திருக்குறள்... -/79/-நட்பு


திருக்குறள் தொடர்கிறது



79. நட்பு

👉குறள் 781:

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்

வினைக்கரிய யாவுள காப்பு.

மு.வ உரை:

நட்பைப்போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன, அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன.

சாலமன் பாப்பையா உரை:

சம்பாதிப்பதற்கு நட்பைப் போல அரிய பொருள் வேறு எவை உண்டு? அதைச் சம்பாதித்து விட்டால் பிறர் புக முடியாதபடி நம்மைக் காப்பதற்கு அரிய பொருள் வேறு எவை உண்டு?

கலைஞர் உரை:

நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லை.

English Explanation:

What so sure defence 'gainst all that foe can do?

 

👉குறள் 782:

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்

பின்னீர பேதையார் நட்பு.

மு.வ உரை:

அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

சாலமன் பாப்பையா உரை:

பிறை, நாளும் வளர்வதுபோல, அறிவுடையார் நட்பு வளரும்; முழு நிலவு தேய்வது போலப் பேதைகளின் நட்பு தேயும்.

கலைஞர் உரை:

அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்.

English Explanation:

The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.

 

👉குறள் 783:

நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்பு.

மு.வ உரை:

பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை:

படிக்கும்போது எல்லாம் மகிழ்ச்சி தரும் நூலின் இன்பம் போல நல்ல குணமுள்ளவரோடு கொண்ட நட்பு அவரோடு பழகும் போதெல்லாம் மகிழ்ச்சி தரும்.

கலைஞர் உரை:

படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்பு.

English Explanation:

Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.

 

👉குறள் 784:

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

மேற்சென் றிடித்தற் பொருட்டு.

மு.வ உரை:

நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு அன்று, நண்பர் நெறிக்கடந்து செல்லும் போது முற்பட்டுச் சென்று இடித்துரைப்பதற்காகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனோடு நட்புக் கொள்வது சிரித்து மகிழ மட்டும் அன்று; நண்பனிடம் வேண்டாத செயல் இருக்கக் கண்டபோது விரைந்து கண்டித்துப் புத்தி சொல்வதற்கும் ஆம்.

கலைஞர் உரை:

நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்.

English Explanation:

Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.

 

👉குறள் 785:

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்.

மு.வ உரை:

நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனோடு ஒருவன் நட்புக் கொள்வதற்கு அருகருகே இருப்பதோ, நெருங்கிப் பழகுவதோ வேண்டியதில்ல. இருவரது எண்ணமும் ஒத்திருந்தால் அதுவே நட்பு என்னும் தோழமையைக் கொடுக்கும்.

கலைஞர் உரை:

இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானது.

English Explanation:

Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.

 

👉குறள் 786:

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்

தகநக நட்பது நட்பு.

மு.வ உரை:

முகம் மட்டும் மலரும் படியா நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:

பார்க்கும்போது மனம் மகிழாமல், முகம் மட்டுமே மலரப் பழகுவது நட்பு அன்று. அன்பால் மனமும் மலரப் பழகுவதே நட்பு.

கலைஞர் உரை:

இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்.

English Explanation:

The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.

 

👉குறள் 787:

அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்

அல்லல் உழப்பதாம் நட்பு.

மு.வ உரை:

அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச் செய்து, அழிவுவந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே நட்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அழிவு தரும் வழிகளில் நண்பன் சென்றால் தடுத்து, நல்ல வழியில் அவனைச் செலுத்தி அவனுக்குக் கேடு வரும் என்றால் அதை அவனுடன் பகிர்வது நட்பு.

கலைஞர் உரை:

நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்.

English Explanation:

(True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).

 

👉குறள் 788:

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.

மு.வ உரை:

உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

சாலமன் பாப்பையா உரை:

பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.

கலைஞர் உரை:

அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்.

English Explanation:

(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).

 

👉குறள் 789:

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

மு.வ உரை:

நட்புக்கு சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல் இல்லாமல், முடியும் போதெல்லாம் உதவி செய்து தாங்கும் நிலையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நட்பின் அரியணை எது என்றால், எப்போதும் மாறாமல் முடிந்தபோது எல்லாம் ஒருவர்க்கு ஒருவர் உதவுவதேயாம்.

கலைஞர் உரை:

மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்.

English Explanation:

Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth).

 

👉குறள் 790:

இனையர் இவரெமக் கின்னம்யாம் என்று

புனையினும் புல்லென்னும் நட்பு.

மு.வ உரை:

இவர் எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு இத் தன்மையுடையேம் என்று புனைந்துரைத்தாலும் நட்பு சிறப்பிழந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:

இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.

கலைஞர் உரை:

நண்பர்கள் ஒருவருக்கொருவர் ``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்.

English Explanation:

Though friends may praise one another saying, "He is so intimate with us, and we so much (with him)"; (still) such friendship will appear mean.

 

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து:

- "கனகம்மா"- சிறு கதை



அத்தியடி, யாழ்ப்பாணத்தில் கந்தையா & கனகம்மா குடும்பம் ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தாலும், 1971  ஆம் ஆண்டுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தாலும், சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட முறையற்ற நடவடிக்கைகளாலும், அதைத்தொடர்ந்து 1983 தமிழருக்கு எதிரான ஜூலை கலவரத்தாலும் அவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பாதுகாப்புக்காகவும், அமைதியான சூழலுக்காகவும், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் மெல்ல மெல்ல இலங்கை நாட்டை விட்டு வெளிக்கிடத் தொடங்கினர். அப்படியான ஒரு கால கட்டத்தில் தான், குடும்பத் தலைவன் கந்தையாவும் திடீரென ஒரு நாள், 2000 ஆண்டில் மாரடைப்பால் காலமாகிவிட்டார்.

 

இனக்கலவரம் பெரும் போராக வெடித்த காலம் அது. கிழக்கு வடக்கு மாகாணம் எங்கும் ஒரு பாதுகாப்பற்ற சூழல். தனித்துப்போன கனகம்மா, தன் இளைய  மகளுடன் அத்தியடியிலேயே வாழத் தொடங்கினார். தொடக்கத்தில் போரின் பாதிப்புகள் குறைவாக இருந்ததாலும், தட்டுப்பாடுகள் அவ்வளவாக பாதிப்பு அடையாததாலும் வாழ்வு ஓரளவு சமாளிக்கக் கூடியதாக இருந்தது. என்றாலும் வேலைகளுக்கு போய் வருவதும், பாடசாலைக்கு போய் வருவதும் பல இடர்பாடுகளை சந்தித்தது. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற பயம் பொதுவாக எல்லா வடக்கு கிழக்கு மக்களிடமும் இருந்தது.  

 

இனப் போரின் திவீரமும் அதனால் தட்டுப்பாடுகளும் போக்குவரத்துக்களும் பிரச்சனைகளுக்கு உள்ளாக, குடும்பத்துக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் தோன்றின. பிள்ளைகளின் படிப்பை தொடரவேண்டும், அதேநேரம் பாதுகாப்பும் வேண்டும் தாயையும் பார்க்கவேண்டும் போன்ற சுமைகள் ஒருபக்கம். இவற்றை ஓரளவு சமாளிக்க யாழ்ப்பாணத்தை விட்டு கொழும்புக்கு போகவேண்டும் என்று இளைய மகளும், தான் பிறந்த மண்ணை விட்டு வரமாடடேன் என்று தாயும் இரு வேறு திசையில் இருந்தார்கள். மகளின் தற்காலிக முடிவு நல்லதாக இருந்தாலும், பிறந்த மண்ணில் தாய் கொண்ட பற்று இழுபடியை கொடுத்தது. கனகம்மா, மகள் குடும்பம் கொழும்பு போவதைத் தடுக்கவில்லை, ஆனால் தன்னை பார்க்க வேலைக்கு ஒரு ஆளை ஒழுங்குபடுத்தி, தன் அத்தியடி வீட்டிலேயே, தன்னை விட்டுவிட்டு போகும்படி எந்த நேரமும் கேட்டுக்கொண்டே இருந்தார்.

 

அச்சுவேலி, இடைக்காட்டை  பூர்வீக இடமாக கொண்ட , ஆனால் அத்தியடியில் 1917 இல் பிறந்து வளர்ந்த கனகம்மா, எட்டுப்பிள்ளைகளின் தாயாக இருந்தாலும், இரண்டு பிள்ளைகள் இளம் வயதிலேயே காலமாகியும், ஐந்து பிள்ளைகள் ஒவ்வொருவராக தங்கள் குடும்பத்துடன் நாட்டை  விட்டு போனதாலும், மிஞ்சி இருக்கும் இளைய மகளின் அரவணைப்பும் பாதுகாப்பும் அவசியம் என்பதை அறியாதவர் அல்ல கனகம்மா. பணம் அவருக்கு பிரச்சனை இல்லை. அவரின் பிரச்சனை தன் வீட்டை, மண்ணை விட்டு வெளியே போவது தான். கனகம்மா அதே சிந்தனை, அதனால் அவரின் கவலையும் அதிகரித்து, அவரின் முகத்தின் செந்தளிப்பும் குறையத் தொடங்கியது. அரசை, அரசியல்வாதிகளை தன்பாட்டில் திட்டுவார். சிலவேளை முற்றத்து மண்ணைத் தூக்கி எறிவார். கனகம்மாவின் போக்கு ஒரு வித்தியாசமாக மாறிக்கொண்டு இருந்தது. 

 

கணவனின் மறைவிற்கு பிறகு, அவரின் வாழ்வில் ஒரு கை முறிந்தது போல உணர்ந்தார். ஆனால் அவரின் மருமகன் அந்தக்குறையை விடாமல், தேவையான வெளி உதவிகளை அன்பாகவும் ஆதரவாகவும் செய்தார். ஆகவே கனகம்மாவிற்கு பெரும் பிரச்சனை என்று ஒன்றும் இருக்கவில்லை, முதுமையும் கவலையும் தான் அவரை வாட்டிக்கொண்டு இருந்தது.

 

யாழில் அடிக்கடி நடைபெறும் ஆகாயத்தில் இருந்து குண்டு வீச்சிலும், கோட்டையில் இருந்து ஷெல் தாக்குதலும் மற்றும் படையினரின் கெடுபிடிகளும் கனகம்மாவின் இளைய மகளுக்கு எப்பவும் ஒரு பதற்றத்தை கொடுத்துக் கொண்டே இருந்தது. அது ஞாயமானது கூட. எவ்வளவு கெதியாக வடமாகாணத்தை விட்டு வெளியே போகவேண்டும் என்று ஏங்கிக் கொண்டே இருந்தார். ஆனால் தாயின், கனகம்மாவின் பிடிவாதம் தளர்ந்தபாடில்லை. தாயை தனிய   விட்டுவிட்டு போகவும் மனம் இல்லை. முதியோரின் தனிமை எவ்வளவு கொடுமை என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.

 

ஒரு காலத்தில், புதிதாக வீட்டுடன் அணைத்துக் கட்டிய புதுவிறாந்தை  முழுவதும் பொயிலை அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதன் மேல் ஏறி, தம்பி இருவருடனும் விளையாடும் போது வாங்கிய அடிகள் எத்தனையாக இருந்தாலும்,  'அம்மா, கனகம்மா என்றும் எங்களை மிக அன்போடும் ,கண்டிப்போடும் வளர்த்திருந்தாள்.பிள்ளைகளை கண்ணுங்கருத்துமாக வளர்த்து கரை சேர்த்திருந்தாள்' .... மகள் அதை முணுமுணுத்தபடி வானத்தை பார்த்துக்கொண்டு நின்றாள். அவளால் வேறு என்ன செய்ய முடியும்?

 

பேரப்பிள்ளைகளின் உலகத்தில் கனகம்மா ஒரு குழந்தையாகவே மாறிப் போவாள். கனகம்மாவிடம் அன்பு எவ்வளவு இருந்ததோ அந்த அளவு வைராக்கியமும் இருந்தது. அது மட்டும் அல்ல, அவரது  வார்த்தைகள் உச்ச ஸ்தாயில் [மண்டிலத்தில்] வெளிப்படும் தன்மை கொண்டவை. எனவே அந்த பேச்சை கோபப் பேச்சாக புரிந்து கொண்ட உறவுகளும் இல்லாமல் இல்லை. அந்த இரண்டும் தான் அவரின் குறைபாடு என்று சொல்லலாம். கனகம்மா இப்ப அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த வாசகம் படுக்கையில் போட்டு வதைக்காமல், இவங்களின் கெடுபிடியால் அகப்படாமல், சீக்கிரமே போயிரணும். வீட்டின் வளவில் பதுங்கு குழிகள் கட்டி இருந்தாலும், கனகம்மா அங்கெல்லாம் போகமாட்டார். அப்படியான சூழலில் அத்தியடி பிள்ளையாரையும் நல்லூர் முருகனையும் திட்டித் தீர்த்துவிடுவார்.

 

 கந்தையா இறந்ததிலிருந்து கனகம்மா தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாள். பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு கோணல் பார்வைகளுக்கு இரையாவதை விட தனிமையில் அமைதி பெறுவதையே அவர் அதிகமாக விரும்பினார். ஒரு சில நேரங்களில் பழைய நினைவலைகளில் சிக்கி, அவளுக்குள்ளேயே ஒப்பாரிவைத்து அழுவதும் உண்டு. ஒரு சாரார் அவர்கள் எங்கு வசித்தாலும், சூழ்நிலை காரணமாக, தனிமையை உணர தொடங்குவதும், தாம் தனித்து விடப் பட்டு விடும் என ஏங்க தொடங்குவதும் அவர்களின்  உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியாகும். அதனை கனகம்மாவின்  இளைய மகள் நன்கு உணர்ந்தவர். அது தான் அவரை விட்டுவிட்டு போகாமல் இன்னும் அத்தியடியிலேயே இருந்தார்.

 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு 243 இல் நாம் ஒரு முதியவரை சந்திக்கிறோம்.அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா?

 

"இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல்

 செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத்

 தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து

 தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி

 மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு

 உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து

 நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக்

 கரையவர் மருளத் திரையகம் பிதிர

 நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து

 குளித்துமணற் கொண்ட கல்லா இளமை

 அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ

 தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று

 இருமிடை மிடைந்த சிலசொல்

 பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே"  

 

இங்கே முதல் பதினொரு அடிகளில்  தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து அந்த இளமை இப்ப எங்கே போய்விட்டது? என பெரு மூச்சு விடுகிறார். அப்படி என்றால் இப்ப அவரின் நிலை என்ன? அதையும் கடைசி மூன்று வரிகளில்...  "பூண் சூட்டிய நுனியை யுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து , இருமல்களுக்கு இடை இடையே வந்த சில சொற்களைக் கூறும் , முதுமையின் நிலை இரங்கத் தக்கது" என்கிறார். அப்படித்தான் கனகம்மா இன்று இருக்கிறார்.

 

என்றாலும் மூத்த மகளும் நாலாவது மகன் குடுப்பத்துடனும் 2003 யாழ் போனபோது, மூத்தமகள், நாலாவது மருமகள், இளைய மகள் எல்லோரும் சேர்ந்து கனகம்மாவுடன் கவனமாக எடுத்து உரைத்ததின் பலனாகா இறுதியில் ஒருவாறு அத்தியடியை விட்டு நகர ஒத்துக்கொண்டார். மனிதரின் வாழ்க்கையில் ஒவ்வொரு கால கட்டமும் பலவிதமான உறவுகள் கடந்து சென்று கொண்டே தான் இருக்கும். ஒவ்வொன்றும் அன்பு, பாசம், நேசம், துன்பம், களிப்பு என்று மனதில் தோன்றும் மொத்த உணர்வுகளையும் உள்ளடக்கியதாய் இருக்கும். எத்தனை உறவுகள் இருந்தாலும் அம்மாவுக்கும் பிள்ளைக்குமான உறவுக்கிடையேயான பந்தம், மற்ற எல்லாவற்றையும் விட மேலானது. வாழ்வின் பாதையில் ஆயிரம் பேர் வந்தாலும் இவர்கள் இருவருக்குமிடையேயான மனது மட்டும் அருகருகே அமர்ந்து மற்றவர்களை வேடிக்கை பார்க்கும். அவ்வளவு எளிதில் இந்த உறவுக்கயிற்றை வெட்டிவிட முடியாது. அதனாலதான் கனகம்மா இறுதியில் சம்மதித்தார் போலும். என்றாலும் சுவருடன் சாய்ந்து தன் முகத்தை சுளித்து தன் வெறுப்பையும் கோபத்தையும் காட்டிடத் தவறவில்லை. அது அவரின் இயல்பான குணம். அதை யாராலும் மாற்ற முடியாது.

 

நன்றி

 

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]