திருக்குறள்/17/- அழுக்காறாமை

முகவுரை-16- சமூகத்தின் வரவேற்பு

இயற்றப்பட்ட காலம் முதலாக குறள் அனைவராலும் பெரிதும் போற்றப்பட்டு வந்துள்ளது. சங்கம் மருவிய காலத்துப் புலவர்களும் இடைக்காலப் புலவர்களும் பலவாறு குறளையும் வள்ளுவரையும் புகழ்ந்து பாடியுள்ளனர். "அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்" என்று ஒளவையார் குறளின் நுண்மையைப் போற்றுகிறார். "திருவள்ளுவமாலை" என்ற பெயரில் தனிப் புலவர்கள் பலரால் போற்றி எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்ட பாக்களால் பாடப்பெற்ற ஒரே தமிழ் இலக்கியமும் திருக்குறளே ஆகும். சைவம், வைணவம், சமணம், பௌத்தம் உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டத்து மதங்களனைத்தும் குறளை வெகுவாகப் பாராட்டியும் சிலப்பதிகாரம், மணிமேகலை, திருமுறை, பெரிய புராணம், கம்ப இராமாயணம் உள்ளிட்ட தங்களது இலக்கியங்களில் குறளை வைத்துப் பாடியும் பேணிவந்துள்ளன.

 

எச்சமயத்தையும் சாராது அறங்களைப் பொதுப்படக் கூறுவதால் இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் என இருநிலையிலும் திருக்குறள் பரவலாகப் போற்றப்படுகிறது. ரஷ்ய அறிஞர் அலெக்சாந்தர் பியாதிகோர்சுகி குறளை "இந்திய மற்றும் அகில உலக இலக்கியங்களின் தலையான படைப்பு" என்று பாராட்டுகிறார். இதற்குக் காரணம் குறளில் காணப்படும் இலக்கியச் சுவை மட்டுமல்ல என்றும் உலகிலுள்ள அனைவருக்கும் எல்லா காலத்திற்கும் பொருந்தும் அறச் சிந்தனைகளை வள்ளுவம் தன்னுள் கொண்டுள்ளதுமே ஆகும் என்று அவர் மேலும் உரைக்கிறார்.  உலகப் பொது அறங்களை உரைப்பதால் வள்ளுவரை "பிரபஞ்சப் புலவர்" என்று போற்றுகிறார் ஜி. யு. போப். "குறளைப் போல் தலைச்சிறந்த அறங்களை மூதுரைகளாக உரைத்த நூலொன்றை உலகில் வேறெங்கும் காண்பதரிது" என்று ஆல்பர்ட் சுவைட்சர் கருதுகிறார். குறளை "இந்துக் குறள்" என்று போற்றிய லியோ டால்ஸ்டாய் அதனை மகாத்மா காந்திக்குப் பரிந்துரைத்தார். காந்தி குறளை "அறவாழ்வுக்கு தலையாய வழிகாட்டும் இன்றியமையா நூல்" என்றும் "வள்ளுவரின் வரிகள் என் உயிர்வரை சென்று ஊடுருவியுள்ளன. அவரைப் போல் அறப் பொக்கிஷத்தை நல்கியவர் எவருமில்லை" என்றும் கூறியுள்ளார்.

 

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்த கிறித்தவ மதபோதகர்கள் குறளின் சிந்தனைகளைப் படித்து அவற்றை கிறித்தவ போதனைகளுடன் ஒப்பீடு செய்யத் துவங்கினர். அதன் விளைவாக அவர்களுள் பலர் குறளை ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய முற்பட்டனர். சீர்திருத்தத் திருச்சபை போதகரான எட்வார்டு ஜெவிட் ராபின்சன் "குறளில் அனைத்தும் உள்ளன; அதில் இல்லாதது எதுவும் இல்லை" என்று கூறியுள்ளார்.  ஆங்கிலிக்க மதபோதகர் ஜான் லாசரஸ் "வேறெந்தத் தமிழ் நூல்களாலும் குறளின் தூய்மையை நெருங்க இயலாது" என்றும் "குறள் தமிழ் மொழிக்கு ஒரு ஓங்கி நிற்கும் புகழாரம்" என்றும் கூறுகிறார். அமெரிக்க கிறித்தவ மதபோதகர் இம்மான்ஸ் . வயிட் "உலகின் அனைத்து தலைச் சிறந்த அறச் சிந்தனைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பே திருக்குறள்" என்று போற்றுகிறார்.

 

வரலாறு முழுவதிலும் அரசியல், ஆன்மீகம், சமூகவியல் என அனைத்துத் தரப்பினராலும் போற்றப்பட்ட நூலாகத் திருக்குறள் இருந்து வந்திருக்கிறது. "குறள் அன்பின் நெறியாகவும் ஆத்மார்த்த வாழ்வின் வரையறையாகவும் திகழ்கிறது" என்றும் "அனைத்து காலத்திற்கும் பொருந்தும் அழிவற்ற இந்நூலானது மனிதகுலத்தின் அனைத்துச் சிந்தனைகளையும் தன்னுள் நீக்கமறக் கொண்டுள்ளது" என்றும் இராஜாஜி கருதுகிறார். "வாழ்வியலை போதிக்கும் அறநூல்களில் குறள் நிகறற்றது" என்று கே. எம். முன்ஷி கூறுகிறார். "குறு வெண்பாக்களைக் கொண்ட திருக்குறள் திட்டமிட்ட சிந்தனைகளிலும் அவற்றை சிறப்பாக வெளிப்படுத்தும் விதத்திலும் இதுவரை வந்த நூல்களனைத்திலும் சிறந்தது" என்று தேசியவாதியும் யோகியுமான அரவிந்தர் கருதுகிறார். "தமிழின் தலையாய நூலான திருக்குறள் மனித சிந்தனைகளின் தூய்மையான வெளிப்பாட்டின் உச்சம்" என்று குறளை 1848-ல் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்த . எஸ். ஏரியல் வர்ணிக்கிறார். "உலகின் ஒட்டுமொத்த சிந்தனைகளின் உறைவிடமாகவும் அறங்களின் வழிகாட்டியாகவும் ஆன்மீக அறிவின் புதைவிடமாகவும் திகழும் நூல் திருக்குறள்" என்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் கூறுகிறார்.

[திருக்குறள் முகவுரை17,  அடுத்தவாரம் தொடரும்]

திருக்குறள் தொடர்கிறது

17. அழுக்காறாமை

👉குறள் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்

தழுக்கா றிலாத இயல்பு.

மு. உரை:

ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.

கலைஞர் உரை:

மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.

English Explanation:

Let a man esteem that disposition which is free from envy in the same manner as propriety of conduct.

 

👉குறள் 162:

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின்.

மு. உரை:

யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.

கலைஞர் உரை:

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.

English Explanation:

Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.

 

👉குறள் 163:

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்பேணா தழுக்கறுப் பான்.

மு. உரை:

தனக்கு அறமும் ஆக்கமும் விரும்பாதவன் என்று கருதத் தக்கவனே, பிறனுடைய ஆக்கத்தைக் கண்டு மகிழாமல் அதற்காகப் பொறாமைப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்.

கலைஞர் உரை:

அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.

English Explanation:

Of him who instead of rejoicing in the wealth of others, envies it, it will be said "he neither desires virtue not wealth."

 

👉குறள் 164:

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக் கறிந்து.

மு. உரை:

பொறாமைப்படுதலாகிய தவறான நெறியில் துன்பம் ஏற்படுத அறிந்து, பொறாமை காரணமாக அறமல்லாதவைகளைச் செய்யார் அறிவுடையோர்.

சாலமன் பாப்பையா உரை:

பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்.

கலைஞர் உரை:

தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

English Explanation:

(The wise) knowing the misery that comes from transgression will not through envy commit unrighteous deeds.

 

👉குறள் 165:

அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்

வழுக்கியுங் கேடீன் பது.

மு. உரை:

பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.

சாலமன் பாப்பையா உரை:

பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்.

கலைஞர் உரை:

பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.

English Explanation:

To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destruction.

 

👉குறள் 166:

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉ மின்றிக் கெடும்.

மு. உரை:

பிறர்க்கு உதவியாகக் கொடுக்கப்படும் பொருளைக் கண்டு பொறாமைப்படுகின்றவனுடைய சுற்றம், உடையும் உணவும் இல்லாமல் கெடும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.

கலைஞர் உரை:

உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.

English Explanation:

He who is envious at a gift (made to another) will with his relations utterly perish destitute of food and rainment.

 

👉குறள் 167:

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்.

மு. உரை:

பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

கலைஞர் உரை:

செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.

English Explanation:

Lakshmi envying (the prosperity) of the envious man will depart and introduce him to her sister.

 

👉குறள் 168:

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.

மு. உரை:

பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற பாவி, ஒருவனுடைய செல்வத்தைக் கெடுத்துத் தீய வழியில் அவனைச் செலுத்தி விடும்.

சாலமன் பாப்பையா உரை:

பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்.

கலைஞர் உரை:

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்.

English Explanation:

Envy will destroy (a man's) wealth (in his world) and drive him into the pit of fire (in the world to come.)

 

👉குறள் 169:

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.

மு. உரை:

பொறாமை பொருந்திய நெஞ்சத்தானுடைய ஆக்கமும், பொறாமை இல்லாத நல்லவனுடைய கேடும் ஆராயத் தக்கவை.

சாலமன் பாப்பையா உரை:

பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க.

கலைஞர் உரை:

பொறாமைக் குணம் கொண்டவனின் வாழ்க்கை வளமாக இருப்பதும், பொறாமைக் குணம் இல்லாதவனின் வாழ்க்கை வேதனையாக இருப்பதும் வியப்புக்குரிய செய்தியாகும்.

English Explanation:

The wealth of a man of envious mind and the poverty of the righteous will be pondered.

 

👉குறள் 170:

அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.

மு. உரை:

பொறாமைப்பட்டுப் பெருமையுற்றவரும் உலகத்தில் இல்லை; பொறாமை இல்லாதவராய் மேம்பாட்டிலிருந்து நீங்கியவரும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை.

கலைஞர் உரை:

பொறாமை கொண்டதால் புகழ் பெற்று உயர்ந்தோரும் இல்லை; பொறாமை இல்லாத காரணத்தால் புகழ் மங்கி வீழ்ந்தோரும் இல்லை.

English Explanation:

Never have the envious become great; never have those who are free from envy been without greatness.

 

 திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்....

 ✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக 

 அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக  

Theebam.com: திருக்குறள்/18/- வெஃகாமை: