செயற்கை இனிப்பூட்டிகள்: ‘உடல் எடையைக் குறைக்க உதவாது’

– எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

 


வீட்டிற்கு வரும் விருந்தினருக்குத் தேநீர் வழங்குவது  வழக்கம். அந்த சமயத்தில் சர்க்கரை எவ்வளவு போட வேண்டும் அல்லது சர்க்கரை போடலாமா என்ற கேள்வி எழும். “என் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு நான் முன்பிலிருந்தே சர்க்கரை சேர்த்துக்கொள்வதைத் தவிர்த்து வருகிறேன்” என்று விருந்தினர் சிலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள். ஆனால், சர்க்கரையைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக செயற்கை இனிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் எடையைக் குறைக்கலாம் என்றோ உடல் தகுதியை மேம்படுத்தலாம் என்றோ நினைத்தால் அது தவறு. இதைத்தான் உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுகிறது.

 

உலக சுகாதார நிறுவனம் என்ன கூறுகிறது?

உலக சுகாதார நிறுவனம், தனது புதிய வழிகாட்டுதல்களில் சர்க்கரை அல்லாத இனிப்புகளை (NSS) பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. என்எஸ்எஸ் என்றால் இனிப்பைத் தரும் ஆனால் சர்க்கரை அல்ல.

 

சில மதிப்புரைகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது. செயற்கை இனிப்புகள் எடை இழப்புக்கும் உதவாது தொடர்புடைய நோய்களின் அபாயத்தையும் குறைக்காது என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

சர்க்கரைக்குப் பதிலாக என்எஸ்எஸ் பயன்படுத்துவது பெரியவர்கள் அல்லது குழந்தைகள் நீண்ட காலத்திற்கு உடல் எடையைக் குறைக்க உதவாது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

 

உலக சுகாதார நிறுவனத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பு இயக்குநரான பிரான்செஸ்கோ பிரான்கா, "சர்க்கரை நுகர்வைக் குறைக்க, மக்கள் மற்ற மாற்று வழிகளைத் தேட வேண்டும், அதாவது சர்க்கரை சேர்க்கப்படாத இயற்கையான பழங்கள் அல்லது இனிப்பு உணவுகள் அல்லது பானங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.” என்று கூறுகிறார்.

 

"என்எஸ்எஸ்ஸில் ஊட்டச்சத்து மதிப்பு எதுவும் இல்லை. மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த தங்கள் உணவில் சர்க்கரையை சீக்கிரம் குறைக்கத் தொடங்க வேண்டும்." என்பது அவரது பரிந்துரை.

 

எவையெல்லாம் செயற்கை இனிப்பூட்டிகள்

பற்பசை, தோல் கிரீம் மற்றும் மருந்துகளிலும் NSS பயன்படுத்தப்படுகிறது, எனவே அவற்றையும் நாம் பயன்படுத்தக்கூடாதா?

 

உலக சுகாதார நிறுவனம் தனது பரிந்துரை, சுய பாதுகாப்பு மற்றும் தூய்மைக்காக பயன்படுத்தப்படும் பொருட்களுக்குப் பொருந்தாது என்று கூறுகிறது.

 

பொதுவாகப் பயன்படுத்தப்படும் NSS சுக்ரோலோஸ், அஸ்பார்டேம், நியோடேம் மற்றும் ஸ்டீவியா. இவை அனைத்தும் செயற்கை இனிப்புகள் என்று சர் கங்காராம் மருத்துவமனையின் நாளமில்லாச் சுரப்பி மற்றும் வளர்சிதை மாற்றப் பிரிவின் மருத்துவர் சுரேந்திர குமார் கூறுகிறார். ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் பயன்படுத்தினால் பரவாயில்லை, ஆனால் அவற்றின் நீடித்த பயன்பாடு பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறார் அவர்.

 

உதாரணத்திற்கு, "ஸ்டீவியா இலைகளை இனிப்புக்காக நேரடியாகப் பயன்படுத்தினாலும் பரவாயில்லை, ஆனால் எந்த வகையான பதப்படுத்தப்பட்ட வடிவத்திலும், அதாவது மாத்திரை போன்ற வடிவத்தில் பயன்படுத்தினால், அது தீங்கு விளைவிக்கும்" என்று கூறுகிறார்.

 

இதை, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் பயன்படுத்துகிறார்கள், இது குறித்தும் மருத்துவரிடம் கேட்டோம்.

 

செயற்கை இனிப்பூட்டிகள் உடம்பில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

 

சர்க்கரையை விட செயற்கை இனிப்புகள் 700 மடங்கு சக்தி வாய்ந்தவை. அவை மூளையின் ஒரு பகுதியை பாதிக்கின்றன, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கிறது.

 

இதன் விளைவாக நீங்கள் அதிகமாக சாப்பிடத் தொடங்குகிறீர்கள், அதனால் உங்கள் எடை அதிகரிக்கத் தொடங்குகிறது. அதன் பிறகு, பல்வேறு நோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது.”என்கிறார் மருத்துவர் சுரேந்திர குமார்.

 

என்னென்ன நோய்கள் வரும்?

செயற்கை இனிப்பூட்டிகளை நீண்டகாலம் பயன்படுத்துவதால் டைப்-2 நீரிழிவு மற்றும் இதய நோய் அபாயம் அதிகரிக்கிறது. இது தவிர, உயிரிழக்கும் வாய்ப்பும் உள்ளது.

 

மருத்துவர் நீரு கெரா, செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதால் உடல் எடை அதிகரிக்கும், இதன் காரணமாக உங்களுக்கு ரத்த அழுத்தம், கொழுப்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும், இது இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று விளக்குகிறார்.

 

செயற்கை இனிப்பூட்டிகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிற நோய்கள் குறித்து மருத்துவர் சுரேந்திர குமார், "மன அழுத்தம், தலைவலி, நீரிழிவு நோய், இதய நோய், மூளைத் தாக்குதல் மற்றும் புற்றுநோய் ஆகியவை அவற்றின் நீண்டகாலப் பயன்பாட்டால் அதிகரிக்கின்றன." என்கிறார்.

 

மக்கள் சர்க்கரை இல்லை என்று நினைத்து ஐஸ்கிரீம் அல்லது பிற உணவுப் பொருட்களை சாப்பிடத் தொடங்குகிறார்கள், ஆனால் அவர்கள் எப்படியும் கலோரிகளைத் தான் உட்கொள்கிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள். அதே போல், கோடையில், மக்கள் டயட் கோலா குடிக்கிறார்கள், ஆனால் அதில் பாஸ்பரஸ் உள்ளது, இது சிறுநீரகத்தை பாதிக்கிறது.” என்று அவர் விளக்குகிறார்.

 

சர்க்கரை எவ்வளவு உட்கொள்ளலாம்?

இனிப்புகள் சாப்பிடுவது மகிழ்ச்சியைத் தருவதாகவும், அது மன அழுத்தத்தைக் குறைக்கிறது என்றும் மருத்துவர்கள் கூறினாலும், எந்த அளவு இனிப்புகளைச் சாப்பிடுகிறீர்கள் என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

 

மேப்பிள் சிரப், தேன், வெல்லம், நாட்டு சர்க்கரை, பனங்கல்கண்டு ஆகியவை சர்க்கரைக்கு மாற்றாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.

 

"ஒவ்வொரு உணவுப் பொருளிலும் சர்க்கரையைச் சேர்த்துக்கொண்டால், அது உடலில் அதன் அளவை அதிகரிக்கும். டீ, காபி குடிக்கும் முன், சிறிது சர்க்கரையை வாய் மூலையில் அழுத்தி, பின் சர்க்கரையில்லாத டீயைக் குடியுங்கள். எந்த உணவுக்கும் முன் இதை செய்து வந்தால் கட்டுப்பாடான அளவில் முழுச் சுவையும் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

வெல்லத்தை வாயில் போட்டு மென்று சாப்பிடாமல், உறிஞ்சி சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதன் ஒரு நன்மை என்னவென்றால், நீங்கள் மீண்டும் மீண்டும் வெல்லத்தை சாப்பிட மாட்டீர்கள், நீண்ட நேரம் உங்கள் வாயில் இருப்பதால், நீங்கள் இனிப்பை அனுபவிக்க முடியும். இதற்கு மேல் சாப்பிட ஆசை இருக்காது.’ என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

 

மருத்துவர்களின் கூற்றுப்படி, சர்க்கரை ஒரு வகையில் மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது, ஆனால் நீங்கள் அதை தேவைக்கு அதிகமாக உட்கொண்டால், அது உங்கள் உடலுக்குக் கசப்பான பலனைத் தரும்.

 

சர்க்கரை நோயாளிகள் சர்க்கரைக்குப் பதிலாக செயற்கை இனிப்புகளை எடுத்துக்கொள்வது சரியா?

"சர்க்கரை நோயாளிகள் எந்த வகையிலும் என்எஸ்எஸ் எடுக்கக் கூடாது. நீங்கள் எப்போதாவது ஒரு முறை அதைச் சுவைக்காக எடுக்க விரும்பினால், அதை மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்." என்கிறார் மருத்துவர் சுரேந்திர குமார்.

 

:சுஷீலா சிங்/பிபிசி செய்தியாளர்

பழகத் தெரிய வேணும் – 75

அனுபவித்தால் புரியும்

சிந்திப்பது நல்ல குணம்தான். அதற்காக, சுவரை வெறித்துக்கொண்டிருந்தால் நன்மை விளைந்துவிடுமா?

புதிய அனுபவங்களை நாடப் பலருக்கும் பயம்.

`பிறர் என்ன சொல்வார்களோ!’

`எதற்காகப் புதிதாக எதையாவது செய்து, அதற்கான வேண்டாத விளைவுகளை அனுபவிக்க வேண்டும்? இப்போதே வாழ்க்கை சௌகரியமாகத்தானே இருக்கிறது!’

இப்படியெல்லாம் தமக்குத் தாமே தடை விதித்துக்கொண்டால், வாழ்வில் என்ன சுவாரசியம் இருக்கும்?

கனவிலேயே சிலர் சுகம் கண்டுவிடுகிறர்களே, ஏன்? கனவை நனவாக்கும் முயற்சியில் தோல்வி கண்டுவிடுவோமோ என்ற பயம்தான் காரணம்.

அனுபவம் என்றால், நன்மைகளும் இருக்கும், வேண்டாதவையும் எதிர்ப்படும்.

நாம் எண்ணியதுபோல் நடக்காவிட்டால், அதை அனுபவம் என்று கொள்ளவேண்டியதுதான். சரியாகத் திட்டமிட்டு இருக்கமாட்டோம் என்று, அடுத்த முறை கவனமாகச் செயல்படலாமே!

ஒரு காரியத்தைப் பலமுறை செய்தாலும், திருப்தி ஏற்படவில்லையா?

அப்படியானால், `இதில் நமக்குத் திறமை போதாது,” என்று தெளிந்து, வேறொரு காரியத்தில் ஈடுபட வேண்டியதுதான்.

தோல்விகளும் ஏமாற்றமும்தான் நல்ல அனுபவம். வெற்றி கிடைத்து, அதிலேயே மகிழ்ந்திருந்தால், ஒரே நிலையில்தான் இருக்க நேரிடும். முன்னேற இயலாது.

 

புத்தகப் படிப்பால் அனுபவம்?

சமையல் புத்தகங்களைக் கரைத்துக் குடித்தாலும், அக்கலையில் தேர்ச்சிபெற்ற ஒருவரைக் கவனித்தாலும் போதுமா?

அதன்படி தானும் செய்ய முயன்றால்தான் சுமாராகவாவது சமைக்க வரும்.

அனுபவமின்மையால், முதலில் சிறு சிறு விபத்துகள் நிகழும். கையில் சூடுபட்டுக்கொண்டு, கூரான கத்தியால் கீறிக்கொண்டு, மிளகாய் நெடியால் தும்மிக்கொண்டு, அதிகச் சூட்டில், போதிய நீர் இல்லாது பாத்திரத்தின் அடி பிடித்துக்கொண்டு — இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவற்றால் மனம் தளராது தொடர்ந்தால், பல வருடங்களுக்குப் பின், பிறருக்குச் சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு உயர முடியும்.

 

குற்றம் கண்டுபிடிக்காதே!

தற்காப்புக் கலையில் தேர்ச்சிபெற்ற ஒரு சிறுமியின் நடை `அழகை’க் கண்டு, சற்றே பெரிய அவள் தோழிகள் செய்த விமரிசனம்: `ஆம்பளை மாதிரி நடக்குது!’

கால்களை அகட்டி வைத்துக்கொண்டு நடப்பது பெண்மைக்கு அழகில்லை என்று அவர்கள் சிறுவயதிலேயே கண்டிக்கப்பட்டு, அதன்படி ஒயிலாக நடந்த பெருமை அவர்களுக்கு.

கேலி செய்தால், அவள் நடை மாறிவிடுமா?

`ஒவ்வொரு காலையும் இன்னொரு காலுக்கு முன்னால் வைத்து நட! பக்கவாட்டில் இல்லை!’ என்ற அறிவுரை வழங்கப்பட்டபோது, முயன்று, சிறிது நாட்களில் தானே மாறினாள்.

 

குழந்தைகளிடம் போதனை

தாம் பெற்ற குழந்தைகளிடம், “தைரியமாக இரு!” என்று சொல்லி வளர்ப்பார்கள் பலரும்.

 

அப்படிச் சொன்னால் மட்டும் போதுமா?

அச்சம் தரும் சந்தர்ப்பத்தில் அவர்கள் தைரியத்தைக் கடைப்பிடிக்க வழிகாட்டுவதும் அவசியம்.

அடுப்பிலிருந்து அப்போதுதான் இறக்கிவைத்த பாத்திரத்தைத் தொட ஆர்வம் காட்டுவார்கள் ஒரு வயதே ஆகிய குழந்தைகள்.

சுடும்!” என்று எச்சரித்தால் புரியாது. ஏனெனில், அந்த வார்த்தை அவர்களுக்குப் பழக்கமில்லை.

இதற்கு நான் ஒரு வழி வைத்திருக்கிறேன். சற்றே ஆறிய பாத்திரத்தின் வெளியே குழந்தையின் கையை வைப்பேன். பயத்தில் அதன் விழிகள் விரியும்.

ஊ..!” என்று அதை விளக்குவேன்.

அடுத்த முறை, கத்தியைத் தொட முழலும்போது, “ஊ..!” என்று நான் எச்சரிக்கை விடுக்கையில், கை தானே பின்னால் போகும்.

நான் ஏதோ தைக்கும்போது, என் மகள் மிக அருகில் வந்து உட்கார்ந்து, எட்டிப்பார்த்தாள். குழந்தையை நகர்த்தி உட்கார வைத்தும் பயனில்லாது போயிற்று. மீண்டும், மீண்டும் அருகில் வந்தாள்.

நான் சற்று யோசித்து, அவள் விரலை என் கையால் பிடித்துக்கொண்டு, ஊசி முனையால் லேசாகச் சுரண்டினேன்.

ஊ..!” என்றாள், பயத்தால் கண்கள் விரிய. தானே பின்னால் நகர்ந்தாள்.

இந்த நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த என் தாய், “இப்போ மட்டும் எப்படிப் புரிஞ்சுது?” என்று கேட்டாள்.

சைகையால் விளக்கினேன், பெருமையாக.

அம்மா ஒரேயடியாக அதிர்ந்து, “ஒன்றரை வயசுக் குழந்தை கையைக் குத்தினியா? என்ன அம்மா நீ!” என்று வைதாள்.

பின்னே எப்படிப் புரியவைக்கறது!” என்று அலுத்தேன்.

சொல்வதைவிடச் செய்துகாட்டுவதுதானே பலனளிக்கும்!

 

வயதானதால் அனுபவம் அதிகமா?

காலத்தின் மாறுதல்களை மனதில் கொண்டுதான் அறிவுரை வழங்கவேண்டும்.

`எனக்கு உன்னைவிட வயது அதிகம். நான் சொல்வதைக் கேள்!’

வயதானால் மட்டும் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும் என்று அர்த்தமில்லை.

அந்தந்த வயதில், துணிச்சலுடன் அவர்கள் எத்தனை புதிய காரியங்களில் இறங்கி வெற்றியோ, தோல்வியோ பெற்றிருக்கிறார்கள் என்று பார்க்கவேண்டும்.

அத்துடன், `நான் உன் வயதில்..,’ என்று ஆரம்பித்தாலும் குழந்தைகளின் மரியாதை கிட்டாது.

 

குந்தைகளுக்கு நாம் எத்தனைதான் அறிவுரை கூறினாலும், அதை அவர்களே அனுபவிப்பதுபோல் ஆகாது.

 

::கதை::

பதின்ம வயதான ரூபாவிற்கு அவள் தாய் புத்திமதி கூறினாள்: “உன்னைவிட இரண்டு வயது பெரிய பையன்களால் தொந்தரவு அவ்வளவாகக் கிடையாது. ஆனால், உன்னைவிட மிகப் பெரிய ஆண்களிடம் பத்திரமாக இருக்க வேண்டும்”.

காரணத்தை மகள் கேட்டபோது, “உன்னைப் போன்ற விவரம் புரியாத பெண்களைப் பேசிப் பேசி மயக்குவது அவர்களுக்கு எளிது. உன் அழகை, புத்திசாலித்தனத்தை வானளாவப் புகழ்வார்கள். `உன் வயதுக்கு நீ எவ்வளவு அறிவு முதிர்ச்சி அடைந்திருக்கிறாய்! உன்னை யாராலும் புரிந்துகொள்ள முடிவதில்லை, இல்லையா?’ என்று பலவாறாகப் புகழ்ந்து, மனத்தைக் கலைப்பார்கள்”.

ரூபாவிற்குச் சந்தேகம் எழுந்தது. “என் வயதுப் பையன்கள்?”

அவர்கள் ஆத்திரத்தில் தவறு செய்யலாம். ஆனால், முதலிலேயே யோசித்து வைத்திருக்க மாட்டார்கள்”.

பல வருடங்கள் கழித்து, வேறு நாட்டில் வாழ்ந்துகொண்டிருந்த மகள், ”வயதில் மூத்த ஆண்களிடம் பத்திரமாக இருக்கவேண்டும் என்று நீ கூறியிருக்கிறாய். ஆனால், அப்போது அது விளங்கவில்லை. இப்போது அனுபவித்துவிட்டேன்,” என்று தாயிடம் கூறினாள்.

அடுத்த முறை கவனமாக இருப்பாள்.

சொல்லிக் கொடுத்த வார்த்தை எத்தனை நாட்களுக்கு வரும்!

 

புதிய அனுபவங்களைப் பெற

பயணங்கள் மேற்கொண்டால் அனுபவங்கள் பெருகும்.

எதிர்பாராத, அல்லது பழக்கமில்லாதவை நடந்தால், அவற்றை எப்படி எதிர்கொள்கிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நம் அனுபவம் பெருகுகிறது.

 

::கதை::

இருபது ஆண்டுகளுக்குமுன், கனடா நாட்டிலிருந்த விக்டோரியா தீவிற்குச் சென்றிருந்தேன். மலேசியாவில் சந்தித்த என் கனடா நாட்டுத் தோழி இசை, நாட்டியம் இரண்டிலும் வல்லவள். பொது இடங்களில் இருவரும் அவரவர் பாணியில் ஆட, உல்லாசமாக மூன்று வாரங்கள் கழிந்தன.

திரும்பும் நாள் வந்தது. மூன்றுமணி ferry படகில் தீவைக் கடந்து, வான்கூவர் (Vancouver) சென்றதும், அங்கிருந்து, விமானப் பயணம் – நியூயார்க் செல்ல.

என்னுடைய டிக்கெட்டில் விமானம் புறப்படும் நேரம் 2.00 மணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நான் விடியற்காலை இரண்டு மணி என்றெண்ணி, நள்ளிரவில் விமான தளத்தை அடைந்தேன்.

மத்தியானமே அந்த விமானம் போய்விட்டதே!” என்று கேட்டு, அதிர்ச்சிதான் ஏற்பட்டது.

அடுத்த விமானம் மறுநாள் இரண்டு மணிக்குத்தான் என்று கேட்டதும், தண்டம் அழுது, புதிய டிக்கெட் வாங்கிவிட்டு, அடுத்த பன்னிரண்டு மணி நேரத்தை எப்படிக் கழிப்பது என்று யோசித்தேன்.

பெரிய சூட்கேஸைத் தள்ளிக்கொண்டு, காலம் கடத்த முடியாது. அதனால், முதல் வேலையாக, அதைப் பாதுகாப்பான இடத்தில் வைக்க ஏற்பாடு செய்தேன்.

நியூயார்க்கிலிருந்த என் மகளுக்குத் தகவல் கூறியதும், “நாளைக்கு அதே நேரமா? சரி,” என்றாள், எதுவுமே நடக்காததுபோல். என்னைவிட அவளுக்கு அனுபவங்கள் அதிகம்.

இரவு அங்கேயிருந்த பெஞ்சில் படுத்தேன். ஆனால், தூங்கப் பயம். கைப்பையில் கடப்பிதழ், பணம்! நான் அணிந்திருந்த தங்க நகைகள் வேறு!

பொழுது விடிந்ததும், களைப்பைப் போக்க, நின்ற இடத்திலேயே யோகப் பயிற்சி செய்தேன்.

சற்றுத் தள்ளி நின்றிருந்த ஒருவர், என் அருகில் வந்து, உற்றுப் பார்த்துவிட்டுப் போனார்!

மலேசியாவில், பகல் பன்னிரண்டுக்குப் பிறகு மத்தியானம் இரண்டு மணியை 14.00 என்றுதானே குறிப்பிடுவார்கள்! அதுதான் இந்தத் தவறு நடந்திருக்கிறது,” என்றாள் மகள் அலட்சியமாக.

என் தோழியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டதும்,  “எதிர்பாராதது நடந்தாலும், அடுத்து என்ன செய்வது என்ற பதற்றமில்லாமல், பெட்டியை லக்கேஜில் வைத்தாயே! சமயோஜிதமாக நடந்ததற்கு உனக்கு 80% மதிப்பெண்கள் கொடுக்கிறேன்,” என்று பாராட்டினாள்.

அந்த அனுபவத்தால் இன்னொரு முறை ரயிலையோ, விமானத்தையோ தவற விடமாட்டேன் என்று அர்த்தமில்லை. ஆனால், எதிர்பாராதது நடந்தால், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் மிகாது.


::நிர்மலா ராகவன்-/-எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா