கண்டதும் கேட்டதும்:கவித்துளிகள்

உறவைத்தேடி..
உதிரம் உறையும் 
உறைபனி உலகில் 
வெந்து விரல்கள் 
வெடிக்க 
சிவந்து காதுகள் 
குத்த 
குலைந்து தலை 
சுற்ற
மறந்து  நித்திரை
இழக்க 
உழைத்த காசுடன் 
ஊர் சேர 
''சும்மா அள்ளிய 
காசினை 
சுளையாய் தா''
என்றே
சுற்றம் எனைச் 
சுட்டிட 
கருகிய நெஞ்சுடன் 
மீண்டும் கனடாவில்.. 


எலும்பிலா நா!


புன்னகையில் 
பூரித்துப் பூத்த  
காதல்
கண்ணசைவால் 
கதைத்துக் காத்த 
காதல் 
நாவாக்கால் 
மொழியினை 
முகர்ந்தபோது
கிழிந்துபோனது.


பூமி
மனிதா!
அகழ்வாரைத் 
தாங்கும் நிலம் 
என்றான் வள்ளுவன்
அன்று!இன்றோ..
உன்னை 
ஆள்வோரையே
தாங்காது 
ஆடுகிறேன்,
அதிர்கிறேன்,
வெடிக்கிறேன்,
சீறுகிறேன்.

கடி

விற்பனையிலும்
விலைபோக 
கற்பனையிலா 
கடிவரிகள்,
வசைபாடும் 
வீண்வரிகள்,
அவை 
கவிகளல்ல.

பெண்ணென்ன பொன்னா?
என்வீட்டுப் 
படலை ஏறி
பெண் கேட்டு
 வந்தமாமன் 
பொன் கேட்டு
 நொந்து சென்றான் 
மண் போட்டு 
என்வாழ்வை 
வெந்து கொன்றான்.

அது,து,எது?
இறைவனின் உழைப்பது
மனிதனைப் படைப்பது,
மனிதனின் பிழைப்பது
மதத்தினை விதைப்பது,
கவிஞனின் கடனது
கருத்தினை வடிப்பது,
வாசகன் விருப்பது 
வரிகளைச் சுவைப்பது.


-ஆக்கம்:செல்லத்துரை மனுவேந்தன்- 



3 comments:

  1. எலும்பிலா நா!
    ஆமாம்,இந்நாவினால் வார்த்தைகளை தெரியாமல் சிந்தினாலும் அவற்றினைப் மீளப் பொறுக்கி எடுக்க முடியாது.

    ReplyDelete
  2. சும்மாவந்த காசை சும்மா அள்ளிக்கொடுக்கலாம்.ஆனால்..உதிரம் உறையும்
    உறைபனி உலகில்
    வெந்து விரல்கள்
    வெடிக்க
    சிவந்து காதுகள்
    குத்த
    குலைந்து தலை
    சுற்ற
    மறந்து நித்திரை
    இழக்க
    உழைத்த காசு.............

    ReplyDelete