தை மாதம் ஒரு சிறப்பான மாதம்!/பகுதி 04

தீபம் வாசகர்கள் அனைவருக்கும் 
இனிய பொங்கல் வாழ்த்துகள்  

[தொடர்→ இறுதி அங்கம் தொடர்கிறது] 
தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக சங்க காலத்தில் எழுதப்பட்ட எட்டுத் தொகை/ பத்துப் பாட்டுகளை இனி பார்ப்போம்.இங்கு பல பாடல்கள், "தைஇத் திங்கள்" பற்றிப் பேசுகின்றன!ஆனால் அது தான் ஆண்டின் தொடக்கம் என எங்கும் குறிக்கப்படவில்லை.

"மன்ற எருமை மலர்தலைக் கார்ஆன்
இன்தீம் பால்பயங் கொண்மார் கன்றுவிட்டு
..............................
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோள் குறுமகள் அல்லது
மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே"
[நற்றிணை 80]

தொழுவத்துள்ள அகன்ற தலையையுடைய கரிய எருமையின் மிக இனிய பால் நிரம்பக் கறந்துகொள்ளும் பொருட்டு அவற்றின் கன்றுகளைத் தொழுவத்து நிறுத்திவிட்டு; .......... என்னைப் பெறுமாறு தான் எடுத்துக்கொண்ட நோன்பின் பயனாகத் தைத்திங்களிலே தண்ணிய நீரில் ஆடுகின்ற பெரிய தோளையுடைய அவ்விளமகளே யான் உற்ற நோயை நீக்கும் மருந்தாயமைந்துள்ளாள்.அவளல்லது பிறிதொரு மருந்து இல்லைகாண்.

வேம்பின் பைங்காய் என்தோழி தரினே,
தேம்பூங் கட்டி என்றனிர் ; இனியே,
பாரி பறம்பின் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிர்
ஐய ! அற்றால் அன்பின் பாலே !
(குறுந்தொகை - 196 )

தலைவனே!முன்பு (திருமணத்துக்கு முந்திய களவுக் காதலின் போது) என் தலைவி வேம்பின் காயை உனக்குத் தந்தாள். அதனை அழகிய இனிக்கும் வெல்லக் கட்டி என்று சொன்னாய். இப்போதோ தை மாதத்தில் குளிர்ந்து கிடக்கும் பாரியின் பறம்பு மலையில் உள்ள குளிர்ச் சுனையின் நீரை அவள் தருகிறாள். ‘அது வெம்மையாய் உள்ளது - உவர்ப்பாய் உள்ளதுஎன்று கூறுகிறாய். நின் அன்பின் தன்மை இப்படிப்பட்டதாகி விட்டதே !

மந்தி ஒன்று தினைக் கதிரை கவர்ந்து சென்று தன் கடுவன் குரங்குடன் இருந்து உண்டது. அதைப் பார்த்த சங்கப்புலவருக்கு அக்காட்சி பனியால் நனைந்த முதுகோடு நோன்பு நோற்கும் பெண்கள் தைமாத விரத உணவை உண்ண இருந்தது போல் தோன்றியது. அதனை

வான்பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
தைஊண் இருக்கையின்.........” - (நற்றிணை: 22: 6 - 7)என நற்றிணை வரியில் படம் பிடித்துள்ளார்,

பெண்கள் உலக நன்மைக்காக நோன்பிருந்து நீராடியது போல நல்ல கணவன் தமக்குக் கிடைக்க வேண்டுமென தைத்திங்களில் நீராடி வீடு வீடாகச் சென்று பாடி தாம் பெற்றதை பலருக்கும் உவந்து கொடுத்தை

வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையில் நீராடி தவம் தலைப் படுவையோ [கலித்தொகை (59:12-13)] எனவும்

பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடி நீ
எய்திய பலர்க்கீந்த பயன் பயக்கிற்பதோகலித்தொகை 59;16-17 எனவும் கலித்தொகை சொல்லும்.

செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள்
கண்ணிற் காணின் எனா குவள்கொல்
நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண்கயம் போலப்
பலர்படிந்து உண்ணுநின் பரத்தை மார்பே.
[ஐங்குறுநூறு 84]

'உன் மனைவி உன்மேல் சொல்லில் அடங்காத கோபத்திலிருக்கிறாள்.ஏனென்றால்,தைமாத நோன்பிருக்கும் பெண்கள் பலரும் ஒரே குளத்தி்ல் தோய்ந்து நீராடுவார்கள் அல்லவா?அப்படி உன்னுடைய மார்பு,பலபெண்கள் தோய்ந்து, துய்க்கும் கயமாக (குளமாக) இருக்கிறது என்பது உன் மனைவிக்குத் தெரிந்திருக்கிறது அல்லவா!


"தேஎம் தீந்தொடைச் சீறியாழ்ப் பாண!
........................................
தைஇத் திங்கள் தண்கயம் போல்
கொளக் கொளக் குறையாக் கூழுடை வியனகர்
........................................
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!"
[புறநானூறு. 70:6-7]

தேன் போன்ற இனிய இசையை அளிக்கும் சிறிய யாழையுடைய பாண! ......கிள்ளி வளவனின் நாடு, தை மாதத்தில் தெளிந்த குளிர்ந்த நீரையுடைய குளம் போல் கொள்ளக் கொள்ளக் குறையாத உணவுப் பொருட்களுடைய அகன்ற பெரிய நகரங்களுடையது..... பரிசு கிடைக்குமா என்று நீ ஐயப்படத் தேவையில்லை. வாழ்க பண்ணனின் தாள்கள்!

தாயருகே நின்று தவத் தைந்நீராடுதல் நீயறிதி வையை நதிஎன்கிறது பரிபாடல்-11:91-92.

ஆகவே தமிழ் மரபில் & சங்க இலக்கியங்களில்.....மிகச் சிறப்பாக/மிக அதிகமாகப் பேசப்படும்/போற்றப்படும் மாதம் = தை! அல்லது "தைஇத் திங்கள்".அது மட்டும் அல்ல தை-ன்னாலே....மதம் கலவாமல்....தமிழ் மட்டும் தனித்து தெரியும்!

"அருவியில் தவம் முடித்து
இருவராய் சேர்த்தது தையே!

ஊருக்கு பொங்கல் படைத்து
பெருவிழா தந்தது தையே!

முருகிற்கு அழகு சேர்த்து
ஒருபூசம் தந்தது தையே!

பெருமை பற்பல படைத்து
அருமை மாதம் தையே!"

ஆம் தை மாதம்:ஒரு சிறப்பான மாதம்!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

----------முற்றிற்று----

தை மாதம் ஒரு சிறப்பான மாதம்!:பகுதி- 03‏

[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

"ஏற்றுக உலையே! ஆக்குக சோறே!

கள்ளும் குறைபடல் ஓம்புக;

ஒள்ளிழைப் பாடுவல் விறலியர்

கோதையும் புனைக "

-புறநானூறு 172[ கி மு 500 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த புறநானுறு ]

 "உலையை ஏற்றுக; சோற்றை ஆக்குக; கள்ளையும் நிறைய உண்டாக்குக;அழகாக செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த,பாடுவதில் சிறந்த,விறலியர் மாலைகளைச் சூடுக; "

 அதாவது "உலையை ஏற்றுக;சோற்றை ஆக்குக"என்பது பொதுவாகக் கூறப்பட்ட பொங்கலிடும் முறையாகும்.

 புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்

பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து''


(சிலப். 5:68-69)

எனும் இளங்கோவடிகளின் வாக்கால் அறிகிறோம்.-கி பி 100/200 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த சிலப்பதிகாரம்

ஆனால் இடைக்காலத்தில் தமிழ்ப் புலவராகிய திருத்தக்க தேவர்,வண்டுகள் மொய்க்கும் மலர் மாலைகளை அணிந்த மகளிர் இடும் பாங்கினை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

 மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்''

(சீவக. சிந். 1821)-கி பி 900 ஆம் ஆண்டை சேர்ந்தது இந்த சீவக சிந்தாமணி


இதனால், செந்தீ மூட்டிப் புதுப் பானையில் இனிய பாலொடு கலந்த சோற்றைப் பொங்கலாகப் பொங்கிடும் பாவையரின் பழக்கம் புலப்படுத்தப்படுகிறது.கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு அளவில் நடைபெற்ற பொங்கல் இடும் முறையாக இதனை நாம் கருதலாம்?

பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும்.இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது.இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு(உத்ராயணம்) என்றும் தென்செலவு(தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும்.அந்த வகையில்,கதிரவன் வட செலவைத்[பயணம்] தையில் தான் தொடங்குகிறது.மகர ரேகைக்கு வந்து வடக்கு நோக்கி சூரியன் திரும்புவதை தான் மகர சங்கராந்தி (tropic of capricorn, tropos means to turn) என்கிறார்கள்.அதுவே தமிழகத்தில் பொங்கல் எனப்படுகிறது.

எனவே சூரியனின் அடிப்படையில் காலண்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்றால் சூரியனின் துவக்க பயணத்தின் அடிப்படையில் ஒன்று ஜூனில் இருக்க வேண்டும் ,அல்லது ஜனவரி 14 இல் புத்தாண்டு வர வேண்டும் அல்லவா?

இனி ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட சங்க  இலக்கியங்களில் காணப்பெறும் சான்றுகள் சில வற்றை பார்ப்போம்.

 "மாயோன் மேய காடு உறை உலகமும்,

சேயோன் மேய மை வரை உலகமும்,

காரும் மாலையும் = முல்லை   

குறிஞ்சி = கூதிர், யாமம் என்மனார் புலவர்!"

[தொல்காப்பியம்]

 ஆக, கார் காலம் தான், திணைகளுள் முதல் காலமாகக் குறிக்கிறது தொல்காப்பியம்!

* முதல் திணை = முல்லை! * முதற் காலம் = மழைக் காலம்![இங்கு, என்மனார் புலவர், என மொழிப என ஆசிரியர் கூறியிருப்பதால், இந்தக் காலப் பகுப்பு தொல்காப்பிய விதி அல்ல- தமிழர் மரபு என்பது புரியும்.]

இதற்கு உரை எழுதிய உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் கால உரிமை எய்திய ஞாயிற்றுக்கு உரிய சிங்க ஓரை முதலாக, தண்மதிக்கு உரிய கற்கடக ஓரை ஈறாக வந்து முடியுந்துணை ஓர் யாண்டாம் என்கிறார்.

பகுதி:04 நாளை தொடரும்..
👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅👅



thai ponkal ulavar tamil new year