நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? பகுதி:15B [தொடர்-முடிவு]



     [சீரழியும் சமுதாயம்] 

சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மை யுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும் என 

"நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு" என்று கூறுகிறது குறள் 452. 
அதாவது சேர்ந்த இனத்திற்கு ஏற்ப பழக்கவழக்கமும் அறிவும் மாறும் என்கிறது. நல்ல சமுதாய சூழ்நிலைதான் தனி மனிதனுக்கு பெருமை யையும், சிறுமையையும் சேர்க்கிறது. இதனை திருவள்ளுவர் தன் குறள் 460 இல்

"நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல்"

என, அதாவது நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை என்கிறார். அது மட்டும் அல்ல ,சமுதாய அடையா ளங்களை வைத்து தான், அங்கு வாழும்  தனி மனிதனுடைய தரமும் முடிவும் செய்யப்படுகிறது. இதை திரு வள்ளுவரும் தமது குறள் 458 இல்,

"மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து"

என, அதாவது மனதின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமையும் என கூறுகிறார். ஆகவே சமுதாய பார்வையில் பண்புக் குறைவை உடைய சமுதாயம் என கருதப்பட்டால் அல்லது நிருவப்பட்டால், அங்கே மன அளவில் உயர்ந்த மனிதன் என்றாலும் ,அவனை பொதுவாக உயர்வாக கருதப்படுவதில்லை, உதாரணமாக ஆபிரிக்க அமெரிக்கரை இப்படி இன்னும் பலர் கருதுகிறார்கள். எனவே எம் சமுதாயத்தின் பெயரை கெடுக்காமலும் எம்மையும் எம் சமுதாயத்தையும் சீரழிக்காமலும் நாம் பார்த்து கொள்ள வேண்டும். இது ஒவ் வொரு சமுதாயத்தினதும் ஒவ்வொரு உறுப்பினரினதும் கடமையாகும்.

சமுதாயம் மேம்பாடு அடைய, சமுதாயத்தின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் அதாவது, மனிதர்கள் நிர்வாணமாகப் பிறப்பதைப் போலவே நிர்மலமான மூளையுடனும், புலன்களுடனும் பிறக்கிறார்கள். பின் கற்றல், கேட்டல், சிந்தித்தல், செயற்படுதல் மூலம் புத்திக் கொள்முதல் செய்கிறார்கள் அறிவு பெறுகிறார்கள். எனவே முறையான அறிவு பெற்று அவர்கள் தம் வாழ்க்கை தரத்தை முறையாக உயர்த்தும் பொழுது, அவர்கள் சார்ந்த சமுதாயமும் மேம்படுகிறது எனலாம். மேலும் ஒளவையார் தனது ஒரு பாடலில்,

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையர் கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே"

என்று பாடினார், அதாவது, நிலத்திற்கு என்று தனியியல்பு ஒன்று இல்லை, எங்கு நல்லவர் வாழ்கின்றாரோ அங்கு நிலமும் வளமாகவே அமையும் என்கிறார். அது போலத்தான் சமுதாயமும், எங்கே மனிதர்கள் நல்லவராக முறையாக வாழ்கின்றாரோ அங்கு சமுதாயமும் முன்னேற்றமும் மேன்மையும் அடையும் எனலாம்.

எந்த ஒரு உயர்ந்த நாகரிகமும் ஒரு நாளில் ஏற்படுவதல்ல, அதே போல ஒரு நாளில் அழிவதும் அல்ல. சீரழிவு அங்கு படிப்படியாகவே நடந்து உள்ளது, எனவே அதன் தாக்கத்தை நேரத்துடன் உணரக் கூடியதாக, பார்க்கக் கூடியதாக கட்டாயம் இருக்கும். பொதுவாக அந்த சமுதாயமே அல்லது நாகரிகமே அதன் சரிவுக்கு பொறுப்பு ஆகும். உதாரணமாக ரோம பேரரசை எடுத்துக் கொண்டால், அது ஐந்து முக்கிய காரணங்களால் சரிந்ததாக கூறினாலும், ஒரு ஆங்கில எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளரான எட்வார்ட் கிப்பன் (Edward Gibbon, பி. மே 8, 1737 - இ. ஏப்ரல் 27, 1737) தனது ரோமப் பேரரசின் தேய்வும் வீழ்ச்சியும் (The History of the Decline and Fall of the Roman Empire) என்ற புத்தகத்தின் இறுதி தொகுதிகளில், அவர் மக்கள் தொகையை ஒரு காரணமாக கூறவில்லை, அதே போல், தொழில் நுட்பத்தின் பற்றாக்குறையையோ அல்லது பருவநிலை மாற்றத்தையோ கூறவில்லை. அவரின் முதலாவது அடிப்படை காரணம் குடும்பத்தின் முறிவு. அதன் பின் அவர் அதிகரித்த வரிவிதிப்பு, இன்பத்திற்கான ஒரு தீராத ஏங்குதல் [an insatiable craving for pleasure], பராமரிக்க முடியாத அளவில் ஆயுதங்களின் குவிப்பு [unsustainable buildup of armaments], மற்றும் மதத்தின் சரிவு என்கிறார். மேலும் அவரின் கூற்றின்படி, ரோம பேரரசின் சரிவுக்கான மூல கரணம் குடிமை நல்லொழுக்கமும், மற்றும் தனிப்பட்ட அறநெறி இழப்பும் [loss of civic virtue and individual morality] என்கிறார். அவரின் கூற்றும் காரணங்களும் இன்றும் எமது சரிவிற்கு சரியாக பொருந்துகிறது என்றே கருத வேண்டியுள்ளது. ஆகவே நாம் எம்மை தனிப்பட்ட ரீதியிலும் சமுதாய ரீதியிலும் திருத்தினால் ஒழிய, மற்றும் படி எதிர்பார்க்கப் படும் சரிவை அல்லது சீரழிவை தடுக்க முடியாது என்பதே உண்மையாகும். அதையே நானும் நம்புகிறேன்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
[முற்றிற்று]

 குறிப்பு:வாசகர்கள் கவனத்திற்கு- இத்தொடர் பகுதி 01 லிருந்து வாசிக்கும் வசதிகருதி ஒவ்வொரு தொடரும் 'லிங்க்' செய்யப்படுகின்றன. கட்டுரையின் இறுதியில் காணப்படும் அடுத்த தொடருக்கான 'லிங்க்' இணை அழுத்துவதன் மூலம் நீங்கள் தொடர்ந்து வாசிக்கலாம்.நன்றி.
  பகுதி 01 இனை வாசிக்க அழுத்துங்கள் →
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? /பகுதி: 01A

நோய் தொற்றுகளில் இருந்து நம்மை காக்கும் உணவுகள்



உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். பருவகால நோய் பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். நோய் பாதிப்புக்கு இடம் கொடுக்காமல் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் ஊட்டச்சத்துக்களுக்கும் முக்கிய பங்கு இருக்கின்றன. வைட்டமின்கள் ஏ, பி, சி, டி மற்றும் ஈ, மற்றும் இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவை. அவற்றின் செயல்பாடுகளை அறிவோம்.

வைட்டமின் ஏ: சருமம், சுவாசக்குழாய் மற்றும் குடலில் உள்ள உயிரணுக்களின் கட்டமைப்பை பராமரிக்கும் பணியை மேற்கொள்கிறது. நோய் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்ப்பதற்கும் உதவுகிறது. மீன், முட்டையின் மஞ்சள் கரு, பாலாடைக்கட்டி, நட்ஸ் வகைகள், விதைகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் வைட்டமின் ஏ காணப்படுகிறது. மேலும் காய்கறிகளில் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. அதனை சாப்பிடும்போது வைட்டமின் ஏ ஆக மாற்றமடைந்துவிடும். பச்சை காய்கறிகளிலும், மஞ்சள், பூசணி, கேரட் போன்றவற்றிலும் பீட்டா கரோட்டின் காணப்படுகிறது.

வைட்டமின் பி: பி6, பி9, பி12 போன்றவை நோய்கிருமிகளை விரட்டி அடிப்பதில் முக்கிய பங்குவகிப்பவை. பருப்புவகைகள், பச்சை இலை காய்கறிகள், பழங்கள், நட்ஸ் வகைகள், மீன், கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி போன்றவற்றில் பி6 அதிகம் நிரம்பியிருக்கிறது. பி12 வைட்டமின்கள் முட்டை, பால் பொருட்கள், சோயா பால் போன்றவற்றில் நிறைந்துள்ளன.

வைட்டமின் சி மற்றும் ஈ: இவை ஆக்சிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து சரும செல்களை பாதுகாக்க உதவுகின்றன. நியூரோபில்ஸ், லிம்போசைட்டுகள் மற்றும் பாகோசைட்டுகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் சிறப்பு செல்கள் உருவாக்கத்திலும் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி, கிவி, பிராக்கோலி, தக்காளி, குடை மிளகாய் போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. நட்ஸ்கள், பச்சை இலை காய்கறிகள் மற்றும் காய்கறி எண்ணெய்களில் வைட்டமின் ஈ அதிகம் காணப்படுகிறது.

வைட்டமின் டி: நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கும் உயிரணுக்களின் இயக்கத்திற்கு வைட்டமின் டி தூண்டுகோலாக விளங்குகிறது. நோய் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கவும் உதவுகிறது. உடலுக்கு தேவையான வைட்டமின் டி அளவை சூரிய ஒளி மூலம் பெறலாம். எனினும் மீன், முட்டை, வெண்ணெய், பால் வகைகளில் வைட்டமின் டி அதிகம் நிரம்பியிருக்கிறது. சுவாசம் சார்ந்த நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க வைட்டமின் டி அவசியமானது என்பதை ஆய்வுகளும் நிரூபித்துள்ளன.

நோய் எதிர்ப்பு தன்மைகொண்ட செல்களின் வளர்ச்சிக்கு இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்றவை இன்றியமையாதது. நோய்க்கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு செல்களை வலுப்படுத்தும் தன்மை இரும்பு சத்துக்கு இருக்கிறது. ஆட்டிறைச்சி, கோழி, மீன்களில் இரும்பு சத்து காணப்படுகிறது. சிப்பிகள், பிற கடல் உணவுகள், இறைச்சி வகைகள், உலர்ந்த பீன்ஸ் மற்றும் நட்ஸ் ஆகியவற்றில் துத்தநாகம் காணப்படுகிறது. காளான்களில் செலினியம் மிகுந்திருக்கிறது.

நோய் தொற்றுகளிலிருந்து எமைக்காக்க மேற்படி உணவுகளை கவனித்துக் கொள்வோம். 
 நன்றி:மலர்மாலை ஆரோக்கிய மாலை 

ஐம்பெரும் காப்பியமா!! அவை எவை?


பொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்லா ஐம்பெரும் காப்பியங்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளதாகக் கூறிப் பெருமை அடைந்துகொள்வது அன்றாடம் காணும் காட்சியாகும்.

 தமிழ் மக்களில் எத்தனை பேருக்கு இந்த ஐந்து காப்பியங்களைப் பற்றிய பூரண அறிவு உள்ளது என்று நினைக்கின்றீர்கள்? நான் நினைக்கிறேன், ஒரு 50 வீதமானவர்கள் இந்த ஐந்தின் பெயர்களையே கூற முடியாதவர்களாய் இருப்பார்கள்; 98 வீதமானவர்கள் இவற்றின் கதைகளையே அறியாதவராக இருபபார்கள். ஆதலால், இவை என்னதான் சொல்கின்றன என்று ஒருமுறை பார்ப்போமா?

சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்பன ஐம்பெருங் காப்பியங்கள் எனப்படும். இவற்றில் முதலாவது எல்லோருக்கும் தெரிந்த கதை. இரண்டாவது பலருக்கும், மிஞ்சியவை ஒரு சிலருக்கும் மட்டுமே தெரிந்திருக்கும்.

⇛⇛⇛⇛⇛⇛⇛⇛கதைச் சுருக்கம்
சிலப்பதிகாரம்

சோழ நாட்டிலே, புகார் என்ற ஊரிலே, கோவலன் என்னும் வணிகன், கண்ணகியை மணந்து இன்புற்று வாழ்ந்தான். பின்னர், கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவி இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். அதன்பின் மாதவியோடு கருத்து வேறுபாடு கொண்டு கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணி வணிகம் செய்ய இருவரும் மதுரை சென்று, கண்ணகியின் ஒற்றைச் சிலம்பைக் விற்க கடை வீதிக்க்குச் சென்றான். இத்தருணம், பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், தான் தப்புவற்காக பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனை ஆராய்ந்து  பாராத மன்னன் அவனைக் கொன்று, சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான். கோவலன் கொலை செயப்பட்ட செய்தியை அறிந்த கண்ணகி, தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை, அந்த சிலம்பை உடைத்துக் காட்டி, உள்ளே மாணிக்கம்தான் உள்ளது, அரச சிலம்பின் முத்து அல்ல என்று நிரூபித்தாள். செயலிழந்த இழந்த அரசன், 'நானோ அரசன்; நானே கள்வன்' என்று அலறி, மயங்கி விழுந்து இறந்தான். உடனே தேவியும் நிலத்தில் வீழ்ந்து இறந்தாள். அதன் பின்னர், கோபம் கொண்ட கண்ணகி மதுரையை எரித்தது யாவரும் அறிந்ததே!
மணிமேகலை
கோவலன் + கண்ணகியின் மறைவிற்குப் பின் மனம் வருந்திய மாதவி, பழைய வாழ்க்கையை வெறுத்து, தன மகள் மணிமேகலை ஆசையைத் துறந்து வாழவேண்டும் என்று புத்த சமய மடம் ஒன்றில் அவளைச் சேர்த்து வளர்த்தாள்.

அந்த நாட்டு இளவரசன் மணிமேகலையின் மேல் காதல் கொள்ளவே, முற்பிறப்பு பந்தத்தினால் அவளுக்கும் அவன்பால் காதல் உணர்வு வருவதை எண்ணிக் கவலைப்படுவதைக் கண்ட மணிமேகலா தெய்வம், அவளை எடுத்து தீவு ஒன்றில் விட்டுச் செல்ல, அங்கு அவள் ஒரு புத்த துறவியானாள். அத்தெய்வம் அவளுக்கு வேற்று உருவத்தை அடைவதற்குரிய மந்திரத்தையும்வான்வழி பறக்கும் சக்தியையும், பசிப்பிணி போக்கும் அட்சய பாத்திரத்தையும் கொடுத்தது. அவள் ஒரு கற்புடைய மங்கை ஒருவரைத் தேடிப் பிடித்து, இந்த அட்சயபாத்திரத்தினூடாக முதலன்னம் அவளுக்கு அளித்தாள். பின்னர், அவள் தன்னூர் வந்து, இளவரசன் தன்னை அடையாளம் காணாதபடி காயசண்டிகை என்பவளின் உருவம் எடுத்து, யாவருக்கும் அன்னதானமும், நல்லறமும் புரிந்தாள். என்றாலும், அவன் அவளை அடையாளம் கண்டு மீண்டும் காதலுடன் அணுகும்போது, உண்மையான காயசண்டிகையின் கணவன் அவ்விடம் வந்தான். தன் மனைவியைத்தான் இளவரன் தீண்ட முனைகிறான் என்று எண்ணி அவனை அங்கேயே வெட்டிக் கொண்டான். இதனால் வெகுண்டெழுந்த மன்னன், தன மகனின் சாவுக்கு மணிமேகலைதான் காரணமென்று அவளைச் சிறைவைத்து, சொல்லொணாச் சித்திரவதைகள் செய்தும், அவள் எந்த ஒரு பாதிப்பும் அடையாமல் இருப்பதைக் கண்டு, அஞ்சித் தன பிழையை உணர்ந்து அவளை விட்டு விடுகிறான்.

அன்று முதல், ஊரூராய்ச் வெவ்வேறு சமய வாதிகளிடமும் சென்று நுண் பொருள் நுணுக்கங்கள் பற்றிய விளக்கங்கள் பெற்றும் நிறைவு கொள்ளாமல், கடைசில், பௌத்த அறவண அடிகளிடம் தரும நெறியின் நுண்மையான மெய்ப்பொருள் விளக்கத்தினால் தெளிவு பெறுகிறாள்.

முடிவில், தர்மம் போதித்து, மக்களின் பசியைப் போக்கி வாழ்ந்த மணிமேகலை, அவள் மறைவிற்கு பின் தெய்வமாகப் போற்றப்பட்டாள்.
குண்டலகேசி

காவிரிபூம்பட்டினத்தை தலைநகராகக் கொண்டு கரிகாற்சோழன் ஆண்டு வந்தான். வணிகமணி என்பவர் அவ்வூரில் இருந்தார். அவரது மகள் குண்டலகேசி ஓர் அழகுப்பதுமை. அரண்மனை அருகில் இருந்த பெரிய வீட்டில் குடியிருந்தாள். அப்பகுதியில் வணிகம் செய்து வந்த காளன் என்னும் இளைஞன், தொழிலில் நஷ்டப்பட்டதால் திருடித் திரிந்தான். கையும், களவுமாக பிடிபட்ட  அவனைக் காவலர்கள் கைது செய்து அழைத்து வந்த போது, தனது மாளிகையின் உச்சியில் தோழியருடன் பூப்பந்து ஆடிக்கொண்டிருந்த குண்டலகேசி வேடிக்கை பார்க்க வந்தாள். அவன் ஒரு குற்றவாளியாக இருக்கிறானே என்பது பற்றி கவலைப்படாமல், விதிவசத்தால் காளனிடம் காதல் வசப்பட்டாள். அந்தளவுக்கு அவன் அழகாக இருந்தான். கரிகாற்சோழன் முன் கொண்டு செல்லப்பட்ட காளனுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு, மறுநாளே தூக்கில் போட உத்தர விடப்பட்டது.

 இதற்குள் தன் தந்தை, வணிகமணியிடம் தனது காதலை விவரித் தாள் குண்டலகேசி.  ஒரு குற்றவாளியைப் போயா காதலிக்கிறாய் என தந்தை கடிந்து கொண்டும், காதல் கண்ணை மறைக்க அவள் பிடிவாதம் செய்தாள்.

வேறு வழியின்றி மன்னனைக் காணச் சென்றார் வணிகமணி.  அவருக்கும் சோழனுக்கும் நல்ல பழக்கமுண்டு. அவரை வரவேற்ற மன்னன், இரவோடு இரவாக வந்துள்ளீர்களே! ஏதேனும் உதவி வேண்டுமா? என்றான். தாங்கள் நான் கேட்பதைத் தருவீர்களா? என்றதும், என்ன கேட்டாலும் தருகிறேன் என வாக்களித்து விட்டான். தன் நிலையை எடுத்துச் சொல்லி, காளனை விடுவிக்கும்படி வணிகமணி வேண்டினார்.  மன்னனும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற காளனை விடுதலை செய்து விட்டான். ஒரு நல்லநாளில் குண்டலகேசிக்கும், காளனுக்கும் திருமணம் நடந்தது. ஏராளமான செல்வம் சீதனமாகக் கொடுக்கப்பட்டது.

ஆனாலும், ஆசை விடவில்லை. மேலும் சம்பாதித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. மீண்டும் அவன் திருட்டில் இறங்கினான். இதை குண்டலகேசி கண்டித்தாள். மனைவி தன்னைக் கண்டிப்பது காளனுக்கு பிடிக்கவில்லை.  ஒருநாள் மலை உச்சியில் சந்தோஷமாக இருந்து வரலாம் எனக் கூறி, அவளை அழைத்துச் சென்றான். அங்கு சென்றதும் அவளைத் தள்ள முயற்சித்தான். அவள் சுதாரித்துக் கொண்டு, இனியவரே! தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். ஆனால், சாகும் முன் கணவனை வலம் வந்து வணங்கும் பெண்கள் பாக்கியசாலிகள். அதற்கு அனுமதியுங்கள், என்றாள். காளனும் வேண்டாவெறுப்பாய் சம்மதித்தான். இரண்டுமுறை வலம் வந்த குண்டலகேசி, மூன்றாம் முறை வலம் வரும்போது மிகவும் விரைவாக தன் கணவனை பாதாளத்தில் தள்ளி விட்டாள். அவன் உயிர் இழந்தான். பின்னர் அவள், பௌத்த துறவியாகி ஆசையே அத்தனை துன்பங்களுக்கும் காரணம் என்ற புத்தரின் போதனையை உலகெங்கும் பரப்பி, அவரது திருவடியை எய்தினாள்.

வளையாபதி

 இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பிக்கப் பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. ஆனால், ஒரு குத்துமதிப்பாக, இதுதான் அந்தக் கதையாய் இருக்கலாம் என்று சொல்லலாம். இல்லவே இல்லை, அது வெறும் பிழை என்று கூறுபவர்களும் உளர்.

நவகோடி நாராயணன் என்பவன் ஒரு வைர வாணிகன். அவன் தன் குலத்தில் ஒரு பெண்ணையும் வேறு குலத்தில் ஒரு பெண்ணையும் மணந்து வாழ்கிறான். வணிகர்கள் இவன் வேறு குலத்துப் பெண்ணை மணந்ததற்காக இவனைத் தங்கள் குலத்தை விட்டு ஒதுக்குகின்றனர். இதனால் நாராயணன் தன் வேறு குல மனைவியைத் தள்ளி வைத்து விடுகிறான். அவள் காளியை வேண்டித் தனக்கு வாழ்வு தருமாறு கேட்டுக் கொள்கிறாள். அப்பெண்ணுக்கு ஒரு மகன் பிறந்து வளர்ந்து இளைஞன் ஆகிறான். இவன் தன் தந்தையைப் பற்றி அறிந்து புகார் நகரம் சென்று வணிகர்கள் கூடிய அவையில் தன் தந்தை நாராயணனே என்று கூறுகிறான். காளிதேவியும் சாட்சி கூறுகிறாள். குடும்பம் ஒன்றுபடுகிறது.
சீவக சிந்தாமணி
இதுவும் ஒரு சமண நூல்.
மன்னனுக்கு மகனாக, அரசியின் வயிற்றில் உருவானவன் சீவகன். எனினும் விதி வசத்தால் சுடுகாட்டில் பிறக்கிறான். பின்னர் வணிகன் ஒருவனின் வீட்டில் வளர்கிறான். நல்லாசனிடம்  கல்வி பயின்றான். இவன் சிறந்த தோற்றப்பொலிவு கொண்டவன். மிகுந்த அறிவு நிரம்பியவன், பல்வேறு கலைகளிலும் வல்லவன், சிறந்த வீரன்.

இவன் எட்டு மங்கையரை மணந்து கொள்கிறான். இவ்வாறு பல மணம் புரிந்தவன் ஆனாலும், இவன் ஒரு காமுகனாக அன்றி சிறந்த மன அடக்கம் கொண்டவனாகவே சித்தரிக்கப்படுகிறான். இவ்வாறு பல பெண்களை மணம்புரிந்ததன் மூலம், பணபலத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டு அரசபதவியை அடைகிறான். 30 ஆண்டுகள் நீதியுடன் ஆட்சி செய்த சீவகன், ஆட்சிப் பொறுப்பை மகனிடம் அளித்துவிட்டுத் துறவறம் பூண்டு முத்தி பெறுகிறான்.

இக்கதைகளை வாசித்தவர்களில் பலர் உண்மையில் முதல் தரமாகவே இவை என்ன கதைகள் என்று அறிந்திருப்பார்கள். திருக்குறளில், நாம் செய்ய வேண்டியவை எவை, செய்யக் கூடாதவை எவை என்று தெளிவான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், இக்கதைகளில் வரும் பலதார மணங்கள், ஓரிருவரைத் தவிர மீதிப் பெண்கள் எல்லாம் கற்பில்லாதவர்கள் என்ற ஒரு நிலைப்பாடு போன்றன, தற்கால சிந்தனையாளர்களுக்கு ஒரு கேள்விக் குறியைத்தான் ஏற்படுத்தும்.

எனினும், ஐந்து அணிகலன்களின் பெயர்களைக் கொண்ட இவற்றின் சுவைசொட்டும் வரிகளினால், அகம், புறம், பக்தி, அறிவுரை ஆகியவைகள் பற்றி ஞயம்படக் கூறியுள்ளமை, தமிழ் மொழியின் வளத்திற்கு பெருமை தரும் ஒரு விடயம் ஆகும்.

✍செல்வத்துரை,சந்திரகாசன்.