எந்த நாடு போனாலும் தமிழன் ஊர் [திருபுவனம்] போலாகுமா?




திருபுவனம் (Thirubuvanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில், திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சி பகுதியில் உள்ள 40 சதவீதத்திற்கும் அதிகமனோர் நெசவுத் தொழிலை சார்ந்தவர்களாவர். ஏனையோர் விவசாய கூலிகள் ஆவார். இங்கு நெய்யப்படும் பட்டுபுடவைகள் உலக பிரசித்தம் பெற்றவையாகும். மேலும் புகழ்பெற்ற சரபேசுவரர் கோயில் உள்ளது.

மக்கள்
திருபுவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.


ஊர் நிர்மாணம்
சோழர்களில் கடைசிப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்க சோழன் தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான்.அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான்.அது தான் திருபுவனம். இந்த ஊருக்கு திருபுவனம் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே இராசேந்திரச் சோழன் இங்கு இரு கல்லூரிகளை அமைத்துள்ளான்.[2]

 ஆலயஅமைப்பு
இங்கு சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) ஆலயமும் அவன் நிர்மாணித்தான்.உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. சோழர் காலக் கட்டிடக்கலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர்ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.
பிற்காலத்தில் இங்கு காந்தியடிகள் பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும். தமிழகத்திலேயே சௌராஷ்டிரா சமூக மக்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரே ஆலயமாகும்.

சௌராட்டிரர்
சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால் அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும்,விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர்நாடகம் நடத்தப்படுகிறது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

பிறசமூக மக்கள்
சௌராஷ்டிரா சமூகத்தினருடன் இஸ்லாமியர், வன்னியர்,ஆதிதிராவிடர், செங்குந்தர்முதலியார், நாயுடு, பிள்ளைமார், இசைவேளாளர், யாதவர், பிராமணர், மருத்துவர், விசுவகர்மா, செட்டியார் ஆகிய சமூக மக்களும் வசித்து வருகின்றனர்.

 வழிபாட்டுதலங்கள்
இங்கு பெரிய பள்ளிவாசல், புதுமுஸ்லிம்தெரு பள்ளிவாசல் ஆகிய இரு ஜூம்ஆ பள்ளிவாசல்கள் தனித்தனி ஜமாத்தாக இயங்கி வருகின்றன. மேலும் பிள்ளையார், காளியம்மன், மாரியம்மன், ஆஞ்சநேயர், அய்யனார், திரௌபதிஅம்மன், பிடாரியம்மன், போன்ற சிறு தெய்வ கோவில்கள் ஆங்காங்கு உள்ளன.

பள்ளிகள்
மூன்று தொடக்கப்பள்ளிகளும், ஒரு அரசினர் மேல்நிலைப் பள்ளியும் திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியும், திகோ சில்க்ஸ் ஆண்கள் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியும்,சௌராஷ்டிரா மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியும், இந்தியன் நர்சரி பிரைமரி பள்ளியும் உள்ளன.

திகோ சில்க்ஸ்
இங்கு நெசவாளர்கள் கணிசமாக வசிக்கின்ற காரணத்தால் பட்டு நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்குகிறது. பல கூட்டுறவு சங்கங்கள் அமைத்து அரசு பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து சங்கத்தின் மூலமே விற்பனை செய்து வருகிறது. இங்கு உள்ள திகோ சில்க்ஸ் என்றழைக்கப்படும் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் தான் இந்தியாவிலேயே அதிக விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கமாகும். இந்த ஆண்டு மட்டும் முப்பத்தி நான்கு கோடி ரூபாய் விற்பனை செய்துள்ளது.

🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁

0 comments:

Post a Comment