நரபலியைத் தூண்டிய மூடநம்பிக்கை விளம்பரங்கள்

மனிதர்கள் மனதில் பன்னெடுங்காலமாக பதிந்த ஒரு நம்பிக்கையை அது தவறு அல்லது மூடநம்பிக்கை என்று உறுதிபட நிரூபிக்கப்பட்ட பிறகும் அந்த நம்பிக்கைகள் மக்கள் மத்தியில் இன்றும் பெருகி நிற்பதற்கு என்ன காரணம்? 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை உலகம் எங்கும் மூட நம்பிக்கைகள் பெருகி இருந்தன. அதன் பிறகு விஞ்ஞான புரட்சியின் காரணமாக மூடநம்பிக்கைகள் பல அழிக்கப்பட்டன.

மனிதர்கள் தங்களின் நிலை உணர்ந்து தங்களை சமுதாயத்திற்கான ஒரு அங்கமாக நினைத்துக்கொண்டு சமூக சீர்திருத்ததிற்காக அற்பணித்துக்கொண்டு வாழ ஆரம்பித்தனர். சமூக சீர்திருத்தங்களில் மூடநம்பிக்கைகள் அழிக்கும் பணியை முதலில் கொண்டு வந்தது சீனம் தான்.இதன் கம்யூனிச தத்துவத்தின் காரணமாக சீனம் பற்றிய பல வரலாற்று உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்லப்படுவதில்லை, அந்த வகையில் சீனர்களின் விஞ்ஞானம் அறிவை  எடுத்துக் காட்டுவது அவர்கள் கண்டறிந்த காகிதம். (மிங் வமிச மன்னர்கள் நிலச் சுவான்தார்களுக்கு இதர குறுநிலமன்னர்களின்  நிதி நிலை அறிக்கையை காகிதங்களில் எழுதி பொதுப் பார்வைக்கு வைத்தனர். அதுதான் இன்று நிதி நிலை அறிக்கையாக உருமாறி உலகெங்கும் அரசுகள் முதல் பெரிய சிறிய நிறுவனங்களும் பின்பற்றி வருகின்றன) 

ஆனால் இந்தியாவில் நாகரீகம் வளர வளர அறிவியல் மூலமாகவேகூட ஊடகங்கள் மக்களின் மனதில்  மூடநம்பிக்கைகளைத் திணித்து மேலும் மேலும் அழுக்கெண்ணெய் படிந்த கண்ணாடியாக மனித உள்ளங்களை மாற்றி வருகின்றன. இன்று இந்தியாவில் மூடநம்பிக்கை என்பது அரசியல்வாதிகளில் ஆரம்பித்து ஊடகங்களில் துவங்கி சில சுயநல மதத்தலைவர்கள் வரை சென்று சேர்ந்து அது மக்களையும் மாய்த்துவருகிறது.  

ஒரு சிறப்பான தகவல். வடக்கில் உள்ள பிரபல இந்தி நடிகர்களில் ஒருவர் கோவிந்தா. இவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வென்று நாடாளுமன்றத்திற்கும் சென்று வந்தவர். சமீபத்தில் இவர் தொலைக்காட்சிகளில் நுகர்வோர் பொருள் விற்கும் விளம்பரத்தில் நடித்தார். நடித்தது மட்டுமல்லாமல் அந்த பொருளை வாங்கியதால் நான் மிகவும் பலனடைந்தேன் என்று கூறுகிறார்.

அது என்ன பொருள் உயிர்கொல்லி நோயை தடுக்கும் மருந்து மாத்திரையா? ஆடைகளை கழுவ பயன்படுத்தும் சலவைதூளா? அல்லது சலவைகட்டியா? குளிர்பானமா? பாத அணியா? அல்லது புது வரவான அழகிய 4 சக்கர வாகனமா? இதில் எதுவுமே கிடையாது அது என்ன தெரியுமா! சுப தன் வர்ஷா லட்சுமி குபேர் யந்திரா(அதாவது நலமுடன் பணமழைகொட்டும் லட்சுமி குபேர யந்திரம்) மும்பையில் பொது இடங்களில் பாபா வங்காளி, ராஜஸ்தான் மாதாஜி, சனிமகராஜ் என்ற பெயரில் இவர்களிடம் வாருங்கள் உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்றும் கடை வியாபாரம் முதல், அயல் நாட்டு வேலை வரை இவர்களிடம் போனால் சிறப்பாக அமையும் என்றும் விளம்பரபடுத்துவார்கள், மும்பையில் புறநகர் ரெயிலில் எங்கு பார்த்தாலும் இந்த விளம்பரங்களைக் காணலாம், இதனால் பல ஏமாற்றுப்புகார்கள், கடத்தல்கள் மற்றும் சில நரபலி (தங்கப்புதையல் கிடைக்கும் என்ற பாபா வங்காளி என்ற சாமியாரின் ஆலோசனை கேட்டு பக்கத்து வீட்டு பையனை பலிகொடுத்த விவகாரம்.

தானே மாவட்டம்- ஆதாரம்:12\10\2009 மராட்டி தினசரி தைனிக் சகால்) இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மும்பை மாநகராட்சி மற்றும் மத்திய ரெயில்வே காவல் துறையினர் இணைந்து இது போன்ற விளம்பரங்களை மும்பையில் தடைசெய்தனர். இந்தி நடிகர் கோவிந்த செய்துவரும் விளம்பரமும் கிட்டத்தட்ட இதே போன்றது தான்  அப்படி என்னதான் கோவிந்தா சொல்கிறார். இதோ! தொலைக்காட்சியில் நமது நேரடி அரங்க நிகழ்ச்சி போல் மூன்று பேர். அவர்களுக்கு எதிரில் கோவிந்தா. அதன் பார்வையாளர்களாக 20 பேர். கோவிந்தாவின் முன்பு உட்கார்தவர் இஸ்லாமியரைப்போல் ஆதாப் என்று சொல்கிறார்( இஸ்லாமியர்களும் இதை பயன்படுத்துகிறார்களாம்) உடனே அவரது அனுபவங்களை சொல்கிறார். அவர் ஏதோ வேலைபார்த்துகொண்டு இருந்தாராம் அந்த நிறுவனம் அவரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாம், அந்த சிரமத்தில் இருக்கும் போது அவரது அன்னைக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாம்(இதைக் கூறும் போது அவர் அழுகிறார்) உடனே அழுகையை நிறுத்திவிட்டு நான் தன் வருஷா லட்சுமி பற்றி அவரது நன்பரான இந்து பண்டிதர் ஒருவர் கூறினாராம். உடனே அதை வாங்கி பூசை செய்தாராம், அதன் பிறகு அவருக்கு வேலை கிடைத்ததாம். அன்னைக்கு அறுவைசிகிச்சை நடந்ததாம். இவருக்கும் திருமணம் நடந்ததாம். இப்படி  பல தாம்கள்... என்ன ஒரு பித்தலாட்டத்தனம் இது.

அதுவும் முக்கியமான தொலைக்காட்சியில் இது போன்ற ஏமாற்றும் விளம்பரங்களை  எப்படி நுகர்வோர் ஆணையம் அனுமதிக்கிறது? இதில் இணையதளங்களில் சிலர்(முக்கியமாக பேஸ்புக்கிலும்) இதை நான் பயன்படுத்தினேன், அற்புதமாக வேலை செய்கிறது, என்று நடிகர் கோவிந்தாவிற்கு நன்றிகள், மற்றும் காணிக்கைகள் எல்லாம் சொல்கிறார்கள், அந்தப் பொருளின் விலை 3000 ரூபாய், தபால் செலவுகள் 500 ரூபாய்.சேவைபிரிவு எண் எல்லாம் உண்டு சரி அப்படி அதில் என்னதான் இருக்கும்? ஒரு பெரிய சாவி குபேரனுடையதாம், சிறிய சாவி லட்சுமியுடைதாம்,  சிறிய லட்சுமி சிலை ஒன்று குபேரனின் (மைத்ரெய புத்தா இங்கு குபேரனகிவிட்டார்) சிலை, ஒரு ஜோடி செருப்பு(லட்சுமியின் பாதங்களாம்) இரண்டு செப்பு தகடுகள் மற்றும் ஒரு தட்டு ஆமை சிலை ஒன்று. இதில் சில கட்டங்களும் எழுத்துக்களும் உள்ள இரண்டு பொருட்கள்.இவை மட்டும் உலோகங்கள். மற்ற எல்லாம் மட்டரக பிளாஸ்டிக்குகள்(நுரை பிளாஸ்டிக்) அதன் மேல் தங்க நிற முலாம் பூசியவைகள்.  இவைகள் எல்லாம் மும்பை மீராரோடு பகுதியில் உள்ள தொழிற்பேட்டைகளில் அச்சுவார்த்து தயார்செய்யப்படுகிறது. இதனுடைய மொத்த விலை என்று பார்த்தால் ஒரு சிலைக்கு 20 காசுகள். தகடுகள் ராஜஸ்தானில் உள்ள பிக்கானேர் பகுதியில் தயாரிக்கின்றனர்.அதன் அடக்கவிலை 100 தகடு ரூ10 மட்டுமே. பாக்கேட்டுகள் டில்லியை அடுத்து உள்ள குர்காவ் என்ற நவீன தொழில் நகரத்தில் தயாராகின்றது. ஒரு டப்பா 2ரூபாய். (அதன் மேல் ஒட்டப்படும் படம் போட்ட காகிதத்துடன் சேர்த்து) அதாவது மூன்று ரூபாய் கூட பெறாத ஒன்றுக்கும் உதவாத பொருளை டெலிமார்கெட்டிங் மூலமாக 3,500 ரூபாய்க்கு விற்கிறார்கள், அதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரே விளம்பரத்தில் நடித்து ஊக்கப்படுத்துகிறார். அதை வாங்கிகொண்டு இணையதளங்களில் பலர் எந்த திசையில் வைப்பது, எப்படி பூசை செய்வது, வீட்டில் மாமிசம் சாப்பிடலாமா? படுக்கை அறையில் வைக்கலாமா? என மடத்தனமாக கேள்விகள் கேட்பதுடன் பிறரையும் ஊக்கப்படுத்துகின்றனர்.

மும்பையில் தடைசெய்யப்பட்ட இந்த மூடநம்பிக்கை வியாபாரம் இப்போது தமிழகத்தை நோக்கிப் படையெடுத்துள்ளது. தமிழில் புதிதாக முளைத்துவரும் தமிழ் தொலைக்காட்சிகளில் இந்த விளம்பரங்களை மொழிமாற்றம் செய்து ஒலிபரப்ப ஆரம்பித்து விட்டார்கள்.

சில நாட்களுக்கு முன் ஈமு கோழி விளம்பரங்கள் வந்தன.அதில் நடித்த நடிகர்கள் மீது கூட பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறினார்கள் என்பதைக் கவனிக்கவேண்டும்.

தகவல் ஒலிபரப்புத்துறை,நுகர்வோர் துறை ஆகியவை எப்படி இது போன்ற பொருள்களை விற்கவும் அதற்கு தொலைக்காட்சிகளைப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கிறது என்பதே நம் கேள்வி. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஒருவரே இதை விளம்பரப்படுத்தும் போது அரசுத்துறைகள்  நடவடிக்கை எடுக்க துணிவதில்லை.அதுவும் ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தால் கேட்கவே வேண்டாம்.

அரசுகளுக்கு மட்டுமல்ல,இதில் ஊடகங்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.பணம் தருவார்கள் என்பதற்காக எந்த விளம்பரத்தையும் செய்யலாமா?

மருத்துவத்தையே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கொண்டுவரவேண்டும் என்ர குரல் சில ஆண்டுகளுக்கு முன் கேட்டது.அமருத்துவம் சேவையாக இருந்து அது தொழிலாக மாறிய பின்பு இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.உயிர் காக்கும் மருத்துவத்தையே நுகர்வோர் சட்டத்தில் கொண்டுவர முயலும் காலத்தில் அப்பட்டமான ஏமாற்று வியாபாரமான யந்திர தந்திர மூடநம்பிக்கை வியாபாரத்தைத் தடுக்கவும்,அதற்கு செய்யப்படும் விளம்பரத்தை முடக்கவும் வேண்டாமா?

- சரவண ராஜேந்திரன்

ரெடி உணவுகளில் இருக்கும் சில ஆபத்துகள்


முடிந்தவரையில் எப்போதும் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படாத உணவுகளை சாப்பிடுவதே உடலுக்கு நலமானது. ஆயினும், நேரம் கிடைக்காதபோது அவசரத்துக்கு பாக்கெட்டுகளில் விற்கும் உணவுகளை சாப்பிடவேண்டிய நிலைக்கு வருகிறோம். உதாரணமாக, இரண்டு நிமிட நூடூல்ஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ், சோடா, பழரச பானங்கள், சாக்கலேட் போன்று தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உண்பதற்கு தயாராக விற்பனை செய்யப்படும் உணவுவகைகளை கூறலாம்.

அதிகரித்து வரும் தொழில்மயத்தில் இவ்வாறு உணவுவகைகளும் தொழில்மயப்பட்டு நமது ஒவ்வொரு வேளை உணவிலும் இப்படிப்பட்ட தயார் உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது என்பது சிரமமாகவே ஆகிவருகிறது. இப்படி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இப்படிப்பட்ட உணவு வகைகளில் சில பயங்கரமானவை, அதி ஆபத்தானவை. இப்படிப் பட்ட ஆபத்தான உணவுகளை குறைப்பது அல்ல, முற்றிலுமாகவே தவிர்க்க வேண்டும்.

இந்தியாவில் தயாரித்து விற்கப்படும் இந்த தொழிற்சாலை உணவுகளில் என்ன இருக்கிறது எனப்தும், அவற்றில் என்ன சேர்த்தாலும் அவற்றை பிரசுரிக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக இருக்கிறது. ஆனால், அவ்வாறு முழுக்க முழுக்க அனைத்து பொருட்களையும் அட்டையில் போடுவதில்லை என்பதே உண்மை.

கீழே கொடுக்கப் பட்டிருக்கும் பொருட்கள் பல்வேறு ரெடி உணவு வகைகளில் சேர்க்கப் படுகின்றன. அவை கெட்டுப் போகாமலிருப்பதற்காகவும், அவற்றிற்கு கவர்ச்சிகரமான வண்ணம் கொடுக்கவும், அவற்றிற்கு சுவையை அதிகரிக்கவும், அவற்றிற்கு மணம் கொடுக்கவும் சேர்க்கப்படும் இப்படிப்பட்ட செயற்கைப் பொருட்கள் உடலுக்கு தீங்கிழைக்கின்றன.

கீழே இருக்கும் பொருட்கள் முற்று முடிவானவை அல்ல. அவை ஒரு சாம்பிள் மட்டுமே.

சேர்க்கப்படும் பொருள்: செயற்கை வண்ணங்கள், இவை நிலக்கரி கழிவிலிருந்து உருவாக்கப்படுகின்றன.
எதற்காக சேர்க்கப்படுகிறது: உணவுப்பொருட்களுக்கு ஆழ்ந்த கவர்ச்சிகரமான வண்ணம் கொடுப்பதற்காக உபயோகப் படுத்தப் படுகின்றன.
ஏன் தீமை?: இவை மனித உடலில் பல ஒவ்வாமை (allergy)களை தோற்றுவிக்கின்றன. ஆஸ்த்மா, களைப்பு, தோல் வியாதிகள், தலைவலி, hyperactivity என்னும் அமைதியற்ற தன்மை.
மேலதிக தகவல்கள்: yellow#2, red#1 என்றுதான் இந்த வண்ணங்கள் அழைக்கபப்டும். இவற்றில் என்ன இருக்கிறது என்பதை உணவு தொழிற்சாலைகளில் உழைப்பவர்கள் கூட அறியமாட்டார்கள். 

சேர்க்கப்படும் பொருள்: செயற்கை மணங்கள் எதற்காக சேர்க்கப்படுகிறது: உணவுப்பொருட்களுக்கு மூக்கை துளைக்கும் சாப்பாட்டு மணத்தை கொடுக்க
ஏன் தீமை?: இவையும் மனித உடலில் பல ஒவ்வாமைகளை (அலர்ஜி) தோற்றுவிக்கின்றன. தோல்சொறி, எக்ஸீமா, hyperactivity என்னும் அமைதியற்ற தன்மை உருவாகிறது. இவை உடலில் இருக்கும் என்சைம்களையும் ஆர்.என்.ஏ(RNA), தைராய்டு சுரப்பி ஆகியவற்றையும் பாதிக்கின்றன.

சேர்க்கப்படும் பொருள்: செயற்கை இனிப்பு, அதாவது செயற்கை சர்க்கரை (Acesulfame-K, Aspartame, Equal®, NutraSweet®,  Saccharin, Sweet’n Low®, Sucralose, Splenda® & Sorbitol), இவை செயற்கையாக உருவாக்கப்பட்ட, கலோரி தராத இனிப்புகள்.
எதற்காக சேர்க்கப்படுகிறது: டயட் (diet) உணவு வகைகளில் இனிப்பும் குறையக்கூடாது, அதே நேரம் கலோரியும் குறைவாக இருக்கவேண்டும் என்பதற்காக இவை சேர்க்கப்படுகின்றன.
ஏன் தீமை?: இவற்றில் பல செயற்கை சர்க்கரைகள், புற்றுநோய், தலைசுற்றல், மனப்பிராந்தி, தலைவலி கொடுப்பதாக ஆராய்ச்சிகளில் தெரியவருகிறது.

சேர்க்கப்படும் பொருள்: பென்சோயேட் தடுப்பான்கள் – Benzoate Preservatives (BHT, BHA, TBHQ)
எதற்காக சேர்க்கப்படுகிறது: கொழுப்புகள், எண்ணெய்கள், ஆகியவை கெட்டுப்போகாமல் இருக்க (அல்லது பழைய எண்ணெய் வாடை வீசாமல் இருக்க) இவை சேர்க்கப்படுகின்றன.
ஏன் தீமை?: ஆஸ்த்மா, rhinitis, dermatitis, கட்டிகள்,urticaria ஆகியவை தோன்றலாம். இதுவும் ஹைப்பர் ஆக்டிவிடி என்னும் அமைதியற்ற தன்மையை உருவாக்குகிறது. இது மனித உடலில் உள்ள எஸ்ட்ரோஜன் சமன்பாட்டை குலைக்கிறது.

சேர்க்கப்படும் பொருள்: புரோமினேட்டட் தாவர எண்ணெய் – Brominated Vegetable Oil – BVO.
எதற்காக சேர்க்கப்படுகிறது: ஆரஞ்சுச் சாறு, சோடா, குளிர்பானங்களில் சேர்க்கப்படுகிறது. இது அவற்றின் ருசியை அதிகரிக்கிறது.
ஏன் தீமை?: இது உடலில் உள்ள டிரைகிளிசரைடுகள், கொலஸ்ட்ரால் ஆகியவற்றை அதிகரிக்கிறது. இது ஈரல், விதைப்பைகள், தைராய்டு சுரப்பி, இதயம், கிட்னி ஆகியவற்றை பாதிக்கிறது.

சேர்க்கப்படும் பொருள்: ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் – High Fructose Corn Syrup
எதற்காக சேர்க்கப்படுகிறது: கரும்பு சர்க்கரைக்கு மாற்றாக உபயோகிக்கப் படுகிறது. இது எளிதில்
குளிர்பானங்களுடன் கலந்து இனிப்பு சுவையை அதிகரிக்கிறது.
ஏன் தீமை?: இது உடலில் உள்ள ப்ரக்டோஸ் fructose கொழுப்பாக ஆவதை அதிகரிக்கிறது. இது நீரிழிவு, இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் அதிகரிக்க காரணமாகிறது. இது எளிதில் ஈரலால் செரிக்கப் படுவதில்லை.

சேர்க்கப்படும் பொருள்: அஜினோமோடோ – Monosodium Glutamate எனப்படும் MSG
எதற்காக சேர்க்கப்படுகிறது: உருளைக்கிழங்கு சிப்ஸ், ரெஸ்டாரண்ட் சாப்பாடு, சூப்கள் மற்றும் ஏராளமான உணவுகளில் இது ருசியை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது
ஏன் தீமை?: பசியை அதிகரிக்கிறது. தலைவலி, நெஞ்செரிச்சல், தலைசுற்று, பலவீனம், மூச்சு வாங்குதல், வீக்கம், இதயத்துடிப்பில் மாற்றம், மூச்சுவிட கஷ்டம் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

சேர்க்கப்படும் பொருள்: ஓலெஸ்ட்ரா – Olestra. இது செரிக்கமுடியாத செயற்கை கொழுப்பு.
எதற்காக சேர்க்கப்படுகிறது: இது உருளைக்கிழங்கு சிப்ஸ், போன்றவற்றை வறுக்கவும், கொழுப்புக்கு பதிலாக பேக்கிங்கில் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் கொழுப்பு சத்தே இல்லை என்பதால், கொழுப்பு சத்து குறைவாக உள்ளதாக உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை விளம்பரம் செய்யமுடிகிறது
ஏன் தீமை?: இது பல உணவுச்சத்துக்களை நம்மால் செரிக்க முடியாமல் ஆக்குகிறது. இது
வயிற்றுக்குழாய் வியாதிகள், வயிற்றுப்போக்கு, வயிற்று பிடிப்பு, ரத்தம் போகுதல் ஆகியவற்றை கொடுப்பதாக அறியப்படுகிறது.


maggi-masala_1_1thumbnailசேர்க்கப்படும் பொருள்: டால்டா, மார்கரைன்
எதற்காக சேர்க்கப்படுகிறது: வெண்ணெய்க்கு பதிலாக இது விலைகுறைந்த மாற்றாக உபயோகப் படுத்தப் படுகிறது.இது தொழிற்சாலைகளில் தாவர எண்ணெய்களை மிக அதிகமான வெப்பத்தில் நீராவியோடு கலந்து வேதிவினையின் பின்னர் உருவாக்கப்படுகிறது.
ஏன் தீமை?:இவை transfat என்று அழைக்கப்படுகின்றன.இவை மனித உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கும், இதய நோய் அதிகரிப்பதற்கும், மாரடைப்புக்கும் முக்கியமான ஒரு காரணியாக சொல்லப்படுகிறது.

நீங்கள் சாப்பிடும் பொருட்களை பரிசோதித்து பாருங்கள். அவற்றில் மேற்கண்ட பொருட்கள் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.

கவிஞர் வாலி

எம்.ஜி.ஆரின் புகழ்மிக்க பாடல்கள் பலவற்றை எழுதியவர் கவிஞர் வாலி. ஓவிய ஆசிரியராக இருந்து நாடக துறைக்கு சென்று பின்னர் அங்கிருந்து சினிமாவுக்கு வந்து தனது அற்புதமான பாடல்கள் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை மகிழ்வித்தவர் வாலி.

திரைப்பட பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர் என பன்முகங்களை கொண்ட கவிஞர் வாலியின் இயற்பெயர் டி.எஸ்.ரங்கராஜன். இவர் கடந்த 1931-ம் ஆண்டு அக்டோபர் 29-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் பிறந்தார். இவரது தந்தை பெயர் சீனிவாச அய்யங்கார். தயார் பெயர் பொன்னம்மாள்.

எஸ்.எஸ்.எல்.சி. படித்த பிறகு சென்னை ஓவிய கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் படித்தார். ஸ்ரீரங்கத்தில் இருந்த போது 'நேதாஜி' என்ற பெயரில் கையெழுத்து பத்திரிகை நடத்தி இருக்கிறார்.

சிறு வயதிலேயே கவிதை, நாடகங்கள் எழுதுவதில் வாலிக்கு அலாதி பிரியம். திரைப்பட துறைக்கு வருவதற்கு முன்பு திருச்சி அகில இந்திய வானொலியில் இவரது நாடகங்கள் ஒலிபரப்பாகி இருக்கின்றன.

வாலியை சினிமாவுக்கு பாட்டெழுத அழைத்து வந்தவர், சமீபத்தில் மறைந்த பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் போது, "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்" என்ற பாடலை ஒரு தபால் அட்டையில் எழுதி டி.எம்.சவுந்தரராஜனுக்கு அனுப்பி வைத்தார். அந்த பாடல் பின்னர் டி.எம்.சவுந்தரராஜனின் இனிமையான குரலில் பரவசப்படுத்தியது.

டி.எம்.சவுந்தரராஜனுடன் ஏற்பட்ட பழக்கத்தை தொடர்ந்து சென்னைக்கு வந்த அவர் சினிமாவில் பாட்டு எழுத தொடங்கினார்.

காதல், தாலாட்டு, வீரம், தத்துவம், சோகம், பாசம், குறும்பு, கேலி, கிண்டல், விரக்தி, பக்தி என எல்லா வகையான பாடல்களையும் வாலி எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் காலத்தில் இருந்து, பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் என தொடர்ந்து இப்போதுள்ள புதுமுக நடிகர்களுக்கும் அவர் பாடல்கள் எழுதி இருக்கிறார். திரை உலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.

எம்.ஜி.ஆரின் பெரும்பாலான படங்களுக்கு வாலி பாடல் எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆருக்காக 'படகோட்டி' படத்தில் இவர் எழுதிய அத்தனை பாடல்களும் பிரபலம். 'ஆயிரத்தில் ஒருவன்', 'எங்க வீட்டுப்பிள்ளை', 'எங்கள் தங்கம்', 'ரிக்ஷாக்காரன்' என எம்.ஜி.ஆரின் எல்லா வெற்றிப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார். எம்.ஜி.ஆரின் கொள்கைகளை விளக்கும் கருத்துக்களை பாடல்களில் அற்புதமாக சேர்த்து அவருடைய பேரன்பை பெற்றவர்.


'கலியுக கண்ணன்', 'கடவுள் அமைத்த மேடை', 'ஒரு செடியில் இரு மலர்கள்', 'சிட்டுக்குருவி', 'ஒரேயொரு கிராமத்தில்', 'சாட்டை இல்லாத பம்பரங்கள்' உள்பட 17 திரைப்படங்களுக்கு வாலி திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறார். மாருதி ராவுடன் சேர்ந்து 'வடைமாலை' என்ற படத்தை இயக்கி உள்ளார்.

சிறுகதை, கவிதை, உரைநடை என 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை கவிஞர் வாலி எழுதி இருக்கிறார். அவற்றுள் அவதார புருஷன், பாண்டவர் பூமி, ராமானுஜ காவியம், கிருஷ்ண விஜயம், நிஜ கோவிந்தம், அம்மா ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

இயக்குனர் கே.பாலசந்தரின் 'பொய்க்கால் குதிரை', மற்றும் 'ஹே ராம்' மற்றும் 'சத்யா', 'பார்த்தாலே பரவசம்' ஆகிய படங்களில் நடித்து உள்ளார்.

வாலி 5 முறை சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை பெற்று இருக்கிறார். 1 எங்கள் தங்கம் (1970), இவர்கள் இப்படித்தான் (1979), வருஷம் 16, அபூர்வ சகோதரர்கள் (1989), கேளடி கண்மணி (1990), தசாவதாரம் (2008) ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்காக அவருக்கு தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது.

கடந்த 2007-ம் அண்டு மத்திய அரசு வாலிக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்தது.

வாலியின் மனைவி பெயர் ரமண திலகம். வாலி இவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரமண திலகம் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டார். வாலி-ரமண திலகம் தம்பதிக்கு பாலாஜி என்ற ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கிறார்.
கவி உலகில் சாதனை படைத்த கவிஞர் வாலி July 18, 2013 ல் தனது 82 வது வயதில் காலமானார்.

உணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா?


உணவுக்கு பின் குளிர்பானம் அருந்துவது சரியா?  உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ட ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம். பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும், கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. 

கொழுப்பு உறைந்து விடும்
இன்றைக்கு நம்மவர்களில்  பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீர்தான். கோடை காலம் தொடங்கிவிட்டது இனி காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் நம்மவர்கள் உபயோகிப்பது ஜில் தண்ணீர்தான் தான். இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.

உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம்’ என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்..!!*இதயநோயாளிகள் பாதிப்பு*, மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது கூல் வாட்டரை தொடவேக் கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படுத் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள். 

சிந்தனைஒளி

# வாழ்வு சுவைக்க வேண்டுமா ?உங்கள் தேடல் தொடர வேண்டும்!
         # உரிமையில்லாத பெண்ணையும் உடைமையில்லாத பொருளையும்                    தொடாதீர்கள்!
         # இது கலியுகம் -நல்லவனாயிருந்தால் மட்டும் போதாது வாய்                        வல்லவனாயும் இருக்கணும்!
         # பகை தெரிந்து கெடுக்கும் -உறவு தெரியாமல் கெடுக்கும்!
         # சொத்து போனால் – சம்பாதித்து கொள்ளலாம், உடல்கெட்டு போனால் –              சரிசெய்து கொள்ளலாம், நம்பிக்கையற்று போனால் – ஒன்றும் செய்ய                முடியாது!


மனிதனின் தோன்றியது எப்போது?{ஆக்கம்: செல்வத்துரை சந்திரகாசன்}



உயிரினத்தின் பரிணாம வளர்ச்சி


உலகமெங்கும் காணப்படும் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய கொள்கைகளை வடிவமைத்தவர்களில் முதன்மையானவர் டார்வின் என்பவர் ஆகும். இவர் 150 வருடங்களின் முன் வாழ்ந்தாலும் , இன்றைய அகழாய்வுகளில் கிடைக்க்ப்பெற்றுள்ள தொல்பொருட்களின் மரபணுச் (genetic code ) சோதனைகளின்  முடிவுகள் எல்லாம், அவர் கூற்றினை முற்றிலும் நிறுவுவதாகவே அமைகின்றன.

மனித குலமோ அல்லது எந்த ஒரு உயிரினமோ தற்போது காணப்படும் இந்த உயரிய நாகரிக மட்டத்திலேயே, தோன்றிய காலத்திலிருந்து உருவாக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருப்பதாகக் கூறவே முடியாது என்பது வெள்ளிடை மலை. உயினங்கள்பால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மாற்றங்களின் நம் சமீப கால அவதானிப்புகளிலிருந்து. இந்த உண்மையை சந்தேகமற உய்த்தறிவது இயலக்கூடியதாக இருக்கிறது. பல உயிர்கள், பலதடவைகள் முற்றாகவோ அல்லது பகுதியாகவோ, அவ்வப்போது அழிந்தும் மாறுபட்டும் வந்துள்ளன. 

ஒருசில லட்சம்/கோடி வருடங்களின் முன் நாம், நாமில்லை; நாய், நாயில்லை; புலி, புலியில்லை; எலி, எலியில்லை! 

இதை விளக்குவதற்கு, இந்தப் பரிணாம வளர்ச்சி பற்றிய ஒரு காலவரிசைதனை சுருக்கமாக நோக்குவோம்:

400 கோடி வருஷம்:
பூமியின் வளிமைண்டலத்தில் பிராண வாயு இருக்கவில்லை.

360 கோடி வருஷம்:
எரிகற்களின் தீப்பிழம்புகளால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தினால் சுருள் வடிவான ஒற்றைக்கல (single cell ) பக்டீரியாக்கள் தோன்றின. 

350 கோடி வருஷம்:
சூரிய ஒளியின் உதவியுடன் ஒளித்தொகுப்பு நடந்து இவை பல மடங்காய்ப் பெருகின. இத்தாக்கத்தில் வெளியான கழிவுப்பொருள்தான் பிராண வாயு.

250 கோடி வருஷம்:
இத்தாக்கத்தில், நுண்ணங்கிகள் (micro-organism)  கடல் பூஞ்சைகளுடன் (algae) ஒட்டி, வீழ்படிவுகளுடன் கலந்து ஓர் உயிரணுவுக்கான அமைப்பு உண்டானது. இதனால் வெளிவிடப்பட்ட பிராண வாயு வளிமண்டபத்து ஏனைய வாயுக்களோடு கலந்தது.

160 கோடி வருஷம்:
தனிக்கலத்தைப் பாதுகாக்க வெளிச்சுற்றுச் சவ்வு உண்டானது.

150 கோடி வருஷம்:
சிக்கலான கலம் கொண்ட உட்கருவுடன் கூடிய நுண்ணுயிர்கள் உருவானது.

120 கோடி வருஷம்:
இருபால், இனச்சேர்க்கை உறுப்புகளுடன் கூடிய நுண்ணுயிர்கள் உருவாகின.

100 கோடி வருஷம்:
பல கலம் கொண்ட உயிரணுக்கள் உருவாகின.

60 கோடி வருஷம்:
நீரை உணரும், உணவு உண்ணும் தலை, நரம்புகளுடன் கூடிய நுண்ணுயிர்கள் தோன்றின.
மிகையான பிராணவாயு ஒசோன் படலத்தை வானில் உண்டாக்கி, கொடிய UV கதிர்வீச்சைத் தடுத்து, உயிர்வாழும் சூழ்நிலையை உருவாக்கியது.  

50 கோடி வருஷம்:
முதல் மீன் வகைகள் தோன்றின.

40 கோடி வருஷம்:
பூமியில் உள்ள தாவரங்கள், நீர் நிலைகளை நோக்கி கடல்வாழ் ஜந்துக்கள் இடம்பெயரத் தொடங்கின.

30 கோடி வருஷம்:
வண்டுகள், ஊர்வன தோன்றின.

22 கோடி வருஷம்:
டைனசோர் (dinosaurs)  தோன்றியன.

6-20 கோடி வருஷம்:
பாலூட்டிவகை உயிர்கள், பறவைகள் எறும்புகள் போன்றவை தோன்றின.

6 கோடி வருஷம்:
டைனசோர் அழிந்தன 

3 கோடி வருஷம்:
தற்காலத்தை ஒருவாறு ஒட்டிய மிருகங்கள் உருவாகின.             

1.4 கோடி வருஷம்:
முதல் குரங்கினம் தோற்றம்.

1 கோடி வருஷம்:
எறும்பு வகைகள் தோற்றம்.

44 லட்சம் வருஷம்:
முதல் மனிதக் குரங்கு தோற்றம்.

20 லட்சம் வருஷம்:
மனிதக் குரங்கு கற்கால ஆரம்பம்.

7 லட்சம் வருஷம்:
குரங்கு மனிதன், மனிதக் குரங்கிலிருந்து வேறுபட்டமை.

4 லட்சம் வருஷம்:
குரங்-மனிதன் மர/கல் ஆயுதங்கள் பாவித்தமை.    

3 லட்சம் வருஷம்: 
குர-மனிதன் ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவினுள் நுழைந்தான்.        

2 லட்சம் வருஷம்:
தற்போதைய மனிதனின் உடற்கட்டோடு ஒத்திருக்கும் கு-மனிதன் தோற்றம்.   

1 லட்சம் வருஷம்:     
(கு)மனிதன் தானியம் பயிரிடப் பழகினான்.

40,000 வருஷம்:
தற்போதைய மனிதனின் தோற்றம் கொண்டிருந்தான்.

30,000 வருஷம்:
மிருகங்களை வீட்டுப் பிராணிகள் ஆக்கினான்.

15,000 வருஷம்:
அமரிக்காவினுள் நுழைந்தான்.                      

12,000 வருஷம்:
மண்பாத்திரங்கள் செய்தான்.

9,000 வருஷம்:
உலோகப் பாவனையை கண்டான்.

5,500 வருஷம்:
சில்லுருளிகளின் பாவனைகளைக் கண்டுபிடித்தான்.

5,000 வருஷம்:
எழுத்துகளுக்கு உருவம் கொடுத்தான். 

3,300 வருஷம்:
இரும்பின் பயனைக் கண்டு கொண்டான்.

2,000 வருஷம்:
உயரிய விஞ்ஞான சிந்தனைகள் தொடங்கின.

250 வருஷம்:
பொருளாதாரப் புரட்சி தொடங்கினான் 

50 வருஷம்:
வேறுலகம் நோக்கி விண்வெளிப் பயணம் தொடங்கி
------& தொடர்கிறது.

உலகின் முன்னிலை விஞ்ஞானிகள் எல்லோருமே ஒருமித்து ஆதரிக்கும் இந்தப் பரிணாமக் கொள்கையானது, நியாயமுள்ள நிலைப்பாடுள்ள விவேவிகள் எவரும்   பிழையான ஒன்று என்று எந்தவொரு காரணத்திற்காகவும்  கரம் தூக்கி நிற்க மாட்டார்கள். 

ஆகவே, எந்தவொரு உயிரும், இந்த உலகில் ஒருவராலோ அல்லது பலராலோ, ஒருநாளிலோ அல்லது சில நாட்களிலோ, மந்திரக்கோலைக் காட்டி "ஓ, சே, சோ " என்று படைக்கப் படவில்லை என்று மெய்யறிஞர் எவரும் ஏற்றுக்கொள்வர்.         
                          

ஒளிர்வு-(32) ஆனி-2013

உண்மைகள்உரைக்கப்படும்தளம்-தீபம், மூடநம்பிக்கைகளின்முடிவிடம்.

கணினியைப் பார்க்கும் கண்களுக்கு…

எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும் போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது. உட‌ல் உறு‌ப்‌பி‌ல் ‌மிக மு‌க்‌கியமானது க‌ண். சாதாரணமாக நா‌ம் பா‌ர்‌‌ப்பதா‌ல் ‌க‌ண்களு‌‌க்கு எ‌ந்த பா‌தி‌ப்பு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை.

ஆனா‌ல், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியை‌த் தொட‌ர்‌ந்து பல ம‌ணிநேர‌ங்க‌ள் பா‌ர்‌த்து‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல் கண் பாதிக்கப்படுகிறது. க‌ண்களு‌க்கு ஓ‌ய்‌வு எ‌ன்றா‌ல் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும்.

கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓ‌ய்வாக அமையு‌ம். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது.

அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும். அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும் போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

அ‌ப்படி செ‌ய்யு‌ம் போது உ‌ள்ள‌ங்கைகளை எடு‌த்து‌வி‌ட்டு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து மெதுவாக க‌ண்களை‌த் ‌திற‌க்க வே‌ண்டு‌ம். மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும்.

அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால் தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது.

எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலே போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போது தான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது.

சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சி தான். அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதை விட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது.

ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

சிரிக்க...சில நகைச்சுவைகள்.

கணவன் ; சாமி கிட்ட என்னமா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்கநீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்
..................................
Man1: என்ன சார் சுவிட்ச் போர்டை தண்ணி உத்தி கழுவுரிங்க. ஷாக் அடிசிடும்ல?
Man2: தம்பி நீங்க தமிழ்நாட்டுக்கு புதுசா?
...................................
நீ சிரிக்கும்போது ஒவ்வொரு விநாடியும் உன் பின்னால்
நான் இருப்பேன்.
ஏனென்னாறால் அந்தக் கொடுமையை என்னால் பார்க்க
முடியாது..!
...................................
ஒருவன்: டேய் பேஸ்புக்லையே இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
மற்றவன்:நான் பேஸ்புக்ல இருக்குறதையே பார்த்துட்டு இருக்கியே உனக்கு வேலை இல்லையா?
...................................
ஒருவன்:""என்னடா இது பேய் அலர்ற மாதிரி செல்போன்ல ரிங்டோன் வெச்சிருக்க''
மற்றவன்:""என் மனைவி கால் பண்ணினா மட்டும் இப்படி அடிக்கும்''
...................................
ஆசிரியர்: ""நேற்று ஸ்கூலுக்கு லேட்டா வந்ததுக்கு உங்க அப்பாவை கூட்டிட்டு வரச் சொன்னேனே, ஏன் கூட்டிட்டு வரலே?''
மாணவன்:""சாரி சார், எங்கப்பா ஆபீஸýக்கு லேட்டாப் போனதால அவர் அவங்க அப்பாவை கூட்டிட்டு போயிருக்காரு''
..................................
கணவன்: நான் நாயா கத்திட்டு இருக்கேன், எங்கடி போன?
மனைவி: நாய் பிஸ்கெட் வாங்கப் போனேங்க...!
..................................
ஒருவர்: ""ஆபிஸ் வேலைய வீட்டிலேயும் பார்ப்பியாமே, என்ன அது?''
மற்றவர்:""தூங்குறதுதான்''
..................................
நோயாளி ""டாக்டர் 100 வயது வரை வாழறதுக்கு என்ன பண்ணனும்?''
டாக்டர்:""இதை நீங்க என்கிட்ட வர்றதுக்கு முன்னாடி யோசிச்சு இருக்கணும்''
..................................
ஒருவன்:""என்னடா! டிராபிஃக் போலீஸ் ஆயிட்டே போலிருக்கு!''
மற்றவன்:""எங்க வாத்தியார் வாக்கு பலிச்சிடுச்சு! நீ நடு ரோட்ல தான்டா நிப்பே'ன்னாரு''
..................................
ஒருத்தி: ""அடிக்கடி உன் மாமியார் காதுகிட்டப் போய் நெய், மைசூர்பா, நெய் மைசூர்பான்னு சொல்றியே ஏன்?''
மற்றவள்:""நெய் மைசூர்பான்னா உயிரை விட்டுடுவேன்னு அவங்க தான் சொன்னாங்க!''
..................................
ஒருவன்: ""உன் மனைவிக்கும் அம்மாவுக்கு சண்டை வந்தா நீ யார் பக்கம்?''
மற்றவன்:""பீரோவுக்கு பின்பக்கம்!''
...................................
ஒருத்தி: ""உன் மாமியார் பாத்ரூம்ல வழுக்கி விழுந்தப்போ நீ தூக்கவேயில்லையாமே''
மற்றவள்:""டாக்டர், நான் வெயிட்டையே தூக்கக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு''