விஞ்ஞானத்தின் விந்தை

        அறிவியல்=விஞ்ஞானம்



💊மறதி நோய்கள்

நாள்பட்ட துாக்க மின்மையால் அவதிப்படுபவர்களுக்கு முதுமையில் அல்சைமர் முதலிய மறதி நோய்கள் ஏற்படு வதற்கான வாய்ப்பு மற்றவர் களை விட 40 சதவீதம் அதிகம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

⭐தோல் புற்றுநோய்

அமெரிக்காவில் உள்ள வாண்டர்பில்ட் பல்கலை 33,000 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வில், பி3 வைட்டமினை எடுத்துக்கொள்வதன் வாயிலாக, தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 54 சதவீதம் குறைவதாக தெரியவந்துள்ளது.

 

🕴நியாண்டர்தால் மனிதர்

ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் 80,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நியாண்டர்தால் மனிதர்களின் கால் தடத்தைத் தொல்லியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதை மேலும் ஆராய்ந்தால் இவர்களின் இடப்பெயர்ச்சி பற்றி அறிந்து கொள்ள முடியும்.

 

🌞ஓசோன் படலத்தில் துளை மறைகிறதா?

கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட உலக சுற்றுச்சூழல் ராஜதந்திரத்திற்கு பலன் கிடைக்கத் துவங்கிவிட்டது. வியன்னா உச்சி மாநாடு, மாண்ட்ரியேல் உச்சி மாநாடு போன்றவற்றில் எட்டப்பட்ட முக்கிய ஒப்பந்தங்களால், பல நாடுகள், ஓசோன் படலத்தை சிதைக்கும் வேதிப்பொருட்களின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்துள்ளன. உலக அளவில், இந்த அபாயகரமான பொருட்களில் 99 சதவீதம் படிப்படியாக நீக்கப்பட்டுள்ளன.

அன்டார்டிக் பகுதியின் மேல், கடந்த 2020 முதல் 2023 வரை இருந்த ஓசோன் துளையின் சராசரி அளவைவிட, 2024ல் இருந்த துளை சிறியதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் அளவிட்டுள்ளனர். ஒப்பந்தத்தில் ஒப்பமிட்ட நாடுகள், தங்கள் வாக்குறுதிகளை தொடர்ந்து கடைப்பிடித்தால், இந்த நுாற்றாண்டின் மத்தியில், பெரும்பாலான பகுதிகளில் ஓசோன் அடுக்கு 1980களில் இருந்த நிலைக்குத் திரும்பிவிடும். இந்த வெற்றிக் கதை, சுற்றுச்சூழல் ஆர்வலர் களுக்கு அசாத்தியமான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

 

🐜கண்கவருமா, 'ஏ.ஆர்.ஸ்மார்ட் கிளாஸ்? '

மார்க் சக்கர்பர்க், ஸ்மார்ட் கிளாஸ் எனப்படும் அதிதிறன் கண்ணாடிகளை வெற்றி பெறச் செய்வது என்று கங்கணம் கட்டியிருக் கிறார். அண்மையில் அவரது மெட்டா நிறுவனம், 'ரே-பான் டிஸ்ப்ளே' என்ற அதி திறன் கண்ணாடியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன், பல வண்ண மேம்பட்ட மெய்நிகர் திரை (Augmented Reality colour screen) மற்றும் மணிக்கட்டில் அணியக்கூடிய நரம்பியல் பட்டை (Neural Band) ஆகிய துணைக் கருவி களும் வருகின்றன.

இந்த பட்டையை அணிந்தவர், தன், கை அசைவுகளால் ஸ்மார்ட் கண்ணாடியை இயக்கலாம். எனவே, மொபைல் இல்லாமலேயே, அருகில் இருப்பவர்களுக்கு தெரியாமல், எங்கோ இருப்பவருடன் தொடர்பு கொள்ளலாம். இந்த வசதி, மேம்பட்ட மெய்நிகர் கருவிகளை எளிதாகப் பயன்படுத்த உதவும்.

 

🖼புராதன ஓவியங்கள்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த க்ரிபித் பல்கலை சவுதி அரேபிய பாலைவனத்தில் 12,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட 176 பாறை ஓவியங்களை கண்டறிந்துள்ளது. முற்காலத்தில் இங்கே மனிதர்கள் வாழ்ந்தனர் என்பதை இது உணர்த்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

🥴சொரியாசிஸ் நோயை கட்டுப்படுத்தும் உணவு

சில நோய்கள் இன்றைய தேதி வரை குணப்படுத்த இயலாதவையாக உள்ளன. ஆனால், இவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். அப்படியான ஒன்று தான் சொரியாசிஸ். உலகம் முழுக்க 12.5 கோடி மக்கள் சொரியாசிஸ் நோயால் அவதிப்படுகின்றனர்.

இதைக் கட்டுப்படுத்த எந்த வகையான உணவு முறை உதவும் என்று விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வந்தனர்.

ஸ்பெயின் நாட்டின் ரமோன் ஒய் கஜல் பல்கலையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மத்திய தரைக்கடல் உணவு முறை வாயிலாக இந்த நோயை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று கண்டறிந்திருக்கின்றனர்.

மத்திய தரைக்கடல் உணவு முறை என்பது பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், மற்றும் மீன் போன்றவற்றை முதன்மையாக உள்ளடக்கிய தாவர அடிப்படையிலான உணவு முறையாகும்.

இதில், பல்வேறு சத்துக்கள் உள்ளன, பலவித மான நோய்கள் வராமல் தடுக்கின்ற ஆற்றலும் உடையது. அதற்கு காரணம், இந்த உணவு முறையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் , பாலி பீனால் முதலிய சத்துக்கள் இருப்பது தான். இவை தோலில் ஏற்படும் அழற்சியை கட்டுக்குள் வைத்திருக்கும்.

இந்த ஆய்வுக்கு மிதமான முதல் நடுத்தர சொரியாசிஸ் பாதிப்பு உள்ள 38 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களின் சராசரி வயது 46. இவர்களுக்கு 18 வாரம் தொடர்ந்து மத்திய தரைக்கடல் உணவுகளைக் கொடுத்தனர்.

பிறகு அவர்கள் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்தனர். அதில் பல பேருக்கு நல்ல முன்னேற்றம் இருந்தது.

சொரியாசிஸ் நோய் தாக்கம் குறைந்திருந்தது, அதேபோல இவர்களா ல் நன்றாக துாங்கவும் முடிந்தது.

இந்த ஆய்வின் வாயிலாக, சொரியாசிஸ் நோய் ஏற்பட்டவர்களுக்கு அவர்கள் சாப் பிடுகின்ற மருந்துடன் சேர்த்து மத்திய தரைக்கடல் உணவு முறையை மேற்கொண்டால் நோயின் பாதிப்பு குறையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்

"அறிவியல் நோக்கில்....பெளத்தம் [பகுதி:11] ஒரு அலசல் . "

 


"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய  இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

 

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

 

 

பகுதி: 11 விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / பண்டுவாச[ன்] அல்லது 'பண்டுவாசுதேவ[ன்]'

 

முப்பத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்த விஜயன், தனக்குப் பின் ஆட்சி செய்ய ஒரு பிள்ளையும் இல்லாமல் இறந்தார். ஆனால், அவர் இறப்பதற்கு முன் தனது சகோதரரான சுமித்தாவிடம் தனது அரசை தொடர்ந்து ஆள இலங்கைக்கு வருமாறு செய்தி அனுப்பினார். என்றாலும் விஜயனின் புரோகிதரும், பிரதான அரசாங்க அமைச்சருமான உபதீச[ன்], விஜயனின் இறப்பின் பின்பாக, தன் பெயரில் உபதிஸ்ஸ நுவர எனும் ஒரு நகரத்தைக் கட்டி, இளவரன் பண்டுவாச[ன்] வரும் வரை சிறிது காலம் ஆட்சியில் இருந்தான். உபத்திஸ்ஸன் ஒரு சாலிக்கிராம பிராமணன் (Saaligrama Brahamin) என ஹம்பிர்ய் வில்லியம் கோட்ரிங்கன் (Humphry William Codrington / 11 November 1876 – 7 November 1942)) எழுதியுள்ள "இலங்கையின் சுருக்கமான வரலாறு [A Short History of Ceylon - 1926]" எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது புத்தமதம் அப்பொழுது இலங்கையில் இல்லை என்பதும் வெளிப்படையாகத் இதன் மூலம் தெரிகிறது. அப்படி என்றால் புத்தரின் இலங்கை வருகை, அதன் நோக்கம் மற்றும் புத்த சமயம் பரப்பவென புத்தரால் தேர்ந்து எடுக்கப்பட்ட விஜயன் எல்லாம்   என்னவாயிற்று? 

 

மகாவம்சத்தின்படி சுமித்தாவின் இளைய மகன் பண்டுவாசுதேவா இலங்கைக்கு, அந்த பொறுப்பை ஏற்க வந்தான். எனவே, இவன் இலங்கையின் முதலாவது அரச மரபின் இரண்டாவது அரசனாவான். இவன் விஜயனின் தாமிரபரணி இராச்சியத்திலிருந்து வடக்கே ஏழு அல்லது எட்டு மைல் தொலைவில், தற்கால மன்னார் மாவட்டத்தில், உபதீசனால் அமைக்கப்பட்டு இருந்த, உபதீச நுவாரா (Upatissa Nuwara) என்ற இடத்தில் இராச்சியம் அமைத்து, (இதனை விஜிதபுரம் என்றும் அழைப்பர்) அதன் மன்னரானார். ஆனால் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை 'பண்டுவாச' என்று பெயரிடுகிறது. மேலும் விஜயனுடன் இவன், எவ்வாறு தொடர்பு கொண்டவன் என்று எந்த குறிப்பும் பதியாததால், இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தனர் என்றும் வரலாற்றறிஞர்கள் இன்று வாதிடுகின்றனர். இதற்கு ஆதாரமாக விஜயன் பாண்டியனின் மகளை மணந்ததைக் குறிப்பிட்டு மீண்டும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால், பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர்.

 

உதாரணமாக, பாளி அல்லது பிராகிருதம் மொழியில் பண்டு என்பது பாண்டியனை குறிக்கிறது, வாச என்பது 'வாசி' யின் திரிப்பாகும், எனவே 'பாண்டியவாசி' என்றாகிறது, அதாவது பாண்டியன் ஆகிறது [Deepavamsa calls King Pandu Vasudeva (504-474 BC) as Pandu Vasa (a Pali or Prakrit equivalent of Pandya Vasa meaning one from the Pandyan country i.e., a Pandya by his nationality]. கி.மு 505 இல் விஜயன் வாரிசு இல்லாமல் இறந்தான். இவன் 'பாண்டியவாசி' என்பது மேலும் ஒரு வலுவான காரணத்தால் என்னால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. உதாரணமாக, விஜயன் தனது பட்டத்து ராணியை, தான் பிறந்த கலிங்கத்தில் இருந்து, எதோ பல காரணங்களால் தேடவில்லை, அவன் தென் இந்தியாவில் அமைந்த பாண்டிய நாட்டிலேயே தேடினான். ஆகவே இப்ப அரச வாரிசை எப்படி கலிங்கத்தில், தன் அரச குடும்பத்தில் தேடுவான்? கொஞ்சம் நடு நிலையாகச் சிந்தியுங்கள். எந்த காரணத்திற்க்காக தனது பட்டத்து மனைவியை கலிங்கத்தில் எடுக்க வில்லையோ, அதே காரணம் இப்பவும் அவனுக்கு இருக்கும். எனவே கட்டாயம் தன் மனைவியின் பாண்டிய அரச குடும்பத்தில் இருந்தே எடுத்திருப்பான். இராணி பாண்டிய நாட்டைச் சேர்ந்தவள் என்பதால், அவளின் பரிந்துரையும் அங்கு இருந்து இருக்கும். இதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதனால் தான் பண்டுவாசனின் வாரிசுகள் கூட அபயன் [Abhaya /பயமில்லாதவன்], பண்டு அபயன் [காபயன்] [Pandukabhaya], மூத்த சிவன், மகா சிவன் இப்படியான பெயர்களை காண்கின்றோம். மேலும் இலங்கைக்கு முன்னைய காலத்தில் பாண்டிய அரச நாடு இலகுவான தொடர்புடைய நாடாக இருந்தது. உதாரணமாக, வைகை நதியினூடாக வந்தால், அது மன்னாரை அடைகிறது. மன்னாரில் இருந்து அருவி ஆறு (Malwattu Oya) மூலம் பயணித்தால் அனுராதபுரம் அடையலாம். இதையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

 

இவனுக்குப் பத்து ஆண் மக்களும், உம்மத சித்தா என்னும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். மூத்த மகன் அபய என்பவனாவான். இவனது இறப்பின் பின்னர் இவனது மூத்த மகன் அபய அரசனானான்.

 🥿🥿🥿🥿🥿

*அடுத்த பகுதியை வாசிக்க அழுத்துக...

*ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...

🥿🥿🥿🥿🥿

Part: 11 / The important narrative about the consequent kings and the related affairs / 'Panduvasudeva'

 

Vijaya ruled for thirty- eight years and died without any son to rule after him. He sent a message to his brother Sumitta prior to his death to come to take over his kingdom. Panduvasa came as per the Dipavamsa (Panduvasudeva as per the Mahavamsa). How Panduvasa is related to Vijaya is not given in the Dipavamsa. Panduvasudeva is the youngest son of Sumitta, the brother of Vijaya as per the Mahavamsa.

 

.

நன்றி 

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

 

பகுதி / Part: 12 தொடரும் / Will Follow

 

சிறுநீர் சிந்தப்படுவது ஒரு நோயா ? தவிர்க்க என்னவழி?

 சிறுநீர் கழித்து இருக்கை  விட்டு எழுந்ததும் நிலத்தில்   சிறுநீர் சிந்தப்படுவது ஏன் ? இது ஒரு நோயா? இதை வைத்தியர் எவ்வாறு அழைப்பர்? தவிர்க்க என்னவழி?

மூத்தோர்கள் மலசல கூடம் சென்று சிறுநீர் கழித்து முடிந்ததும் , சிலவேளை  அவர்களிடமிருந்துகூட சிறுநீர் அவர்களுக்கு தெரியாமலேயே நிலத்தில் சிந்தப்பட்டாலும் , அவர்களே யாரோ இப்படி அலங்கோலம் செய்துவிட்டார்களே என்று ஏனையோரிடம்  மற்றவர்களை நொந்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெறுவதுண்டு.

இப்படியான நிலையில் சிலர்  தங்களிடமிருந்து தான் சிறுநீர் சிந்தப்படுள்ளது கண்டு மிகவும் தம்மை நொந்து,  வெளியில் சொல்ல வெட்கப்பட்டு வெளியிடங்களில் மலசலகூடம் செல்ல அஞ்சுவோரும் உண்டு.

இதன் காரணங்களை அறிந்துகொள்ளாத பிள்ளைகளும் மூத்தவர்களின் கவனக்குறைவு என்பதை  காரணமாக  க்கருதி  அவர்களை நச்சரிப்போர்களும் உண்டு.

நல்லது, விடயத்துக்கு வருவோம்.

💧 சிறுநீர் கழித்து எழுந்ததும் floor-இல் சிறுநீர் சிந்துவது — இது என்ன?

இதை மருத்துவத்தில்
👉 Post-Void Dribbling (PVD) அல்லது
👉 Terminal dribbling
என்று Urologist (மூத்திர நிபுணர்) அழைப்பார்கள்.


⚕️ இது ஒரு “நோய்” அல்ல

அதிகமானவர்களுக்கு இது மெல்லிய மூத்திரக் குழாய் தசை பலவீனம் அல்லது
மூத்திரக் குழாயில் மீதமுள்ள சிறுநீர் காரணமாக வரும்.
அதாவது — பெரும்பாலும் அபாயகரமான நோய் அல்ல.

ஆனால் சில நேரங்களில் சில நோய்களின் இது ஒரு அறிகுறியாக இருக்கலாம் 👇


🧠 சாத்தியமான காரணங்கள்

  1. மூத்திரக் குழாயில் (Urethra) மீதமுள்ள சிறுநீர்

    • சிறுநீர் கழித்த பிறகு, சற்று அளவு குழாயில் தங்கி விடுகிறது.

    • எழும்பும் போது அது வெளியேறுகிறது.

  2. Prostate பெரிதாக இருப்பது (Benign Prostatic Hyperplasia – BPH)

    • குறிப்பாக 40 வயதுக்கு மேல் ஆண்களுக்கு இது ஏற்படும்.

    • இதனால் மூத்திர ஓட்டம் தடைபட்டு, முழுவதும் வெளியேறாது.

  3. Pelvic floor தசை பலவீனம்

    • நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, உடற்பயிற்சி குறைவு,
      வயதானது போன்றவற்றால் தசை வலிமை குறையும்.

  4. மூத்திரப்பை முழுமையாக காலியாகாமை

    • சிறுநீர் அடிக்கடி தடுத்து வைப்பது இதற்குக் காரணமாகலாம்.


🩺 மருத்துவர் எவ்வாறு கண்டறிவார்

உரிய Urologist பின்வரும் பரிசோதனைகளை செய்யலாம்:

  • Urine flow test (சிறுநீர் ஓட்டத்தின் வலிமை)

  • Ultrasound bladder scan (மீதமுள்ள சிறுநீர் உள்ளதா பார்க்க)

  • Prostate examination

  • Pelvic floor muscle strength test

இவை அனைத்தும் எளிய பரிசோதனைகள், வலி இல்லாதவை.


தவிர்க்கும் மற்றும் சிகிச்சை வழிகள்

1️⃣ சிறுநீர் கழித்த பின் சில வினாடிகள் காத்திருங்கள்

  • சிறுநீர் ஓட்டம் முடிந்ததும் உடனே எழாமல் 5–10 விநாடிகள் காத்திருங்கள்.

2️⃣ “Urethral Milking” முறை

  • கீழ் வயிற்றில் இருந்து உறுப்பின் நுனிவரை மெதுவாக அழுத்தி இழுத்து விடுங்கள்.

  • இதனால் குழாயில் மீதமுள்ள சிறுநீர் வெளியேறும்.

3️⃣ Pelvic Floor (Kegel) Exercise - 

  • இது சிறுநீர் கட்டுப்பாட்டை மேம்படுத்தும்.

  • தினமும் 3 முறை, ஒவ்வொரு முறை 10 repetition.

  • (நான் மேலே  காட்டிய படம் போல செய்யலாம் 🧘‍♂️)

  • 🧘‍♂️ Pelvic Floor Exercise (Kegel Exercise) செய்வது எப்படி

    🔹 படி 1: தசையை அடையாளம் காணுதல்

    • சிறுநீர் கழிக்கும் போது, ஓட்டத்தை நடுவே நிறுத்திப் பாருங்கள்.

    • அதை நிறுத்த உதவும் தசைதான் pelvic floor muscle.

    • அந்த தசையை மனதில் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் — இதுவே பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் தசை.

    ⚠️ ஆனால் — உண்மையில் சிறுநீர் கழிக்கும் போது அடிக்கடி நிறுத்த முயற்சிக்க வேண்டாம்.
    அது சிறுநீர்க்குழாயில் அழுத்தம் தரும்.
    இது ஒரே முறை மட்டும் "தசை அடையாளம் காண" செய்யப்படவேண்டும்.


    🔹 படி 2: சரியான நிலை

    • அமர்ந்து அல்லது படுக்கையில் தளர்ந்து இருக்கலாம்.

    • தசைகள் தளர்ந்திருக்க வேண்டும் (மூச்சு தடுத்து விடாதீர்கள்).


    🔹 படி 3: தசையை சுருக்குவது

    • அந்த தசையை உள்ளே இழுப்பது போல (சிறுநீர் நிறுத்துவது போல) சுருக்கவும்.

    • 5 விநாடிகள் வைத்திருங்கள்.

    • பிறகு தளர்த்தி 5 விநாடிகள் விடுங்கள்.

    இதை 10 முறை செய்யவும் = 1 சுற்று.


    🔹 படி 4: பயிற்சியின் எண்ணிக்கை

    • காலை – 1 சுற்று

    • மதியம் – 1 சுற்று

    • இரவு – 1 சுற்று

    ➡️ மொத்தம் மூன்று முறை ஒரு நாளில் (ஒவ்வொரு முறை 10 repetition).


    🔹 படி 5: மெதுவாக முன்னேற்றம்

    • சில வாரங்களில் தசை வலுவாகும்.

    • பின்னர் 10 விநாடி வரை தாங்கி வைத்திருக்கலாம்.

    • தொடர்ச்சியாக செய்தால், சிறுநீர் சிந்தும் பிரச்சனை கணிசமாகக் குறையும்.


    🩺 நன்மைகள்

    ✅ சிறுநீர் சிந்தல் குறைவு
    ✅ சிறுநீர் ஓட்டம் வலுவாகும்
    ✅ மூத்திரப்பை முழுமையாக காலியாக உதவும்
    ✅ Prostate பெரிதாக இருப்பவர்களுக்கும் பயன்

4️⃣ அமர்ந்து சிறுநீர் கழிக்கவும் (ஆண்களும் கூட)

  • அமர்ந்தபடி சிறுநீர் கழிப்பது மூத்திரப்பையை முழுமையாக காலியாக்க உதவும்.

5️⃣ நீரை போதுமான அளவில் குடிக்கவும்

  • நீரை குறைப்பது பிரச்சனையை தீர்க்காது; infection அதிகரிக்கும்.


🚨 மருத்துவரை பார்க்க வேண்டிய நிலை

பின்வரும் அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரை காணவும்:

  • சிறுநீர் ஓட்டம் மெதுவாகும்

  • அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை

  • எரிச்சல், வலி, அல்லது ரத்தம்

  • இரவில் பல முறை எழுந்து சிறுநீர் கழிக்க வேண்டுதல்


சுருக்கமாக 🩵
👉 இது ஒரு “நோய்” அல்ல, ஆனால் மூத்திரக் குழாய் தசை பலவீனத்தின் அறிகுறி.
👉 சரியான பழக்கம் + Pelvic exercise + கவனம் = 100% கட்டுப்படுத்தக்கூடியது.

: தீபம் உடல்நலம் பகுதி வெளியீடு 

பழகத் தெரிய வேணும் – 91

 முதுமையில் இளமை

நூறு வயதைக் கடந்த ஒருவர் வேடிக்கையாகக் கூறியது: “நம்மை ஒத்தவர் என்ன நினைப்பார் என்ற கவலை இனி இல்லை. ஏனெனில், அவர்களில் யாரும் இப்போது உயிருடன் இல்லை!”

 

பிறர் என்ன நினைப்பார்கள்!

நாம் அப்படி நினைத்துக் குழம்பாவிட்டாலும், பதின்ம வயதிலிருந்து, `பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்று கண்டித்துக்கொண்டே இருப்பார்கள் பெற்றவர்கள். அதனால், வயது ஏற ஏற, பிறருக்குப் பயந்தே வாழ்வது பழக்கமாகியிருக்கும்.

 

வீண் கட்டுப்பாட்டைப் பொறுக்க முடியாது, சுதந்திரமாக நடக்கத் தலைப்பட்டவர்களுக்கு வசவும், கெட்ட பெயரும் கிடைக்கும்.

 

அறுபது வயதில், யாரும் நம்மைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கவில்லை என்பது புலனாக, `இவர்களுக்காகவா பயந்து பயந்து, நம் வாழ்க்கையை வீணடித்தோம்!’ என்ற அயர்ச்சி உண்டாகும்.

 

இளமையை நல்லபடியாகக் கழித்திருந்தால், முதுமை ஓய்வாக இருக்கும்!” (ஸ்பானிஷ் நாட்டுப் பழமொழி)

 

முதுமையில் வாட்டமா?

நாம் வளர்க்கும் குழந்தைகளும் ஒரு நாள் பெரியவர்கள் ஆவார்கள்; அப்போது, அவர்களுடைய அன்பும் அண்மையும் நமக்குத் தேவைப்படும் என்பது புரியாது, அத்தியாவசியத் தேவைகளைக் கொடுப்பதுடன் தம் கடமை தீர்ந்தது என்று நினைத்து நடப்பவர்கள் முதுமையில் வாடத்தான் நேரும்.

 

::கதை::

நாற்பது வயதுக்கு மேல் மூன்றாவது குழந்தை ஆயிஷாவைப் பெற்றெடுத்தாள் ஹப்ஸா.

 

உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் சமயத்தில், `இது என்ன தொந்தரவு!’ என்ற எரிச்சல் ஏற்பட, குழந்தையை வளர்க்க ஒரு பெண்ணை அமர்த்தினாள். குழந்தை எப்படி வளர்கிறாள் என்று கவனிக்கும் ஆர்வம் கிஞ்சித்தும் அவளிடம் இருக்கவில்லை.

 

ஒரு சமயம், “உன்னை எதற்குத்தான் பெற்றேனோ!’ என்று ஹப்ஸா எரிந்து விழ, அவள் மனம் உடைந்துபோயிற்று.

 

ஆயிஷாவுக்குப் பத்து வயதானபோது, தாய் எது கூறினாலும், “நீ என்னை வளர்க்கவில்லையேஎன்று எதிர்த்துப் பேசினாளாம். (அண்மையில், தன் கதையை வருத்தத்துடன் அப்பெண்ணே என்னிடம் பகிர்ந்துகொண்டது).

 

அன்பு கிடைக்காது ஏங்குபவர்கள் தீய நட்பை நாடுவார்கள். ஆனால், ஆயிஷா நல்ல பெண். மகா புத்திசாலி வேறு. கல்லூரிப் படிப்புடன், தன் கவனத்தைப் பல ஆக்ககரமான வழிகளில் செலுத்தினாள்.

 

தீபாவளிக்கு எங்கள் இல்லத்திற்கு வந்துவிட்டு, “நான் இவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்ததே இல்லை. இன்றிரவு உங்கள் வீட்டில் தங்கலாமா?” என்று கெஞ்சலாகக் கேட்டாள்.

 

அவள் உணவருந்தும்போது, மெள்ள பேச்சுக் கொடுத்தேன்.

 

நீங்கள் செய்வதுபோல், எங்கள் வீட்டில் ஒன்றாக அமர்ந்து, பேசிச் சிரித்தபடி சாப்பிடமாட்டோம். பண்டிகைச் சமயங்களில் அப்படிச் சாப்பிட்டாலும், பேசுவது கிடையாது,” என்றாள்.

 

குடும்பத்தில் யாராவது தனியாகச் சாப்பிட்டாலும், கூடவே ஒருவர் இருக்கவேண்டும் என்பது நான் என் பாட்டியிடம் கற்ற பாடம். சாப்பிடுபவர் அதிகம் பேசக் கூடாது. ஆனால் உடன் இருப்பவர் சுவாரசியமாக ஏதாவது கதை சொல்வார். அனேகமாக, அது அவர் வாழ்க்கையில் சந்தித்த நபர்களைப் பற்றி இருக்கும்.

 

காரில் போகும்போதும் நான் இப்படித்தான் எதையாவது அலசிக்கொண்டிருப்பேன். பொதுவாக, அதிகம் பேசாதவர்கள்கூட அப்போது பேசுவார்கள்,” என்று நான் கூற, “நாங்கள் காரிலும் பேசிக்கொள்வது கிடையாது. அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்,” என்று, விரக்தியுடன் பதில் வந்தது.

 

இன்றும், `அம்மாவை எப்படியெல்லாம் ஆத்திரப்படுத்தலாம்?’ என்று யோசிப்பவள்போல் நடந்துகொள்கிறாள்.

 

அவளைச் சொல்லிக் குற்றமில்லை. சிறு வயதில் அன்பாக வளர்க்கப்பட்டு இருந்தால்தானே தனக்குக் கிடைத்ததைத் திருப்பி அளிக்க முடியும்?

 

வீடு திரும்புகையில், “உங்கள் கதைகளுக்கு மிக்க நன்றி,” என்று பலமுறை கூறி விடைபெற்றாள் ஆயிஷா.

 

வயதானவர்களா? போர்!

தமிழ்நாட்டில், `பெரிசு’, `கிழவிஎன்று பேரன் பேத்திகளே அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கும் ஒரு நாள் முதுமை அண்டாதா?

 

அதுதான் அவர்கள் பழக்கம் என்றாலும், மரியாதை இல்லாதது போலிருக்கிறதே!

 

முதுமை ஒரு நோயல்ல. எத்துணை அனுபவங்களை, இடர்ப்பாடுகளைக் கடந்து வந்திருந்தாலும், முதியோர்களில் பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்வை நடத்துகிறார்களே!

 

வயதானவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பார்கள், வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள் என்று கூற முடியாது. அதற்கு இளமையில் சற்று கவனமாக நடந்திருக்க வேண்டும்.

 

`எனக்கு வயதானவர்களுடன் பேசவே பிடிக்காது. போரடிப்பார்கள்!’ என்று கூறும் நடுத்தர வயதினர் முதுமை அடைந்ததும், நிராதரவாக உணர்வார்கள் — `நாம் நினைத்தது போல்தானே பிறரும் நம்மை மதிப்பிடுவார்கள்!’ என்ற தயக்கத்துடன்.

 

அறிவுரையை ஏற்கலாமா?

நான் புகை பிடிப்பதில்லை. என் தந்தைக்கு அந்தப் பழக்கத்தால் உடல்நிலை சீர்கெட்டுவிட்டதென்று, `நீயும் இந்தப் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாதே! அதை விடவே முடியாது,’ என்று அவரே சிறுவயதிலிருந்து எனக்கு அறிவுரை கூறினார்,” என்று நண்பர் ஒருவர் கூறினார்.

 

வயதில் மூத்தவர்கள் சொல்வதெல்லாம் சரி என்பதல்ல.

 

ஒரு வேறுபாடு: `நான் செய்த தவற்றை நீயும் செய்யாதே!’ என்ற நல்லெண்ணத்துடன் கூறுகிறார்கள் என்று புரிந்துகொண்டால், அவர்கள் சொற்படி நடக்கமுடியும். அதுவே அவர்களுக்கு அளிக்கக்கூடிய மரியாதை.

 

அறிவு வளர வேண்டுமானால், வயதும் கூடிக்கொண்டே போகவேண்டும் என்பதல்ல. பிறரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தாலே போதும். அவர்கள் செய்த தவற்றை நாமும் செய்யாதிருப்போம்.

 

எப்போதும் பாதுகாப்பா!

சில குழந்தைகள் பாதுகாப்பை நாடி, எப்போதும் தாயை ஒட்டியபடிதான் இருப்பார்கள்.

 

`மகளுக்குத்தான் என்மீது எத்தனை அன்பு!’ என்றெண்ணும் தாய்க்கு இப்போக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், குழந்தையின் வளர்ச்சிக்கு இது நல்லதல்ல. தனியாக இயங்க வேண்டிய தருணங்களில் அச்சம்தான் எழும்.

 

::கதை::

பத்து வயதான மகளிடம் வீட்டு வேலை செய்யச் சொன்னாள் தாய்.

 

என் வயதில் நீ செய்தாயா?” என்ற சந்தேகம் பிறந்தது மகளுக்கு.

 

இல்லை,” என்று உண்மையை ஒத்துக்கொண்டாள் பெரியவள்.

 

பின்னே, என்னை மட்டும் செய்யச் சொல்கிறாயே?” சிறு குழந்தைகளுக்கே உரிய எதிர்ப்பு.

 

நான் வளர்ந்தபோது, எங்கள் வீட்டு வேலைகளைச் செய்ய ஆட்கள் இருந்தார்கள். அது வேறு காலம், வேறு நாடு. நீ வளர்ந்தபின், எல்லா வேலைகளையும் நீயேதான் செய்ய வேண்டியிருக்கும். அதற்காகத்தான் இப்போதே பழக்குகிறேன். என்னை மாதிரி நீயும் திண்டாடமாட்டாய், பார்!”

 

சில குழந்தைகளுக்கு இத்தகைய விளக்கம் புரியும். வேறு சிலர், அம்மாமேல் ஆத்திரப்படுவார்கள். தாய் உறுதியாக இருந்தால், அவளுடைய கண்டிப்பின் காரணம் பிற்காலத்தில் புரியும்.

 

அறுபது, எழுபது வயதுக்குமேல் செய்யும் ஒவ்வொரு காரியமும் மலை ஏறுவதுபோல் பிரயத்தனப்பட்டுதான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், மலைமேலிருந்து பார்ப்பதுபோல், வாழ்க்கையின் அழகான தன்மையை உணரமுடியும் என்கிறார் திரு. அனுபவசாலி.

 

வயதானால் குறைந்துகொண்டே வரும் புற அழகு. ஏன், மறைந்துவிடவும் கூடும். ஆனால், மனம் அழகாக இருந்தால், எந்த வயதிலும் அழகாகத் தெரிவார்கள்.

 

காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எல்லா உயிர்களின் உடலும் அப்படித்தான். ஆனால், நம் எண்ணங்களை காலத்துக்கு ஏற்ப மாற்றி நடந்துகொண்டால், நன்மதிப்பும் மரியாதையும் நிலைக்கும்.

 

::கதை::

பெரிய பணக்காரனாக வேண்டும் என்று இளமையில் கனவு கண்டு, அதற்காகக் கடுமையாக உழைத்தான் ரகுபதி. தன்னைச் சார்ந்தவர்களுக்குத் தேவைக்கும் அதிகமாகவே பணம் கொடுத்தான். பணத்துடன் அதிகாரமும் வந்தடைந்தது.

 

அவற்றிற்கான விலை: நேரமின்மையால் குடும்பத்தைக் கவனியாதது.

 

தங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு நபர் இருப்பதையே அவன் குடும்பத்தார் உணரவில்லை.

 

வயதானதும், ரகுவின் உடல்நிலை சீர்கெட்டது. எதிர்பார்த்த அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் கிட்டவில்லை. ஏமாற்றமும் உலகத்தாரின் `நன்றிகெட்டபோக்கால் ஆத்திரமும்தான் மிஞ்சின.

 

அன்பு, கனிவான பேச்சு ஆகியவற்றைக் காசு பணத்தால் ஈடுகட்டிவிட முடியுமா? இது புரியாததால்தான் இறுதிக்கட்டத்தில் பலரது வாழ்க்கையும் சோகத்தில் ஆழ்ந்துவிடுகிறது.

 

முதுமையில் முடிந்துவிடுமா வாழ்க்கை?

குழந்தைகள் வளர்ந்து, கூட்டைவிட்டுப் பறந்ததும், “அவ்வளவுதான்! என் வாழ்க்கை முடிந்துவிட்டது!” என்று விரக்தியுடன் பெருமூச்சு விடுவது எதற்கு?

 

உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. புதிதாகக் கற்க எவ்வளவோ இருக்கின்றன.

 

துணுக்கு

நீ உன் வயதுக்கேற்றபடி நடந்துகொள்ளேன்!” என்று சிடுசிடுத்தாள் மகள்.

 

அலட்சியமாக, தாய் அளித்த பதில்: “எல்லாரும் அப்படி நடந்துகொள்வதால்தான் உலகம் இப்படி சீர்கெட்டுக் கிடக்கிறது!”

 

::கதை::

அழகழகாக உடுக்கவேண்டும், புதிய நாடுகளைச் சுற்றிப் பார்க்கவேண்டும், பலவிதமான மனிதர்களைச் சந்திக்க வேண்டும் என்று ஏதேதோ ஆசைகள் மேரிக்கு.

 

ஆனால், வன்முறையை பிரயோகித்த கணவன், அவளுக்கு வாய்த்திருந்தான். தாற்காலிகமான வேலை செய்து குழந்தைகளைக் காப்பாற்ற நேர்ந்தது.

 

அவளுடைய முதுமையில், கணவன் இறந்தான். ஆனால், அவள் நிர்க்கதியாக விடப்படவில்லை.

 

பல ஆண்டுகள், தங்களுக்காக தாய் அனுபவித்த அவதி புரிந்து, மகன் வெளிநாட்டில் வேலை செய்து, நிறைய காசு அனுப்பினான். ஒவ்வொன்றாக அவளும் தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டாள்.

 

மகிழ்ச்சியுடன், “கடவுளால் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!” என்கிறாள். கடந்தகாலம் கடந்தே போய்விட்டது.

 

வயது ஏறிக்கொண்டே போனாலும், சிறு குழந்தைகளைப்போல், எல்லாவற்றையும் அறியும் ஆர்வமும் மகிழ்ந்து சிரிக்கும் குணமும் இருக்கும்வரை யாரையும் முதுமை அண்டுவதில்லை.

 

இளமையிலிருந்த அவர்களுடைய அழகு, முகத்திலிருந்து இருதயத்திற்குப் போய்விடுகிறதோ?

 

::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா.

அடுத்த பகுதியை வாசிக்க... அழுத்துக...


ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக...  Theebam.com: பழகத் தெரிய வேணும் – 1