இல் வாழ்வில் ஆழமான அன்புடையோர் யார்?

 


காதல். பொதுவாக மனிதர்கள்,  விலங்குகள் என அனைத்து உயிரினங்களிலும் ,அவை தோன்றிய காலத்திலிருந்தே அவ்வவ் இனங்களின் விருத்திக்காக இயற்கையாகவே அவர்களின் உணர்வோடு பின்னிப்பிணைந்தவை. இக்காதல் படைத்த வரலாறுகளும் ,காவியங்களும் நினைவுச் சின்னங்களும் இன்றும் என்றும் மனித குலத்தில் வியப்புடன் நோக்கப்படுகின்றன.

காட்டு வாழ்க்கையிலிருந்து  நகர வாழ்க்கைக்கு மாறிய மனிதனின் பரிணாம வளர்ச்சி ,வாழ்க்கையினை நெறிப்படுத்த காரணமானது. அதன் பலனாக திருமணம், இல்வாழ்க்கை என மக்களை ஒரு கட்டுப்பாட்டில் பண்பான சமுதாயத்தினை உருவாக்க வழி கோலியது. இருந்தாலும் கல்யாணத்தின் முன் காதல் என்பது எந்த ஒரு இனத்திலிருந்தும் மறைந்து போகவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

 

காதல் என்ற போர்வையில் இன்று இலங்கை , இந்தியாவில் பெண்கள் வஞ்சிக்கப்படுவதும் , தற்கொலைகளும் அதிகரித்து கொண்டிருப்பது குறித்து நாம் தீபத்தில் ஏற்கனவே ஒரு தலைப்பில் அலசியிருந்தோம். அஃது இருக்க,

 

''மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல '' என்பதுபோன்ற பல்வேறு கற்பனை / கானல் நீர் உணர்வுகளுக்குள் உள் வாங்கப்பட்ட  இளையோரின்   காதலுக்குமுன் ➝ எமது முன்னோர்கள் 'காதலுக்கு கண்ணில்லை' என்று கூறியது முற்றிலும் உண்மையாகவே உள்ளது. இன்று இளையோர் காதலிப்பதற்கு சமூக வலைத்தளங்களும் ,  , தொலைபேசிகளும்  உபயோகிக்கும் வசதி கையுக்குள் குவிந்து இருப்பதினால், காதலிப்பதற்கு அக்காலம் போல் கண் அவசியமற்றுப் போய்விட்டாலும், ஒருவரை ஒருவர் உயர்த்திப் பெருமையோடு  அறிமுகம் செய்வதற்காக , ஆணும், பெண்ணும் தங்களைப் பற்றிய உண்மைகளை மறைத்தே காதலிக்கிறார்கள். அதாவது இன்றய  காதலுக்கு கண் மட்டுமல்ல ,[ஏமாறப்படுவதால்] காதும் இல்லை என்றே கூறவேண்டும்.

 

காதலிக்கும்போது தொலைபேசியூடு பல்வேறு சமூக வலைத்தளங்கள்  வழியே   விழுந்து,விழுந்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்ட  காதலர் நிலை , திருமணத்தின்பின் அவர்கள் உணர்வில் குடும்பஸ்தர் என்ற உணர்வே மேலோங்கி இருக்கும் நிலையில் , அவர்கள் உரையாடல்கள், நெருக்கங்கள் ,அணுகுமுறைகள், இதனால் வரும் உணர்வின் பெறுபேறுகள் , காதலித்த காலத்தினை விட முற்றிலும் வேறாகவே தோன்றும். காதலிக்கும் போது பொய்யாக காட்டிக் கொண்ட  விருப்பு ,வெறுப்புகள் கூட திருமணத்தின் பின் வெளிப்பட்டுவிடும்.

 

 இவை  அவர்களுக்கிடையில்  வெறுப்புணர்வுகளையும் , இடைவெளிகளையும் அதிகரிக்கும். இக்கருத்தினை 100 வீதமான காதலருக்கு இருக்கும் என்று நான் கூறவில்லை. உண்மைகளைப் பரிமாறிக் காதலிக்கும் ஒரு சில சோடிகளைத் தவிர ,பெரும்பாலும் இந் நிலையினை அவதானிக்கக் கூடியதாகவே உள்ளது .

 

இப்படியான சூழ்நிலைகள் பேச்சுத் திருமண வாழ்வில்  தோன்றுவதற்குச் சந்தர்ப்பமே இராது. ஏனெனில் கல்யாணத்தின் பின் அவர்களுக்கிடையில் ஒளிவு மறைவு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.பொய்யாக நடித்து ஒருவரை ஒருவர் தங்களைப் பெருமைப்படுத்த வேண்டிய தேவையும்  இல்லை. எனவே இங்கேதான் உண்மையான காதல் பிறக்கிறது. கணவனும் மனைவியும் ,ஒருவர்  ஒருவரின் விருப்பு ,வெறுப்பு, தேவைகள் உணர்ந்து நடக்க ஆரம்பிக்கின்றனர். காதல் மேலும் ஆழம் காண்கிறது.


செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment