் பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே வாழ்வார் என்று ஒரு சோதிடரால் கூறப்பட்டதால், வசபா ஒரு பக்தியுள்ள பௌத்தரானார் என்றும் [அப்படி என்றால் முன்பு அவர் அல்லது இலம்பகர்ண வம்சம் அப்படி அல்ல என்று பொருள் படுகிறது, ஏனென்றால், இவருடன் தான் ஒரு புதிய வம்சம் ஆட்சிக்கு இலங்கைக்கு வந்தது என்பதால்] மற்றும் அவரது ஆயுளை நீட்டிக்கும் முயற்சியில் பல புண்ணிய செயல்களைச் செய்தார் என்றும் அங்கு கூறியிருப்பதால், இந்த மன்னனின் கதையில் உள்ள உண்மை சந்தேகத்திற்குரியது போல்த் தெரிகிறது? இவன் இலம்பகர்ண வம்சத்தைக் சேர்ந்தவன் என்றும்  இலங்கையில் வட பகுதியில் இராணுவத் தளபதியாக இருந்த தனது மாமனாரின் கீழ் வேலை செய்து வந்தான் என்றும் கூறப்பட்டுள்ளது. 

சோதிடரின் கணிப்பின்படி அரசனின் ஆட்சிக்காலத்தை பன்னிரெண்டு வருடங்களில் இருந்து நாற்பத்து நான்கு வருடங்களாக நீட்டிக்கும் அல்லது வாழ்நாளை நீட்டிக்கும் தீர்க்கதரிசனங்களும் அதை ஒட்டிய செயல்களும் உண்மையான வரலாறு அல்ல. எனவே மன்னனைப் பற்றி மகாவம்சத்தில் கூறப்பட்டுள்ள கதைகள் கற்பனையானவை அல்லது அரசனே ஒரு கற்பனைக் கதாபாத்திரமாகக் கூட இருக்கலாம்? என்றாலும் மகாவம்சம் விவரிக்கும் இந்தக் கதைகளை தீபவம்சம் கொடுக்கவில்லை. எனவே  மகாநாம தேரர் நிச்சயமாக ஒரு இலக்கியக் கலைஞர் அல்லது இன்றைய பேச்சுவழக்கில் ஒரு சொற்பொழிவாளர். வசபாவின் பெயரை வெஹெப் [Vehep] என்று இராசவலிய கூறுகிறது. வட்டகாமினி முதல் வசபா வரை பெரும்பாலும் தமிழ் மன்னர்கள் அல்லது அவர்களின் வம்சத்தில் வந்தவர்கள் என்று அறிய முடிகிறது.  

அனுராதபுரத்தில் 44 ஆண்டுகள் ஆட்சி செய்த எல்லாளனை அடைவதற்கு 31 மன்னர்களை வென்று அதன் பின் தான் 32 ஆவதாக எல்லாளனை, துட்ட கைமுனு வென்றதாக மகாவம்சம் விவரிக்கிறது. அது மட்டும் அல்ல அவன் தனது போரில் இலட்ச்சக் கணக்கானவர்களை கொன்றதாக  கூறுகிறான். இந்த தரவை வைத்து பார்க்கும் பொழுது அனுராத புரத்தையும் அதை சுற்றியும் பெரும் அளவான தமிழ் கிராமங்களும் தமிழர்களும் வாழ்ந்தது அத்தாட்சி படுத்தப் படுகிறது. அவர்கள் சிவனை வழிபட்டார்கள் என்பதும்  தெரிகிறது. கி மு 200 ஆண்டு அளவில் அல்லது அதற்குப் பின்பு, பாளி மொழி இறந்த மொழியாக மாறிக் கொண்டிருந்தது. எனவே இதற்கு பிரதி யீடாக ஹெள மொழி [Eḷu, also Hela or Helu, is a Middle Indo-Aryan language or Prakrit of the 3rd century BC] முக்கியத்துவம் பெற்றது. அதன் பின் கி பி ஆறாம் நூற்றாண்டில் அல்லது அதற்குப் பின், பிராகிருதம், பாளி, தமிழ் போன்ற மொழிகளையும் உள்வாங்கி சிங்கள மொழியாக முதல் முதல் வளர்ச்சி அடைந்தது. ஆகவே அதற்கு முன்பு சிங்கள மொழி என்று ஒன்றும் இல்லை என்பதே உண்மை ஆகும். அது மட்டும் அல்ல, வரலாற்று ரீதியாக, அனுராத புரத்தில் தமிழர்கள் பெரும் அளவில் வாழ்ந்தார்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக, அதன் தொடர்ச்சியை. பதினேழாம் நூற்றாண்டின் இறுதி பகுதியிலும் வர்த்தகரான ரொபெர்ட் நொக்ஸ் [Robert Knox ] என்ற ஆங்கிலேயனின் "Historical Relation of Ceylon" என்ற அவரின் நூலிலும் காண்கிறோம். 
🥿🥿🥿🥿🥿🥿🥿

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...


*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...


🥿🥿🥿🥿🥿🥿🥿

Part: 25 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Are the kings earlier to Elara, including Elara, fictional characters?

Next to Candamukha Siva, Yasalala Tissa reigned for eight years and seven months as per the Dipavamsa and seven years and eight months as per the Mahavamsa; the numbers of years and months are interchanged. The Mahavamsa says that Tissa killed his brother Candamukha Siva in a festival sport. He is also the brother, as per the Mahavamsa, of Candamukha Siva, a Tamil. Then Sabah (Subharajah in the Mahavamsa) ruled for six years. He was the son of a doorkeeper. A story around this doorkeeper in the Mahavamsa is a very common thread in the olden times about king and a servant of same resemblance. 

Subharajah built a Valli-vihara as per the Mahavamsa 35-58, and Valli is a very common Tamil female name. Then a king by the name Vasabha ruled for forty-four years. The Dipavamsa is silent on his lineage, but the Mahavamsa says that he came from the Northern Province and of Lambakanna clan. He could also be a Tamil as he is from the Northern Province. He took his uncle’s wife as his queen. His reign is the longest after Elara; both could be Tamils with the same length of reigns. The kings earlier to Elara, including Elara, are fictional characters, and the king Vasabha is the king with the longest reign so far. However, the bona fide of this king is also in doubt, as there is a prophecy in the Mahavamsa about him. There are acts to lengthen the king’s length of reign from twelve years to forty-four years in accordance with the soothsayer’s prediction. Prophecies and acts to lengthen the lifetime are not real history.  Either the tales given in the Mahavamsa about the king are fictional or the king himself is a fictional character. The Dipavamsa does not give this tales, which the Mahavamsa narrates. Mahanama is certainly a literary artist or a wordsmith in the present day parlance. The Rajavaliya gives the name of Vasabha as Vehep. After Vattagamani to Vasabha are mostly Tamil kings. 

நன்றி  
Thanks


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna] 


பகுதி / Part: 25 B தொடரும் / Will follow 

சமைக்க முன் கோழியை கழுவலாமா?

 -உடல்நலம் 


பச்சைக் கோழி இறைச்சியை சமைக்கும் முன் கழுவுவது ஆபத்தானது, ஏனெனில் அது கேம்பிலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்களை சமையலறையில் பரவச் செய்யும். 

கோழி கழுவுவதன் ஆபத்துகள்

கோழியைக் கழுவும்போது தண்ணீர் தெறித்து சிங்க், சமையல் மேடை, அருகிலுள்ள பச்சை காய்கறிகள் போன்றவற்றில் பாக்டீரியாக்கள் பரவுகின்றன. பிரிட்டனின் ரீடிங் பல்கலைக்கழகத்தின் உணவு நுண்ணுயிரியல் இணைப் பேராசிரியர் கிமோன்-ஆண்ட்ரியாஸ் கராட்சாஸ் நடத்திய பரிசோதனையில், புற ஊதா ஒளியால் காட்டப்பட்டபடி, 10 வினாடிகள் கழுவியதோடு கோழியின் சாறு மற்றும் நீர் மேடை, ஆடை, லெட்டூஸ், கேரட் ஆகியவற்றில் படிந்தது. இது குறுக்கு-மாசுபாட்டை (cross-contamination) ஏற்படுத்தி, நன்கு சமைக்கப்பட்ட கோழியை உண்டாலும் நோய் வர வைக்கும்.

முக்கிய பாக்டீரியாக்கள்

பச்சை கோழியில் கேம்பிலோபாக்டர் மற்றும் சால்மோனெல்லா இயற்கையாகவே குடலில் இருக்கும், வெட்டும் போது இறைச்சியில் பரவும். உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது, கேம்பிலோபாக்டர் வயிற்றுப்போக்கு நோய்களின் உலகளாவிய நான்கு முக்கிய காரணங்களில் ஒன்று; சிறு குழந்தைகளுக்கும் ஆபத்தானது. சால்மோனெல்லாவுக்கு தடுப்பூசிகள் உள்ளன, ஆனால் கேம்பிலோபாக்டருக்கு இல்லை – ஒரு சொட்டு நீரில் 10 டிரில்லியன் பாக்டீரியாக்கள் இருக்கலாம், இது தொற்றுக்கு போதும்.


தொற்றின் அறிகுறிகள்

பாதிப்பு 2-5 நாட்களுக்குப் பின் தோன்றும்: ரத்தத்துடன் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி. பிரிட்டனில் ஆண்டுதோறும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்; குழந்தைகள், முதியோருக்கு கடுமையானது – சிலருக்கு ஆண்டிபயாடிக் தேவை, அரிதாக கய்லன்-பார் சிண்ட்ரோம் போன்ற பக்கவாதம் வரலாம். உண்மையான பாதிப்புகள் அறிக்கையிடப்படாதவை 10 மடங்கு அதிகமாக இருக்கலாம்.


ஏன் இன்னும் கழுவுகிறார்கள்?

2024 'ஃபுட் கன்ட்ரோல்' இதழ் ஆய்வின்படி, தென்கிழக்கு ஆசியாவில் 96% பேர் கழுவுகின்றனர்; மேற்கத்திய நாடுகளில் 39-70%. ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் உள்ளூர் சந்தைகளில் சுத்தம் குறைவு என்பதால் பழக்கம்; மேலும் கலாச்சார அடையாளமாக உள்ளது. இருப்பினும், நவீன பதப்படுத்தப்பட்ட கோழி ஏற்கனவே சுத்தம் செய்யப்பட்டது.


பாதுகாப்பு ஆலோசனைகள்

  • கோழியை ஒருபோதும் கழுவாதீர்கள்; நன்கு சமைக்கவும் (உள்ளே 75°C).

  • தனி அலமாரி பயன்படுத்தி, பச்சை-சமைக்கப்பட்ட உணவுகளை பிரிக்கவும்.

  • கைகள், மேடைகளை சோப்பு நீரால் கழுவவும்.

  • வாங்கிய கோழியை கழிவுகள் இருந்தால் மட்டும் துடைக்கவும், சமைக்கவும்.

இந்த வழிகாட்டுதல்கள் CDC ( the national public health agency of the United States,) , FDA (U.S. Food and Drug Administration) , UK Food Standards Agency போன்றவற்றின் அதிகாரப்பூர்வ ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டவை.


🐤🐤🐤🐤🐤தீபம் உடல்நலம் 


ஒப்பீட்டு மனநிலை (Comparison Psychology)



நம்மை எப்படி சோர்வடையச் செய்கிறது?

இன்றைய மனிதன் உழைப்பால் மட்டும் சோர்வடைவதில்லை;
அவன் தொடர்ந்து ஒப்பிடப்படுவதாலும் சோர்வடைகிறான்.

வாழ்க்கை ஒரு பயணம் என்றால், ஒப்பீடு அதில் உள்ள ஒரு சாலைச் சின்னம். அது திசை காட்டலாம். ஆனால் அந்தச் சின்னத்தையே இலக்காகக் கொண்டால், பயணம் குழப்பமாகிவிடும்.


1. ஒப்பீடு – இயல்பான உளவியல் செயற்பாடு

மனித வளர்ச்சியில் ஒப்பீடு ஒரு இயல்பான செயல்முறை.
குழந்தை மற்றொரு குழந்தையைப் பார்த்து நடக்க கற்றுக்கொள்கிறது.
மாணவன் சிறந்த மதிப்பெண் பெற்றவரைப் பார்த்து முயற்சி செய்கிறான்.

இதனை உளவியலில் “Social Comparison” என்று அழைக்கின்றனர்.

ஆனால் இங்கு ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது:

  • ஊக்கமூட்டும் ஒப்பீடு – வளர்ச்சியைத் தூண்டும்.

  • அழுத்தம் தரும் ஒப்பீடு – தாழ்வு உணர்வை உருவாக்கும்.

இன்றைய சமூகம் பெரும்பாலும் இரண்டாவது வகையை அதிகப்படுத்தி வருகிறது.


2. பெற்றோர் ஒப்பீடு: வளர்ந்த நாடுகளின் பார்வை

பல வளர்ந்த நாடுகளில் கல்வி உளவியல் ஆய்வுகள் கூறுவது:

“ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையுடன் தொடர்ந்து ஒப்பிடுவது, அதன் தன்னம்பிக்கையை பாதிக்கும்.”

“அடுத்த மாணவன் 95 எடுத்திருக்கான்; நீ ஏன் முடியவில்லை?”
“அவள் டான்ஸ், மியூசிக், ஸ்போர்ட்ஸ் எல்லாத்திலும் முன்னேறுகிறாள்; நீ?”

இத்தகைய உரைகள் குழந்தையின் முயற்சியை மதிப்பதில்லை;
அதன் மதிப்பை மதிப்பெண்களோடு இணைத்து விடுகின்றன.

உளவியல் ரீதியாக இதன் விளைவுகள்:

  • தன்னம்பிக்கை குறைவு

  • தோல்வி பயம்

  • பெற்றோரிடம் உணர்ச்சி தூரம்

  • முயற்சியை விட முடிவை மட்டுமே கவனிக்கும் மனநிலை

வளர்ந்த கல்வி முறைகள் இன்று ஒரு குழந்தையை அடுத்தவருடன் அல்ல, அதன் நேற்றைய நிலையுடன் ஒப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

“நேற்று விட இன்று சிறிது முன்னேற்றமா?” — இதுவே ஆரோக்கியமான கேள்வி.


3. ஒப்பீடு மற்றும் அடையாள உருவாக்கம்

குழந்தைப் பருவத்தில் தொடங்கும் ஒப்பீடு, பெரியவராகும் வரை மனதில் பதிந்திருக்கும்.

சிறுவயதில்:

“நீ அவனைப் போல இருக்கணும்.”

இளமையில்:

“அவள் மாதிரி சாதிக்கணும்.”

பெரியவனாகி:

“அவர் அளவுக்கு சம்பாதிக்கணும்.”

இதன் முடிவில் மனிதன் தன் அடையாளத்தை மறந்து விடுகிறான்.
அவன் விருப்பங்கள் கூட borrowed விருப்பங்களாக மாறுகின்றன.


4. சமூக ஊடக காலத்தின் ஒப்பீட்டு அழுத்தம்

இன்று ஒப்பீடு குடும்பம் அல்லது வகுப்பறையோடு மட்டுப்படவில்லை.
சமூக ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் ஆயிரம் வெற்றிக் கதைகளை நமக்கு முன்வைக்கின்றன.

ஒருவர் வெளிநாடு சுற்றுகிறார்.
மற்றொருவர் புதிய வீடு வாங்குகிறார்.
மற்றொருவர் சிறந்த உடல் அமைப்பைப் பெறுகிறார்.

நாம் பார்க்கிறோம் —
நம்மை ஒப்பிடுகிறோம் —
அமைதியாக சோர்வடைகிறோம்.

நாம் மறந்துவிடுவது ஒன்று:
மற்றவர்கள் காட்டுவது அவர்களின் சிறந்த தருணம்;
நாம் அனுபவிப்பது நமது முழு வாழ்க்கை.


5. புலம்பெயர் வாழ்வும் ஒப்பீட்டு அழுத்தமும்

புலம்பெயர் நாடுகளில் வாழும் குடும்பங்களுக்கு இந்த ஒப்பீடு இரட்டிப்பு.

“அவர் வந்த சில வருடங்களிலேயே வீடு வாங்கிவிட்டார்.”
“அந்தக் குடும்பம் இவ்வளவு முன்னேறிவிட்டது.”

இங்கு வெற்றியே அடையாளமாக மாறுகிறது.

தாயகத்தில் வாழ்பவர்களும் விடுபடவில்லை:

“வெளிநாட்டுப் போனவன் இவ்வளவு சாதித்திருக்கிறான்.”

இரண்டு இடங்களிலும் மனிதன் ஓடுகிறான் —
அவனுக்காக அல்ல;
ஒப்பீட்டின் பார்வைக்காக.


6. ஒப்பீடு எப்படி சோர்வடையச் செய்கிறது?

1. நிரந்தர திருப்தியின்மை

எவ்வளவு அடைந்தாலும், இன்னொருவர் மேலே இருப்பார்.

2. உளச்சுமை

நாம் முயற்சிக்கிறோம் — ஆனால் அது மகிழ்ச்சிக்காக அல்ல; ஒப்பீட்டை சமாளிக்க.

3. உறவுச் சிதைவு

கணவன்–மனைவி உரையாடல்களிலும் ஒப்பீடு நுழைகிறது.
குழந்தை–பெற்றோர் உறவிலும் அது தூரத்தை உருவாக்குகிறது.

4. தோல்வி பயம்

ஒப்பிடப்படும் குழந்தை முயற்சிக்கத் தயங்குகிறது.
ஏனெனில் தோல்வி என்றால் — ஒப்பீட்டில் கீழே விழுதல்.


7. ஆரோக்கியமான மாற்று

ஒப்பீட்டை முற்றிலும் நீக்க முடியாது.
ஆனால் அதை மாற்ற முடியும்.

பெற்றோருக்காக:

  • குழந்தையின் முயற்சியை பாராட்டு.

  • அதன் தனித்திறனை அறிந்து ஊக்குவி.

  • மதிப்பெண் அல்ல, முன்னேற்றத்தை பேசு.

  • “அடுத்தவன்” என்ற சொல்லை குறை.


பெரியவர்களுக்காக:

  • சமூக ஊடக நேரத்தை கட்டுப்படுத்து.

  • நன்றி உணர்வை வளர்த்து.

  • தன்னிடம் கருணையுடன் இரு (Self-Compassion).

  • உன் பாதையை உன் அளவுகோலால் அளவிடு.


🎿🎿🎿

ஒப்பீடு ஒரு கருவி.
அது வழிகாட்டலாம்.
ஆனால் அது அளவுகோலாக மாறினால் — மனம் சோர்ந்து போகும்.

ஒரு குழந்தையின் கனவுகள், அடுத்த மாணவனின் மதிப்பெண்களால் அளவிடப்படக்கூடாது.
ஒரு மனிதனின் வாழ்க்கை, மற்றொருவரின் வெற்றியால் தீர்மானிக்கப்படக்கூடாது.

வாழ்க்கையின் உண்மையான கேள்வி:

“நான் என்னுடைய பாதையில் முன்னேறுகிறேனா?”

அந்தக் கேள்விக்கு அமைதியான பதில் கிடைத்தால்,
ஒப்பீடு சுமையாக இருக்காது —
வளர்ச்சிக்கான ஒளியாக மாறும்.

..........................🕸தீபம் உளவியல் உலகம் 

உடலை கெடுப்பதல்ல; கட்டுப்படுத்துவது. தண்டனை அல்ல; தன்னடக்கம்.

 ஆன்மிகம் 



ஓடம் உடையுமுன் கரை சேர்வோம்

(சிவவாக்கியம் – 027 )

ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்

ஓடம உள்ள போதலோ உறுதி பண்ணிக் கொள்ளலாம்

ஓடமும் உடைந்த போது ஒப்பிலாத வெளியிலே

ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லையானதே

“ஓடம் உள்ள போதலோ ஓடியே உலாவலாம்…” — சிவவாக்கியரின் இந்த உவமை இன்றும் நம்மை உலுக்கும். மனித உடல் ஒரு ஓடம். பிறவிக் கடலைக் கடக்க இந்த ஓடமே கருவி. ஓடம் நன்றாக இருந்தால் பயணம் சாத்தியம்; உடைந்தால் கடல் நம்மை விழுங்கும்.

இன்றைய மனிதன் வேகத்தில் வாழ்கிறான். தொழில்நுட்பம், பதவி, புகழ்—அனைத்தும் தேடி ஓடுகிறோம். ஆனால் ஓடும் ஓடத்தின் நிலைமை பற்றி யோசிக்கிறோமா? உடல் சோர்ந்திருக்க, மனம் சிதறியிருக்க, உள்ளம் அமைதியின்றி இருக்க—கரை எப்படிச் சேர்வது?


உடல் – ஆன்மிகப் பயணத்தின் கருவி

உடல் வெறும் மாமிசக் கட்டி அல்ல; அது உயிர் தங்கிய ஆலயம்.
இதில்தான் சிந்தனை மலர்கிறது. இதில்தான் இறை உணர்வு விழிக்கிறது.

ஆகவே உடலை அலட்சியப்படுத்துவது ஆன்மிகம் அல்ல. அதே நேரத்தில் உடலையே எல்லாம் என நினைப்பதும் முழுமை அல்ல. சமநிலையே சாவி.

உடற்பயிற்சி மையம்சீரான உணவுமுறை, அழகு பராமரிப்பு—இவை வெளிப்புற ஓடத்தின் மேம்பாடு.
ஆனால் சுவாசம் சீராகிறதா? மனம் அமைதியாகிறதா? அன்பு வளருகிறதா?
இவையே ஓடத்தின் உள்ளமைப்பு.


பிராணாயாமம், தியானம் – ஓடத்தின் துடுப்பு

சிவவாக்கியர் “உறுதி பண்ணிக் கொள்ளலாம்” என்கிறார்.
அதாவது உடலை ஆன்மிகப் பயிற்சிகளால் உறுதிப்படுத்த வேண்டும்.

பிராணாயாமம் – சுவாசத்தை ஒழுங்குபடுத்தி உயிர்சக்தியை சமப்படுத்துவது.
வாசியோகம் – உள்ளுணர்வைத் திறக்குவது.
தியானம் – மன அலைகளை அடக்கி அமைதியை காண்பது.

இன்றைய மனஅழுத்த உலகில் இவை சுகவாழ்க்கை சாதனைகள் அல்ல; உயிர் காக்கும் அவசியங்கள்.


விரதம்: துறவா? தண்டனையா?

இந்தச் சூழலில் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது:
உடலை காக்க வேண்டும் என்றால், உணவு உண்ணாமல் விரதம் இருப்பது மறுக்கப்படுகிறதா?

பதில் எளிதானது அல்ல; ஆனால் தெளிவானது.

🔸 உடலை பலவீனப்படுத்தும் விரதம் – ஏற்றதல்ல

உடல் சோர்ந்து, மனம் குழப்பமடைந்து, சுவாசம் பாதிக்கப்படுமானால் அது ஆன்மிகம் அல்ல.
ஓடத்தைத் துளைத்துவிட்டு கடலை வெல்ல முயல்வது போல.

உடலை தண்டிப்பது இறையை அடையும் வழி அல்ல.
உடலைத் தண்டித்தால்தான் இறைவன் கருணை காட்டுவான் என்று பலர் வழிநடத்தப்படுவது  கேலித்தனமானது. குருட்டுத்தனமானது.
சிவவாக்கியரின் கருத்து – உடல் இருக்கும் போதே இறை உணர்வு பெற வேண்டும் என்பதே.

🔸 ஒழுக்கமான, மிதமான விரதம் – பயனுள்ளதாகும்

ஆனால் ஆசைகளை கட்டுப்படுத்த, உணவில் ஒழுக்கம் கொண்டு வர, உடலுக்கு ஓய்வு அளிக்கச் செய்யும் மிதமான விரதம் வேறுபட்டது.

இது உடலை கெடுப்பதல்ல; கட்டுப்படுத்துவது.
இது தண்டனை அல்ல; தன்னடக்கம்.

புத்தர் கடுமையான விரதத்தை விட்டு “மத்திய மார்க்கம்” எடுத்தார்.
அதிகமும் வேண்டாம்; குறையும் வேண்டாம்.
சமநிலைதான் ஞானத்தின் பாதை.


மரணம் – உடைந்த ஓடம்

“ஓடமும் உடைந்த பொது ஒப்பிலாத வெளியிலே…”
ஒரு நாள் இந்த உடல் செயலிழக்கும்.

அப்போது
• செல்வம் நம்மோடு வராது
• உறவுகள் நம்மைத் தொடராது
• புகழ் நிழலாக மறையும்

உயிர் இருக்கும் போதே சாதனை செய்ய வேண்டும்.
ஓடம் மிதக்கும் போதே கரையை நோக்கிச் செல்க.


இன்றைய மனிதனுக்கான நடைமுறை வழிகள்

  1. தினமும் சில நிமிடம் சுவாசத்தை கவனியுங்கள்.

  2. வாரத்தில் ஒரு நாள் லேசான விரதம் இருந்தாலும், உடல் நிலைக்கு ஏற்ப செய்க.

  3. போதிய உறக்கம், இயற்கை உணவு, நடைப்பயிற்சி—இவை ஆன்மிகத்தின் அடித்தளம்.

  4. கோபம், பொறாமை, அளவுக்கு மீறிய ஆசை—இவை ஓடத்தில் துளை போடும்.

  5. அன்பு, கருணை, பகிர்வு—இவை ஓடத்தை நிலைநிறுத்தும்.


பிறவிக் கடலைக் கடக்க

பிறவி ஒரு பெருங்கடல்.
அலைகள் – ஆசைகள்.
காற்று – கர்ம விளைவுகள்.
ஓடம் – உடல்.
துடுப்பு – தியானம்.
கரை – ஞானம்.

ஓடத்தை அழிக்காமல், ஓடத்தைப் பேணிக் கொண்டு, ஓடத்தைப் பயன்படுத்தி கரை சேர வேண்டும்.


🌢

மனித வாழ்க்கை ஒரு அரிய வாய்ப்பு.
இந்த உடல் ஒரு தெய்வீக ஓடம்.

அதை அலட்சியப்படுத்தாதீர்கள்.
அதை தண்டிக்காதீர்கள்.
அதை வழிநடத்துங்கள்.

உயிர் இருக்கும் போதே உள்ளத்தை உணருங்கள்.
உடல் உறுதியாய் இருக்கும் போதே தியானியுங்கள்.
சமநிலையுடன் வாழ்ந்து, ஞானக் கரையை அடையுங்கள்.

ஓடம் உடையுமுன் கரை சேர்வோம்.
அதுவே சிவவாக்கியர் நமக்கு அளிக்கும் ஆன்மிக அழைப்பு.

🦖🦖🦖🦖🦖தீபம் ஆன்மிக வலம் 🦖🦖🦖🦖🦖

"பெண் வலியின் நீண்ட குரல்" , "பாலியல் வன்கொடுமை"

 


"பெண் வலியின் நீண்ட குரல்"


நெருப்பின் நிழலும் சந்தேக வாளும்

சீதையின் கண்ணீர் தீயில் உருகுது,

ராமனின் சந்தேகம் வாளாய் வீசுது.

கர்ப்பிணி உடல் காட்டில் தள்ளப்படுது,

இன்று பெண்கள் தெருக்களில் தள்ளப்படுது.

"தர்மம்" என்ற பெயரில் அநீதி நிறைந்ததை  இறைசாயமிட்டு இனிதே வளர்த்தோம்,

பாவையர்மேல்  கொடுமைக்கு வழியிட்டோம் 


வஞ்சனை வலியின் பழைய பாடம்

ஆயர் பெண்கள் குளிக்கும் யமுனைத் தீரம்,

கண்ணன் ஆடைகளை மறைத்து சிரிக்கும் மரம்.

அவமானம் அவளுக்கு, வெட்கம் உடலெல்லாம்,

இன்று பெண்ணுடையுரிய  உயர்ந்திடும் கையெல்லாம் கண்ணனின் அவதாரங்களா?

அல்லது கடவுள் கதையென்று கட்டிவிட்ட 

ஆரிய அதிகார சூழ்ச்சியின் விளைவா? 


கொடுமையின் சங்கீதம் இன்றும் ஒலிக்குது

திரௌபதி அரங்கில் உருகும் வஸ்திரம்,

இன்று பெண் குரல் மூழ்கும் சமூக அரங்கம்.

கற்புக்காக தீக்குளிர், காட்டுக்குத் தள்ளல்,

இன்று வீடுகளில் வன்முறை, தெருக்களில் தள்ளல்.

நூல்கள் நியாயப்படுத்தும் அந்தப் பழைய தர்மம்,

பெண் இரத்தம் சிந்தும் போது மௌனமான தர்மம்.


அநீதி நூல்களின் நிழல் இன்று

புராணங்கள் பேசும் "போகப் பொருள்" பெண்,

இன்று வன்முறைக்கு வழிவகுக்கும் பெண்.

சங்கக் கதைகள் சொல்லும் வஞ்சம், துரோகம்,

இன்றைய பாலியல் வேதனைக்கு அடிப்படை யோகம்.

அதிகாரம் செலுத்தும் ஆண் மனம் இன்னும்,

பெண் உரிமைக்கு எதிராய் நிற்கும்.


எழுச்சியின் ஒளி – இனி மௌனம் இல்லை!

இனி இல்லை அந்த நெருப்பு, இருள், சந்தேகம்!

பெண் குரல் உயரும், உடல் உயரும், உரிமை உயரும்!

வன்முறை துண்டிக்கும் வாள் நாம் கையில்,

நியாயத்தின் நதி பொழியும் தமிழ் நெஞ்சில்.

பழைய நூல்களை விமர்சித்து எழுவோம்,

பெண் விடுதலைக்காக போராடுவோம்!

-செ.மனுவேந்தன் 

ፌፌፌፌፌፌፌፌፌፌ


"பாலியல் வன்கொடுமை"


பாலியல் வன்கொடுமை பெண்களுக்கு வஞ்சகமே 

பாவச் செயல்களின் பிறப்பிடமும் அதுவே! 

பாவை பிருந்தாவின் கற்பழிப்புத் தெரியுமா 

பாதக நடத்தையை திருவிளையாடல் என்கிறதே!


விண்ணில் இருப்பவன் உதாரணம் தரவேண்டாமா

மண்ணில் இருப்பவன் அதைத் தொடர! 

எண்ணத்தில் அதை நன்கு பதித்தவன் 

கண்ணை மூடி வல்லுறவு செய்கிறானே!


காமம் கூத்தாடும் கதைகளைத் தவிர்த்து 

காதல் பேசும் புராணம் பரவட்டும்! 

காலம் அறிந்து பழையதை எறியுங்கள் 

காந்தையை மதித்து அவளை வாழவிடுங்கள்!    


-[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்] 

ፌፌፌፌፌፌፌፌፌፌ