"ஒட்டாவா வீதியில் காலை ப்பொழுதில்"




ஒட்டாவா வீதியில் காலை பொழுதில்
ஒட்டா வாழ்வை கொஞ்சம் சிந்தித்தேன்
காட்டின் நடுவே கேம்ப் போட்டு
காட்டாத வாழ்வை கனவு கண்டேன்

கேட்காத இனிமை காதில் ஒலித்தது
வாட்டாத நிலவு வானத்தில் ஒளித்தது
மொட்டு விரிந்து வாசனை தந்தது
பாட்டா சொல்லித்  தேவதை வந்தது

சுட்டி பொண்ணு புன்னகை சிந்தி
பாட்டி கையை மெல்ல பிடித்து
வட்ட மிட்டு வானத்தில் இருந்து  
கூட்டி வந்து இன்பம் பொழிந்தது 

மெட்டி ஒலி  காற்றோடு கலக்க
முட்டி மோதி நிமிர்ந்து நடந்து
பொட்டக் குட்டி பாட்டி பெயரில்
லூட்டி அடிச்சு அட்டகாசம் போடுது

கட்டு மரமாக வாழ்வில் மிதந்து
ஆட்டி படைத்த நினைவுகளை எறிந்து
குட்டி ப்பாட்டி மழலையில் மகிழ்ந்து 
எட்டு த்திக்கும் துள்ளி குதித்தேன்

ஊட்டி வளர்த்த அறிவு எல்லாம்
வெட்டி எடுத்த அனுபவம் எல்லாம்
போட்டி போட்டு மோதிப் பாரென  
சிட்டுக் குருவி சிறகு அடிக்குது 
   
ஒட்டி உடையில் அழகு காட்டி
சட்டம் போட்டு திமிரு காட்டி
பாட்டு ப்படித்து இனிமை காட்டி
புட்டி ப்பாலூட்ட மடியில் உறங்குது         

எட்டி உதைத்து செல்லம் காட்டி
கட்டி அனைத்து இன்பம் காட்டி
வெட்டி ப்பேச்சில் வெகுளி காட்டி 
தொட்டில் ஆட்ட நொடியில் உறங்குது

நட்சத்திரம் மறைய கதிரவன் எழ
கூட்டம் சேர ஆரவாரம்  எழ
சொட்டை தலையில் சூடு எழ     
வெட்கம் கொண்டு கனவும் பறந்தது       
       
தட்டி தடவி வெளியே வந்து
மீட்டு எழுந்து வீடு போய்
கூட்டி குழைத்து சுவைத்த கனவை
காட்சி படுத்தி தினமும் மீட்டேன்  

🍂🍁[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]🍁🍂



0 comments:

Post a Comment